Saturday, September 10, 2022

கே.டி.லிஸ்ட், ரௌடி லிஸ்ட் - சீராய்வு செய்க

 கே.டி.லிஸ்ட், ரௌடி லிஸ்ட் - சீராய்வு செய்தல் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் நான் அளித்த கடிதம் :


வணக்கம் ! 

 

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டிருக்கும் காவல்துறை நிலை ஆணை (PSO) பிரிவு 746 முதல் 749 வரை ஒரு நபரை கேடி லிஸ்டில் ( Known Depredator) சேர்ப்பதற்கும் ரௌடி லிஸ்டில் சேர்ப்பதற்குமான வழிகாட்டுதல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பிரிவு 749 உட்பிரிவு 2 இல் பின்வருமாறு கூறப்பட்டிருக்கிறது:

 

(a) Persons, who habitually commit, attempt to commit or abet the

commission of offences involving a breach of peace.

(b) Persons bound over under Sections 106 and 107 Criminal Procedure Code.

(c) Persons who have been convicted under Section 75 of the Madras City

Police Act or twice in two consecutive years under Section 3 Clause 12 of the Town Nuisance Act.

(d) Persons who are illicit distillers and known purveyors of liquor.

(G.O.Ms. No. 3461, Home 10th Dec, 1956.)

(e) Persons either convicted under Section 49-A of the Madras City Police Act, 1888 (Madras Act III of 1888) or under Section (4) of The Madras Gaming Act,

1930, (Madras Act III of 1930), or reasonably suspected to be habitually committing or abetting the commission of such offences.

அதுபோல ஒருவரது பெயரை அந்தப் பட்டியலில் தொடர்ந்து வைத்திருப்பதற்கும் / நீக்குவதற்குமான வழிகாட்டுதல்களும் அதில் உள்ளன. காவல்துறை நிலை ஆணை பிரிவு 748 உட்பிரிவு 4 இல் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது :

 

The Hon‘ble High Court of Madras in their judgment dated 17.06.2013 in

W.P.No.44548 of 2002 pointed out that opening of History Sheet or rowdy sheet attaches an indelible stigma on the concerned person, which in turn, likely to cause serious violation of Fundamental rights and such restriction can only be on reasonable grounds. All SDOs or other authorized officers shall pass detailed orders reflecting application of mind as and when a history sheet or rowdy sheet is opened or when the period is extended. SHOs must justify the necessity for opening History Sheet in terms of PSO 746 and 749. At the end of the prescribed period, the retention must be ordered only if there is sufficient material recorded in the ‗current doings‘ and when the person continues to meet the norms mentioned in the relevant PSO

- DGP‘s standing instruction No.57/2013, Dated: 29.11.2013. ஆனால் இந்த வழிகாட்டுதல்கள் காவல் நிலையங்களில் பெரும்பாலும் பின்பற்றப்படுவதில்லை. மாறாக காவல் நிலையங்களில் ஆய்வாளர் மட்டத்திலுள்ள அதிகாரிகள் அரசியல் கட்சிகளில் செயல்படுவோரை அதிலும் குறிப்பாக ஆதிதிராவிட மக்களுடைய நலன்களுக்காக செயல்படும் அரசியல் கட்சிகளின் பொறுப்பாளர்களை மனம் போன போக்கில் இந்த பட்டியலில் சேர்த்து விடுகின்றனர். காவல்துறை நிலை ஆணையில் சொல்லப்படிருப்பதைப் போல குறிப்பிட்ட கால எல்லைக்குள் அந்த பட்டியலை சீராய்வு செய்வதோ,  பெயர்களை நீக்குவதோ அல்லது அந்த பெயர்கள் தொடர்ந்து நீடிக்க வேண்டுமென்றால் அதற்காக உயர் அதிகாரிகளின் ஒப்புதலைப் பெறுவதோ கிடையாது.  இதை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை WP (Md) No.19651 Of 2017 Vs The Assistant Commissioner Of Police, Madurai ... on 26 September, 2018  என்ற தீர்ப்பில் பின்வருமாறு சுட்டிக்காட்டி இருக்கிறது:

 

”28.It can be seen from all the above cases that there is a general pattern adopted trend by the Police to continue to retain the names of the persons in the history sheet showing them as rowdies without any justifiable reasons. The Police did not realise that the purpose of opening a history sheet is to keep surveillance and check on hardened and habitual criminals in order to maintain peace and tranquility in the society.

 

29.As mentioned above, it also becomes the duty of the Police to keep reviewing the history sheet regularly to ensure that the persons, who are no longer required to be retained in the list are removed from the list, since it involves the dignity and public image of a person which is guaranteed under Article 21 of the Constitution of India.”

 

 அந்தத் தீர்ப்பு  வழங்கப்பட்ட பிறகும் கூட பழைய நிலையே நீடிப்பது வேதனை அளிக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த Nageswara rao Vs The Superintendent of Police, Kallakurichi என்ற வழக்கில் இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 06.07. 2022 அன்று ஆணை ஒன்றைப் பிறப்பித்து இருக்கிறது. 2018 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பின்பற்றப்பட வேண்டும் என காவல்துறைக்கு அதில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

 

விழுப்புரம் மாவட்டத்தில் தங்களது மேலான  தலைமையின் கீழ்  காவல்துறை இப்போது சிறப்பாக பணியாற்றி வருகிறது. சென்னை உயர்நீதிமன்றம் 2018 இல் வழங்கிய ஆணைக்கு ஏற்ப தமிழ்நாட்டில் உள்ள கேடி லிஸ்ட், ரௌடி லிஸ்ட் ஆகியவற்றை சீராய்வு செய்து பொருத்தமற்றவர்களின் பெயர்களை அந்தப் பட்டியல்களிலிருந்து நீக்குவதற்கு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 

நன்றி                                                                                                        இவண்

                                                                                         

                                                                                                 முனைவர் து.ரவிக்குமார்


( இதே போன்ற கடிதத்தை கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி க்கும் அனுப்பியுள்ளேன். டிஜிபி அவர்களுக்கு இதன் நகல் அனுப்பப்பட்டுள்ளது )

Friday, September 9, 2022

தமிழ் ஆய்வுகள் மேம்பட

 

 

 தமிழ் ஆய்வுகள் மேம்படுவதற்குத் தமிழ்நாடு அரசு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் 

 

திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்து தமிழ் மொழி வளர்ச்சிக்காகப் பல்வேறு பாராட்டத்தக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழ் ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்கென்று தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டிய முக்கியமானதொரு  நடவடிக்கை குறித்துத் தங்களது கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். அச்சுத் தொழில்நுட்பத்தின் பரவல் காரணமாக ஒவ்வொரு நாளும் தமிழில் ஏராளமான நூல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன அவற்றின் விவரங்களைத் தொகுத்து அட்டவணைப் படுத்துவது தமிழ் ஆய்வுகளை மேம்படுத்த உதவக்கூடிய ஒரு பணியாகும்.

தமிழில் வெளியான நூல்களைப் பொருள்வாரியாகப் பிரித்து அட்டவணைப்படுத்தும் முயற்சி 1961 ஆம் ஆண்டு துவங்கியது. வே.கண்ணையன் என்பாரை பொதுப் பதிப்பாசிரியராகக் கொண்டு முதல் தொகுதி வெளியானது. 1867 முதல் 1900 வரையில் வெளியான நூல்களின் விவரப் பட்டியல்  ஐந்து பாகங்களாக வெளிவந்தன ;                            

 திரு அ.ச.ஞானசம்பந்தன் அவர்களை பொதுப் பதிப்பாசிரியராகக்கொண்டு இரண்டாம் தொகுதியின்முதல் பகுதி 1965 இல் வெளியானது. 1901 முதல் 1910 வரையிலான காலத்தில் வெளியான நூல்களின் பட்டியல் அதில் இடம்பெற்றது.1931 முதல் 35 ஆம் ஆண்டு வரை வெளியான நூல்களின் பட்டியல் ஏழாம் தொகுதி முதல் பகுதி என 1981 ஆம் ஆண்டு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி இயக்ககவெளியீடாக பேராசிரியர் டாக்டர் மா. நன்னன் அவர்களை பொதுப் பதிப்பாசிரியராகக் கொண்டு வெளியானது. அதன்பின்னர் தமிழ் நூல் விவர அட்டவணைத் தொகுதிகள் தொடர்ந்து வெளிவந்தனவா எனத் தெரியவில்லை.


இவ்வாறு விவர அட்டவணை வெளியிடுவதால் ஏற்படும் பயன் யாது என்பதை 1961 இல் நிதி அமைச்சராகவும் கல்வி அமைச்சராகவும் இருந்த சி.சுப்பிரமணியம் அவர்கள் தனது முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். “இந்த நூல் விவர அட்டவணை நான்கு பயன்களைச் செய்யும்: முதலாவது தமிழ் மொழியில் ஒரு நூற்றாண்டில் எத்துணை நூல்கள் வெளிவந்துள்ளன என்பதை அறிய இது ஒரு வாய்ப்பு; இரண்டாவது ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்களுக்கு தேவையான விஷயங்கள் பலவற்றை இந்த அட்டவணை தருகிறது; மூன்றாவது 19 ஆம் நூற்றாண்டின் தமிழ் இலக்கிய வரலாறு எழுதப்படுமானால் இந்த அட்டவணையின் பூரண பயனை அடைய முடியும்; நான்காவதாக இந்த ஒரு நூற்றாண்டில் தமிழ் மொழி, அதன் இலக்கியம், தமிழ் நூல்களுக்குப் பெயரிடும் விதம், தமிழ் நூல்களை அச்சிட்ட அச்சு எந்திர சாலைகள் ஆகியவற்றின் வளர்ச்சியை அறியவும் இந்த அட்டவணை உதவும்”  என்று அவர் எழுதியிருக்கிறார்.
 

’1867 ஆம் ஆண்டில் தான் நூல் உரிமையைப் பதிவு செய்வதற்குரிய சட்டத்தை இந்திய அரசாங்கம் இயற்றியது. அதன் பின் புத்தக உரிமையைப் பாதுகாக்கும் பொருட்டு நூலாசிரியர், வெளியீட்டாளர் ஆகியோர் தமது நூல்களை அரசாங்கத்தில் பதிவு செய்து வந்துள்ளனர், 1867 ஆம் ஆண்டின் பிற்பகுதி தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் பற்பல நூல்கள் உரிமையைக் காக்கப் பதிவு செய்யப்பட்டன. பதிவு செய்யப்பட்ட நூலின் பிரதியும் சட்டத்தில் கண்டவாறு பதிவாளருக்கு வரலாயின. இங்ஙனமாக வந்த நூற்படிகள் அரசாங்கத்தின் சென்னை ஆவணக் களரி நூலகத்தில் (Madras record office library section ) கொண்டு வந்து சேர்க்கப்பட்டன. அவ்வகையில் சென்னை மாநிலத்தில் அச்சிடப்பட்டு பதிவு செய்யப்பட்ட பல்வேறு மொழி நூல்களும் இந் நூலகத்தின் கண் உள. உரிமைப் பதிவு செய்யப்பெற்ற நூல்கள் பற்றிய குறிப்புகளை அச்சு இதழில் (gazette) மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வெளியிட்டும் வந்துள்ளனர்.

தமிழ் நூல் விவர அட்டவணை வெளியிடுவதற்கு முன்பாக ஆங்கிலத்தில் சில விவர அட்டவணைகள் வெளியாகி இருக்கின்றன. அதை இந்த விவர அட்டவணை முதல் தொகுதியின் முன்னுரையில் பதிப்பாசிரியர் குறிப்பிட்டு இருக்கிறார். இந்தத் தமிழ் நூல் விவர அட்டவனை வெளியிடும் முயற்சி எவ்வாறு தொடங்கியது என்பதையும் அவர் விவரித்து இருக்கிறார்:

" இப்பொழுது தொகுத்து வெளியிடப்பெறும் இந்த தமிழ் நூல் விவர அட்டவணை தயாரிப்பதற்கு முன்பு நிகழ்ந்த முயற்சி ஒன்றினையும் ஈண்டு குறிப்பிடுதல் 
பொருத்தமாகும். சென்னைபுத்தகாலயப் பிரச்சார சங்கத்தார் சென்னை ஆவணக் களரி நூலகத்தே உள்ள பதிவு செய்யப்பட்ட நூல்களுக்கு விபரங்கள் தொகுக்க சிலரை நியமித்து பெரும்பாலும் எழுதித் தொகுத்தனர். ஆனால் பின்னர் அவற்றை முறையாக மேற்பார்வையிட்டுப் பரிசோதித்து ஒழுங்குபடுத்தி செப்பம் செய்து வகைப்படுத்தும் பணி நடைபெறவில்லை. இந்நிலையில் விவரம் எழுதிய சீட்டுகளை அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தாருக்கு விற்று விட்டனர். முதற்கண் அந்த சீட்டுகளைப் பெற்று விவர அட்டவணையை வெளியிடலாம் என்று கருதி அதுபற்றி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தினரைஅரசாங்கம் கேட்டது. அவர்கள் எவ்வகையான திருத்தமும் இன்றி சீட்டுகளை வெளியிடவும், திருத்தம் செய்து வெளியிடவும் செலவாகும் தொகை பற்றிய குறிப்பைக் கொடுத்தனர். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தால்இச்சீட்டுகளை முறைப்படுத்தி வெளியிடுவதிலும் , அவர்களுக்கு சென்னை அரசாங்கம் பழைய நூற்படிகளைக் கொடுத்து உதவுவதிலும் சில சிக்கல்கள் ஏற்பட்டதனால் தனிப்பட்ட முறையில் விவரம் தயாரித்து அரசாங்க வாயிலாக வெளிப்படுத்துதல் நலம் என்று எண்ணி தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றத்தில் அப்பணியை செய்ய அரசாங்கம் வழிவகை செய்தது. இதன் விளைவாகவே இந்த தமிழ் நூல் விவர அட்டவணை இன்று வெளிவரத் தொடங்குகிறது” என பதிப்பாசிரியர் குறிப்பிட்டிருக்கிறார்..


தமிழ் நூல் விவர அட்டவணை 1961 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியாகி இருக்கிறது. அதே காலகட்டத்தில் தனிநாயகம் அடிகளார் அவர்கள் தமிழ் இலக்கியம், பண்பாடு குறித்துப் பிற மொழிகளில் வெளியான ஆய்வு நூல்களின் அட்டவணை ஒன்றைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். அவர் ஆசிரியராக இருந்து 
நடத்தி வந்த ’தமிழ் கல்ச்சர்’ ( Tamil Culture, Vol IX, No 4,   என்ற இதழின்  அக்டோபர் - டிசம்பர் 1961  இதழில் இது தொடர்பாக அவர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்தத்திட்டத்துக்கு மலாயா பல்கலைக்கழகம் ஒப்புதல் வழங்கி இருப்பதாகவும் அதில் தெரிவித்திருக்கிறார். தமிழ் அல்லாத பிற மொழிகளில் வெளியிடப்பெற்ற அச்சில் வெளிவந்த நூல்கள் குறித்த விவரங்களைத் தொகுப்பது அவரது நோக்கமாக இருந்துள்ளது. ஆங்கிலம்,பிரெஞ்சு, ஜெர்மன் மற்றும் இதர ஐரோப்பிய மொழிகளில் வெளிவந்துள்ள நூல்களின் அட்டவணையைத்தயாரிக்க இத் திட்டத்தின் மூலம் அவர் முயன்றிருக்கிறார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த பேராசிரியர் தெ.பொ. மீனாட்சி சுந்தரம் அவர்கள் தமிழ் மொழி மற்றும் மொழியியல் தொடர்பான நூல்களின்அட்டவணையைத் தொகுக்க ஒப்புக் கொண்டிருப்பதாகவும்; அதுபோல தனிநாயகம் அடிகளார் அவர்கள் ஆங்கிலம் பிரெஞ்சு இத்தாலி லத்தீன் மொழிகளில் வெளியாகி இருக்கும் செவ்வியல் தமிழ் இலக்கியம் மற்றும் அகராதி இயல் குறித்த நூல்களின் பட்டியலைத் தயாரிப்பது என்றும்; மலாயா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த முனைவர் எஸ். அரசரத்தினம் தமிழ் வரலாறு தொடர்பான நூல்களின் பட்டியலைத் தொகுப்பது என்றும்; பிரஞ்சு மொழியில் வெளியாகி இருக்கும் தமிழாய்வுகள் குறித்த நூல்களின் பட்டியலை ழான் ஃபிலியோசா மற்றும் எஸ். சர்வானே ஆகியோரிடம் பெறுவது என்றும்; கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்த ஹல்லே பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர் அர்னோ லெஹ்மன் அவர்கள் ஜெர்மன் மொழியில் வெளியான தமிழ் ஆய்வு நூல்களின் பட்டியலைத்தொகுப்பதெனவும்; செக் மொழியில் வெளியான நூல்களின் பட்டியலை காமில் ஸ்வலபில் அவர்கள் தொகுப்பது என்றும்; ரஷ்ய மொழியில் வெளியான நூல்களின் பட்டியலை லெனின்கிராடைச்சேர்ந்த டாக்டர் ருடின் அவர்கள் தொகுப்பது என்றும்; மலாயா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டி. எச். கில்லிங்லி தமிழில் வெளியாகி உள்ள கல்வெட்டியல், கலை, கட்டடக்கலை, இசை, நடனம் முதலானவை குறித்த நூல்களின்பட்டியலைத் தொகுப்பது என்றும் பொறுப்புகள் பகிரப்பட்டு , அந்த நூல் அட்டவணை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதன் விவரமும்எடுத்துக்காட்டுகளோடு குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தத் திட்டம் எந்த அளவு நிறைவேறியது என்று தெரியவில்லை.


தமிழ் மொழியின் வளர்ச்சியை, மேம்பாட்டை மனதிற்கு கொண்டு அரும்பாடு படும் தாங்கள் 1961 இல் தொடங்கப்பட்டு 1981 ஆம் ஆண்டோடு நின்று போயிருக்கும் தமிழ் நூல் விவர அட்டவணைத் திட்டத்தை உயிர்ப்பித்து அதன்மூலம் தொடர்ந்து விவர அட்டவணைகளை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே வெளியான தொகுதிகள் தற்போது அச்சில் கிடைக்கப்பெறவில்லை என்பதால் அவற்றை மறு பதிப்பு செய்வதும் அவசியமாகும். அதுபோலவே, தனிநாயகம் அடிகளார் துவக்கிய திட்டத்தையும் செயல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தங்களை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். 

இவண்

 

முனைவர் து.ரவிக்குமார்


எல்.இளையபெருமாள் கமிட்டி அறிக்கை

                                                                                                                                                             

எல்.இளையபெருமாள் கமிட்டி அறிக்கையைத் தமிழ்நாட்டில் செயல்படுத்துதல் தொடர்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நான் எழுதிய கடிதம் : 

வணக்கம்!  

இந்திய ஒன்றிய அரசால் மணடல் குழு அமைக்கப்படுவதற்கு முன்னர் உருவாக்கப்பட்டது எல்.இளையபெருமாள் தலைமையிலான ஏழு பேர் கொண்ட குழு ஆகும். ’Committee on Untouchability, Economic and Educational Development of the Scheduled Castes’  என ஆங்கிலத்தில் அழைக்கப்பட்ட அந்தக் குழு பொதுவாக  ’இளையபெருமாள் கமிட்டி’ என்றே அழைக்கப்படுகிறது. பட்டியல் சாதிகளின் நலன்களுக்கான மத்திய ஆலோசனை வாரியம் ( Central Advisory Board for Harijan Welfare) செய்த பரிந்துரையின் அடிப்படையில் இந்திய ஒன்றிய அரசு அந்தக் குழுவை அமைத்தது ( Resolution No 14//554-SCT.II Dated April 27, 1965 ) அந்தக் குழுவின் உறுப்பினர்களோடு அவர்  இந்தியாவெங்கும் சுற்றுப்பயணம் செய்து பட்டியல் சாதிகள், பழங்குடி மக்களின் சமூக கல்வி பொருளாதார மேம்பாட்டுக்கான ஆலோசனைகள் அடங்கிய 431 பக்கங்கள் கொண்ட அறிக்கையை  1969 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் தேதி இந்திய ஒன்றிய அரசில், சட்டம் மற்றும் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த திரு பி.கோவிந்த மேனன் அவர்களிடம் சமர்ப்பித்தார்.

 

இளையபெருமாள் கமிட்டியின் அறிக்கையை இந்திய ஒன்றிய காங்கிரஸ் அரசு நாடாளுமன்றத்தில் வைக்கவில்லை, அதை செயல்படுத்தவுமில்லை. ஆனால், அப்போது தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் இளையபெருமாள் கமிட்டி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட அர்ச்சகர் நியமனம் குறித்த பரிந்துரையின் முக்கியத்துவத்தைக் கருத்தில்கொண்டு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வகை செய்யும் சிறப்புவாய்ந்த  சட்டம் ஒன்றை 1970 ஆம் ஆண்டு கொண்டுவந்தார். அதை எதிர்த்து அர்ச்சகர்கள்,மடாதிபதிகள் சார்பில் 12 வழக்குகள் தொடுக்கப்பட்டன. நீதித்துறை வரலாற்றில் ’சேஷம்மாள் மற்றும் இதரர் எதிர் தமிழக அரசு’ என அந்த வழக்கு அறியப்படுகிறது. சேஷம்மாள் வழக்கில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் ’இளையபெருமாள் கமிட்டியின்’ பரிந்துரையின் அடிப்படையில் சமூக சீர்திருத்தத்தை மேற்கொள்ளவேண்டும் என்ற நோக்கில்தான் இந்தத் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தங்களது மேலான பார்வைக்காக அதை கீழே தந்திருக்கிறேன்:

 

”The Principal Act of 1959 was amended in certain respects by the Amendment Act of 1970 which came into, force on January 8, 1971. Amendments were made to sections 55, 56 and 116 of the Principal Act and some consequential provisions were made in view of those amendments. The Amendment Act was enacted as a step towards social reform on the recommendation of the Committee on Untouchability, Economic and Educational Development of the Scheduled Castes.


The Statement of Objects and Reasons which are reiterated in the counter-affidavit filed on behalf of the State of Tamil Nadu is as follows :

 

"In the year 1969 the committee on untouchability, Economic and Educational

Development of the Scheduled Castes has suggested in its report that the hereditary priesthood in the Hindu Society should be abolished, that the system can be replaced by an ecclesiastical Organisation of men possessing the requisite educational qualifications who may be trained in recognised institutions in priesthood and that the line should be open to all candidates irrespective of caste, creed or race. In Tamil Nadu, Archakas, Gurukkals and Poojaries are all Ulthurai servants in Hindu temples.

 

 The duties of Ulthurai servants relate mainly to the performance of poojas, rituals and other services to the deity, the recitation of mantras, vedas, prabandas, the varams and similar invocations and the performance of duties connected with such performance and recitations. Sections 55 and 56 of the Tamil Nadu Hindu Religious and Charitable, Endowments Act, 1959 (Tamil Nadu Act 22 of 1959) provide for appointment of office holders and servants in the religious institutions by the trustees by applying the rule of hereditary succession also. As a step towards social reform Hindu temples have already been thrown open to all Hindus irrespective of caste.......”.

 

In the light of the recommendations of the Committee and in view of the decision of this Court in Gazula Dasaratha Rama Rao v. State of Andhra Pradesh & Ors.(1) and also as a further step towards social reform the Government considered that the here- ditary principle of appointment of all office holders in the Hindu temples should be abolished and accordingly it proposed to amend sections 55,56 and 116 of the Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Act, 1959 (Tamil Nadu

Act XXII of 1959).”

சனாதனவாதிகள் ஏற்படுத்திய தடைகளையெல்லாம் தகர்க்கும் விதமாக ’அனைத்து சாதியினரும் அர்ச்சகர்’ ஆவதற்கு வகைசெய்யும் தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.  இந்தத் தீர்ப்பு இளையபெருமாள் கமிட்டியின் பரிந்துரைகள் பல இப்போதும் பொருந்தக்கூடியவை தான் என்பதை உணர்த்துகிறது.

 

இந்தச் சூழலில் இளையபெருமாள் குழு அறிக்கையில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளில் பொருத்தமான, மாநில அரசால் செயல்படுத்தக்கூடிய பரிந்துரைகள் எவையெவை எனக் கண்டறிந்து அவற்றைத் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தத் தாங்கள் முன்வர வேண்டுமெனப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

 

 1924 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம் தேதி பிறந்த திரு எல்.இளையபெருமாள் அவர்களின் நூற்றாண்டு நெருங்கிக்கொண்டிருக்கும் சூழலில் ’இளையபெருமாள் கமிட்டி’ அறிக்கையை செயல்படுத்துவது அவருக்குச் செய்யும் சிறப்பு மட்டுமின்றி தமிழ்நாட்டிலுள்ள ஆதிதிராவிட மக்களுக்குச் செய்யும் பேருதவியாகவும், ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சமூகநீதி சாதனைகளில் ஒன்றாகவும் அமையும்.

- ரவிக்குமார் 



 

நன்றி                                                                                                                                                                                                                  இவண்

 

முனைவர் து.ரவிக்குமார்

Tuesday, September 6, 2022

1947 இன் வடுக்கள்: பாடங்களாக மாறும் கதைகள்




இந்தியா பாகிஸ்தான் பிரிவினை குறித்து எத்தனையோ வரலாற்று நூல்கள் வெளிவந்திருக்கின்றன. ராஜிவ் சுக்லா எழுதியிருக்கும் இந்த நூல் அவற்றுள் ஒன்று அல்ல. ஆனால் அந்த நூல்களைவிடவும் இது தாக்கம் ஏற்படுத்தக்கூடியது. சில நபர்களின் தனிப்பட்ட அனுபவங்களைப் பின்புலமாகக் கொண்டு இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையை ஆராய்கிறது இந்த நூல். 


இதில்  இருக்கும் மன்மோகன் சிங் குறித்த ஒரு சிறிய கட்டுரை அவரைப்பற்றி அளப்பரிய மரியாதையை உருவாக்குகிறது. அப்பாவின் மளிகைக் கடையில் வேலை செய்து கொண்டே படித்த மன்மோகன் சிங் இந்தியாவின் பிரதமராக உயர்வதற்கு இடையில் எவ்வளவு கஷ்டங்களை சந்தித்திருக்கிறார் என்பது மிக சுருக்கமாக இதில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நினைவு தெரியாத சிறுவயதிலேயே  அம்மாவை இழந்த அவரை அவரது தாத்தா , பாட்டிதான் வளர்க்கிறார்கள். நாட்டுப் பிரிவினையின்போது மூர்க்கமான மதவெறி வன்முறைக்கு அவரது தாத்தா பலியாகிறார். மன்மோகன் சிங்கின் அத்தையும் அவருடைய அம்மாவும் மதவெறி வன்முறைக் கும்பலிடமிருந்து தங்களது கற்பைக் காத்துக்கொள்ள தீக்குளித்துத் தம்மை மாய்த்துக் கொள்கிறார்கள். அவரது அப்பா பாகிஸ்தானில் இருந்த தொழிலையும், சொத்துக்களையும்  இழந்து நிர்க்கதியாக இந்தியா திரும்பி மளிகைக் கடை ஆரம்பித்து எப்படி எல்லாம் கஷ்டப்பட்டார் என்பதைப் படிக்கும்போது மனம் கசிகிறது. 


வறுமையும் துயரமும் அலைக்கழித்த குடும்பப் பின்னணியில் கல்வி ஒன்றே மன்மோகன் சிங்கைக் காப்பாற்றி கரைசேர்த்து இருக்கிறது. மன்மோகன் சிங்கின் திறமையை உணர்ந்த அவரது ஆசிரியர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு மேல் படிப்புக்கு விண்ணப்பிக்குமாறு ஊக்குவித்து அவர் அங்கே சேர்வதற்குக் காரணமாக அமைகிறார்.  அங்கு படிக்கும் போதும் அப்பாவிடம் பணம் கேட்டுத் தொந்தரவு செய்யக்கூடாது என பல முறை அவர் பட்டினியாகவே இருந்திருக்கிறார். 


இந்த நூலில் ஜின்னா பற்றி எழுதப்பட்டிருக்கும் கட்டுரையும் ஜின்னா மீது மரியாதையை ஏற்படுத்துகிறது.  பாகிஸ்தானை மதச்சார்பற்ற நாடாக உருவாக்க வேண்டும் என்ற அவரது கனவு இன்றைய பாகிஸ்தானின் ஆட்சியாளர்களால் எப்படி சிதைக்கப்பட்டு இருக்கிறது என்பதை உணரும் போது,  நேருவின் லட்சியங்களையும் இன்று இந்தியாவில் அவற்றுக்கு ஏற்பட்டிருக்கும் கதியையும் எண்ணாமல் இருக்க முடியவில்லை. 


இந்திய சுதந்திரத்தின் 75 ஆவது கொண்டாடப்படும் நேரத்தில் வெளியாகியிருக்கும் இந்த நூல் தமிழ் உட்பட இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பள்ளி மாணவர்களிடம் கொண்டு செல்லப்பட வேண்டும். ‘ புல்புல் பறவைகளில் ஏறி பறந்தவரைப் பற்றியும், முதலைக்குட்டியைப் பிடித்து வீட்டுக்குக் கொண்டுசென்ற சிறுவனைப் பற்றியும் படித்து திகைத்துப் போயிருக்கும் மாணவர்கள் இந்த நூலில் உள்ள கதைகளைத் தெரிந்துகொண்டால் சுயநினைவு பெறுவார்கள்.


- ரவிக்குமார்

ஜேஎன்யு வில் தமிழ்த்துறை

 ஜே என் யுவில் தமிழ்த்துறை 


டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU)  தமிழ்த்துறை அமைப்பதற்காக நானும் தலைவர் எழுச்சித் தமிழர் அவர்களும் விடுத்த வேண்டுகோளை ஏற்ற துணைவேந்தர் சாந்திஶ்ரீ பண்டிட் அவர்களுக்கும்,10 கோடி நிதி வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் , விரைந்து நடவடிக்கை எடுத்த மாண்புமிகு தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களுக்கும், பல்கலைக்கழகத் தரப்பிலிருந்து உரிய நடவடிக்கைகளை எடுத்த பேராசிரியர் அறவேந்தன் (எ) தாமோதரனுக்கும் நன்றி 🙏🏿🙏🏿



நிகரி சமத்துவ ஆசிரியர் விருது

 மணற்கேணி ஆய்விதழ் வழங்கும்

‘நிகரி சமத்துவ ஆசிரியர் விருது ’

=============

 

வகுப்பறையில் சமத்துவத்தை ஊக்குவிக்கும் கல்லூரி ஆசிரியர் ஒருவருக்கும், பள்ளி ஆசிரியர் ஒருவருக்கும் ஒவ்வொரு ஆண்டும் மணற்கேணி ஆய்விதழ் சார்பில் ‘நிகரி - சமத்துவ ஆசிரியர்’ என்னும் விருதளித்து சிறப்பித்து வருகிறோம். கொரோனா பெருந்தொற்று காரணத்தால் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2020, 2021 ஆண்டுகளுக்கான விருதுகளும்; 2022 ஆம் ஆண்டுக்கான விருதும் இப்போது அறிவிக்கப்படுகின்றன. 

 

2020 ஆண்டுக்கு

பள்ளி ஆசிரியர் - திரு. க.பாரி , அரசு மேல்நிலைப்பள்ளி, விராட்டிக்குப்பம்

கல்லூரி பேராசிரியர் - திருமதி இரா.தமிழரசி சற்குணம், அரசு கலை அறிவியல் கல்லூரி, ஆட்டுப்பாக்கம், ராணிப்பேட்டை

 

2021 ஆம் ஆண்டுக்கு

பள்ளி ஆசிரியர் - திரு சு.அருணகிரி, அரசு உயர்நிலைப்பள்ளி, சென்னகுணம்

கல்லூரி பேராசிரியர் - முனைவர் இரா.செங்கொடி , சர் தியாகராயா கலைக்கல்லூரி, சென்னை

 

2022 ஆம் ஆண்டுக்கு 

பள்ளி ஆசிரியர் - திருமதி கே.வி.ஜெயஸ்ரீ , அங்கவை சங்கவை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருக்கோயிலூர்

கல்லூரி பேராசிரியர் - திரு த. ரமேஷ் , அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, விழுப்புரம்

 

 

நிகரி சமத்துவ ஆசிரியர் விருது - நினைவுக் கேடயம், பாராட்டுப் பத்திரம், பத்தாயிரம் ரூபாய் பண முடிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். 

 

2019 ஆம் ஆண்டுக்கான விருது தஞ்சாவூர் மாவட்டம் உடையாளூர் அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் திரு அ.அன்சார் அலி அவர்களுக்கும்; தஞ்சாவூர் , மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி, முதல்வர் முனைவர் வெ.செந்தமிழ்ச் செல்வி அவர்களுக்கும் வழங்கப்பட்டது. 

 

2018 ஆம் ஆண்டு விழுப்புரம் இராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் மேனிலைப்பள்ளி ஆசிரியர் இரா.மோகனசுந்தரம்; தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கடல்சார் வரலாறு மற்றும்கடல்சார்தொல்லியல் துறையின் பேராசிரியர் சு.இராசவேலு ஆகியோர் நிகரி விருதைப் பெற்றனர். மேனாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு தங்கம் தென்னரசு அவர்கள் விருதுகளை வழங்கினார். 

 

2017 ஆம் ஆண்டு டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் திரு அறவேந்தன், நெல்லை மாவட்டம் இருமன்குளம் ஊராட்சி ஒன்றிய  பள்ளி ஆசிரியர் இளங்கோ கண்ணன் ஆகியோர் நிகரி விருதைப் பெற்றனர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மாண்பமை பாஸ்கரன் அவர்கள் விருதுகளை வழங்கினார். 

 

2016 ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம் பாலவேடு அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் திருமதி ந.சாந்தி ; தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரியும் திரு சா.உதயசூரியன் ஆகியோர் விருதுபெற்றனர். பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத் துணைவேந்தர் மாண்பமை இராமச்சந்திரன் அவர்கள் விருதுகளை வழங்கினார். 

 

2015 ஆம் ஆண்டு பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறைத் தலைவர் பேராசிரியர் மணிமேகலை அவர்களும், சமயபுரம் எஸ்.ஆர்.வி மேனிலைப்பள்ளியின் முதல்வர் துளசிதாசன் அவர்களும் தேர்வுசெய்யப்பட்டனர். தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மாண்பமை க.பாஸ்கரன் விருதுகளை வழங்கினார். 

 

2014 ஆம் ஆண்டு திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் கி. நாச்சிமுத்து அவர்களும்; கடலூர் கிருஷ்ணசாமி மேனிலைப் பள்ளியின் முதல்வர்  'ஆயிஷா' இரா நடராசன் அவர்களும் விருதளித்துப் பாராட்டப்பட்டனர். கல்வி உரிமைப் போராளி பேராசிரியர் கல்யாணி விருதுகளை வழங்கினார். 

 

2013 ஆம் ஆண்டு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பேராசிரியர் அ.ராமசாமி அவர்களும் ,  கடலூர் நகராட்சி மேனிலைப் பள்ளி ஆசிரியர் த.பாலு அவர்களும் நிகரி விருதுகளைப் பெற்றனர். கல்வியாளரும் ,

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தருமான மாண்பமை வே.வசந்திதேவி அவர்கள் விருதுகளை வழங்கினார்.

 


முனைவர் து.ரவிக்குமார்

நாடாளுமன்ற உறுப்பினர்

ஆசிரியர், மணற்கேணி ஆய்விதழ்

Sunday, May 19, 2019

மீளும் வரலாறு

நந்தன் கதையை நான் எப்போது தெரிந்துகொண்டேன் என்பது எனக்கு சரியாக நினைவில்லை.  நான் ஆரம்பப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த நேரம் எங்கள் கிராமத்தைச் சுற்றி பல்வேறு கிராமங்களிலும் கோடை காலத்தில் நாடகங்கள் நடைபெறும்.  தஞ்சாவூர், மதுரை என்று பல்வேறு ஊர்களிலும் இருந்து பிரபலமான நாடக குழுக்களை அழைத்து வந்து நாடகங்களை போடுவார்கள்.  டி.ஆர். மகாலிங்கம், உடையப்பா, கண்ணப்பா என்று புகழ்பெற்ற நடிகர்கள் வருவார்கள்.  அப்படி நாடகம் நடந்துகொண்டிருந்த நாளில்தான் நான் நந்தன் கதையைப் பற்றி முதலில் கேள்விப்பட்டேன்.  உடையப்பாவின் நாடகங்களில் அரிச்சந்திராவுக்கு ஒரு தனி இடம் உண்டு.  அந்த நாடகத்தில் சுடலையில் நின்று பாடுவதுபோல் வரும் காட்சியில் 'பறையன்' என்ற சொல் இடம்பெற்ற பாடல் ஒன்று வரும்.  அவருடைய கம்பீரமான குரல் உருகி குழைந்து கேட்பவரை கண்ணீர்விட வைக்கும்.  அந்த பாடல் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்துவதாக இருக்கிறது என சொல்லி பல்வேறு ஊர்களில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகவும் அதனால் இனிமேல் அந்த பாடல் அரிச்சந்திராவில் இடம்பெறாது என்றும் அப்பா யாரோடோ பேசிக்கொண்டிருந்ததை நான் அப்போது கேட்டேன்.  "இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது சரிதான், ஆனால் நந்தனார் நாடகத்தில் வரிக்குவரி இப்படி கேவலம் வருகிறதே அதை எவனும் கேட்கவில்லையே" என்று அப்பா அப்போது சொல்லிக்கொண்டிருந்தார்.  பிற்காலத்தில் நந்தன் கதை மீது எனக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டதற்கு அந்த உரையாடல்தான் காரணமாக இருந்திருக்குமோ தெரியவில்லை.

ஐந்தாம் வகுப்புவரை என் சொந்த கிராமத்தில் படித்த நான் ஆறாம் வகுப்புக்காக சிதம்பரம் சென்றேன்.  தினமும் ரயிலில் சென்று படித்து வரவேண்டும்.  அப்படி போகும்போது என் வயதையத்தவர்களோடு நான் போவதில்லை.  எப்போதும் பெரிய ஆட்களோடுதான் சினேகம்.  என்னுடைய உறவினர் கலியபெருமாள் என்பவர் அப்போது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருந்த ஓவியக் கல்லூரியில் பயின்று வந்தார்.  வகுப்பை கட் அடித்துவிட்டு அவரோடும், அவரது நண்பர்களோடும் சுற்றிக்கொண்டிருப்பேன்.  அவர்கள் சிதம்பரம் நடராசர் கோயிலுக்கு சென்று ஸ்கெட்ச் பண்ணுவார்கள்.  அப்போது அவர்களோடு பல சமயம் நானும் சென்றிருக்கிறேன்.  சனி ஞாயிறுகளில் சிதம்பரம் நடராஜா தியேட்டரில் காலை காட்சியில் ஆங்கிலப் படம் பார்த்துவிட்டு மதிய சாப்பாட்டுக்கு நடராசர் கோயில் புளியோதரையை வாங்கி சாப்பிடுவோம்.  அந்த கோயில் எனக்கு மிகவும் நெருக்கமானது அப்படித்தான்.  அந்த கோயிலுக்குள் நுழையும் ஒவ்வொரு தருணத்திலும் எனக்கு வினோதமான ஒரு உணர்வு ஏற்படுவதுண்டு.  சிதம்பர ரகசியம் என்று சொல்லப்படுகிற கதையையும் தாண்டி அந்த கோயிலுக்குள் மேலும் பல ரகசியங்கள் இருக்கின்றன.  அவை இன்னும் யாராலும் அறியப்படாமல் கிடக்கின்றன என்று எனக்கு தோன்றும்.  சிதம்பரம் குறித்து வெளிவந்துள்ள நூல்களையெல்லாம் அப்படித்தான் நான் சேகரித்து படிக்க ஆரம்பித்தேன்.  தமிழ் பௌத்தம் குறித்த அயோத்திதாசரின் எ-ழுத்துகளை படித்ததற்கு பிறகு சிதம்பரத்தின் மீதான எனது இச்சை தீவிரம் அடைந்துவிட்டது. 

தமிழக தலித்துகளின் வரலாற்றை தொகுப்பதிலும் மறுவாசிப்பு செய்வதிலும் ஈடுபட்டபோது சிதம்பரம் புதிய பரிமாணம்பெற்று என்முன் நின்றது.  தமிழகத்தில் தீண்டாமை நிலைநிறுத்தப்பட்டதற்கு சிதம்பரம்தான் முக்கிய காரணமாக இருந்துள்ளது.  அதிலும் குறிப்பாக நந்தன் கதை அதில் பிரதானபங்காற்றியிருக்கிறது என்ற உணர்வு என்னுள் வலுப்பெற்றது.  அதைத் தொடர்ந்து பெரியபுராண நந்தன் கதையை மறுத்து நந்தன் என்ற மன்னனின் வரலாற்றை முன்வைக்கவேண்டும் என்ற வேட்கை அதிகரித்தது.  அப்போது ஒருநாள் இதுபற்றி திரு. தொல். திருமாவளவன் அவர்களோடு நான் பேசிக்கொண்டிருந்தபோது அவர் மிகவும் வியப்போடு இதை ஏன் நீங்கள் எழுதக்கூடாது என்று கேட்டார்.  விடுதலைச் சிறுத்தைகளின் மாத இதழான தாய் மண்ணில் அதை தொடராக எழுதுமாறு வலியுறுத்தினார்.  2003 மார்ச்&ஏப்ரல் இதழில் இந்த தொடரை நான் ஆரம்பித்தேன்.  பன்னிரெண்டு அத்தியாயங்கள் எழுதினேன்.  அக்டோபர் 2004 வரை அது வெளிவந்தது.  அதன்பிறகு நான் அதை தொடர்ந்து எழுத முடியவில்லை.

இந்திரா பார்த்தசாரதியின் நந்தன் கதை நாடகம் புதுவையில் நிகழ்த்தப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது.  நானும் நண்பர்களுமாக சேர்ந்து நடத்தி வந்த தலித் கலைவிழாவில் கூட அதை போட்டிருக்கிறோம்.  ஆனால் நந்தன் என்ற மன்னனின் வரலாற்றை பரவலாக அறியச் செய்யவேண்டும் என்ற எனது ஆசைக்கு அது உகந்ததாயில்லை.  அப்போது பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தில் நாடகத்துறை தலைவராக இருந்த கே.ஏ. குணசேகரன் அவர்களிடத்தில் அயோத்திதாசப் பண்டிதரின் நந்தன் கதையைப் பற்றி பேசி அதை நாடகமாக போடலாம் என்று கேட்டேன்.  அவரும் அப்போது ஆர்வமாக சம்மதித்தார்.  ஆனால் அந்த நாடகத்தை நான் எழுதமுடியாமல் போய்விட்டது.  நாங்கள் சந்திக்கும்போதெல்லாம் அவ்வப்போது அதைப்பற்றி பேசுவதுண்டு.  அதன் தொடர்ச்சிதானோ என்னவோ இன்று

அதே நந்தன் கதையைப் பற்றி சொற்பொழிவு ஆற்றும்படி அவர் என்னை அழைத்திருக்கிறார்.   உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனராக பொறுப்பேற்று இப்படி ஒரு வாய்ப்பை எனக்கு அளிப்பார் என நான் கற்பனையும் செய்ததில்லை.  உலகத் தமிழ் மாநாட்டுக்கான தயாரிப்புகள் நடந்துகொண்டிருக்கும் சூழலில் இந்த சொற்பொழிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  நிச்சயமாக அந்த மாநாட்டில் இந்த புதிய நந்தன் கதை ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.  இந்த சொற்பொழிவுக்கான வாய்ப்பை அளித்த உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் இந்த பொழிவுக்கு தலைமை ஏற்கவிருக்கும் டாக்டர் அ. ராமசாமி அவர்களுக்கும் எனது நன்றி.
( மீளும் வரலாறு நூலுக்கு நான் எழுதிய குறிப்பு )