Sunday, April 30, 2017

தலித்துகளை விலக்கி வைத்த திராவிட அரசியல்` - ரவிக்குமார்




வணக்கம்


தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் திராவிட கட்சிகளின் ஆட்சியை மதிப்பீடு செய்யும்விதமாக பிபிசி தமிழோசை தொடர்ந்து கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது. மு.நாகநாதன், கோபாலகிருஷ்ண காந்தி, சு.பொ.அகத்தியலிங்கம் ஆகியோரின் கட்டுரைகளைத் தொடர்ந்து இன்று (01.05.2017) எனது கட்டுரை வெளியாகியிருக்கிறது. அந்தக் கட்டுரையை இங்கே தந்துள்ளேன். 

அன்புடன்
ரவிக்குமார் 


====




`தலித்துகளை விலக்கி வைத்த திராவிட அரசியல்`

- ரவிக்குமார் எழுத்தாளர், கவிஞர்

திமுக தலைமையிலான ஆட்சி தமிழ்நாட்டில் ஏற்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது. 

ஆளுநர் ஆட்சி என்ற சிறு குறுக்கீடுகளைத் தவிர திமுகவும் அதிலிருந்து உருவான அதிமுகவும் தான் இந்த மாநிலத்தை கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஆட்சி செய்துவந்துள்ளன. 

திமுக, அதிமுக இரண்டும் பொதுவாக 'திராவிடக் கட்சிகள்' என அழைக்கப்பட்டாலும் அரசியல் அணுகுமுறைகளில் அவற்றுக்கிடையே மிகப்பெரும் வேறுபாடு உள்ளது. 

பிராமணரல்லாதார் இயக்கம், நீதிக் கட்சி ஆகியவற்றின் கருத்தியல் தொடர்ச்சியை திமுகவின் ஆட்சி நிர்வாகத்தில் பார்க்கலாம். 

அதற்கு மாறாக, அதிமுகவைத் தோற்றுவித்த எம்ஜிஆரின் கவர்ச்சிவாத (Populism) அரசியலை அதிமுக ஆட்சி நிர்வாகத்தில் காணலாம். 

1967 -2017 க்கு இடைப்பட்ட அரை நூற்றாண்டுகால ' திராவிடக் கட்சிகளின் ' ஆட்சியை தலித் நோக்கில் மதிப்பிடவேண்டுமெனில் இந்த இரு கட்சிகளின் அடிப்படையாய் அமைந்த பிராமணரல்லாதார் அரசியலையும், கவர்ச்சிவாத அரசியலையும் நாம் தனித்தனியே ஆராய்ந்தாகவேண்டும். 

தமிழகத்தில் சாதி மோதல்கள் அதிகரிப்பு ஏன்?

கடந்த ஐம்பதாண்டுகளில் தலித் மக்களின் வாழ்க்கைத் தரம் ஒப்பீட்டளவில் உயர்ந்து வந்திருக்கிறது எனினும் அதிகாரத்தை சுவைப்பதிலிருந்து அவர்கள் ஒதுக்கியே வைக்கப்பட்டிருக்கின்றனர். 

சுருக்கமாகச் சொன்னால், திமுக பின்பற்றிய பிராமணரல்லாதார் அரசியல் தலித்துகளை விலக்கி வைத்து வஞ்சித்தது, அதிமுகவின் கவர்ச்சிவாத அரசியலோ தலித்துகளை உள்வாங்கி ஒழித்துக்கட்டியது. 

பிராமணரல்லாதார் அரசியலும் தலித்துகளும்

பிராமணரல்லாதார் அரசியல் துவங்கிய காலந்தொட்டே தலித்துகளை உள்ளடக்குவதில் அக்கறை காட்டவில்லை.1906 ஆம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் பி. சுப்பிரமணியம் மற்றும் எம். புருசோத்தம் நாயுடு ஆகியோர் இணைந்து 'தி மெட்ராஸ் நான் பிராமின் அசோசியேசன்' என்ற அமைப்பை உருவாக்க முயற்சி செய்து அது தோல்வியில் முடிந்த காரணத்தால் 1916இல் வெளியிடப்பட்ட 'பிராமணரல்லாதார் பிரகடனமே' பின்னாளில் வந்த திராவிட இயக்கங்களுக்கு முன்னோடியாக அமைந்தது. 

தாழ்த்தப்பட்ட பெண்படத்தின் காப்புரிமைSEBASTIAN D'SOUZA/AFP/GETTY IMAGES

அந்தக் கொள்கைப் பிரகடனத்தைத் தொடர்ந்து 1916 நவம்பர் 20ஆம் தேதி சென்னை விக்டோரியா மன்றத்தில் கூடிய 'பிராமணரல்லாத' சாதிகளைச் சேர்ந்த பெரிய மனிதர்கள் அரசியல் இயக்கமொன்றைத் துவங்க முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டனர். 

தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (சவுத் இண்டியன் லிபரல் ஃபெடரேசன்) எனப் பெயரிடப்பட்ட அந்த இயக்கத்தின் சட்டதிட்டங்களில், "பிராமணரல்லாதார்' என்ற சொல் முகமதியர்கள் இந்தியக் கிறித்தவர்கள், ஆங்கிலோ இந்தியர்கள் இங்கே வாழும் ஐரோப்பியர்கள் ஆகியோரையும் உள்ளடக்கியது" எனக் குறிப்பிட்டிருந்தனர். அந்த இயக்கத்தின் குறிக்கோளிலோ, உறுப்பினர் தகுதி பற்றிய விளக்கத்திலோ,பிராமணரல்லாதார் யார் என்பதற்கு அளிக்கப்பட்ட வரையறையிலோ தலித்துகள் உள்ளடக்கப்படவில்லை. 

பிராமணர் அல்லாதார் இயக்கம் பிராமண ஆதிக்கத்தை எதிர்த்து அதிகாரத்தில் பங்கு கோருவதாக இருந்ததே தவிர சாதி ஒழிப்பை வலியுறுத்தவில்லை. அதனால்தான் பிராமணரல்லாதார் என்ற வகைப்பாட்டை துவக்கத்திலேயே அயோத்திதாசப் பண்டிதர் கேள்விக்குட்படுத்தினார். 

சாதி ரீதியான ஜனத்தொகை கணக்கெடுப்பு தேவையா?

" சாதி ஆச்சாராங்களையும் சமய ஆச்சராங்களையும் தழுவிக் கொண்டே 'நான் பிராமின்ஸ்' ( Non Brahmins ) என்று சங்கம் கூட்டியிருக்கின்றனரா அன்றேல் சாதியாசாராங்களையும் சமய ஆசாரங்களையும் ஒழித்து 'நான் பிராமின்ஸ்' என்ற சங்கம் கூடியிருக்கின்றனரா விளங்கவில்லை….. பிராமணர் என்போரால் வகுத்துள்ள சாதி ஆசாரங்களையும் சமய ஆசாரங்களையும் வைத்துக் கொண்டு நான் பிராமின்ஸ் எனக் கூறுவது வீணேயாகும்" , என்று அவர் விமர்சித்தார் ( தமிழன், செப்டம்பர் 15, 1909 ) 

பிராமணரல்லாதார் இயக்கத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியாக உருவெடுத்த நீதிக்கட்சி, 1920ஆம் ஆண்டில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற்றது. 

அந்த ஆட்சி, தலித் மக்களின் கல்வி, பொருளாதாரம், அரசியல் பிரதிநிதித்துவம் ஆகியவற்றில் அக்கறை காட்டாதது மட்டுமின்றி, 1921 ல் நடைபெற்ற பி அண்டு சி மில் போராட்டத்தின்போது தலித்துகளை சென்னை நகரைவிட்டே வெளியேற்றவும் முயற்சித்தது என அப்போது தலித் மக்களின் நாடறிந்த தலைவராக விளங்கிய எம். சி. ராஜா குற்றம் சாட்டினார் (The Oppressed Hindus, The Huxley Press,Madras,1925 ) 

திமுகவும் தலித்துகளும்

1967 ல் திமுக ஆட்சி அதிகாரத்துக்கு வந்தபோது அரசாங்கத்தின் பல்வேறு நிலைகளிலும் பிராமணரல்லாதார் முக்கியத்துவம் பெற்றனர். 

அரசியல் அதிகாரத்தின் ருசிகண்டதாலோ என்னவோ பிராமணரல்லாதார் தமது வலிமையை சமூகப் படிநிலையில் தமக்குக் கீழிருந்த மக்கள்மீது சோதித்துப் பார்க்கத் தலைப்பட்டனர். 

அதன் விளைவாகவே உலகத்தையே அதிரவைத்த கீழ்வெண்மணிப் படுகொலை (1969) நிகழ்த்தப்பட்டது. 

தலித் சமூகத்தினர்.படத்தின் காப்புரிமைREUTERS

அந்தக் கொலைகாரர்களுக்குத் தண்டனை பெற்றுத் தருவதற்குக்கூட அன்றைக்கிருந்த திமுக ஆட்சி அக்கறை காட்டவில்லை. அதனால்தான் அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 25 பேரையும் சென்னை உயர்நீதிமன்றம் விடுதலை செய்யும் நிலை ஏற்பட்டது. 

திமுக ஆட்சியிலிருந்த சுமார் 22 ஆண்டுகளில் தலித் மக்களின் கல்வியறிவை மேம்படுத்த பள்ளிகளை உருவாக்குதல், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் அளித்தல், குடிசைமாற்று வாரியத்தின் மூலம் வீடுகளை கட்டித் தருதல், உயர்கல்வி பெறுவதற்கு லோன் ஸ்காலர்ஷிப், போட்டித் தேர்வுகளில் பங்கேற்க சிறப்புப் பயிற்சி - எனப் பல்வேறுவிதமான நலத் திட்டங்கள் உருவாக்கப்பட்டன என்பது உண்மைதான். 

அந்த நலத் திட்டங்கள் தலித் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்குப் பயன்பட்டன என்பதையும் மறுக்கமுடியாது. 

ஆனால் தலித் மக்களை அரசியல்ரீதியாக அதிகாரப்படுத்துவதில் திமுக போதுமான அளவுக்குக் கவனம் செலுத்தவில்லை. 

கட்சியில் வலிமைவாய்ந்த மாவட்டச் செயலாளர் பதவிகளிலோ, ஆட்சியில் அதிகாரம் வாய்ந்த துறைகளிலோ தலித்துகளுக்கு போதிய வாய்ப்புகளை திமுக அளிக்கவில்லை. அரசு வேலை வாய்ப்புகளிலும்கூட தலித்துகளுக்கான இட ஒதுக்கீடு திமுக ஆட்சிக்காலங்களில் சரிவர நிறைவுசெய்யப்பட்டதே இல்லை. 

தலித்துகளை நோக்கிய திமுகவின் அணுகுமுறை பெரும்பாலும் அடையாளவாதமாகவே (Tokenism ) நின்றுபோய்விட்டது.

அதுமட்டுமல்லாது திமுக ஆட்சிக் காலங்களில் வலிமைபெற்ற இடைநிலைச் சாதிகளின் ஆதிக்கம், கிராமப்புறங்களில் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகளை அதிகரிக்கச்செய்தது.அதனால் திமுகவை தமக்கான கட்சியாக தலித் மக்களால் உணரமுடியாது போயிற்று. 

கவர்ச்சிவாத அரசியலும் தலித்துகளும்

திமுகவிலிருந்து வெளியேறி அதிமுகவை உருவாக்கிய எம்ஜிஆருக்கு இருந்த சினிமா செல்வாக்கு தலித் மக்களை அக்கட்சியை நோக்கி ஈர்த்தது. 

அதுவரை பெரும்பாலும் காங்கிரஸின் ஆதரவாளர்களாக இருந்த தலித்துகள் அதிமுகவின் வாக்குவங்கியாக மாறினர். 

ஆனால், தனக்கு மிகப்பெரும் ஆதரவு சக்தியாக இருந்த தலித்துகளை எம்ஜிஆர் அரவணைக்கவில்லை. மாறாக திமுக உயர்த்திப்பிடித்த அதே பிற்படுத்தப்பட்டோர் அரசியலைத்தான் அவரும் பின்பற்றினார். 

தலித் வீடுபடத்தின் காப்புரிமைREUTERS

கட்சியிலும் ஆட்சியிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கே முக்கியமான பதவிகளை அளித்தார். அதே நேரத்தில் கவர்ச்சிவாதத் திட்டங்களை அறிமுகப்படுத்தி தலித் மக்களின் ஆதரவைத் தக்கவைத்துக்கொண்டார். 

கவர்ச்சிவாதம் என்பது திராவிட இயக்கத்தின் கருத்தியலிலேயே கலந்திருந்த ஒன்றுதான் என்ற போதிலும் எம்ஜிஆர் கையாண்ட கவர்ச்சிவாதம் தனித்தன்மை கொண்டது. 

நேரடியாக வெகுமக்களோடு தொடர்புகொள்ளும் ஆற்றல் வாய்ந்த, ஈர்ப்பு சக்தி கொண்ட ஒரு தலைவர், அதிகாரம் அனைத்தையும் தன் கையில் குவித்துக்கொள்வது என்ற புதுவிதமான கவர்ச்சிவாதத்தை எம்ஜிஆர் கையாண்டார். 

சர்வாதிகாரத்தன்மையை உள்ளீடாகக்கொண்ட அந்த கவர்ச்சிவாதம் வெகுமக்களை செயலற்ற மந்தைகளாக சுருக்கியது. அப்படி சுருக்கப்பட்ட மக்கள் திரள் ஒரு அவதாரப் புருஷராக, தமது மீட்பராக அவரைக் கண்டது. 

அவர்களுக்கு அப்போது தேவைப்பட்டதெல்லாம் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள்கூட அல்ல, தமது மீட்பரின் தரிசனம் மட்டுமே. 

தமது காட்சிக்காக தவம் கிடந்த மக்களை நோக்கி தனக்கு அணிவிக்கப்பட்ட மாலைகளோடு சில இலவச திட்டங்களையும் எம்ஜிஆர் அவ்வப்போது வீசிக்கொண்டிருந்தார். 

அதிலேயே அவர்கள் ஆறுதல் கண்டனர். இலவச பல்பொடி, இலவச செருப்பு, இலவச மதிய உணவு என சிறுவர் முதல் பெரியவர்கள்வரை இலவசத் திட்டங்களுக்குக் கையேந்தும் இரவலர்களாக மாற்றப்பட்டனர். 

அந்த மயக்கத்தில் மக்கள் ஆழ்ந்திருந்த நேரத்தில் இன்னொருபுறம் வரம்பற்ற சுரண்டலுக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டன. அவற்றை எதிர்த்து உரிமைகளுக்காகக் குரலெழுப்பியவர்கள் போலீஸாரின் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியாக்கப்பட்டனர். 

எம்ஜிஆர் பின்பற்றிய அதே நடைமுறைகளை மேலும் மூர்க்கத்தோடு செயல்படுத்தியவர் ஜெயலலிதா. 

விளிம்புநிலை மக்களுக்காகப் பேசுதல், அவர்களை மையநீரோட்ட அரசியலுக்குள் கொண்டுவருதல், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அமைப்புகளின் அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்துதல் என்பன போன்ற கவர்ச்சிவாதத்தின் சாதகமான பண்புகளை ஒதுக்கிவிட்டு, அடிப்படை உரிமைகளைப் புறக்கணித்தல், சிறுபான்மையினரின் உரிமைகளை அலட்சியப்படுத்துதல் உள்ளிட்ட அதன் எதிர்மறை அம்சங்களையே ஜெயலலிதா அதிகம் பயன்படுத்திக்கொண்டார். 

ரவிகுமார்

சாதிப் பெரும்பான்மையிலிருந்து சமயப் பெரும்பான்மைக்கு

சமூகத்தில் பெரும்பான்மையினராக இருக்கும் மக்களின் கைகளுக்கு அதிகாரம் வரவேண்டும் என்பதைத்தான் பிராமணரல்லாதார் இயக்கமும், திராவிட இயக்கமும் வலியுறுத்தின. 

அவர்கள் விரும்பியபடியே இன்றைய தமிழ்நாட்டில் ஏறக்குறைய பிராமண ஆதிக்கம் துடைத்தெறியப்பட்டு, பெரும்பான்மை சமூகக் குழுவாக இருக்கின்ற பிற்படுத்தப்பட்டோரின் கைகளில் சமூக, அரசியல், பொருளாதார,ஊடக அதிகாரங்கள் குவிக்கப்பட்டுள்ளன. 

'சாதி,மத பாகுபாடுகளுக்கு இடமில்லை': இந்தியப் பிரதமர்

திராவிடக் கட்சிகளின் ஆட்சியால் பலம்பெற்றிருக்கும் பிற்படுத்தப்பட்டோர் என்னும் இந்த சமூகப் பெரும்பான்மையானது சமயச் சார்பின்மையை உள்ளீடாகக் கொண்டதும், சமத்துவத்தை ஊக்குவிப்பதுமான 'அரசியல் பெரும்பான்மையாக' ( Political Majority ) செயல்படவில்லை. 

மாறாக, அம்பேத்கர் சுட்டிக்காட்டிய 'வகுப்புவாதப் பெரும்பான்மையாகவே' (Communal Majority ) அது தன்னைக் கட்டமைத்துக்கொண்டுள்ளது. 

அதைத்தான் ஆணவக் கொலைகள் , வெறுப்புப் பிரச்சாரம் முதலான அண்மைக்கால நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. 

தந்தை பெரியாரின் சாதி ஒழிப்பு அரசியலுக்கும், அரசியலமைப்புச் சட்டத்தின் ஜனநாயக நெறிமுறைகளுக்கும் உகந்தவாறு திராவிட அரசியல் மறுவார்ப்பு செய்யப்படவில்லையெனில், கடந்த ஐம்பதாண்டுகால திராவிட ஆட்சியால் வலுப்பெற்றிருக்கும் சாதிப் பெரும்பான்மைவாதம் தன்னை சமயப் பெரும்பான்மைவாதமாக உருமாற்றிக்கொள்வதை எவராலும் தடுக்க முடியாது. 

http://www.bbc.com/tamil/india-39766644



Thursday, April 27, 2017

பஞ்சமி நிலம்


2006 ஆம் ஆண்டு நான் சட்டப்பேரவையில் ஆற்றிய கன்னி உரையில் பஞ்சமி நிலம் குறித்து பேசிய பகுதி:

Tuesday, April 25, 2017

இந்தித் திணிப்பும் சிபிஎஸ்இ பள்ளிகளும் - ரவிக்குமார்



*  சிபிஎஸ்இ வாரியத்தின் திருத்தப்பட்ட விதி 3.3(1) chapter II ன் படி ஒரு பள்ளி சிபிஎஸ்இ இணைப்புப்பெற மாநில அரசின் தடையில்லா சான்றிதழ் அவசியம்


* இந்தி கட்டாயமாக்கப்பட்டால் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு தமிழக அரசு வழங்கிய NOCக்களை திரும்பப்பெறவேண்டும்

*  பத்தாம் வகுப்புவரை இந்தி கட்டாயம் என்பதைப்பற்றி  மத்திய அரசு உரிய விளக்கம் தந்து குடியரசுத் தலைவர் தந்த அனுமதியை ரத்துசெய்யும் வரை புதிய சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு தமிழக அரசு NOC தரக்கூடாது

*  மாநில அரசின் தடையில்லா சான்றிதழோ,சிபிஎஸ்இ வாரியத்தின் இணைப்போ பெறாமல் நூற்றுக்கணக்கான சிபிஎஸ்இபள்ளிகள் தமிழ்நாட்டில் செயல்படுகின்றன

* மாநில அரசு/ சிபிஎஸ்இ  வாரியம் ஆகியவற்றின் அனுமதியின்றி இயங்கும் சட்டவிரோத சிபிஎஸ்இ பள்ளிகளின் பட்டியலைத் தமிழக  பள்ளிக்கல்வித்துறை வெளியிடவேண்டும்

Monday, April 10, 2017

லாங்ஸ்டன் ஹியூஸ் கவிதைகள் தமிழில்: ரவிக்குமார்



1. 

சுதந்திரம், இனிமை, அற்புதம்

சொல்வதற்கு இப்படி பல வார்த்தைகள் உள்ளன 

எனது இதயத்தின் நரம்புகளில் எல்லா நாட்களும் எல்லா நேரமும் ஒலித்துக்கொண்டிருக்கிறது

சுதந்திரம் 

விடுதலை என்பது போன்ற சில வார்த்தைகள் உள்ளன 

என்னை அழ வைக்கும் வார்த்தைகள்

எனக்குத் தெரிந்தது உங்களுக்குத் தெரிந்தால் 

உணர்வீர்கள்

நான் சொல்வது ஏன் என்பதை 


2.

நான் அறிவேன் நதிகளை: 

நான் அறிவேன் உலகத்தைப்போல தொன்மையான மனித நாளங்களின் குருதி ஓட்டத்தைவிடப் பழமையான நதிகளை

எனது ஆன்மா ஆழ்ந்து செல்கிறது நதிகளைப்போல

 

விடியல்கள் இளமையாய் இருந்தபோது நான் யூப்ரடிஸ் நதியில் குளித்தேன் 

காங்கோவுக்கு அருகில் கட்டினேன் என் குடிலை

அது என்னைத் தாலாட்டித் தூங்கவைத்தது

நான் நைல் நதியைப் பார்த்தேன் அதன்மேல் கட்டினேன் பிரமிடுகளை 


ஆப்ரகாம் லிங்கன் நியூ ஓர்லயன்சுக்குப் போனபோது நான் கேட்டேன் மிசிசிப்பியின் பாடல்களை

பார்த்தேன் அதன் அடிமடியிலிருக்கும் சேறெல்லாம் அஸ்தமனத்தின்போது தங்கமாக மாறியதை 


நான் அறிவேன் நதிகளை: 

தொன்மையான கறுத்த நதிகளை 

எனது ஆன்மா செல்கிறது ஆழமாக நதிகளைப்போல 



யேஸெக் குதரூஃப் (Jacek Gutorow) கவிதைகள் தமிழில்:ரவிக்குமார்



1. 
பனி வயலில் நான்  ஓடும்போது
மகிழ்ச்சி நான் அதன் பக்கம் 
இருப்பதாக  எண்ணிக்கொண்டிருக்கிறது 
மரணமோ 
அகலத் திறந்த கண்களால் 
பார்த்துக்கொண்டிருக்கிறது 
எனது வலது பையை 
அதில் 
ஒரு பிளாஸ்டிக் விமானம் 
பறக்கிறது பறக்கிறது 
இறுக்கி மூடிய  கைக்குள்

2.

முதல் மழை. பாதையோர கற்பலகை.
ரொட்டித் துண்டுகளுக்காக சண்டையிடும் குருவிகள்
வேறெதுவும் நிகழவில்லை.
காணாமல்போன வார்த்தை மூட்டுவதில்லை கலகத்தை 

3.
ஏராளமாகக் கவிதைகள்
ஏராளமாக நல்ல கவிதைகள்
இன்னும் இன்னும்
வலிமை கூடிக்கொண்டே இருக்கிறது. 
ஏராளமான கவிதைத் தொகுதிகள். 
ஏராளமான பரிசுபெறும் 
முன்மாதிரியாகத் திகழும் கவிதைத் தொகுதிகள்
எங்குபார்த்தாலும் நல்ல கவிஞர்கள்
ஏராளமான கவிதைகள்
கடைசியில் ஒருவர் வேண்டுவது
அழகாக இல்லாதபோதும்
உறக்கத்தைக் கலைக்கிற 
ஒரேயொரு நல்ல கவிதையை எழுதிவிடவேண்டும் என்பதுதான்


யேஸெக் குதரூஃப் (Jacek Gutorow) : போலிஷ் கவிஞர், மொழிபெயர்ப்பாளர், இலக்கிய விமர்சகர் 




Sunday, April 9, 2017

படிநிலையாய் உறையும் பாகுபாடு - ரவிக்குமார்

https://www.minnambalam.com/k/2017/04/10/1491762614

பாகுபாடுகள் படிநிலைகளாக உறைகின்றன. படிநிலைகள் சமத்துவத்தை அழித்து வன்முறைக்கு வழிகோலுகின்றன. நாம் சமத்துவத்தையும் ஜனநாயகத்தையும் நமது அரசியல் வழிமுறையாக ஏற்றுக்கொண்டு விட்டோம். நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் அதைத்தான் அறிவித்திருக்கிறது. ஆனால் அது கொள்கை அளவில் மட்டும்தான் இருக்கிறது. நடைமுறையில் நாம் பாகுபாடுகளைக் கடைபிடிக்கவே செய்கிறோம்.

வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இந்தியாவின் பிற மாநிலங்களில் தாக்கப்படுகிறார்கள்; பசு காவலர்கள் என்ற பெயரில் உலவும் பயங்கரவாதிகள், அப்பாவி ஏழை முஸ்லிம்களை அடித்துக் கொலை செய்கிறார்கள்; ஆணும் பெண்ணும் சேர்ந்து தெருவில் போனாலே பண்பாட்டுக் காவலர்களின் தாக்குதலுக்கு ஆளாக வேண்டியிருக்கிறது. இப்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் பொறுப்பேற்றிருக்கும் பாஜக அரசு உருவாக்கியிருக்கும் ‘ரோமியோ படை’ இந்தப் பண்பாட்டுக் காவலுக்கு சட்டப் பாதுகாப்பை அளித்திருக்கிறது.

மதத்தின் அடிப்படையில் சாதியின் அடிப்படையில், பாலியல் சார்பின் அடிப்படையில், உடுத்தும் ஆடைகளின் அடிப்படையில், பேசும் மொழியின் அடிப்படையில், உண்ணும் உணவின் அடிப்படையில் ஒவ்வொருநாளும் வன்முறை ஏவப்படுகிறது. அக்லக், ரோஹித் வெமுலா, முத்துகிருஷ்ணன் என பாகுபாட்டின் பலிகளது பட்டியல் நீள்கிறது. இதுவரை பூனை போல இருந்ததாக நம்பப்பட்டுவந்த பாகுபாடு இப்போது ஓநாயைப்போல உருவெடுத்திருக்கிறது. அது ரத்தவெறி கொண்டு தெருவெங்கும் அலைகிறது.


Saturday, April 8, 2017

“நான் அனுபவித்த சாதிக் கொடுமைகள் கொஞ்சம்தான் ”- தொல். திருமாவளவன்

ஏப்ரல்: தலித் வரலாற்று மாதம்

“நான் அனுபவித்த சாதிக் கொடுமைகள் கொஞ்சம்தான் ”

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்  திரு தொல். திருமாவளவன் அவர்களிடம் 1998 செப்டம்பர் மாதத்தில் நான் பதிவுசெய்த நேர்காணலின் ஒரு பகுதி 
=======

* தலித் அரசியலுக்குள் நீங்கள் ஈர்க்கப்பட்டது எப்படி?  இளமைக்கால அனுபவங்கள் இதற்குக் காரணமா?

மாநிலக் கல்லூரியில் படிக்கும்போது அம்பேத்கர் இயக்கங்களின் அறிமுகம் கிடைத்தது.  சட்டக் கல்லூரியில் முதலாண்டு படித்துக் கொண்டிருந்தபோது அய்யனார் என்று ஒரு நண்பர் இருந்தார்.  வீடூருக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்.  காலனி வீடுகள் கட்டுவதற்கு நிலத்திற்காக ஆதிக்க சாதியினரோடு ஏற்பட்ட பிரச்சனையால் அவரை ஆதிக்கசாதியினர் விஷம் வைத்துக் கொன்று விட்டார்கள்.  அந்த சாவுக்குச் சென்றிருந்தேன்.  அவரது அண்ணன் என்னைத் தனியே அழைத்துச் சென்று “எனக்கு பயமாக இருக்கிறது.  என்னையும் கொன்று விடுவார்கள்” என்று அழுதார்.  அப்போது அதை, ஏதோ பயத்தில் சொல்கிறார் என்று நான் நினைத்துவிட்டேன்.  ஆனால் மூன்றாவது நாள் அவரைக் கல்லால் அடித்துக் கொலை செய்துவிட்டார்களென்ற செய்தி வந்தது.  அந்தச் சம்பவம் என் மனதை மிகவும் பாதித்தது.

அப்போது அம்பேத்கர் இயக்கம் எதிலும் இணைந்து வேலை செய்ததில்லை.  அரசுப் பணிக்காக மதுரைக்குப் போனேன்.  அம்பேத்கர் நூற்றாண்டு சமயத்தில் DPI ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பேசினேன்.  அப்போது மலைச்சாமி அதன் பொறுப்பாளராக இருந்தார்.  மலைச்சாமி இறந்ததற்குப் பிறகு அந்தத் தோழர்கள் என்னைப் பொறுப்பாளராக அறிவித்துத் தீர்மானம் போட்டார்கள்.  நான் மதுரைக்குப் போய் எட்டு மாதங்கள் தான் அப்போது ஆகியிருந்தது.  இது 1990 ஜனவரியில் நடந்தது.  அப்போது பாரதீய தலித் பேந்தர்ஸ் என்ற பெயரில் அமைப்பு செயல்பட்டு வந்தது.  மகாராஷ்டிராவில் தொடர்பிலிருந்த அத்வாலேவைத் தொடர்பு கொண்டு பேசினேன். அவர்கள் சரியானபடி எதுவும் கூறவில்லை.  அமைப்பை பாரதீய குடியரசு கட்சி என மாற்றும்படி அவர் சொன்னார்.  எனக்கு அதில் உடன்பாடில்லாததால் அன்று இரவே அமைப்பைக் கூட்டி கொடி, முழக்கம் ஆகியவற்றை முடிவு செய்தோம்.  இந்திய ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் என்ற பெயரில் ஒரு ஆண்டு செயல்பட்டோம்.  “இந்திய” என்ற சொல் பலருக்கும் நெருடலாயிருந்தது.  பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் கலந்து கொண்டு நானும் பேசினேன்.  அப்போது பேசிய சுப. வீரபாண்டியன் “இந்திய” என்று வைத்திருப்பதை விமர்சித்துப் பேசினார்.  அதன்பிறகு 1992 முதல் விடுதலைச் சிறுத்தைகள் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறோம். மலைச்சாமி இறந்தபோது ஒரு இரங்கல் செய்தியைக்கூட மகாராஷ்டிராவிலிருந்து கட்சி சார்பில் அனுப்பவில்லை.

நான் நேரடியாக அனுபவித்த சாதிக் கொடுமைகள் கொஞ்சம்தான்.  தொடக்கப்பள்ளியில் படிக்கும்போது ஒருநாள் எங்கள் ஊரிலுள்ள செல்லியம்மன் கோயிலில் கதவைத் திறந்து மூடி விளையாடிக் கொண்டிருந்தேன்.  அதைப் பார்த்துவிட்டு சாதி இந்துக்கள் கோபமாகத் திட்டினார்கள்.  என் அப்பாவும் என்னைக் கண்டித்தார்.  எங்கள் ஊரில் சேரியைச் சேர்ந்த ஒருத்தரை மோட்டார் திருடினார் என்று பழி சுமத்தி பத்து விரல்களிலும் துணியைப் பந்தம்போல் சுற்றி சாதி இந்துக்கள் நெருப்பு வைத்தார்கள்.   அது என் மனதை மிகவும் பாதித்தது.  1990க்குப்பிறகு தென் மாவட்டங்களில் நடந்துவரும் சாதிக் கொடுமைகள் தான் தலித் அரசியலின் முக்கியத்துவத்தை எனக்கு உணர்த்தின.

சிவனடியார் ஆறுமுகசாமிக்கு சிதம்பரத்தில் சிலை அமைக்கவேண்டும் - ரவிக்குமார்



சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேவாரம் பாடுவதற்குப் போராடி வெற்றிகண்ட சிவனடியார் ஆறுமுகசாமி இன்று காலமானார். அவருக்கு என் அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

2008 ஆம் ஆண்டு நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த நேரத்தில் தினகரன் நாளேட்டில் வெளியான அவரது புகைப்படத்தைக் காண்பித்து அவருக்குத் தமிழக அரசு நிதி உதவி அளிக்கவேண்டும் எனக் கோரினேன். அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள் உடனடியாக எனது கோரிக்கையை ஏற்று மாதம் மூன்றாயிரம் ரூபாய் உதவித் தொகையும், மருத்துவப் படியும் வழங்கிட ஆணை பிறப்பித்தார். அந்த ஆணை எனது முன்னிலையில் அன்றைய கடலூர் மாவட்ட ஆட்சியர் திரு ராஜேந்திர ரத்னூ அவர்களால் திரு ஆறுமுகசாமி அவர்களிடம் வழங்கப்பட்டது. 

சிதம்பரம் கோயிலில் தமிழில் பாடவேண்டும் எனப் போராடிய சிவனடியார் ஆறுமுகசாமி அவர்கள் சமூகநீதிப் போராட்டத்தின் ஒரு குறியீடு. அவரது போராட்டத்தை எதிர்வரும் தலைமுறையினர் உணரும் விதமாக சிதம்பரம் நகரில் பொருத்தமானதொரு இடத்தில் அவருக்கு சிலை எழுப்பவேண்டும் எனத் தமிழக அரசை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்




Friday, April 7, 2017

சென்னையில் முஸ்லிம்களுக்கு வாடகைக்கு வீடு தர மறுக்கிறார்களா?

சன் டிவியில் நான் பங்கேற்ற விவாதம் 

நான் விவாதத்தில் வலியுறுத்திய சில கருத்துகள்: 

1. வாடகைக்கு விற்பனைக்கு முஸ்லிம்களுக்கு வீடு கிடைக்காததை முன்னாள் யுஜிசி தலைவர் S. K . தோரட்டும் வேறுசில ஆய்வாளர்களும் அறிக்கையாக வெளியிட்டுள்ளனர், twocircles.net என்ற இணைய தளமும் டெல்லியில் ஆய்வுசெய்து பெரும்பாலான ஹவுசிங் சொசைட்டிகளில் ஒரு முஸ்லிம்கூட உறுப்பினர் இல்லை என்பதை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. 

2. பாகுபாடுகளை அடிப்படையாகக்கொண்டது நம் சமூகம், காற்றைப்போல பரவியிருக்கிறது பாகுபாடு.  
தமிழ்நாடு சமயப் பொறைக்கு சான்று அல்ல, சமயக் கொலைக்கு சான்று. அதைத்தான் ரொமிலா தாப்பர், வித்யா தெஹேஜியா முதலான வரலாற்றறிஞர்களின் ஆய்வுகளும், திருப்புடைமருதூர் உள்ளிட்ட இடங்களில் காணப்படும் ஓவியங்கள் சிற்பங்களும் உறுதிப்படுத்துகின்றன. 

3. திராவிட இயக்கம் பாகுபாடுகளைக் களைந்து விடவில்லை. ஏற்கனவே இங்கு பாகுபாடுகள் தழைத்துக்கொண்டுள்ளன. 

4. இப்போது மத்தியில் அமைந்திருக்கும் ஆட்சியின் கொடூரத்தை நிகழ்வுகளின் அடிப்படையில் எதிர்த்தால் போதாது, கருத்தியல் ரீதியில் எதிர்க்கவேண்டும். 

5. அரசியல் சட்டத்தை திருத்தாமலேயே பெரும்பான்மை ஆட்சியை பெரும்பான்மைவாத ஆட்சியாக மாற்றமுடியும் என காட்டிவிட்டார்கள். இந்த ஆபத்தை உணரவேண்டும்; 

6. சாதி பெரும்பான்மைவாதமும் மதப்பெரும்பான்மைவாதமும் எதிர் எதிரானவை அல்ல, ஒன்று மற்றதாக மாறிவிடக்கூடியவை . 

7. தமிழ்நாட்டில் வேரூன்றியுள்ள சாதிப் பெரும்பான்மைவாதம் மதப்பெரும்பான்மைவாதத்துக்கு உவப்பானதே

8. முன்னாள் அமைச்சர் சசி தரூர் தற்போது பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியிருக்கும் தனிநபர் மசோதா 17 வகையான பாகுபாடுகளை சுட்டிக்காட்டியுள்ளது. அவை எல்லாவற்றையும் எதிர்க்கவேண்டும்.

Sunday, April 2, 2017

வார்ஸான் ஷைர் கவிதைகள் தமிழில்: ரவிக்குமார்

1. 

எமது ஆண்கள் எங்களுக்குச் சொந்தமில்லை
ஒருநாள் பிற்பகலில் வீட்டைவிட்டுச் சென்றார் என் அப்பா, அவர் எனக்குச் சொந்தமில்லை

சிறையிலிருக்கிறான் என் சகோதரன், அவன் எனக்குச் சொந்தமில்லை.எனது மாமன்கள் வீட்டுக்குத் திரும்பிப்போனார்கள், தலையில் சுடப்பட்டு கொல்லப்பட்டார்கள், அவர்கள் எனக்குச் சொந்தமில்லை

எனது ஒன்றுவிட்ட சகோதரர்கள் மிகையாக நடந்துகொண்டதற்காக அல்லது எதிர்பார்த்த அளவு இல்லாமல்போனதற்காக தெருவில்வைத்து குத்திக்கொல்லப்பட்டார்கள், அவர்கள் எனக்குச் சொந்தமில்லை. நாங்கள் காதலிக்க முயன்ற ஆண்கள் சொன்னார்கள்: ' நாங்கள் ஏராளமான இழப்புகளை சுமந்துகொண்டிருக்கிறோம், மிகவும் கறுப்புத்தனத்தை அணிந்துகொண்டிருக்கிறோம், இங்கே மிகவும் சுமையாக இருக்கிறோம், நேசிப்பதற்குப் பொருத்தமின்றி மிக மிக துயரத்திலிருக்கிறோம்'. பிறகு அவர்களும் போய்விட்டார்கள், நாங்கள் அவர்களுக்காக துக்கம் அனுஷ்டிக்கிறோம். 

இதற்குத்தான் நாங்கள் இருக்கிறோமா? 
செத்துப்போனவர்களை
பிரிந்துபோனவர்களை
போலீஸால் பிடித்துச்செல்லப்பட்டவர்களை
போதை மருந்துக்கு,
நோய்களுக்கு,
வேறு பெண்களுக்குப்
பலியானவர்களை 
சமையலறையில் அமர்ந்தபடி, விரல்விட்டு எண்ணிக்கொண்டிருப்பதற்கா இருக்கிறோம்? 

இதில் எந்த அர்த்தமும் இல்லை
பாருங்கள் உங்கள் சருமத்தை, அவளது வாயை, இந்த உதடுகளை, அந்த கண்களை, அடக் கடவுளே, அந்த சிரிப்பைப் பாருங்கள்.

நம் வாழ்வில் அனுமதிக்கத்தக்க ஒரே இருள் இரவில் வருவதுமட்டும்தான் 
அப்போதும்கூட நம்மிடம்
நிலவு இருக்கும் 

2.

உங்களோடு கொண்டுவந்தீர்கள் யுத்தத்தை 
நீங்கள் அறியாமலேயே, அது இருக்கிறது
உங்கள் சருமத்தில், அவசரமாகத் திணிக்கப்பட்ட சூட்கேஸ்களில், புகைப்படங்களில், அதன் வாசனை கலந்திருக்கிறது உங்கள் கேசத்தில், நகங்களில், 
இருக்கக்கூடும் அது உங்கள் ரத்தத்தில் 

சிலநேரம் நீங்கள் வந்தீர்கள் குடும்பத்தோடு
சிலநேரம் ஒன்றுமே இல்லாமல், உங்களின் நிழல்கூட இல்லாமல்
புதிய மண்ணில் கால் பதித்தீர்கள் கரகரப்பாய் பேசும் ஒரு பேயைப்போல
மொடமொடத்த ஜீன்ஸும் பரிதவிக்கும் புன்னகையும் அணிந்து, 
அந்த மண்ணோடு பொருந்திக்கொள்ளத் தயாராக, 
கடுமையாக உழைக்கத் தயாராக, 
யுத்தத்தை
ரத்தத்தை மறப்பதற்குத் தயாராக 

யுத்தம் அமர்ந்திருக்கிறது
உங்கள் வரவேற்பறையின் மூலையில், 
உங்களோடு சேர்ந்து சிரிக்கிறது
டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது, 
நிரப்புகிறது உங்கள் உரையாடலின் இடைவெளிகளை, தொலைபேசியில் பேசும்போது எழும் மௌனத்தை, 
காரணங்களைத் தருகிறது
ஒரு சூழலிலிருந்து,
கூட்டங்களிலிருந்து, மனிதர்களிடமிருந்து, நாடுகளிலிருந்து, காதலிலிருந்து வெளியேறுவதற்கு; 
யுத்தம் படுத்திருக்கிறது
உங்களுக்கும் உங்கள் காதலருக்கும் நடுவில், நிற்கிறது குளிக்கும்போது உங்களுக்குப் பின்னால், உங்கள் வாயைத் திறந்துபார்த்துவிட்டு பதறிப் பின்வாங்குகிறார் பல் மருத்துவர் 
அவர் யுத்தத்தை அங்கே பார்த்திருக்கக்கூடும், எவ்வளவு ரத்தம். 

நீங்கள் அறிவீர்கள் சமாதானத்தை, நீண்ட யுத்தத்தில் பிழைத்த எவரொருவரும் அறிவதுபோல, 
புரிந்துகொள்கிறீர்கள் அதை 
ஏனெனில் எல்லாவற்றிலும் கலந்திருக்கிறது நிகழக்கூடிய யுத்தத்தின் நறுமணம், எத்தனை எளிதாக ஒரு யுத்தம் வெடிக்கும் என்பது உங்களுக்குத் தெரியும், அமைதியாக ஒரு தருணம், அடுத்தது ரத்தம். 

யுத்தம் வண்ணமயமாக்குகிறது உங்கள் குரலை, கதகதப்பூட்டுகிறது. நீங்கள் கொன்றவரா அல்லது இழந்தவரா என்பதைத்தெரிந்துகொள்ள எந்த ஆர்வமும் இல்லை. எவரும் கேட்கப்போவதில்லை, சிலவேளை நீங்கள் இரண்டுமாகவும் இருக்கலாம். 
சமீபகாலத்தில் நீங்கள் எவரையும் முத்தமிட்டதில்லை. 
உங்களுக்கு எதை ருசித்தாலும் 
ரத்தத்தின் சுவையே தெரிகிறது. 

* வார்ஸான் ஷைர் ( Warsan Shire) கென்ய நாட்டில் பிறந்த சோமாலிய கவிஞர். தற்போது லண்டனில் வாழ்கிறார்.நிறவெறி, யுத்தம், புலம்பெயர் வாழ்வின் ரணங்கள் முதலானவற்றை பெண்ணிய பார்வையில் பேசுகின்றன இவரது கவிதைகள்

வகுப்புவாத எதிர்ப்பு : conscious ம் unconscious ம் - ரவிக்குமார்



காட்சி ஊடகங்களின் விவாத நிகழ்ச்சிகளில் பிரச்சனைகள் சார்ந்து பங்கேற்பாளர்களை அழைப்பதுதான் ஜனநாயகமாகவும்  சரியானதாகவும் இருக்கும். ஆனால் பெரும்பாலான நேரங்களில் இதில் ஒரு சமநிலையை ஊடகங்கள்  பின்பற்றமுடிவதில்லை. அதற்குக் காரணமாக பங்கேற்பாளர்களின் availability தொடர்பான பிரச்சனை சொல்லப்பட்டாலும் சேனல்களின் அரசியல் சார்புக்கேற்ப ஆட்களை அழைக்கவேண்டிய நெருக்கடி ஒருங்கிணைப்பாளர்களுக்கு இருக்கிறது என்பதையும் நாம் மனதில்கொள்ளவேண்டும். தமிழ்நாட்டில்  பெரும்பாலான காட்சி ஊடகங்களை நடத்துவது அரசியல் கட்சிகள் என்பதால் பிரச்சார சாதனங்களாக அவை இருப்பது வியப்புக்குரியதல்ல. 

மத்திய மாநில அரசுகளின் கொள்கைகளை, நடவடிக்கைகளை விவாதப்பொருளாக எடுக்கும்போது அரசுகளை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய நபர்களை அழைப்பது தவிர்க்கமுடியாதது. இப்போது தமிழக அமைச்சர்களே  விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்கள். தமது துறை சார்ந்த விஷயங்களில் அவர்களுக்கிருக்கும் புரிதலை மக்கள் அறிந்துகொள்ள இது உதவுகிறது. எனவே இது வரவேற்கத்தக்க மாற்றம். 

முரளி எழுப்பியிருக்கும் கேள்வி பாஜக எதிர்ப்பு என்ற மனநிலையிலிருந்து பார்க்கும்போது முற்போக்கானது. ஆனால் இது பொதுப்புத்தியில் ( common sense ) படிந்திருக்கும் பெரும்பான்மைவாத நம்பிக்கை சார்ந்த கருத்தாக மாறிவிடக்கூடிய அபாயம் உள்ளது. 

வாக்கு வங்கியின் அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்கப்படவேண்டும் என்றால் அரசை , அதிகாரத்தை எதிர்த்து எழும் குரல்கள் எப்போதுமே சிறுபான்மையாகத்தான் இருக்கும் அவை இந்த விவாதங்களில் இடம்பெறவே முடியாமல் போய்விடலாம். இடதுசாரிகளும் disproportionate ஆன பிரதிநிதித்துவத்தைப் பெறுகிறார்கள் என முரளி சொல்லும்போது அவர் பொதுப்புத்தியின் பெரும்பான்மைவாத நம்பிக்கையை வழிமொழிகிறார் என்பது தெளிவாகிறது. எந்த பாஜகவை அவர் எதிர்க்கிறாரோ அதே பாஜகவின் கருத்தியலை முரளியின் நிலைபாட்டிலும் நாம் பார்க்கிறோம். 

வகுப்புவாத எதிர்ப்பு நிலைபாட்டில் நாம் conscious ஆக செயல்பட்டால் மட்டும் போதாது நமது unconscious ஆகவும் அது மாறவேண்டும். அதன் முக்கியத்துவத்தையே நான் இங்கு வலியுறுத்த விரும்புகிறேன்.

( BBC தமிழோசையில் பணியாற்றும் முரளிதரனின் முகநூல் பதிவு குறித்து எனது குறிப்புகள் )