Saturday, July 8, 2017

நாம் என்ன செய்யப்போகிறோம்? - ஃபைஸ் அகமது ஃபைஸ் தமிழில்: ரவிக்குமார்



எண்ணற்ற ஏக்கங்கள்
சமைந்து கிடக்கின்றன 
உனது விழிகளில் எனது விழிகளில்
வகிரப்பட்ட இருதயங்கள்
திருகிக்கொண்டு கிடக்கின்றன 
உனது தேகத்தில் எனது தேகத்தில்
மரத்துப்போன விரல்கள்
செயலற்ற எழுதுகோல்கள்
விறைத்துச் சிதைந்த மனங்கள்
நமது விருப்பத்துக்குரிய 
நகரின்
ஒவ்வொரு வீதியிலும் 
சமாதியாக்கப்பட்டுள்ளன 
உனது தடங்கள் எனது தடங்கள்

நமது இரவு விண்மீன்கள்
திறந்த புண்கள் 
நமது காலை ரோஜாக்களின்
உதிர்ந்த இதழ்கள்
இருட் காற்று சூறையாடி
பிய்த்தெறியப்பட்ட விழித்திரைகள்
குணப்படுத்தமுடியாதவை
நமது வாதைகள்
ஆற்ற இயலாதவை 
நமது காயங்கள் 
சிலவற்றின்மீது 
நிலவின் சாம்பல்
சிலவற்றின்மீது
காலைப் பனியின் ரத்தம்
இது நிஜமா? 
இது பிரமையா? 
இது
உனது எனது மூடநம்பிக்கையெனும் 
சிலந்தி பின்னிய வலை மட்டும்தானா ? 

இது உண்மையென்றால்
நாம் என்ன செய்யப்போகிறோம்?
இது உண்மையில்லையென்றால்
நாம் என்ன செய்யப்போகிறோம்?
எனது புத்தியில் கூர் ஏற்று.
எனக்குப் புரிதலை உண்டாக்கு. 
சொல்!

( ஃபைஸ் அகமது ஃபைஸின் O City of Lights , OUP, 2006 தொகுப்பிலிருந்து )


No comments:

Post a Comment