Tuesday, October 23, 2018

சபரிமலை: சனாதன பயங்கரவாதிகள் பொய்ப்பிரச்சாரம் - ரவிக்குமார்



சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்று
உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரிய அனைத்து மனுக்களும் நவம்பர் 13க்குப் பிறகு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இந்நிலையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி வழிபடுவதற்கு எங்களுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என கேரள உயர்நீதிமன்றத்தில் பெண்கள் சிலர் வழக்கு தொடுத்துள்ளனர். 

தற்போது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள பெண்கள்’ சபரிமலை கோயிலில் 1950 க்கு முன்பு அனைத்து வயது பெண்களும் வழிபட்டதாகக் கூறியுள்ளனர். அதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர்களது மனுவில் கூறப்பட்டுள்ளது. கேரள அரசு கேரள - கொச்சி இந்து சமய நிறுவனங்கள் சட்டம் 1950ஐ இயற்றுவதற்கு முன்பு சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபடவே செய்துள்ளனர். நெரிசல் அதிகமாக இருக்கும் மண்டலம், மகரவிளக்கு, விஷு ஆகிய காலங்களைத்தவிர பெண்கள் அக்கோயிலுக்குச் சென்று வழிபட்டு வந்துள்ளனர். 

திருவாங்கூர் மகாராஜாவும் மகாராணியும் திவானுடன் சென்று அங்கு வழிபட்டதற்கு ஆதாரம் உள்ளது என கேரள உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட எஸ்.மகேந்திரன் எதிர் திருவாங்கூர் தேவசம் போர்டு (1991) என்ற வழக்கில் கேரள அரசே பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருக்கிறது. அது மட்டுமின்றி, ‘குழந்தைகளுக்கு முதன் முதலில் சோறூட்டும் நிகழ்ச்சியை சபரிமலை கோயிலில் செய்வது வழக்கம். அப்போது எல்லா வயதுப் பெண்களும் வருவார்கள். அந்த சடங்கு செய்ய கோயில் நிர்வாகம் கட்டணம் வசூலிப்பது வழக்கம்’ என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. புதிதாக
கொடிமரம் நடப்பட்டதையும், 18 படிகளில் தேங்காய் உடைத்து 
பூஜை செய்வதில் மாற்றம் செய்யப்பட்டு தேங்காய் உடைக்க தனி இடம் அமைக்கப்பட்டதையும் குறிப்பிட்டுள்ள கேரள அரசு, சபரிமலை கோயில் நடைமுறைகளில் எப்படி தந்திரியின் ஆலோசனையின்படி மாற்றங்கள் செய்யப்பட்டன என்பதையும் அந்த பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளது. 

கால காலமாக அங்கு 10 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட பெண்கள் அங்கு வழிபட்டதே இல்லை எனக் கூறும் சனாதன பயங்கரவாதிகள் 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற வழக்கில் அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் சொல்லப்பட்டுள்ள செய்திகளை ஆதாரத்தோடு மறுக்க முன்வருவார்களா?

No comments:

Post a Comment