Tuesday, October 30, 2018

மொழி - நிலம் - புலப்பெயர்வு - ரவிக்குமார்



மொழிவாரி மாநிலம் உருவான நாள் - நவம்பர் 1.  அம்பேத்கர் மொழிவாரிமாநிலம் குறித்து பேசியவற்றை இந்த நாளில் நினைவுபடுத்திக்கொள்வது அவசியம். ஜனநாயகம் சிறப்பாக செயல்படுவதற்கும் நிலையான ஆட்சி நடப்பதற்கும் ஒரு மொழி ஒரு மாநிலம் என இருப்பது நல்லது என அம்பேத்கர் தெரிவித்தார். பல மொழிகள் பேசப்படும் நாடுகள் உள்ளனவே என சிலர் கூறக்கூடும் அத்தகைய நாடுகளின் அடிப்படைக்கருத்தாக்கம் இணைப்பு என்பதாக இருக்கும்போது இந்தியாவின் அடிப்படை கருத்தாக்கம் பிளவு படுத்துதல் என்பதாக உள்ளது என அவர் சுட்டிக்காட்டினார். அவர் இந்தியாவிலிருக்கும் சாதி அமைப்பைத்தான் அர்த்தப்படுத்தினார் என்பது வெளிப்படை. மொழியின் அடிப்படையில் மாநிலம் உருவாக்கப்படும்போது அதன் ஆட்சிமொழியாக அந்த மாநிலத்தின் மொழி இருக்கக்கூடாது. இந்தியா முழுமைக்கும் ஒரு பொது மொழி தேவை. அது இந்தியாக இருக்கலாம். அதை மக்கள் ஏற்கும்வரை ஆங்கிலம் இருக்கவேண்டும் என்றார்.

மாநில மொழியே ஆட்சி மொழியாக இருந்தால் பிரிவினை உணர்வு மேலோங்கும் என்பதே அவரது அச்சம். ஒரு மாநிலத்துக்குள் பல மொழிகளைப் பேசுவோர் இருக்கக்கூடாது என்று வலியுறுத்துகிற இன அடிப்படைவாதிகள் ஒரு நாட்டுக்குள் தம் மாநில மொழிக்கான உரிமையை வலியுறுத்தும் உரிமையை வலியுறுத்தமுடியாது என்பதே இதன் உட்கிடை.

மொழியின் அடிப்படையில் மாநிலம் என்பதைப்பற்றி விவாதிக்கும்போது புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மனதில் மொழி, நிலம் என்ற படிமங்கள் என்ன பொருளில் தொழிற்படுகின்றன என்பதைப்பற்றி சிந்திக்கவேண்டும். அமெரிக்காவில் புலம்பெயர்ந்து வாழும் இந்தியர்களின் கலை வெளிப்பாடுகள் குறித்து பேசும் கலை வரலாற்றறிஞர் வித்யா தெஹேஜியா அமெரிக்க கோயில்கள் பெரும்பாலும் தென்னிந்திய கலைமரபையொட்டி கோபுர அமைப்போடு கட்டப்பட்டிருப்பதையும் கணபதி ஸ்தபதி முத்தையா ஸ்தபதி ஆகியோர் அவற்றின் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியிருப்பதையும் சுட்டிக்காட்டியிருப்பது இங்கே கவனத்தில் கொள்ளத்தக்கதாகும். புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் மக்கள் மொழி என்பதைக் கடந்து தமது பண்பாட்டு அடையாளத்தை மதத்தின் அடிப்படையில் கட்டமைக்கிறார்களா? ஈழத் தமிழரிடையே புத்தியிர்ப்பு பெற்றுள்ள இந்து மத அடையாளத்துக்கான நியாயம் புலப்பெயர்வில் இருக்கிறதா?

No comments:

Post a Comment