ஸ்ரீரங்கத்தில் கோவை ராமகிருஷ்ணனின் தலைமையிலான திராவிடர் கழகத்தினர் உணவு விடுதி ஒன்றின் பெயர்ப் பலகையில் 'பிராமணாள் காபி கிளப் ' என எழுதியிருந்ததை அழிக்க முற்பட்டுப் போலீசால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். இந்தப் போராட்டம் பல்வேறு வினாக்களை எழுப்பியிருக்கிறது. தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் பிராமணர்கள் மட்டுமே நுழைந்து காபி குடிக்கக்கூடிய உணவகங்கள் இருந்தன. அவற்றில் பிற சாதியினரை அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களை அனுமதிக்காத நிலை இருந்தது. அந்த இழி நிலையை எதிர்த்து நடைபெற்றப் போராட்டங்களின் காரணமாகவே அந்த பெயர்ப் பலகைகள் அகற்றப்பட்டன, எல்லோரும் அந்த உணவகங்களில் அனுமதிக்கப்படும் நிலை உருவானது.
இப்போது பிராமணர்கள் நடத்தும் உணவகங்கள் ஒப்பீட்டளவில் குறைவு. இன்று தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகின் பல்வேறு நாடுகளிலும் கிளை பரப்பி நடத்தப்படும் ' சரவண பவன் ' உணவகம் பிராமணர்களுக்குச் சொந்தமானதல்ல. தமிழ்நாட்டின் சிறு நகரங்களில் இருக்கும் உணவகங்களில் கல்லாவுக்குப் பின்னால் பார்க்கமுடிவதைவிடவும் பரிமாறும் இடங்களில்தான் பிராமணர்களை இப்போது அதிகம் பார்க்க முடிகிறது. ஸ்ரீரங்கத்தில் பிராமணாள் காபி கிளப் என்று பெயர்ப்பலகை வைக்கப்பட்டிருத்த உணவகத்தில் பிராமணர்களைத் தவிர பிறரை அனுமதிக்க மறுத்ததாகத் தெரியவில்லை. எனினும் இப்படியான முயற்சிகள் கசப்புணர்வை அதிகரிக்கவே வழிவகுக்கும். சென்ற நூற்றாண்டில் நிலவிய சமூக நிலைகளை வெறுப்பு என்னும் நீர் ஊற்றி மறுபடியும் துளிர்க்கச் செய்வது தேவையற்றது.
ஸ்ரீரங்கத்தில் இருக்கும் பெயர்ப்பலகையை அகற்றுவதற்குக் குரல் கொடுத்த திராவிடர் கழகத்தினர் அத்துடன் நிறுத்திக்கொள்ளாமல் மேலும் இரண்டு போராட்டங்களை நடத்த வேண்டும். தமிழர்கள் தமது பெயருக்குப் பின்னால் சாதி பின்னொட்டைப் போட்டுக்கொள்வதை எதிர்த்து ஒரு போராட்டம் , வணிக நிறுவனங்களை நடத்துகிற தமிழர்கள் அவற்றின் பெயர்ப்பலகைகளில் ( உ-ம் : ரெட்டியார் மெஸ் , நாடார் மெஸ் ) சாதிப் பெயர்களைப் பயன்படுத்தக்கூடாது என்று வலியுறுத்தி ஒரு போராட்டம். ஆக, இப்படி இரண்டு போராட்டங்களை நடத்த வேண்டும் என்பது எனது வேண்டுகோள். இவற்றை நடத்தாமல் , பிராமணர் அல்லாதாரிடம் இருக்கும் சாதிப் பற்றைக் களையாமல் பிராமணர்களை மட்டும் எதிர்த்துப் போராடுவதென்பது அரசியலுக்கு வேண்டுமானால் உதவலாமே தவிர சாதியை ஒழிக்க உதவாது.
