Wednesday, October 16, 2013

”பாண்டிச்சேரி என்பது பழங்கால நகரம் அல்ல”


J.B.P.More  என்ற வரலாற்றாசிரியரின் புதிய நூல் எழுப்பும் சர்ச்சை
- ரவிக்குமார்


”புதுச்சேரி என இப்போது பெயர்மாற்றப்பட்டுள்ள பாண்டிச்சேரி ஒரு பழமையான நகரம் அல்ல. புதுகே என தாலமி குறிப்பிட்டது இந்த ஊரை அல்ல” என J.B.P.More  என்ற வரலாற்றாசிரியர் தனது From Arikamedu to the Foundation of Modern Pondicherry என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறார். முதல் பதிப்பு 2014 என அச்சிடப்பட்டு 2013 ஆம் ஆண்டிலேயே வெளியாகியிருக்கும் அந்த நூலின் அடுத்த பாகத்தையும் விரைவில் வெளியிடப்போவதாக அதன் ஆசிரியர் கூறியிருக்கிறார். அவரது கருத்துகள் ஆகிய ஆங்கில நாளேடுகளில் முக்கியத்துவத்தோடு வெளியாகியுள்ளன. 

அரிக்கமேடு ஒரு தொல்லியல் மையம் என அங்கீகரிக்கப்பட்ட இடமாகும். இந்தியத் தொல்லியல் துறையால் அகழ்வாய்வு செய்யப்பட்டு பல்வேறு மட்பாண்டங்களும், ஜாடிகளும், உலோகப்பொருட்களும் அங்கிருந்து கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. அந்தப் பொருட்களை வைத்துப் பார்க்கும்போது அந்த ஊர் ரோம் நாட்டுடன் கடல்வழி வணிகத்தில் ஈடுபட்டிருந்ததையும் கி.மு.1 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே அங்கு மக்கள் வசித்து வந்ததையும் தொல்லியல் துறை உறுதி செய்திருக்கிறது. ஆனால் மோரே அவை எல்லாவற்றையும் மறுக்கிறார். ’பாண்டிச்சேரி அவ்வாறு தொன்மையான நகரமாக இருந்தால் சங்க இலக்கியங்களிலோ அல்லது கல்வெட்டுகளிலோ அதைப்பற்றிக் குறிப்பிட்டிருப்பார்கள். அப்படி எந்தவொரு குறிப்பும் இல்லை. பழைய காலத்தில் கட்டடம் என்றாலே கோயில் தான். அரிக்கமேட்டிலோ பாண்டிச்சேரியிலோ அப்படிப் பழமையான கோயில் எதுவும் இல்லை’ என மோரே வாதிடுகிறார்.
1635 ஆம் ஆண்டில் ஃப்ரெஞ்ச்காரர் ஒருவரால் வரையப்பட்ட நிலவரைபடத்தில் அது Polesere எனக் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும்; 1620 ஆம் ஆண்டிலிருந்தே அந்த ஊரை பிரிட்டிஷ் ஆவணங்களில்  Poullaserre, Pullaesera, Pollusearea,Poolysera,Poolasere, Podisera, Polasera, Pullacherey, Pullacherry எனப் பலவாறாக அழைத்திருக்கிறார்கள். இந்தியாவிலிருந்த பிரிட்டிஷ் அதிகாரியால் 1648  ஆண்டில் லண்டனுக்கு எழுதப்பட்ட கடிதமொன்றில் அந்த ஊர் Pullacherry என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறதென்றும் மோரே கூறுகிறார்.
”பாண்டிச்சேரி என்ற பெயர் 17 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் வந்திருக்கவேண்டும். அது பண்டகசாலை என்பதன் திரிபாக இருக்கக்கூடும் அல்லது பொருட்களை வண்டிகளில் ஏர்றி வந்ததால் வண்டிச் சேரி என அது அழைக்கப்பட்டு அதுவே பின்னர் பாண்டிச்சேரி என ஆகியிருக்கவேண்டும் என்பது மோரேவின் வாதம். அதுபோலவே அரிக்கமேடு அமைந்திருக்கும் இப்போது அரியாங்குப்பம் என அழைக்கப்படும் கிராமம் ஃப்ரெஞ்ச் ஆய்வறிஞர் ஃபிலியோஸா குறிப்பிட்டிருப்பதுபோல ஆர்யன் என்ற சொல்லிலிருந்தோ, அல்லது வேறு சில வரலாற்றாசிரியர்கள் சொல்வதுபோல அருகன் என்ற சொல்லிலிருந்தோ வரவில்லை. அதுவொரு மீனவக் கிராமம் என்பதால் அங்கு ஆரியர்கள் என அறியப்படும் பிராமணர்களோ அருகன் என்ற சொல்லோடு தொடர்புகொண்ட பௌத்த பிக்குகளோ இருந்திருக்க முடியாது. மாறாக அது அரையான் குப்பம் என்பதன் திரிபு. அரையார், கரையார் என மீனவர்களே அழைக்கப்படுகிறார்கள்” என்று தனது கண்டுபிடிப்பை அவர் முன்வைத்திருக்கிறார்.
மோரேவின் வாதம் பெருமளவுக்கு ஊர்ப்பெயர்களின் வேர்ச்சொல் ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. அத்தகைய ஆராய்ச்சியை மேற்கொள்ளும் அளவுக்கு அவருக்குத் தமிழில் புலமை இருப்பதாகத் தெரியவில்லை. சங்க இலக்கியத்தில் இல்லை, கல்வெட்டுகளில் இல்லை, கோயில்களின் சிதைவு எதுவும் காணப்படவில்லை எனவே இது பழமையான இடம் இல்லை என்பனபோன்ற அவரது வாதங்களை தொல்லியல் அகழ்வாய்வுகளால் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு இடத்தின் வரலாற்றைப் புறக்கணிக்கப் போதுமான காரணங்களாகக் கொள்ள முடியாது.அரியாங்குப்பம் ஒரு மீனவக் கிராமம் அங்கு பௌத்தர்கள் இருந்திருக்க முடியாது என்ற வாதத்தை இப்போதும் அங்கு காணப்படும் பழமையான புத்தர் சிலை மறுப்பதாக இருக்கிறது.
பல்லவர்கள்,சோழர்கள்,பாண்டியர்கள் எனப் பலரது ஆட்சியின்கீழும் இருந்த பாண்டிச்சேரி பகுதி காலனிய ஆட்சிக்காலத்தில் ஆங்கிலேயருக்கும் , ஃப்ரெஞ்ச்காரர்களுக்கும் இடையிலான யுத்தங்களுக்கும் காரணமாக இருந்திருக்கிறது. புதுகே என அழைக்கப்பட்டது பாண்டிச்சேரி இல்லை என மறுக்கும் மோரே அது பொதிகை என்பதைக் குறிப்பிடுவதற்கான சொல்லாக இருக்கலாம் என்கிறார். பாண்டிச்சேரியின் தொல்பழங்கால வரலாற்றைத் தெளிவுபடுத்துவதாக மோரேவின் நூலைக் கருதமுடியாது எனினும் அதை இன்னும் ஆழமாக ஆய்வு செய்யவேண்டும் என்ற தேவையை இந்தப் புத்தகம் ஏற்படுத்தியிருக்கிறது.
பாண்டிச்சேரிப் பல்கலைக்கழகத்தில் தற்போது பணியாற்றிக்கொண்டிருக்கும் பேராசிரியர் ராஜன் அவர்கள் கொடுமணல், பொருந்தல் அகழ்வாய்வுகளைப்போல பாண்டிச்சேரியிலும் சில அகழ்வாய்வுகளை மேற்கொண்டால் அதன் தொன்மை புலப்படும். பாண்டிச்சேரியில் இருக்கும் சர்வதேசப் புகழ்பெற்ற ஃப்ரெஞ்ச் இன்ஸ்டிட்யூட்டும் இதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டால் நல்லது. அங்கு பணியாற்றும் பேராசிரியர் கோ.விஜயவேணுகோபால் அவர்கள் புதுச்சேரி மாநிலக் கல்வெட்டுகள் என்ற இரண்டு தொகுதிகள் கொண்ட அரிய ஆவணத்தைப் பதிப்பித்திருக்கிறார். அவரைப் போன்ற அறிஞர்களின் பணிகளை இன்னும் நன்றாகப் பயன்படுத்தினால் புதுச்சேரி என்று இப்போது பெயர்மாற்றப்பட்டிருக்கும் பாண்டிச்சேரியின் வரலாறு மேலும் துலக்கமாகும்.அதுவரை மோரே போன்றவர்களின் புத்தகங்கள் பரபரப்பாகத்தான் பேசப்படும்.

From Arikamedu to the Foundation of Modern Pondicherry

J.B.P.More
Saindhavi Publications, Thuraipakkam, Chennai, 2014
Price 350/-

No comments:

Post a Comment