Wednesday, October 16, 2013

தமிழக சட்டப்பேரவையில் விவாதிக்க .......

 
 
 
வணக்கம்!
        அக்டோபர் 23 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மிகக் குறுகிய காலமே நடைபெறவிருக்கும் இந்தக் கூட்டத் தொடரில் விரிவான விவாதங்களுக்கு நேரமிருக்காது என்றபோதிலும் சட்டப் பேரவையில் இடம்பெற்றிருக்கும் கட்சிகள் வெளிநடப்பிலும், கூச்சல் குழப்பங்களிலும் காலத்தை வீணாக்காமல் மக்கள் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்பது எனது வேண்டுகோள்.அரசும் அதற்கு ஒத்துழைப்பு நல்கவேண்டும்.

       தமிழக சட்டப்பேரவையில் பின்வரும் அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகள் குறித்து விவாதிக்கவும் தீர்மானம் நிறைவேற்றவும் பேரவையில் இடம்பெற்றுள்ள கட்சிகள் கவனம் செலுத்தவேண்டும் என வேண்டுகிறேன்: 

1. மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வில் தமிழகத்தை வஞ்சிக்கும் ரகுராம் ராஜன் கமிட்டி அறிக்கையை நிராகரித்து மத்திய வரி வருவாயில் மாநிலங்களுக்கு 50% ஒதுக்கும்படி வலியுறுத்தி சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றவேண்டும்.

2. தொடக்கக் கல்விமுதல் ஆராய்ச்சிக் கல்வி வரை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்தால்தான் அதில் உரிய சீர்திருத்தங்களைச் செய்யமுடியும்.இந்தியா சுதந்திரம் அடைந்தபோது கல்வி மாநிலப் பட்டியலில்தான் இருந்தது. இடைக்காலத்தில்தான் அது பொதுப்பட்டியலுக்குக் கொண்டுசெல்லப்பட்டது.இப்போது அது மென்மேலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுசெல்லப்படுகிறது. கல்வியை மீண்டும் மாநிலப்பட்டியலுக்குக் கொண்டுவருவதற்கு அவ்வப்போது தி.மு.க உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் குரல்கொடுத்தாலும்  தமிழக அரசின் நிலையை மத்திய அரசுக்கு வலுவாக உணர்த்திட முனைப்பான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. எனவே கல்வியை பொதுப்பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கும் மாற்றிட வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும். 

3. காமன்வெல்த் மாநாட்டில் இந்திய அரசு கலந்துகொள்ளக்கூடாது என வலியுறுத்தித் தீர்மானம் ஒன்றை ஒருமனதாக நிறைவேற்றவேண்டும்.

4. காவல்துறை சீர்திருத்தம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் நெருக்குதலை சமாளிக்கும் நோக்கில் தற்போது தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டிருக்கும் அவசர சட்டம் பல தவறுகளைக்கொண்டிருக்கிறது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் முறையாகப் பின்பற்றப்படவில்லை.  அந்தக் குறைகளோடு அதை சட்டமாக்க தமிழக அரசு முயற்சித்தால் அதில் சரியான திருத்தங்களை முன்மொழியவேண்டிய கடமை சட்டமன்றத்தில் இடம்பெற்றிருக்கும் கட்சிகளுக்கு உள்ளது.

5. தாது மணல் உள்ளிட்ட தமிழகத்தின் கனிம வளங்கள் எடுக்கப்படுவதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டிவருகின்றன. எனவே கனிமவளங்கள் எடுப்பதில் ஒரு புதிய அணுகுமுறை தேவைப்படுகிறது. அதற்கான கொள்கை ஒன்றை வகுக்குமாறு தமிழக அரசை வலியுறுத்தவேண்டும். 

6. மது விற்பனையால் கிடைக்கும் வருவாயைக் காட்டிலும் மதுப் பழக்கத்தால் ஏற்படும் மனிதவள இழப்பு அதிகம். மது விற்பனையால் கிடைக்கும் வருவாயை ஈடுசெய்ய எத்தனையோ நல்ல வழிமுறைகள் உள்ளன. மதுவிலக்குக் கொண்டுவரப்பட்டால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்ற வாதம் ஏற்புடையதல்ல. பால்ய விவாகத்தை நியாயப்படுத்தியவர்கள் அதைத் தடுத்தால் விபச்சாரம் பெருகிவிடும் என்று வாதிட்டதைத்தான் இது நினைவுபடுத்துகிறது. எனவே மதுவிலக்கை நடைமுறைப்படுத்துமாறு அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்தவேண்டும். தமிழக அரசும் இதுகுறித்துப் பரிசீலிக்கவேண்டும். 

7. ஒப்பீட்டளவில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் தலித்துகள் நிலமற்றவர்களாக உள்ளனர். ஆனால் அவர்கள்தான் பெருந்தொகையாக விவசாயத்தைச் சார்ந்து இருக்கின்றனர். அவர்களுக்குப் புதிதாக நிலம் வழங்குவது ஒருபுறமிருந்தாலும் அவர்களுக்குச் சொந்தமான பத்து லட்சம் ஏக்கருக்கும் அதிகமான பஞ்சமி நிலங்களையாவது மிட்டுத் தர அரசு நடவடிக்கைஎடுக்கவேண்டும். அதற்காக அதிமுக ஆட்சிக்காலத்தில் 1996 ஆம் ஆண்டு ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. திமுக ஆட்சியில் 2011 இல் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் இரண்டுமே செயல்படவில்லை. எனவே பஞ்சமி நிலங்களை மீட்டுக்கொடுப்பதற்கு தமிழக அரசை அரசியல் கட்சிகள் வலியுறுத்தவேண்டும்.
 
( 14.10.2013 அன்று சட்டப்பேரவை கூடுவது தொடர்பான அறிவிப்பு வந்தவுடன் ஊடகத்தினருக்கும், கட்சித் தலைவர்களுக்கும் நான் அனுப்பிய மின்னஞ்சல்)

No comments:

Post a Comment