Sunday, July 28, 2013

அமிலவீச்சு என்னும் பயங்கரம்: சிறப்பு சட்டம் இயற்றப்படுமா?

அமிலவீச்சுக்கு ஆளாகி உயிரிழந்த வித்யா


டெல்லியில் பெண் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கபட்டபோது நாடே கொதித்தெழுந்தது. அரசியல் தலைவர்களும்,ஆட்சியாளர்களும் தமது மனிதநேயத்தை நிரூபித்துக்கொள்ளும்விதமாக பேசினார்கள். ஊடகங்களும் அந்தப் பிரச்சனையை முக்கியத்துவம் தந்து விவாதித்தன. ஆனால் இப்போது எல்லாமே மறைந்துபோய்விட்டது. ஊடகங்களுக்குப் போதும் போதும் என்னுமளவுக்கு நரேந்திர மோடி செய்திதானம் செய்துகொண்டிருக்கிறார். எனவே பெண்களின் பாதுகாப்பு இப்போது செய்தி மதிப்பை இழந்துவிட்டது.நாடே கொந்தளித்த நேரத்திலும்கூட தமிழ்நாட்டில் பெரிய அளவுக்குப் போராட்டங்கள் நடக்கவில்லை. இங்கு மகளிர் அமைப்புகள் இல்லையா அல்லது அவர்களுக்கு இது முக்கியமான பிரச்சனையாகத் தெரியவில்லையா என்பது புரியவில்லை. 

பாலின பாரபட்சம் துலக்கமாகத் தெரியும் அமைப்புகளில் ஒன்றான நமது உச்சநீதிமன்றம் அவ்வப்போது பெண்கள் குறித்து அக்கறை காட்டுவதுண்டு. அப்படியான அபூர்வமானதொரு சந்தர்ப்பம் இப்போது அதற்குக் கிடைத்திருக்கிறது. அமிலவீச்சினால் பாதிக்கப்படும் பெண்களுக்கு மாநில அரசு மூன்று லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும், சம்பவம் நடந்து 15 நாட்களுக்குள் ஒரு லட்ச ரூபாயைக் கொடுக்கவேண்டும் மீதமுள்ள இரண்டு லட்ச ரூபாயை இரண்டு மாதங்களுக்குள் கொடுக்கவேண்டும் என அணமையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. டெல்லியில் 2005 ஆம் ஆண்டு அமிலவீச்சுக்கு ஆளான லட்சுமி என்ற பெண் தொடர்ந்த வழக்கில்தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. 

அமிலவீச்சு என்பது பெரும்பாலும் பெண்களைக் குறிவைத்தே நடத்தப்படுகிறது. காதலை நிராகரித்தவர்கள், திருமணம் செய்ய மறுத்தவர்கள், வரதட்சணைக் கொண்டுவர இயலாதவர்கள் - எனப் பலதரப்பட்ட பெண்கள் இந்தக் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுவருகிறார்கள். உலகின் பல நாடுகளிலும் அமிலவீச்சு என்னும் வன்முறை நிகழ்ந்துகொண்டிருந்தாலும் பாகிஸ்தான்,பங்களாதேஷ்,கம்போடியா,உகாண்டா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில்தான் இது அதிக எண்ணிக்கையில் நடப்பதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. 

இந்திய சட்டக் கமிஷன் 2008 ஆம் ஆண்டு சமர்ப்பித்த தனது 226 ஆவது அறிக்கையில் அமிலவீச்சு என்னும் வன்முறை குறித்து விரிவாகக் குறிப்பிட்டு அதைத் தடுப்பதற்கென சிறப்பு சட்டம் ஒன்றை இயற்றவேண்டும் என வலியுறுத்தியிருந்தது.அமிலவீச்
சால் பாதிக்கப்படுவோருக்கு இழப்பீடு மர்றும் அவர்களது மறுவாழ்வுக்கான நடவடிக்கைகள்; அமில விற்பனையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அனைத்தையும் உள்ளடக்கியதாக இந்த சட்டம் இருக்கவேண்டும் என்றும் அது கூறியிருந்தது. ஆனால் மத்திய அரசு அதைப் பொருட்படுத்தவில்லை. டெல்லி பாலியல் தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு அமைக்கப்பட்ட நீதிபதி வர்மா கமிட்டியும் தனது அறிக்கையில் சட்டக் கமிஷனின் கருத்துகளை எடுத்துக்காட்டி தனியே இதற்கென சட்டம் இயற்றவேண்டும் என வலியுறுத்தியிருந்தது.அதன்பின்னர் பாலியல் வன்கொடுமைகளைத் தடுப்பதற்கென சட்டம் இயற்றிய மத்திய அரசு அமிலவீச்சு வன்முறையைத் தடுப்பதற்கென தனியே சட்டம் இயற்றாமல் அலட்சியம் செய்து வருகிறது.  

அபாயகரமான முறையில் கொடுங்காயம் ஏற்படுத்துவது என்ற வகையில் இந்திய தணடனை சட்டத்தின் பிரிவு 326 தான் இந்தக் குற்றத்துக்குப் பயன்படுத்தப்பட்டுவந்தது. ஆனால் அமில வீச்சு உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் காரணத்தால் இதச பிரிவு 307ஐப் பயன்படுத்தவேண்டும் என 2008 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு ஒன்றில் சுட்டிக்காட்டியபிறகே காவல்துறை அதைப் பயன்படுத்துகிறது. 

தற்போது உச்சநீதிமன்றம் பிறப்பித்திருக்கும் உத்தரவில் அமில விற்பனையைக் கட்டுப்படுத்துவதற்கும் சில நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. நச்சுப் பொருட்கள் குறித்த 1919 ஆம் ஆண்டு சட்டத்தின்கீழ் அமில விற்பனையை வகைப்படுத்தவேண்டும் என உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் கூறியிருக்கிறது. இதற்காக மாநில அரசுகள் தனியே விதிகளை உருவாக்க வேண்டும் என்றும் ஆணையிட்டிருக்கிறது. 

தற்போது உச்சநீதிமன்றம் பிறப்பித்திருக்கும் உத்தரவு ஒரு தற்காலிக ஏற்பாடுதானே தவிர நிரந்தர தீர்வு அல்ல. சட்டக் கமிஷனும், வர்மா கமிட்டியும் அளித்த பரிந்துரைக்கேற்ப தனியே இதற்கென சட்டம் இயற்றுவதே இதில் மத்திய அரசு உடனடியாகச் செய்யவேண்டிய காரியமாகும். சிறப்பு சட்டம் இயற்றிவிட்டாலே இத்தகைய குர்றங்கள் குறைந்துவிடுமா எனக் கேட்கப்படலாம். பங்களாதேஷில் 2002 ஆம் ஆண்டு அப்படி கடுமையானதொரு சட்டம் இயற்றப்பட்டதற்குப் பிறகு அமிலவீச்சு வன்முறை குறைந்திருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 

ஆகஸ்டு மாதம் 5 ஆம் தேதி பாராளுமன்றம் கூடவிருக்கும் நிலையில் இதனை வலியுறுத்தி மகளிர் அமைப்புகள் குரலெழுப்பவேண்டும். அமைப்பாகத் திரட்டப்பட்ட இடதுசாரிக் கட்சிகளின் மகளிர் அமைப்புகளும்,தன்னார்வக் குழுக்களும்,மனித உரிமை அமைப்புகளும் இதற்காகக் களம் இறங்கினால் நிச்சயம் இதை சாதிக்க முடியும்.

No comments:

Post a Comment