Tuesday, January 14, 2014

புகழ்பெற்ற தலித் கவிஞர் நாம்தேவ் தாசல் காலமானார்

புகழ்பெற்ற தலித் கவிஞரும் மகராஷ்டிராவில் தலித் பேந்தர்ஸ் இயக்கம் உருவாகக் காரணமாக இருந்தவர்களில் ஒருவருமான நாம்தேவ் தாசல் நேற்று காலமானார் என்ற செய்தியறிந்து துயருற்றேன். எதிர்ப்பின் கோபத்தை மட்டுமல்ல அழகையும் எடுத்துச் சொல்பவை அவரது கவிதைகள். உலகளாவிய எதிர்ப்புக் கவிதை மரபில் இந்திய தலித் கவிதைகளுக்கென ஒரு இடத்தைப் பெற்றுத் தந்தவர் அவர். அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். நான் மொழிபெயர்த்த அவரது கவிதை ஒன்றை இங்கே தருகிறேன்: 


நாம்தேவ் தாசலின் கவிதை


அம்மா! உனது மகன், குழந்தையல்ல

அவன் இந்த யுகத்தின் புரட்சியினுடைய புத்திரன்

அவனால் பார்க்கமுடியும் இந்த அநீதியை, தானே ஒரு 

பாதிக்கப்பட்ட மனிதனாயிருந்து.


அரசாங்க யந்திரத்தை, வாழ்க்கை முறைகளை, உழைப்பின் வலிமையை

நிலக்கரியும், இரும்பும் தரும் சுரங்கங்களை? கிடங்குகளை, தொழிற்சாலைகளை

அங்கே இருக்கும் பாதுகாப்பை.

பணத்துக்கும் உணவுக்கும் கிடைக்கும் உத்திரவாதத்தை.

எனது முகமோ புழுதியில் புதைகிறது

அவை யாவற்றிலுமிருந்து பிரிக்கப்பட்டு.....

பதினெட்டாம் நூற்றாண்டில்

மனிதகுலம் தலைகீழாய்ப் புரட்டிப்போடப்பட்டது.


ஆனால் இன்று அவற்றை நீ அறியமாட்டாய்

உனக்குத்தெரியாது அடிமை

வியாபாரிகளை, அவர்களது நாடுகளை

உனக்குத் தெரியாது


1793ன் ஜனவரி 21ஐ

ஆயிரக்கணக்கான மக்கள் முன்பாக கில்லட்டின் உயர்ந்து

பதினான்காம் லூயி மன்னனின் தலை உருண்டதை

உனக்குத் தெரியாது

வரலாற்றில் நிகழ்ந்த கொடூரமான கொலைகளை


1848ன் புரட்சிகர யுத்தமும்

உனக்குத் தெரியாது.....


பெபூஃபைத் தெரியாது, கொண்டு வந்த 

சுதந்திரஜோதியையும் உனக்குத் தெரியாது.....


இருபதாம் நூற்றாண்டு

உனது மகனுக்குப்

பார்¬வையைத் தந்துள்ளது....


சுரண்டலைத்தெரியும் எனக்கு, என்னை நான்


இழந்ததும் தெரியும்

நான் ஒரு சாத்தானாகிவிட்டேன்.....




No comments:

Post a Comment