Monday, January 20, 2014

தீர்ப்பா ? நீதியா?



வீரப்பன் கூட்டாளிகள் எனக் குற்றம் சாட்டப்பட்ட அப்பாவித் தமிழர்கள் நால்வர் உள்ளிட்ட 15 மரணதண்டனைக் கைதிகளின் தண்டனையைக் குறைப்பது பற்றி நாளை (21.1.2014) உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கவிருக்கிறது. தலைமை நீதிபதி திரு சதாசிவம் அவர்களது அமர்வுதான் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீர்ப்பை வழங்கப்போகிறது. 


கருணைமனுக்களின்மீது முடிவெடுக்க நீண்டகாலம் எடுத்துக்கொள்ளப்பட்டது என்ற காரணத்தின் அடிப்படையிலேயே இந்த வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வாதமும் நிராகரிக்கப்பட்டால் தூக்கிலிடப்படுவது தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. அந்த வழக்கை கவனித்துக்கொண்டிருக்கும் நண்பர் ஜூலியஸ் சற்று முன்னர் என்னிடம் பேசினார். அவருக்குத் தைரியம் சொன்னேன் என்றாலும் இன்னும் எனக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. சிறைக் கொட்டடிகளில் அந்த அப்பாவிகள் இந்த இரவை எப்படிக் கடத்திக்கொண்டிருப்பார்களோ தெரியவில்லை. ஒரு நிமிடம் அவர்களாக நம்மைக் கருதிப்பார்த்தால் அந்தக் கொடுமை நமக்குப் புரியும். 


நாளை நண்பகலுக்குள் தீர்ப்பு வெளியாகிவிடும். எனக்குக் கடவுள் நம்பிக்கையில்லை. ஆனாலும் அவர்களது தண்டனை குறைக்கப்படவேண்டும் என மனதுக்குள் வேண்டிக்கொள்கிறேன். 


தலைமை நீதிபதியாக இருக்கும் திரு சதாசிவம் அவர்கள் இன்னும் சில காலத்தில் ஓய்வுபெறப் போகிறார். அவர் நாளை வழங்கப்போகும் இந்தத் தீர்ப்புதான் ராஜிவ் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்டவர்களது விதியையும் தீர்மானிக்கப்போகிறது. அவர் வாதங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்குகிறவராக இல்லாமல் நீதி வழங்குபவராக இருக்கவேண்டும். மரணதண்டனையை ஒழிப்பதுகுறித்து அவர் தனது தீர்ப்பில் உறுதியானதொரு கருத்தை வெளியிட்டால் ஒரு தமிழன் என நானும் பெருமிதம் கொள்வேன்.

No comments:

Post a Comment