Friday, January 10, 2014

மதச் சார்பற்ற தமிழ் அடையாளம் - ரவிக்குமார்


 

    தை மாதத்தை ஆண்டின் முதல் மாதமாகவும் , தை முதல் தேதியைத் தமிழ்ப் புத்தாண்டின் துவக்கமாகவும் அறிவித்து தி.மு.க அரசு 2008 ஆம் ஆண்டு இயற்றிய சட்டத்தை இப்போது அ.தி.மு.க அரசு ரத்துசெய்திருக்கிறது.’தி.மு.க அரசின் சட்டம்,  காலம் காலமாக சித்திரை முதல்நாளை புத்தாண்டு தினமாகக் கடைபிடித்துவந்த மக்களின் உணர்வுகளை அவமதித்துவிட்டது’ என்று குறிப்பிட்டிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா ’ மக்களின் நம்பிக்கைகளை சட்டங்களால் மாற்றிவிட முடியாது’ என்று கூறியிருக்கிறார். .  

 

‘‘தரணி ஆண்ட தமிழர்க்கு தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு!’’ என்று பாடினார் பாரதிதாசன். அவர் அப்படிப் பாடுவதற்கு முன்பே 1921ஆம் ஆண்டில் மறைமலை அடிகளார் தலைமையில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கூடிய ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள் தமிழருக்கெனத் தனியே ஒரு காலக்கணக்குத் தேவை என்பதை வலியுறுத்தி திருவள்ளுவர் பிறந்த ஆண்டாகக் கருதப்படும் கி.மு. 31ஆம் ஆண்டைத் துவக்க ஆண்டாகக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு என ஒன்றை அறிவித்தார்கள். சித்திரை முதல் நாளைத் தமிழ்ப்புத்தாண்டாகக் கொண்டாடுவது தமிழர் மரபுக்கு பொருத்தமானதல்ல, தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு எனவும் அவர்கள் முடிவு செய்தார்கள்.

 

திருவள்ளுவர் ஆண்டு என்கிற காலக்கணக்கைத் தமிழக அரசு 1971ஆம் ஆண்டிலேயே ஏற்றுக்கொண்டு விட்டது. அது குறித்து அரசாணையும் வெளியிடப்பட்டது. ஆனால் தமிழ்ப் புத்தாண்டு மட்டும் மாறாமல் சித்திரையிலேயே தொடர்ந்தது. அதைத்தான் 2008 இல் தி.மு.க அரசு மாற்றி அமைத்தது.

 

திருவிழாக்கள், பண்டிகைகள் என்பவை மக்களால் காலம்காலமாகக் கடைபிடிக்கப்பட்டு வருபவை. பல பண்டிகைகள் வழக்கொழிந்து போவதும், புதிது புதிதாக பண்டிகைகள் அறிமுகமாவதும் நாம் அறிந்தவைதான். ஆடிப் பெருக்கு என்ற பண்டிகை இன்று தமிழர்களால் அவ்வளவாகக் கொண்டாடப்படுவதில்லை. (அதன் இடத்தை ஆடித் தள்ளுபடி கொண்டாட்டங்கள் எடுத்துக்கொண்டுவிட்டன. ஆற்றங்கரைகளை நோக்கிச் சென்ற கூட்டம் இப்போது துணிக்கடைகளை நோக்கிப் பாய்ந்துகொண்டிருக்கிறது )ஆனால் ஆங்கிலப் புத்தாண்டு இப்போது வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. காட்சி ஊடகங்கள் செல்வாக்கு செலுத்தும் இன்றைய நாளில் கிரிக்கெட் போட்டிகள் திருவிழாக்களாக மாறிவிட்டதை நாம் பார்க்கிறோம்.

 

தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக தி.மு.க அரசு அறிவித்தபோது அதைத் தமிழ் உணர்வாளர்கள் பலர் பாராட்டி வரவேற்றார்கள். அப்போது  அதை விமர்சித்தவர்களும் உண்டு. மக்களின் பண்பாட்டு நடவடிக்கைகளில் அரசாங்கம் தலையிடுவது சரியல்ல என்பது அவர்களில் ஒருசிலரின் வாதம். காலம்காலமாக இருந்துவரும் வழக்கத்தைத் திடீரென்று மாற்றச்சொல்வது சரியா? என்பது அவர்களின் கேள்வி. அதைதான் இன்றைய முதல்வரும் கேட்டிருக்கிறார். நீண்ட காலமாக இருந்து வருகிறது என்பதாலேயே ஒன்றை நாம் ஏற்றுக்கொண்டு விடமுடியாது. சாதி ஏற்றத்தாழ்வுகள்கூட வெகுகாலமாக இருந்துவருவதுதான். அதை ஜனநாயகம், சமத்துவம் என்ற கருத்தாக்கங்கள் கோலோச்சுகிற இன்றைய நாளில் நாம் கடைபிடிக்க முடியாது அல்லவா? மக்களின் பண்பாட்டு நடவடிக்கைகளில் அரசாங்கம் தலையிடக்கூடாது என்ற வாதமும்கூட பிற்போக்கான ஒன்றுதான். உடன்கட்டை ஏறும் வழக்கம் இந்திய மக்களின் பண்பாடாக ஒருகாலத்தில் இருந்தது. அதுபோலவே பால்ய விவாகமும் நடைமுறையில் இருந்தது. மனித நாகரீகத்துக்கு விரோதமான இவற்றையெல்லாம் அரசின் குறுக்கீடுகள்தான் இப்போது ஒழித்துக்கட்டியிருக்கின்றன. எனவே மக்களின் நம்பிக்கைகளைச் சட்டத்தால் மாற்றிவிட முடியாது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளமுடியாது.

 

ஆண்டைக் கணக்கிடுவது பற்றிய சிக்கல் நீண்டநெடுங்காலமாகவே இந்தியாவில் இருந்து வந்துள்ளது. பஞ்சபாண்டவர்கள் வனவாசம் முடிந்து திரும்பி வந்தபோது நீங்கள் சந்திரனை அடிப்படையாகக் கொண்ட 13 ஆண்டுகளைத்தான் கழித்திருக்கிறீர்கள். சூரியனை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் உங்கள் வனவாசம் முடியவில்லை. எனவே திரும்பிப் போங்கள் என்று துரியோதனன் சொல்ல, அங்கிருந்த பீஷ்மரோ அவனை சமாதானப்படுத்தி சூரியனை அடிப்படையாகக் கொண்டு பார்த்தாலும் 13 ஆண்டுகள் முடிந்துவிட்டது. துரியோதனன் சொல்கிற காலக்கணக்கு தவறானது என்று வாதிட்டதாகவும் மகாபாரதம் கூறுகிறது.

 

தற்போது பின்பற்றப்படடு வருகிற காலமுறையும்கூட பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டுத்தான் வந்துள்ளது. ஆண்டைக் கணக்கிடுவதற்கு தென்னாசிய நாடுகளில் இருவிதமான முறைகளைக் கடைப்பிடிக்கிறார்கள். சூரியனை அடிப்படையாகக் கொண்டது ஒன்று. மற்றது சந்திரனை அடிப்படையாகக் கொண்டது. சித்திரை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக கணக்கிட்டு வந்த இதுவரையிலான காலக்கணக்கு சூரியன் மற்றும் சந்திரன் இரண்டையும் அடிப்படையாகக் கொண்டு அமைந்ததாகும். புத்தாண்டு துவக்கமும், மாதங்களின் ஆரம்பமும் சூரியனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்டாலும், இப்போது பயன்படுத்தப்படும் தமிழ் மாதங்களின் பெயர்கள் சந்திரனை ஆதாரமாகக் கொண்டு உருவாக்கப்பட்டவையாகும். ஒரு மாதத்தில் எந்த நட்சத்திரத்தில் பௌர்ணமி வருகிறதோ அதுவே அந்த மாதத்தின் பெயராக சூட்டப்பட்டிருக்கிறது. சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு இந்தியாவின் காலக்கணக்கை நிர்ணயிப்பதற்கு ‘காலண்டர் சீர்திருத்த கமிட்டி’ என ஒரு குழு அமைக்கப்பட்டு அது அளித்த பரிந்துரைகள் 1957ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதி நடைமுறைக்கு வந்தன. சூரியன், சந்திரன் இரண்டையும் அடிப்படையாகக் கொண்ட காலக்கணக்கை அந்தக் கமிட்டி ஏற்றுக்கொண்டது மட்டுமின்றி உலகின் பெரும்பாலான பகுதிகளில் நடைமுறையில் உள்ள கிரிகோரியன் காலண்டரின் அடிப்படையில் லீப் வருடம் என்ற கணக்கையும் உள்வாங்கிக் கொண்டது.

 

‘‘தையே முதற்றிங்கள் தை முதலே ஆண்டு முதல்’’ என்று பாடிய பாரதிதாசன் அதற்கு சமஸ்கிருத எதிர்ப்பைத்தான் அடிப்படையாக முன்வைத்திருந்தார். இங்கு நடைமுறையில் உள்ள அறுபது ஆண்டுகளைக் கொண்ட தமிழ் ஆண்டுமுறை ஆரியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதே அவருடைய குற்றச்சாட்டு. தற்போது நடைமுறையில் இருக்கும் தமிழ் ஆண்டுமுறை என்பது தொடர்ச்சியற்றதாக சுழற்சி அடிப்படையில் அமைந்திருப்பது பலவித குழப்பங்களை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமின்றி புத்தாண்டு தொடர்பான புராணக்கதைகளும் ஏற்கும்படியாக இல்லை என்பது தமிழறிஞர்களின் வாதம். ‘சமஸ்கிருத காலக்கணக்கை நிராகரித்து தனித்துவம் கொண்ட தமிழ் முறையை உருவாக்க எண்ணியவர்கள் சங்ககாலத்தில் எந்தமுறை பின்பற்றப்பட்டது என்பதை ஆராய்ந்து அதன் அடிப்படையில் ஆண்டுமுறையை மாற்றி அமைக்க வேண்டும் என்று கேட்கவில்லை. தொல்காப்பியத்துக்கு உரையெழுதிய நச்சினார்க்கினியரின் கூற்றுப்படிப் பார்த்தால் தமிழ் ஆண்டு ஆவணியில் தொடங்கி ஆடியில் முடிவதாகவே தெரியவருகிறது. ஆனால், தமிழறிஞர்களோ திருவள்ளுவர் பிறந்ததாகக் கூறப்படும் நாளையும், ஆண்டையும் வைத்து காலக்கணக்கை முடிவு செய்யவேண்டும் என்றுதான் கூறியிருக்கிறார்கள். இதுவும்கூட ஐயம் திரிபற மெய்ப்பிக்கப்பட்ட ஒரு கணக்கு அல்ல’ என்பது தை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக ஏற்க முடியாது என்பவர்கள் முன்வைக்கும் வாதம்.

 

          தமிழக அரசு இப்போது மீண்டும் தமிழ்ப் புத்தாண்டை சித்திரைக்கு மாற்றினாலும் தமிழ் உணர்வுகொண்டவர்கள் தை முதல் நாளைத்தான் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுவார்கள் என முன்னாள் முதல்வர் கலைஞர் கூறியிருக்கிறார். அது அவரது அக விருப்பமாகத்தான் இருக்கப்போகிறது. தமிழ் அடையாளம் என்பது இன்னும் மதச்சார்பற்ற அடையாளமாக மாறவில்லை, தமிழ் அடையாளத்தைச் சாதியற்ற அடையாளமாகக் கட்டியமைக்க அயோத்திதாசப் பண்டிதர் (1845- 1914) முயற்சித்தார். தமிழின் பௌத்த வேர்களைக் கண்டறிந்து; பழந்தமிழ் இலக்கியங்களையும், பண்டிகைகள்,திருவிழாக்கள் போன்றவற்றையும் பௌத்த நோக்கில் வியாக்கியானம் செய்து அதற்காக அரும்பாடுபட்டார். இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் சாதிய சகதிக்குள் மூழ்கிக்கிடந்த தமிழகம் அவரை ஆதரிக்கவில்லை. அவருடைய முயற்சிகள் கடுமையான எதிர்ப்புகளைத்தான் சந்தித்தன. அயோத்திதாசருக்குப் பிறகு வந்த பெரியார் தமிழ் அடையாளத்தை மதச்சார்பற்ற அடையாளமாகக் கட்டியமைக்க முயன்றார்.அதுவும்கூட முற்றுப்பெறாத பணியாகத்தான் இருக்கிறது. அதைத்தான் இப்போது பார்க்கிறோம். தமிழ் அடையாளத்துக்குள் இன்னும்கூட மதச் சிறுபான்மையினரும், தலித்துகளும் உள்வாங்கப்படவில்லை. அவர்களைப் புறந்தள்ளியே அது கட்டப்படுகிறது.

 

 தமிழ்ப்புத்தாண்டு எந்த நாளில் துவங்குகிறது என்பதல்ல இங்கு பிரச்சனை, அதைவிடவும் தமிழ் அடையாளம் எதனை உள்ளீடாகக்கொண்டு இயங்குகிறது எனப் பார்ப்பதே இன்று முக்கியம். மதச்சார்பற்ற தமிழ் அடையாளத்தைக் கட்டியமைக்க விரும்புகிறவர்கள் பயணிக்கவேண்டிய தூரம் மிக நீண்டது என்பதைத்தான் தமிழக அரசின் இந்த அறிவிப்பு சுட்டிக்காட்டுகிறது.            

 

       

( 2011 ஆகஸ்டு மாதத்தில் வல்லினம் இணைய இதழில்எழுதியது)

No comments:

Post a Comment