Tuesday, October 6, 2015

சாதி பயங்கரவாதம் : ஒரு வேண்டுகோள் - ரவிக்குமார்



கோகுல்ராஜ் படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒருவரின் பேட்டி புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டது குறித்து நான் எழுதிய முகநூல் பதிவில் ஊடக அறம் மீறப்பட்டிருப்பது பற்றி சுட்டிக்காட்டியிருந்தேன். அதற்கு மதிப்பளித்து நேற்று (05.10.2015) நேர்படப் பேசு விவாதத்தில் அதை பேசுபொருளாக எடுத்தார்கள். நானும் கலந்துகொண்டேன். புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கும் அந்த நிகழ்ச்சியை நெறியாள்கை செய்த தோழர் குணசேகரன் அவர்களுக்கும் நன்றி. 

இந்த விவாதத்தில் நான் எழுப்பிய பிரச்சனைகள் / முன்வைத்துள்ள தீர்வுகள் தொடர் நடவடிக்கைகளைக் கோருபவை. அந்த விவாதத்தைப் பார்த்தவர்களும் பார்க்காதவர்களும் நான் அந்த நிகழ்ச்சியில் வலியுறுத்திய பின்வரும் விஷயங்களை இன்னும் பரவலான தளத்துக்கு எடுத்துச்செல்லவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்: 

1. சாதிய வன்முறை,  'வன்கொடுமை'  (atrocity ) என்ற விளக்கத்தைத் தாண்டி பயங்கரவாதம் ( terrorism ) என்ற கட்டத்தை எட்டியுள்ளது.  தமிழ்நாட்டில் மட்டுமல்லாது இந்திய அளவில்  மத வன்முறையால் பறிக்கப்பட்ட உயிர்கள், ஏற்பட்ட பொருள் சேதங்களோடு ஒப்பிட்டால் சாதியின் பெயரால் நடந்த கொலைகளும், ஏற்பட்ட பொருளிழப்புகளும் அதிகம். இதற்கு கடந்த பத்தாண்டுகளாக வெளிவந்துள்ள NCRB அறிக்கைகளே ஆதாரங்களாக உள்ளன. எனவே சாதி பயங்கரவாதம் ( caste terrorism ) என்ற வகைப்பாட்டை மத்திய மாநில அரசுகள் உருவாக்கவேண்டும். பயங்கரவாத சட்டங்களின் விளக்கங்களின் கீழ் இதைக் கொண்டுவருவதற்கும், casteism also terrorism என்ற உலகளாவிய பிரச்சாரத்தை முன்னெடுக்கவும் ஜனநாயக சக்திகள் முன்வரவேண்டும். 

2. தமிழகக் காவல்துறையில் சாதி பயங்கரவாதிகளைக் கண்காணிக்கவும் அத்தகைய செயல்கள் நடக்காமல் தடுக்கவும் , சாதி பயங்கரவாதக் குற்றங்கள் நிகழ்ந்தால் அதில் ஈடுபட்டவர்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கவும் உதவும் வகையில் கியூ பிரிவு போல ஒரு சிறப்புப் பிரிவு உருவாக்கப்படவேண்டும். சாதியவாதிகளால் நடத்தப்படும் உதிரி இயக்கங்கள், அவர்களது வெறுப்புப் பிரச்சாரம் உள்ளிட்ட நடவடிக்கைகளை அந்த சிறப்புப்பிரிவு கண்காணித்து விவரங்களைத் திரட்டி நடவடிக்கை எடுக்கவேண்டும். சமூக அக்கறையுள்ள அரசியல் கட்சிகள் மனித உரிமை அமைப்புகள் இதற்காகத் தமிழக அரசை வலியுறுத்தவேண்டும். 

3. சாதி பயங்கரவாதம் , வெறுப்புப் பிரச்சாரம் என்பவை தமிழ்நாட்டில் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கும் நிலையில் தமிழ்நாட்டு ஊடகங்கள் இவை தொடர்பான செய்திகளை வெளியிடுவது குறித்த அறம் சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகளை ( Ethical Standards ) உருவாக்கிக்கொள்வது அவசியம். இதற்காக சுய கட்டுப்பாட்டு அமைப்புகளை உருவாக்கவேண்டும். அச்சு ஊடகங்களில் Readers Editor என்ற பொறுப்பு இருப்பதுபோல காட்சி ஊடகங்களில்  Viewers Editor என்ற பொறுப்பு உருவாக்கப்படவேண்டும். இதற்காக  ஊடக நிறுவனங்களை வலியுறுத்தவேண்டிய கடமை பத்திரிகையாளர்களுக்கும் பத்திரிகையாளர்  சங்கத்தினருக்கும் இருக்கிறது.

No comments:

Post a Comment