Showing posts with label nerkunjam. Show all posts
Showing posts with label nerkunjam. Show all posts

Tuesday, April 3, 2012

Book Review : Nerkunjam By Thenmozhi




Thenmozhi is a poet and a writer of fiction. Nerkunjam
(Grain Bunch) is her first collection of stories. In
2008, a poetry collection of hers, Thuravi Nandu
(Hermit Crab) was published. Thenmozhi means honeyed language.
Thenmozhi’s style of writing certainly contains the poetic honey
of the language but the subjects she chooses to write about and
the way she tells her stories have nothing to do with the sweetness
of honey. The stories talk about lives of women and men caught in
the contradictions of everyday life and the irony of existence.
Thenmozhi says in her preface that her stories come out like
mushrooms in the rainy season; during uncertain moments in the
overflow of life. Beginning with the first story which is a monologue
of a dead woman surrounded by wailing relatives, talking to her
lover with the unusual title Kadarkol which means land getting
submerged under the sea and the second story of a farm labourer
who decides to protest against sexual harassment, again with the
deceptive poetic title Nilakudai which means mushroom, used here
as a metaphor for people who are like poisonous mushrooms and
fast spreading fungus in the society, the stage is set for eight other
very deftly narrated stories. The titles of all the stories are abstract
while the stories themselves talk of the brutal reality of life with
controlled emotion and no sentimentality. Thenmozhi has managed
to combine a heady, intoxicating style of writing with the hard
truths of life. The result is a set of ten stories that carry several
layers of meaning.

— C S Lakshmi ( Ambai )
Courtesy: Sparrow Newsletter September 2011
http://www.sparrowonline.org/downloads/SNL22-23.pdf

Tuesday, January 31, 2012

அருந்ததி ராயுடன் ஒருநாள் - தேன்மொழி







அன்பை இன்னொருவிதமாகப் புரிந்துகொள்ளவைத்தது அந்த ஒரு நாள்.  கும்பகோணத்திற்கு அருகே ஏழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சோழபுரம் கிராமமும் நானும் அரசன் பாரா மெடிக்கல் கல்லூரி மாணவிகளும் காத்திருந்தோம்.  அந்த சின்ன கிராமத்துக்கு அப்படியொரு பிரபலம் வந்ததில்லை. வருவதற்கு காரணமும் இல்லை. உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான அருந்ததி ராய் அங்கு வருகிறார் என்றால் யார்தான் நம்பமுடியும்? அவர் தனது நாவலில் விவரித்திருக்கும் ஆயிமெனம் கிராமத்திலிருந்து நேரடியாக வருவதுபோல மலர்ச்சியோடு இருந்தார். அவரோடு எழுத்தாளர் ரவிக்குமார் வந்திருந்தார்.  மாணவிகளும் (சட்டமன்ற உறுப்பினர்) ரவிக்குமாரிடம் மனு கொடுப்பதற்காக வந்து காத்திருந்த ராணுவத்தினரும் தங்கள் சந்தோஷத்தைக் கைதட்டி வரவேற்றுப் புதுப்பித்துக்கொண்டார்கள்.  சிறிய கூட்டம்தான் என்றாலும் கள்ளமில்லாத அன்பால் நிறைந்திருந்தது அந்த இடம்.  மணற்கேணி பதிப்பகத்தின் முதல் நூலான நெற்குஞ்சம் சிறுகதைத் தொகுப்பின் வெளியீட்டுவிழா. நூலை அருந்ததிராய் வெளியிட ரவிக்குமார் பெற்றுக்கொண்டார்.  அந்த நூலின் ஆசிரியரான எனக்குள் ஒரு சிலிர்ப்பு அடர்ந்து அடங்கியதை மறுக்க இயலவில்லை.  என் வாழ்வின் உன்னதத்  தருணங்களில் ஒன்றாகிப்போனது அது.  வெளியில் இருந்தபடி மழையும் தன் பங்களிப்பை நிகழ்த்திக்கொண்டிருந்தது.  மழைக்குள் நானும் எனக்குள் மழையும் கரைந்துகொண்டிருந்தோம்.

நாட்டின் எல்லையில் உயிரைப் பணயம் வைத்துப் போர் விளையாட்டை முடித்துத் தாய் செய்த புண்ணியத்தால் உயிர் பிழைத்து இன்று கண்ணுக்கெட்டாத கிராமங்களில் வாழும் ஓய்வுபெற்ற ராணுவத்தினரிடம் பகிர்வதற்கு எராளமாய் கண்ணீர் கதைகள் இருந்தன. அதை ரவிக்குமாரோடு அருந்ததியும் கேட்டுக்கொண்டார்.  மலையாளம், ஹிந்தி. ஆங்கிலம், தமிழ் எனப் பல மொழிகளில் உரையாடல்... மழையும் செறுமாய்க் கலந்து கிடந்தது.  திரும்பிப் பார்க்க இயலாத எல்லைக் கோடுகளைக் கடந்து வந்த அருந்ததியுடன் மாணவிகள் கலந்துரையாடினர்.  கிராமத்தை பூக்கச் செய்யும் மாணவிகள் தங்கள் ஈரம் செறிந்த நிறத்தைக் கேள்விகளாக மாற்றிக்கொண்டனர். "மேடம் உங்களுக்கு பிடித்ததை எங்களுக்குச் சொல்லுங்களேன்" ஒரு மாணவி கேட்டாள்.  "எப்போதும் அப்போது பூத்த பூவைப்போல் சந்தோஷமாய் இரு.  அதற்காக படி, அதற்காகப் போராடு,  தானே தன்னை சந்தோஷப்படுத்திக்கொள்வதைத் தவிர வேறு முக்கியம் வாழ்வில் இல்லை."  பதிலில் மாணவிகளுக்குள் ஒரு பூ மலர்ந்தது.  கிராமத்து கறுப்புக் காப்பியின் வாசனை எங்களிடையே நுழைந்து வந்தது.  மாணவிகள் அளித்த ரோஜா மாலையை முத்தமிட்டார் அருந்ததி.  பூவாய்ப் பிறந்து பூவாய் மடிவதைப்போல் வேறு வரம் உண்டா.  சுற்றுச் சூழல் ஆர்வலர் அல்லவா!

எங்களது பயணம் கீழ்வெண்மணி நோக்கித் துவங்கியது.  ரவிக்குமாரும் அருந்ததியும் நிமிடங்களை இலக்கியத்தை ஊற்றி நிரப்பிக் கொண்டிருந்தார்கள்.  இடைஇடையே நானும் பருகிக்கொண்டேன்.  கோவர்த்தனி ரோஜாக்களை அவருக்குப் பரிசளித்தாள்.  அவற்றை தலையில் செருகிக் கொண்டார்.  ஏற்கனவே பூச்சரம் ஒன்று தலையில் சுற்றப்பட்டிருந்தது.  என் மகளை அணைத்தபடி குனிந்து "அம்மு என் தலையைப் பார் பூந்தோட்டம்" என்றார்.   பூக்களின் காடு சிரிப்பில் ஒளிர்ந்தது.  அருந்ததியையும் ஒரு குழந்தையாக்கி இரண்டு குழந்தைகளை என் மனம் சுமந்து பெருமை கொண்டது.  நர்மதை அணைக்கட்டு போராட்டத்தில் பெண்களின் இரட்டிப்பு துன்பத்தை ஆன்மாவில் இருந்து எடுத்துப் பகிர்ந்து கொண்டார்.  ஆண் மைய உலகம் ஆண் சுதந்திரம் போன்ற எனது கேள்விகளுக்கு தனது நிகழ்கால வாழ்க்கையை பதிலாக அளித்தார்.  "எனக்கு ரவி மாதிரி மிகச் சிறந்த  நண்பர்கள் உண்டு.  பெண்ணடிமையை அதிகபட்சமாக அமல்படுத்திய பெண்களைக் கொண்ட இச்சமூகமும் பெண் அடிமைக்கு முக்கிய காரணம். பெண்களின் பிரச்சனை ஆண்கள் மட்டுமல்ல".  பாலினம் கடந்து பறந்து கொண்டிருக்கும் அருந்ததி, கார் சிறிது  வேகமெடுத்தாலும் பதறினார்.  திருவாரூர், கீவளூர் கடந்து தேவூர் வழியாக கீழ்வெண்மணி நோக்கிப் பயணித்தோம்.  இருமருங்கிலும் வாய்க்கால், வயல், குளம் . மாலைப் பொழுதின் மயக்கத்தில் கனவுகளை அழித்துக்கொண்டோம்.

 வண்ணமேற்றப்படாத உலகம் காலுக்குள் உயிர்ப்பாய் கிடந்தது.  நான் வயல் நண்டுகளை கரையேறி வரும்படி அழைத்துக்கொண்டிருந்தேன்.  அருந்ததி நாற்றங்கால் மேற்பரப்பில் பயிர்கள் மீது பறந்து கொண்டிருந்தது தெரிந்தது.  ரவிக்குமார் கோவர்த்தனியின் கனவுகளுக்கு மீன் குஞ்சுகளைப் பரிசளித்துக்கொண்டிருந்தார்.  அருந்ததியின் கண்களில் ஆய்மெனம் மிதந்துகொண்டேயிருந்ததைப் பார்த்தேன். தான் பார்க்கும் காட்சி ஒவ்வொன்றும் அவருக்கு அந்த கிராமத்தை நினைவுபடுத்தியிருக்கவேண்டும்.  அவ்வப்போது அவரோடு நாங்களும் அங்கே சென்று திரும்பினோம். அங்கே அவரது அம்மாவையும் அவர் பள்ளிக்கூடம் என்ற பெயரில் நடத்திவரும் பள்ளியையும் மனதில் வரைந்துகொண்டோம். எனக்குள் ஒரு கிராமம் உருவானது.  அருந்ததி அதில் சிறகுமுளைத்த பெண்ணாய் எல்லோரிலும் வேறுபட்டு நின்றார்.  நினைத்தவற்றை உடனே வார்த்தைகளாய்க் கொட்டினார்.  பின் எவற்றை அவர் எழுதினார் என வியந்து பார்த்தேன். சிறிய உயிர்களின் படைப்புக் கடவுளை அவர் மொழியில் உருவாக்கியது புரிந்தது.  "God Of Small Things" உருவான விதம், புக்கர் பரிசு, பணம் எல்லாவற்றைக் குறித்தும் பேசினார்.  அவரது மனம் எதனோடும் சேராமல் ஒதுக்கப்பட்டவற்றிற்கான கடவுளை உற்பத்தி செய்துகொண்டேயிருந்தது.
மழையின் சிதைவுஎச்சங்களாய் சாலைகள் இருந்தன.  மூக்கொழுக அழுக்குச் சட்டையில் இறுக்கி வைத்திருந்த பொறி அரிசியை கொடுத்து சிறிய கறுப்பழகி ஒருத்தி கீழ்வெண்மணியில் அருந்ததியை வரவேற்றாள்.  சிகப்புத் துண்டணிந்த ஒரு பெரியவர் வாழை மொட்டை அவிழ்ப்பதுபோல்  வெண்மணியின் கோரத்தை அருந்ததியிடம் உதிர்த்துக்கொண்டிருந்தார். புதிதாய் எழுந்துகொண்டிருந்த நினைவுச் சின்னம் சாட்சியாக நின்றது.  "சீக்குப் பிடித்த சமூகம். மனநிலை சரியில்லாத சமூகத்தில் நாம் வாழ்கிறோம் இல்லையா ரவி" முகத்தில் வேதனையும் வெறுப்பும் சுருக்கங்களாக மாறியது.  மேலவளவு, வெண்மணி போன்ற வக்கிரங்களின் மூலங்கள் என்னவாக இருக்கும் என்பதாக அவரது கேள்வி அலைந்தது. கீழ்வெண்மணி டிசம்பர் 25க்கு தன்னை தயார் படுத்திக்கொண்டிருந்தது.  இருள்சூழ நாங்கள் அங்கிருந்து கிளம்பினோம். " இருள் கிராமங்களில் மட்டுமே இருக்கிறது. கிராமங்கள் இருளை முழுதாய் தரிசிக்கின்றன நகரங்களல்ல" என்றேன்.  அவர் அதை ஆமோதித்ததை இருட்டிலும் பார்க்க முடிந்தது.  எல்லா நிமிடங்களையும் வார்த்தைகளாலும் சப்தங்களாலும் நிரப்பிக்கொண்டிருந்தோம்.  இரவுப் பூச்சிகள் விடை கொடுத்தன.  வெண்மணியில் இருந்து திரும்பும்போது அருந்ததிக்குள் ஒரு மௌனம் அடைந்துகொண்டது.  வளர்பிறையை ரசித்தபடி திருவாரூரில் தேனீர் பருகினோம்.  கும்பகோணம் நெருங்க நெருங்க மனதைப் பிரிவுக்காய் தயார் படுத்தி வைப்பது மிகவும் வலியானதாய் இருந்தது.  சோழபுரம் நெருங்கும்போது கும்பகோணத்தில் இல்லாத அளவு பனி அடர்ந்திருந்தது.  ஒற்றை பனிக்கூட்டுக்குள் நாங்கள் வசிப்பதுபோல் இருந்தோம்.  சோழபுரம் - துவங்கிய இடத்தை தொட்டிருந்தோம்.  வார்த்தைகள் முன்பே மறந்துபோய் இருந்ததால் மௌனமாக வண்டியை விட்டு இறங்கினோம்.  அருந்ததி உடலால் என்னைத் தழுவினார்.  உணர்வுகள் பரிமாறிக்கொண்டன.  கண்களை அசைத்து விடைகொடுத்து வீட்டிற்குத் திரும்பினேன்.  பூந்தோட்டம் கண்களில் இருந்து மறைந்தது.  வீடெங்கும் இருள்,  கோவர்த்தனி கதறி அழ ஆரம்பித்தாள்.  அவள் அடிவயிற்றிலிருந்து பீறிட்ட  அந்தக் குரல் என்னுடையது.

24.12.2009

Monday, January 30, 2012

நாகதாளி – தேன்மொழி




இன்று வரப்போகும் இரவுக்காய் காத்திருக்கிறேன். அது எனக்கான உறக்கத்தை கொண்டு வரும் என்ற உணர்வு என்னுள் விழுதோடிக் கிடக்கிறது. கண்டிப்பாய் உறங்குவேன். பதினைந்து வருட உறக்கத்தை கூவி அழைக்காமலே, அது என்னை வந்து சேரும். யுத்த களத்தில் எதிர்த்துப் போட்டியிடாமல், அனுசரித்தே வாழப் பழகிக்கொண்டு, உயிரைப் பிடித்து வைத்திருந்து தப்பித்த ஒரு மாவீரன் போல, இன்று நான் அயர்ந்த உறக்கம் கொள்வேன். என்னிடம் ஆயுதங்கள் ஏதும் இல்லை, என் எதிரிகள் வீழ்ந்துவிட்டார்கள். நான் அவர்களை அவமதிக்கவில்லை, அனுசரித்துக் கொண்டேன். நான் எதிர்க்கவில்லை, விட்டுக்கொடுத்தேன். ஒரு கன்னத்தில் அறைந்த போது மறுகன்னத்தைக் காட்டினேன். மறுகன்னத்தில் அறைந்த போதும் நான் எதிர்க்கவில்லை. ஆதரவான கைகளுக்குள் முகம் புதைத்து அடியின் தடம் பதிந்த கன்னத்தை மறைத்துக் கொண்டேன். என் கன்னத்தின் விரல் பதிவுகளைப் பார்க்க எனக்கும் பிடிக்கவில்லை. உன்னால் ஒரு போதும் புரிந்து கொள்ளப்படாத என் மொழிகள் எப்போதும் ஈட்டியானது. உன்னால் உணரப்படாத என் பெண்மை மென்மையைத் தொலைத்தது எப்போது? என் பிரம்ம வாயில் மூடிக்கொண்டது எப்போது? வறன் உறல் அறியா என் தேகம் ஈரம் அற்றுப் போனது எப்போது? விடைகளற்ற வெளியில் நான் திரிந்து கொண்டிருந்தபோது இவையெல்லாம் உன்னை விழுங்கித் தீர்த்திருந்தது. எல்லாவற்றின் பின்பு இன்று வரப்போகும் இரவுக்காய் உறங்கக் காத்திருப்பவள் நான்.
இரவென்பது பொழுதுகள் கூடடையும் அடர்ந்த காடு. காலம் தன் தேகம் விரித்து கந்தர்வ களி நடனம் நிகழ்த்தும் அபூர்வ தருணம். தயக்கம் குடித்து, வெட்கம் தொலைந்த உயிர்களின் சுதந்திர உலாக்காலம். உயிர்கள் அந்த காரமான வெளியில், அடிநாதமாய் அடைந்து கிடக்கும் ஒலியை எழுப்பி கெக்கலிக்கும் நேரம். இரவு கறைகள் அற்றது, திசைகள் அற்றது, எல்லைகள் அற்றது, களங்கம் அற்றது. இரவுக்குப் பகை நிலவு. இரவை அழித்து நிலவு தன்னை ஏற்றுகிறது. அமாவாசை நாளில் இரவு நிலவைத் தோற்கடித்து, தன் விஸ்வரூபத்துடன் பிரபஞ்ச ஆளுகை சிம்மாசனத்தில் சம்மணமிட்டு அமர்கிறது. இரவு குற்றங்களுக்குத் துணைபுரிவதில்லை. இரவோடு போட்டியிடும் மின்மினியின் வெளிச்சம் கூட ஒரு மாபெரும் குற்றம் நிகழ்வதற்குப்  போதுமானதாக இருக்கிறது. ஒளி ஆபத்துக்களாலும் குற்றங்களாலும் பளபளப்பூட்டப்பட்டது. இரவு உயிர்களின் தாலாட்டு, தன்னை ஊற்றி நிரப்பி உயிரை உறங்க வைக்கும் உலகின் தாலாட்டு. இரவுகளின் சலனமும், இயக்கமும், சத்தமின்றியே நிகழ்கிறது. சலனங்களாலும், சப்தங்களாலும் கற்பழிக்கப்பட முடியாதது. இரவு தன்னைத் திறந்து ஒளியை  ஏற்றுக்கொள்கிறது. ஒளியோடு கலக்கும் மிகச் சிறந்த கலவியின் உச்ச நாயகி இரவு. ஒளி தன்னை மூடி இருளை அளிக்கிறது. மேலும் உணர்வுகளை விருந்து வைக்கிறது. இரவு உணர்வை விழுங்கி மறையென துயிலாதொரு சயனத்தில் இருக்கிறது.
வீதியெங்கும் காலடித் தடங்களில் மரணத்தின் ரேகைகள் வரிவரியாய் ஓடிக் கொண்டிருந்தது. சிலர் வந்து கொண்டிருந்தார்கள். சிலர் போய்க் கொண்டிருந்தார்கள். வருவோரும் போவோரும் வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையில் இயங்கிக் கொண்டிருந்தார்கள். பிறனொருவன் மரணம் குறித்த செய்திகளைத் தாங்கி வந்தவர்கள், தன் மரணம் குறித்த குறிப்புகளைத் தாங்கிப் போனார்கள். மரணம் அனைவரையும் அமைதியாய் உற்று கவனித்துக் கொண்டிருந்தது. இவர்கள் அனைவரும் ஒருநாள் தன் வாசல் வரப்போகும்  உறவு என்ற வாஞ்சை அதனிடம் பொங்கி வழிந்தது.
ஆறடி உயரத்தில் நீட்டிப் படுக்க வைக்கப்பட்டிருக்கிறாய். வெள்ளை வேட்டியும்,  முழுக்கை வெள்ளைச் சட்டையும், உன் கருத்த முகத்தை எடுப்பாய் காட்டியது. அந்த உடை உனக்கு மிகப் பொருத்தமான உடையாய் இருந்தது. உன்னருகில் ஒரு நாற்காலியில்  அமர வைக்கப்பட்டிருக்கிறேன். நான் அலங்கோலமாய் இருக்கிறேன். அழுது கொண்டிருக்கிறேன். இரு ஜோடிக் கண்கள் பல என்னை வெறுப்பாய் நோக்குவதை என் உடலும் மனமும் அறியும். என்னை மனிதப் போலி போலவும், என் கண்ணீரை நீலிக் கண்ணீராகவும் அவர்கள் பார்க்கிறார்கள். இருந்தபோதிலும் என் அழுகை நிஜம். நான் நிறைய காரணங்களுக்காக அழுகிறேன். என் கண்ணீர் வலிகளின் கலவையாய் வழிந்து கொண்டிருக்கிறது. அது வற்றும் வரை நான் அழத்தயாராய் இருக்கிறேன். தலை வெடித்துவிடும் போல் வலிக்கிறது. கண்கள் பொருள் பொதிந்த வீக்கம் கொள்கிறது. இவர்கள் அறியாத ஒன்று என்னுள் நிகழ்ந்து கொண்டிருந்தது. அது, உன் மரணம் தவிர்த்த மற்ற எல்லாவற்றிற்காகவும் நான் அழுது கொண்டிருந்தேன்.
குழந்தைகள் இரண்டும் உன்னையும் என்னையும் சுற்றிச் சுற்றி வருகிறது. “அப்பா, நீங்க வேணும்பா, விட்டுட்டுப் போகாதீங்கப்பா” கதறிக் கதறி உன்னை அழைக்கிறார்கள். மரணத்திற்கு செவிகள் கிடையாது. கண்கள் கிடையாது. புலன்கள் அற்றது மரணம். ஆனால் நவரசங்களை உயிர்களில் நெய்து கொண்டே தான் இருக்கிறது. பெரியவளுக்கு வயது பதிமூன்று. அழுகையின் ஊடே என்னை உற்று உற்று, விட்டு விட்டு பார்க்கிறாள். அவள் கண்ணீரும் சில சமயங்களில் நிறம் மாறியதுபோல் எனக்குத் தோன்றியது.
என் கழுத்தில் புத்தம் புதிய மஞ்சள் கயிறு ஆடிக் கொண்டிருந்தது. பிரிபிரியாய் தனித்திருக்கும் இழைகளைப் பிணைத்து முறுக்கிய கயிறு குடும்ப வாழ்க்கையின் தத்துவத்தை நெஞ்சோடு உரசி உரசி உரக்கப் பேசியபடி இருந்தது. நீயும் நானும் எதிரெதிரே புதிராய் நின்றோம். உன்னைக் குறித்த எந்த முன்குறிப்பும் அற்றவளாக நான் நின்றேன். நீ, நான் பெண்ணென்னும் குறிப்பை புத்திக்கு  அனுப்பி விட்டு காத்திருந்தாய். என் முதல் வார்த்தையின் முதல் எழுத்தைக் கூட நிராகரித்துவிட்டாய். உன் அலட்சியத்தால் அது அழிந்தே போனது. மீண்டும் மீண்டும் என் வார்த்தைகள் வற்றி, வறண்ட மணற்படுக்கையென காய்ந்து போனது. வார்த்தைகள் சூறையாடப்பட்ட ஒரு மிகச் சிறந்த நாவலாய் உன் நூலகத்தில் என்னை அடுக்கி வைத்திருந்தாய். மௌனத்தை குத்திக் கிளறிக் கிழித்த ஒரு யுத்தம் என்னுள் நிகழ்ந்து கொண்டிருந்தது. “வீட்டின் கடைக்குட்டி, செல்லம், பாத்துக்கப்பா” என் வீடு மாறி மாறி என்னை உனக்கு அறிமுகப்படுத்தியது. எதையும் நீ புரிந்து கொண்டதற்கான அறிகுறி தென்படவில்லை.
நீ முதன் முதலில் என் கன்னத்தில் அறைந்த நிமிடம், இப்போது கூட அழியாமல் பின் வந்து, என் தலையை பலமுறை சுழற்றிப் போகிறது. நீ அறைந்த நொடியில் ஒரு மயக்கத்தோடு சுவரில் சாய்ந்தேன். சில கெட்ட வார்த்தைகளை என் பொறுப்பில் விட்டுவிட்டு நீ வெளியேறிவிட்டாய். என் உடல் நடுங்கியது. நீ அடிப்பாயா! அடிக்கும் அளவு முரடனா நீ, என் மீது அவ்வளவு வெறுப்பா, என்னை அடிக்க எப்படி மனம் ஒப்பியது. இனிமேலும் இந்த அடி தொடருமா, சொச்ச காலம் எப்படி கழியும், மனம் கதறி நிமிர்ந்தது. நான் யார் தெரியுமா? வீட்டின் செல்லம், ஊருக்கு மிகச் சிறந்த பெண், பள்ளிக் கூடத்தின் முதல் மாணவி, நிறைய படித்தவள், நிறைய சம்பாதிப்பவள், என் சுயம் நீரில் விழுந்த நிழல்போல் தவித்துக் கொண்டிருந்தது. என்னை அடித்ததை  எல்லோரிடமும் தெரிவிக்க விரும்பினேன். மறுகணமே என்னை அடித்ததை எல்லோரிடமும் மறைக்க விரும்பினேன். கதறிக்கதறியழுத என் சுயம் காயம்பட்டுப் போனது. என்னை அடித்தது போல் உன்னை அறைந்துவிட முடியுமா? அடிக்கச் சொல்லி மனம் ஆகாயத்தில் அமர்ந்துகொண்டது. என் முதல் வார்த்தை தொலைந்தபோதே உன்னை அடிக்கச் சொல்லி ஆணையிடாத என் மூளையை அறுத்தறுத்து பெயரிடப்படாத திசைகளிலும்கூட விசிறியடிக்கிறேன்.
என் முதல் பிரசவத்தின்போது என் வீடு நொடித்துப் போயிருந்தது. நீ கொடுத்த வலி மாறிமாறி என் பிரசவ வலியைத் தோற்கடித்தது. நான் மட்டுமல்ல, என் குடும்பமே பிரசவ வலி பட்டுப்போனது, உன்னால். பிள்ளையிடம் பாசத்தோடு நடந்து கொண்டாய். நான் பொதி சுமக்கும் கழுதையாய்த் திரிந்தது உனக்குத் தெரிந்தே இருந்தது. அடுத்தடுத்து இரண்டு பிள்ளைகள். மனதோடு கூட உடம்பும் வலித்தது. எவனாவது ஒரு விஞ்ஞானி என்னை எந்திரமாக்கி விடக்கூடாதா என ஏங்கியழுதது உடம்பு. அடி, உதை, ஏச்சு, பேச்சு, எல்லாம் அன்றாட உணவின் உப்பு போல அவசியப்பொருளாகி விட்டது உனக்கு. எத்தனை முறை தொட்டாலும் சுருட்டிக் கொள்ளும் மரவட்டையைப் பார்த்து மனம் பொறாமை கொண்டது. தாய் வீட்டு உறவுகள் சுருங்கி இந்த வீடு, குழந்தைகள், நீ என்பது மட்டுமே என் உலகம் ஆனது, விழித்தபடி உறங்கத் தெரிந்தது நம் மூத்த மகளுக்கு. அவள் நம் உள்ளக்கிடக்கைகளை கொஞ்சம் கொஞ்சமாய் உள்வாங்க ஆரம்பித்தாள்.
நிறையப் பெண்கள் உன் வாழ்க்கையில் வந்து போனார்கள். எல்லாவற்றையும் எதார்த்தமாக எடுத்துக் கொள்ளச் சொல்லி, யாருக்கோ விதிக்கப்பட்ட கட்டளை, என்னையும் அணைத்துக் கொண்டது. பிற பெண்களை நீ வாழ்க்கை ஏட்டில் பதிவு செய்யும்போது, நான் என் பெயரை அழித்துக் கொண்டிருந்தேன். என் வாழ்க்கை எங்கோ காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது. உனக்கும் எனக்கும் ஒன்றுமில்லாமல் போக பதிமூன்று ஆண்டுகாலம் தேவைப்பட்டிருக்கிறது. பதிமூன்றாவது சீடனாய் வந்து நின்ற ஆண்டு உன்னை எனக்குக் காட்டிக் கொடுத்தது. உனக்கும் எனக்குமிடையில் ஒன்றுமேயில்லா மாயக்கயிறு உன்னையும் என்னையும் பிணைத்திருப்பது தெரிந்தது. அதிலிருந்து விடுபட இல்லாத முடிச்சை அவிழ்த்துக் கொண்டிருந்த முட்டாள் நான்.
இரவுகள் என்னை உறங்க வைக்க நீ அனுமதித்தது இல்லை. அது ரகசிய ஆயுதங்களைச் சுமந்து வந்து என்னைத் தாக்கியது. தட்டித்தட்டி என்னை எழுப்புவதற்காகவே இரவுகள் வருவதாய்த் தோன்றியது. வீட்டின் கொல்லைப்புறத்தில் சுயம்புவாய்த் தோன்றி, முட்களுடன் கிளைத்து நிற்கும் கற்றாழையை மிக விரும்பினேன். இருத்தலுக்கான ஆவலும், வாழ்வதற்கான போராட்டமும் அதனிடம் முட்களாய் வளர்ந்திருந்தது. முட்களால் கிளைத்திருக்கும் உடல் வேண்டி, மனம் ஒற்றைக்கால் தவம் புரிந்தது. கொல்லையில் கற்றாழைச் செடியை நட்டபோது நீ என்னை திட்டினாய். பாலை நிலத்தாவரமே தண்ணீரை குடிச்சுக்கோ என்று  அதற்கு தண்ணீர் ஊற்றுவேன். இலையின் மென்மையை திரட்டி முட்களாக்கும் சாதுர்யம் அதற்கு கைவசப்பட்டிருந்தது. தளதளவென்றிருக்கும் பச்சை மேனியெங்கும் முட்களை, என்னுடலும் வேண்டியபோது, முட்களுடன் கிளைத்துக் கொள்ள விரும்பினேன். ஒரு முறை கோபத்தில் நீ அதை வெட்டி எறிந்துவிட்டாய். தன்னை பெருக்கி எழுப்பும் ராட்சஸி சுரஸா போல அது மீண்டும் ஒய்யாரமாய் வளர்ந்து நின்றது. நீ என்னை அந்தச் செடியோடு ஒப்பிட்டுத் திட்டும்போது எனக்குப் பெருமையாய் இருக்கும். நம் குழந்தைகள், செடி குறித்து ஆயிரம் வினாக்களைத் தொடுப்பார்கள். நீர் கொண்ட மேகத்தின் மீது தீராத தாகம் கொண்ட மற்ற எல்லாத் தாவரங்களையும்விட, வறண்ட பாலையில் முரட்டுத் தவம் புரியும் இந்தச் செடியை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
உறவுக்காய் பிணைக்கப்பட்டவர்கள் நீயும் நானும். உன் சக இணை நான். அடிமையாகவும், எதிரியாகவும், உன் வக்ரங்களையும், குரூரங்களையும் கொட்டித் தீர்க்கும் நிலமாகவும் என்னை உனக்கு அடையாளப்படுத்திய இச்சமூகத்தை காறி உமிழ்கிறேன். உன் இணைப்பறவை நான். கண்கள் தாண்டிய வானத்தில் உன்னோடு பறக்க கனவு கண்டவள். என் மரத்தின் இலைகளை உதிர்த்துவிட்டாய். என் சருகுகளின் இசையை தொலைத்துவிட்டாய். என் மரத்தின் குருவிகளை கொத்திப் போய்விட்டாய்.
என்னைக் கடக்கும் முகங்களில் எதையோ ஏக்கத்தோடு நோக்குகிறேன். அன்பாய் அழைக்கும் ஒரு குரலுக்கு ஆயுள் முழுவதும் கட்டுப்பட்டுக் கிடக்க விரும்புகிறேன். என் வலி துடைக்கும் வார்த்தைகள் எங்கும் அற்றுவிட்டபோதும், புதிதாய் முளைவிடும் இலைகளை உற்றுநோக்குகிறேன். திசையெங்கும் தேடி ஆதரவுக் கிரணங்களை கட்டி இழுத்து வருகிறேன். இசை தேடும் சாதகப் பறவைபோல அன்பு தேடி அலையும் பட்சி ஒன்று மனதுக்குள் விஸ்வரூபம் எடுக்கிறது. மடை திறப்பதற்காக என்னுள் மிகப்பெரிய நதி ஒன்று காத்திருக்கிறது.
இரண்டு கைகள் என் முகம் தாங்கியது. என் வலி தேடி மருந்திட்டது. என் மொழி உள்வாங்கப்பட்டது. நான் நிராகரிக்கப்படவில்லை. அன்பின் கதகதப்பை குளிருக்கு பயந்தவளாய் உணரத் தொடங்கினேன். நீ உன் மாய வெளியில் ஏதேதோ உறவுகளைக் கற்பித்து நொந்து கொண்டாய். உடலை மட்டும் உறவுகளுக்கு பிரதானமாய் உன் குறுகிய புத்தி வட்டமிட்டு வைத்திருந்தது. ஆங்காரமும் ஆணவமும் உன்னுள் படமெடுத்தது. உன்னுள் வலி தொடங்கியது. நிராகரிக்கப்பட்டதாய் உணர்ந்தாய். விஷம் குடித்து உன் வாழ்க்கையை முடித்துக் கொண்டாய். உன் சாவின் மூலம் என்னைப் பழிவாங்க விரும்பினாய். உலகுக்கு என்னை நடத்தை கெட்டவள் என்று அறிமுகப்படுத்தியதன் மூலம் உன் சாவின் மீது நீயே வெற்றிக் கொடி நட்டுக் கொண்டாய்.
உன் மரணத்தின் வாசனை என்மீது படர்கிறது. என் அகம் புறம் அனைத்தையும் நிறைக்கிறது. என்னை இறுக்கிப் பிணைத்திருந்த அடிமைச் சங்கிலியை அறுக்கிறது. என் இருண்ட உலகில் ஒளிக்கிரணங்கள் போட்டியிட்டு நுழைகிறது. உன் முன் அமர்ந்திருக்கிறேன், அழுகிறேன். மற்றபடி மரணத்தின் வாசனையை நுகர்ந்து, மெல்ல என் மூச்சோடு கலந்து சுவாசிக்கத் தொடங்குகிறேன். பின்பு வெறி கொண்டவளாய் அதை உள்ளிழுத்து என் உடலை, மனதை, மூச்சை நிறைக்கிறேன். எல்லாவற்றினூடேயும் வெறுத்து  ஒதுக்கும் என்னைச் சுற்றி துளையிட்டுக் கொண்டிருக்கும் இவர்கள் கண்கள் அறியாதபடிக்கு, உறக்கம் கொண்டு வரவிருக்கும் இன்றைய இரவுக்காய், காத்திருக்கத் துவங்குகிறேன்.
( தீராநதி இதழில் வெளியான இந்தக் கதை மணற்கேணி பதிப்பகம் வெளியிட்டிருக்கும் தேன்மொழியின் சிறுகதைத் தொகுப்பான 'நெற்குஞ்சம்' நூலில் இடம்பெற்றுள்ளது. )