Showing posts with label tamil. Show all posts
Showing posts with label tamil. Show all posts

Wednesday, April 10, 2013

ரவிக்குமார் கவிதை

 
 
எலி வளைகளிலும்
தானியம் அற்றுப்போன கோடையெனக்
கழிகிறது காலம்
குழந்தைகள் பூனைகளைப் போல சிரிக்கிறார்கள் 
வானம் சாம்பலாய்ப் பொழிகிறது

குருதிக் கறை  படிந்த கைகளைக் குலுக்குவதே
நட்பாகிவிட்டது
வஞ்சகத்தைத் தியாகமென்றும்
நபும்சகத்தை மதியூகமென்றும்
அழைக்கப் பழகிவிட்டோம்
கருணை இப்போது கிழங்குவகையாகவும் இல்லை

நாம் கேட்கிறோம்
நீதி
கொல்லப்பட்டவர்களுக்காக
பலாத்காரம் செய்யப்பட்டவர்களுக்காக
அங்ககீனம் செய்யப்பட குழந்தைகளுக்காக
நாடற்றுத் திரியும் அகதிகளுக்காக 

நமது பேச்சில் தெறிக்கிறது
தாய்,சகோதரி, இனம், ரத்தம்,
உரிமை,துரோகம்,வீரம், வரலாறு . . .
நாம் கேட்கிறோம்
நீதி

சக மனிதனின் வாயில்
மூத்திரம் பெய்தபடி

Thursday, August 30, 2012

மலையாள அதிகார வர்க்கம் ஈழத்துக்கு எதிராக இருப்பது ஏன்? -சிவா சின்னப்பொடி




பொதுவாகவே மலையாள அதிகார வர்க்கம் தமிழர்களை மதிப்பதில்லை. தமிழர்களை விட தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற மமதை அவர்களுக்கு உண்டு.தமிழர்களை 'பாண்டி' என்று இழிசனர்களாக  சுட்டும் இடுகுறிப் பெயரால் அழைக்கும் வழக்கம் கேரளாவில் பொதுவாக உள்ளது.மலையாள மொழி என்பதே தமிழுடன் சமஸ்கிரதம் சேர்ந்து உருவான மொழி.அவர்கள் அதை சமஸ்கிரதத்தோடு தமிழி என்ன ஆதித் திராவிட மொழி சேர்ந்து உருவானது என்று தான் சொல்வார்கள்.பண்டைய சேர நாடு தான் இன்றைய கேளரா என்பதைக் கூட சேர நாடு தமிழர்களுடைய நாடு என்று சொல்லமாட்டார்கள்.தமிழி என்ற தழிழுக்கு முந்திய மொழி பேசியவர்களின் நாடு என்று தான் சொல்வார்கள்.
 இத்தனைக்கும் பாண்டியர்களும் சோழர்களும் மோதிக்கொண்ட அளவுக்கு சேரர்களும் பாண்டியர்களும், சேரர்களும் சோழர்களும் மோதிக் கொண்டது  குறைவு.
தமிழர்கள் மலையாளிகளுக்கு போட்டியாக இருந்ததும் கிடையாது.  கேரளாவுக்குத் தேவையான இறைச்சி முதல் கொண்டு மரக்கறி அரசி வரையிலான உணவுப் பொருட்கள் தமிழகத்தில் இருந்து தான் செல்கின்றன. 
ஈழ விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கியதில் சிங்கள அதிகார வர்க்கத்தின் பங்கை விட மலையாள அதிகார வர்க்கத்தின் பங்கு மிக முக்கியமானது.
வட இந்திய அதிகார வர்க்கத்துக்கு எப்படி சோழர்களையும் அவர்களது புலிச்சின்னத்தையும் பிடிப்பதில்லையே அது போல இந்த மலையாள அதிகார வர்க்கத்துக்கு ஈழம் என்ற சொல் எட்டிக்காயை விட கசப்பானதாக இருக்கிறது.
அதற்குக் காரணம் மலையாள அதிகார வர்க்கத்துக்கு ஈழவர்களை பிடிக்காது.அதனால் ஈழத்தையும் அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பதேயாகும்! 
ஈழவர்கள் என்பது கேரளாவில் வாழும் ஒரு பிரிவு மக்களாகும்.இவர்கள் மொத்த கேரள மக்கள் தொகையில் 23 வீதமாகும்(73 இலட்சம் பேர் )
ஒரு 60 முதல் 70 ஆண்டுகளுக்கு முன்னர் கேளர ஆதிக்க சாதியினரான நம்பூதிரிகள் வீதியில் வரும் போது இவர்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.நாயர்கள் விதியில் வந்தால் இவர்கள் அவர்களுக்கு 15 அடி தள்ளியே ஓரமாக நடந்து செல்லவேண்டும் என்று பணிக்கப்பட்டிருந்தார்கள்.ஒரு நம்பூதிரி அல்லது நாயரை ஈழவன் தொட்டுவிட்டால் அவனுக்கு மரணதண்டனை வழங்கப்படும் என்ற அளவு கொடிய ஒடுக்குமுறை இருந்தது.
இந்த ஈழவர்கள் சேரர் பரம்பரையை சேர்ந்த வில்லவர்கள் என்ற இனத்தின் வழித் தோன்றல்கள் என்றும் ஈழத்தை சேர்ந்த ஈழவா அல்லது திய்யா என்ற மன்னர் பரம்பரையை சேர்ந்தவர்களும் அவர்களது குடி மக்களும் என்றும் இவர்களின் பூர்வீகம்பற்றி இரண்டு கருத்துக்கள் இருக்கின்றன.
கேரள அதிகார வர்க்த்தைச் சோந்த நம்பூதிரிகளினதும் நாயர்களினதும் ஈவிரக்கமற்ற ஒடுக்குமுறையில் இருந்து இந்த ஈழவர் சமூகம் விடுதலை பெறுவதற்கு காரணமாக இருந்தவர் நாராயண குரு.
அவர்  அறிவு ஒன்றுதான் மனித குலத்துக்கு உரியது என்றும் அதைக் கொண்டு முன்னேற்றம் காண்பதுதான் வாழ்க்கை என்றும் சொன்னார். இந்த அறிவுக்கு குறுக்கு வழிகள் எதுவும் இல்லை என்றும் எதையும் நிராகரிக்காமல் அனைத்தையும் நேர்வழியில் பயன்படுத்தி அறிவைக்கொண்டு முன்னேற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஆலங்களுக்குள் ஈழவர்கள் செல்லக் கூடாது என்று என்று அதிகார வர்க்கம்  சொன்னபோது அவர் ஈழவர்களுக்கான ஆலயங்களை நிறுவினார்.
1888 ம் ஆண்டு திருவனந்தபுரத்துக்கு அருகிலுள்ள அருவிப்புரம் என்ற இடத்தில் அவர் முதலாவது சிவன் கோவிலை நிறுவியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து அவர் சிவன், விஷ்ணு, சுப்பிரமணியர் முதலான தெய்வங்களுக்கான கோவில்களை உருவாக்கியதுடன் வள்ளலாரின் வழியில்  இறைவன் ஒயிமயமானவன் என்பதை விளக்குவதற்காக  விளக்கை கருவறை தெய்வமாகப் பிரதிஷ்டை செய்து கோவில்களை அமைத்தார்;, பின்பு சத்யம்-தர்மம்-தயவு எனும் சொற்களை கருவறை தெய்வமாகப் பிரதிஷ்டை செய்தும் கோவில்களை அமைத்தார். அதன் பின்னர் மனிதனது மனச்சாட்சிதான் மிகப்பெரிய தெய்வும் என்பதை வலியுறுத்தும் வகையில் களவங்கோடு எனும் பகுதியில் நிலைக் கண்ணாடியை தெய்வமாகப் பிரதிஷ்டை செய்து புதிய கோவில் ஒன்றை அமைத்தார்.
அத்துடன் இந்தக் கோவில்களை ஒட்டி பாடசாலைகளும் களரி முதலான பாரம்பரிய விளையாட்டுகளை பழகும்  இடங்களையும் அவர் அமைத்தார்.ஈழவர்களால் மரபுரீதியாக செய்யப்பட்டு வந்த ஆயுர் வேத மருத்துவத்தை வளப்படுத்துவதற்காக ஆயுர் வேத மருத்துவமனைகளையும் அதை முறையாகக் கற்பதற்கான கல்விக் கூடங்களையும் அவர் அமைத்தார்.
இந்த நடவடிக்கைகள் காலாகாலமாக சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டிருந்த ஈழவர் சமூகத்தை அந்த ஒடுக்கு முறையில் இருந்து விடுவித்தது.அந்த சமூகத்தை கல்வி அறிவும் முற்போக்கு சிந்தனையுமுள்ள ஒரு சமூகமாக மாற்றியது.
நாராயண குரு ஈழவர் சமூகத்தில் இந்த மாபெரும் பாச்சலை உருவாக்க உந்து சக்தியாக இருந்தவர் ஒரு தமிழர்.

திருவனந்தபுரத்தில்  அப்போதைய  பிரித்தானிய அரசாங்கப் பணியாளராகப் பணிபுரிந்த தைக்காடு அய்யா என்ற தமிழரே அவராகும். சிலம்பு, யோகக் கலைகள் போன்றவைகளைக் கற்றுக் கொடுக்கும் ஆசானாகவும் திகழ்ந்த அவரிடம் நாராயண குரு தியானம், யோகா போன்ற கலைகளுடன் தமிழில் ஆழமான அறிவையும் பெற்றார். திருமூலரின் திருமந்திரம் திருக்குறள் போன்ற தமிழ் நூல்களையும் கற்று அறிந்தார்.
தைக்காடு அய்யாவை தான் சந்தித்ததும் திருமூலரின் திருமந்திரமும் தான் தனது வாழ்க்கையில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தியதாக நாராயண குரு கூறியிருக்கிறார்.
இது காலாகாலமாக கேரளத்தில் வானளாவிய அதிகாரங்களை கொண்டிருந்த நம்பூதிரிகள் மற்றும் நாயர்களை உள்ளடக்கிய மலையாள அதிகார வர்க்கத்துக்கு கோபத்தை எற்படுத்தியதுடன் தமிழர்கள் மீதான வன்மத்தை வளர்க்கவும் காரணமாக அமைந்தது.
1980 களின் ஆரம்பத்தில் நான்  கேரள இடதுசாரி தோழர்களோடு அரிவிப்புரம்,நெய்யாற்றின் கரை, கொட்டாரக்கரை,காயங்குளம், கோட்டயம் சங்கணாஞ்சேரி முதலான முன்னாள் திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த பல்வேறு பகுதிகளிலுள்ள ஈழவர் கிராமங்களில் களப்பணியாற்ற சென்ற போது எனக்கு பல ஆச்சரியங்கள் காத்திருந்தன.
இந்த கிராமங்களின் அமைப்பு முறை குறிப்பாக ஒழுங்கைகள் வேலிகள் குடிசைகள் மற்றும் கல் வீடுகளின் அமைப்பு முறை தோட்டம் கிணற்றடி அமைப்பு முறை மா பலா தென்னை கமுகு முதலான மரங்கள் வளர்ப்பு கோவில்கள் அவற்றின் பூசை முறை என்பன அச்சொட்டாக எமது தென்மாரட்சி பகுதி(மீசாலை எழுதுமட்டுவாள் பளை பகுதி) கிராமங்களைப் போலவே இருந்தன.
உணவு முறையும் கூட புட்டு அப்பம் கழி சொதி குளம்பு என்பன கூட எமது உணவு முறையைப்போலவே இருந்தது. தோங்காய் பாலை பிரதானமாக பயன்படுத்தி குழம்பு சொதி வைப்பது மாங்காய் போட்டு தீயல் வைப்பது இவையெல்லாம் அச்சொட்டாக எங்கள் சமையல் முறையைப் போலவே இருந்தது.(தமிழகத்தில் இந்த சமையல்முறை கிடையாது)
பேச்சு வழக்கிலே கூட மோனே! மோளே! வெய்யலத்தை போகாதை! மழையத்தை போகாதை! பறையாம இரு!!எவட போற! உறைப்பு கூட! இப்ப பல சொற்கள் நாங்கள் யாழ்ப்பாணத்தில் பேசுகின்ற சொற்களை அதே உச்சரிப்புடன் இந்த ஈழவ மக்கள் பேசுவதை கேட்கக் கூடியதாக இருந்தது.
எமது வடமராட்சி கிழக்குப் பகுதியில் உள்ள நாகர்கோவில் குடத்தனை மாமுனை குடாரப்பு முதலான ஊர்களில்  'பார் அவரை' என்பதை 'பேப்பார்' என்றுற சொல்வார்கள்.இதை நான் யாழ்ப்பாணத்தில் வேறெந்த பகுதியிலும் கேட்டதில்லை.
ஆனால் தமிழக கேரள எல்லையிலுள்ள களியக்காவளை பகுதியில் இதைக் கேட்டபோது எனக்கு அளவுகடந்த ஆச்சரியமாக இருந்தது.

அதைப் போலவே பண்பாட்டு அடிப்படையிலும் அவர்கள் எம்மைப் போல தாய் வழி சமூகக் கூறுகளை முதன்மையாக கொண்டவர்களாக இருந்தார்கள்.தாய் வழி சொந்தங்களுக்கு முன்னுரிமை.பெண் திருமணமாகி கணவனோடு தாய் வீட்டில் இருப்பது(தமிழகத்தில் இது வீட்டோடு மாப்பிளை என்று இழிவாகக் கருதப்படுகிறது)

தொழில் ரீதியாக தென்னந்தோட்டங்களில் அலவாங்கில் தேற்காயை குத்தி உரிப்பது தென்னோலை ஊற வைத்து கிடுகு பின்னவது.பாய் பெட்டி மூடல்கள் இழைப்பது எல்லாமே எங்கள் ஊரைப் போன்றது தான். 
இந்த ஒற்றுமைகள் நாயர்கள் நம்பூதிரிகள் வாழும் கிராமங்களில் கிடையாது என்பது தான் இதில் முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டிய விடயமாகும்
ஆனால் இதேவேளை மலபார் என்று சொல்லுகின்ற வட கோரளத்திலுள்ள ஈழவர் கிராமங்கள் மாத்தறை தங்காலை கதிர்காமம் முதலான பகுதிகளிலுள்ள சிங்களக் கிராமங்களை போல இருந்தன.அந்தப் பகுதிப் பெண்கள் சிங்கள கிராமியப் பெண்களைப் போலவே உடையணிந்தாhhர்கள். தென்னம் பொச்சை நிர்நிலைகளில் ஊறவைப்பது.பின்னர் அதிலிருந்து தும்பு எடுப்பது.அதன் பின் கயிறு திரிப்பது என்று இந்தத் தொழில் சிங்களக் கிராமங்களில் நடைபெற்ற அதே பாணியிலேயே நடைபெற்றது.

இது இந்த மக்களின் வரலாற்றை ஆய்வு செய்ய வேண்டும் என்ற ஒரு ஆர்வத்தை எனக்கு எற்படுத்தியது.
எனது இந்த முயற்சிக்கு உதவுவதற்கு கேரளாவின் புரட்சிகர பொதுவுடமை இயக்கத்தை சோந்த 4 தோழர்கள்  முன்வந்தனர்.
அதில் முக்கியமானவர் அப்போது திருவனந்தபுரம் சட்டக்கல்லூரியில்  கல்வி கற்று வந்த தோழர் எமிலியாசாகும்.
நாங்கள் திருவனந்தபுரம் பல்கலைக்கழகம், திருவனந்தபுரத்திலிருந்த நாராணாய குரு மன்றம் திருவிதாங்கூர் சமஸ்தான நூலகம் என்பவற்றிலிருந்து ஈழவர்கள் பற்றிய வரலாற்று தகவல்களை திரட்டியதுடன் நெய்யாற்றின் கரையில் இருந்து ஆரம்பித்து மேற்குத் தொடர்ச்சி மலையேரக் கிராமங்கள் மற்றும் வடக்கே காசர் கோடு வயநாடு ஈறாக நூற்றுக்கு மேற்பட்ட கிராமங்களில் 18 மாதங்கள் பல்வேறு ஈழவர் சமூக பெரியார்களை சந்தித்து தகவல்களை திரட்டி  கள ஆய்வு செய்ததில் ஈழவர்களுக்கும் ஈழத்திற்கும் தொடர்பிருந்ததை உறுதி செய்ய முடிந்தது.
முக்கியமாக சேரர்களுடைய ஆட்சிக்காலத்தில் படைவீரர்களாகவும் படைதளபதிகளாவும் மெய்காப்பாளர்களாவும் வணிகர்காகவும் இருந்த இவர்கள் ஈழத்திலும் பரவி வாழ்ந்திருக்கிறார்கள்.கண்ணகிக்கு சேரன் செங்குட்டுவன் கோவில் கட்டியதாக சொல்லப்படும் காலத்தில் ஈழத்திலும் இவர்களே கண்ணகிக்கு கோவில் கட்டியிருக்கிறார்கள்.(கண்ணகிக்கு இலங்கையில் கோவில் கட்டப்பட்ட செய்தி சிங்கள்  வரலாற்று நூல்களிலும் உள்ளது) தமிழகத்துடன் மண உறவுகளை வைத்துக்கொண்ட ஈழத்து மன்னர்கள்(ஈழம் என்பது அப்போது முழு இலங்கைத் தீவையும் குறித்தது) இவர்களையே படைத்தளபதிகளாகவும் மெய்காப்பாளர்களாகவும் நிமித்திருக்கிறார்கள்.
ஆச்சரியப் படத்தக்க விதத்தில் இவர்களில் ஒரு பகுதியினர் சிறு தெய்வ வழிபாட்டை மேற்கொள்பவர்களாகவும் மற்றொரு பகுதியினர் தமிழகத்தில் நிலவிய மாகாயான பௌத்தத்தை கடைப்பிடிப்பவர்களாகவும் இருந்தார்கள்.ஈழத்திலும் இவர்களே தேரவாத பௌத்தத்துக்கு எதிரான மகாயான பௌத்தத்தை கடைப்பிடிப்பவர்களாக இருந்தார்கள்.
கி.பி 6ம் நூற்றாண்டில் ஆதிசங்;கரருடைய எழுச்சி தமிழ் நாடான சேரநாட்டை ஆரிய சமஸ்கிரத கலப்புக்குள்ளாக்கி லிங்ங வழிபாடு  பத்தினி தெய்வ வழிபாடு (கண்ணகிவழிபாடு) முதலான தமிழ்  வழிபாட்டு மரபுகளை அழித்து அறுவகை சமையம் என்ற வைதீக கட்டுக்குள் கொண்டுவந்தது.சேரநாடு பரசுராமர் தன்னுடைய ஆயுதமான கோடரியை கடலுக்குள் எறிந்ததால் உருவான நாடு  விஷ்ணுவால் ஆட்கொள்ளப்பட்ட வாமண மன்னரால் ஆளப்பட்ட புனித பூமி என்பது போன்ற ஆரியம் சம்பந்தப்பட்ட புராணக் கதைகள் முதன்மைப்படுத்தப்பட்டன.
சேரர்களுடைய ஆட்சிக்காலத்தில் அதிகார முடையவர்களாக இருந்த வில்லவர்கள் எனப்படும் இந்த ஈழவர்கள் சமஸ்கிரத மேலாதிக்க அலையில் அதிகாரம் இழந்து அடிமைகளாக்கப்பட்டார்கள் 
அதேநேரம் தமிழகத்தில் சைவ நாயன்மார்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட   சமண பௌத்த மதங்களுக்கு எதிரான இயக்கம் சோழ பாண்டிய மன்னர்களின் ஆதரவைப் பெற சமண பௌத்த மதத்தினரை கழுவேற்றிக்  கொலை செய்யும் அளவுக்கு வெறி கொண்டதாக மாறுகிறது.இந்தக் காலகட்டத்தில் தமிழகத்தில் மாகாயான பௌத்தம் (சமணமும் கூட)  துடைத்தழிக்கபடுகிறது.அந்த மதத்தை சேர்ந்த விகாரைகள் இடித்தழிக்கப்பட்டு அங்கிருந்த  பிக்குகள் கழுவேற்றிக்  கொல்லப்பட அந்த மதத்தை கடைப்பிடித்த ஏனையோர் அவர்களது வாழ்விடங்களில் இருந்து விரட்டியடிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு விரட்டியடிக்கப்பட்டவர்களில் ஒரு சிறு தொகையினர்  ஈழத்துக்கு தப்பியோட ஏனையோர் அந்த காலத்தில் வலுவிழந்த அரசை கொண்டிருந்த வேளிர் நாட்டுப் பகுதிக்கு (பின்னாளிள் திருவிதாங்கூhர்) சென்று தஞ்சமடைகின்றனர்.
ஈழத்திலும் இந்த மதப் போர் சைவ பௌத்தப் போராகவும் மாகாயான தேரவாதப் போராகவும் வெடிக்கிறது.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் கந்தரோடை என்ற கதிரமலையில் இருந்த தமிழ் பௌத்த(மகாயான) தலைநகரம் கைவிடப்படுகிறது.அந்த நகரத்தின்  கடைசி மன்னனான உக்கிரசிங்கன் சோழ இளவரசியான மாருதப்புர வல்லி (மாவிட்டபுரம் கந்த சுவாமி கோவிலை கட்டியவள்)யை மணம் புரிந்து சைவ சமயத்தக்கு மாறியதுடன் தனது மனைவியின் பேரால் வல்லிபுரம் என்ற நகரத்தையும் உருவாக்கி தனது அரசை அங்கு மாற்றுகிறான்.
தெற்கே மாகாயான பௌத்தத்தை கடைப்பிடித்த (அனுராதபுரத்திலிருந்த அபயகிர விகாரை உட்பட) அனைத்து விகாரைகளும் தேர வாத பௌத்த பிரிவினரால் அழித்தொழிக்கப்படுகிறது.தேரவாத பௌத்தமானது  தமிழ் எதிர்ப்பு தமிழ்நாட்டு எதிர்ப்பு ஆரிய தூய்மைவாதம் என்ற முழக்கங்களை முதன்மைப்படுத்தி தன்னை இலங்கையின் ஆதிக்க மதமாக நிறுவிக்கொள்கிறது.  தென் இலங்கை முழுவதும் பரவி வாழ்ந்த மகாயான பௌத்தத்தை கடைப்பிடித்த வில்லவர்கள் அவர்களது வாழ்விடங்களில் இருந்து விரட்டியடிக்கப்படுகின்றனர்.மகாயான பௌத்தமும் துடைத்தளிக்கப்படுகிறது.
இவ்வாறு அன்று ஈழம் என்று அழைக்கப்பட்ட இலங்கைத் தீவு முழுவதிலும் இருந்து விரட்டியடிக்கப்பட்ட வில்லவர்கள் அன்றைய சேரநாட்டில் தஞ்சமடைகிறார்கள்.அவர்கள் ஈழத்தில் இருந்து வந்தவர்கள் என்கின்ற படியினால் அப்போது சேரநாட்டில் தலையெடுத்த ஆதிக்க சாதியனரான (ஆரிய வம்சாவழி) நம்பூதிரிகளும் நாயர்களும் அவர்களை ஈழவா அல்லது ஈழவர் என அழைத்தனர். இதுவே பின்னர் அவர்களது சாதிப் பெயராக ஆகிவிட்டது.
இதிலே முக்கியமான விடயம் ஈந்த ஈழவர்கள் அல்லது வில்லவர்களில் ஈழத்தில் ஒரு அரச பரம்பரையை சோந்தவர்களும் இருந்திருக்கிறார்கள்.அது எந்த அரச பரம்பரை என்பதற்கு உரிய சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லலை.திய்யா என்று அழைக்ப்படும் இந்த மன்னர் பரம்பரை மகாவம்சத்தில் குறிப்பிடப்படும் அனுராதபுரத்தை ஆண்ட சேனன் குந்திகன் பரம்பரையின் வழித்தோன்றல்களா?அல்லது யாழ்ப்பாணக் குடாநாட்டை ஆண்ட உக்கிரசிங்கனின் அரச வம்சத்தை சோந்தவர்களா? அல்லது வேறெந்த அரசும் அவர்களுக்கு இருந்ததா? என்பது அராயப்பட வேண்டும்.
நாங்கள் இந்த வரலாற்று கள ஆய்வை மேற்கொண்ட காலத்தில் நவீன தொழில் நுட்ப வசதிகளோ இணைய வசதிகளே ,உரிய போக்குவரத்து வசதிகளோ எமக்கு இருக்கவில்லை.கேரளாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்த பல கிராமங்களுக்கு நாங்கள் கால்நடையாகவே சென்றிருக்கிறோம்.
இன்று நவீன தொழில் நுட்ப வசதிகளும் இணயத்தின் வருகை உலகை கணனியின் விசைப்பலகைக்குள் அடக்கும் அளவுக்கு சுருக்கிவிட்ட நிலையில் தமிழர்களின் வரலாறு பற்றிய ஆர்வமுள்ளவர்கள் இந்;த ஈழவர்களின் வரலாறு பற்றிய ஆய்வை துறைசார் ரீதியில் மேற்கொள்ள வேண்டும்.
1983ல் நாங்கள் இந்த கள ஆய்வை முடித்த போது தோழர் எமிலியாஸ் சொன்னார் 'தோழர் ஈழவிடுதலைக்காக போராடும் உங்களுக்கு சிங்கள அதிகார வாக்கம் மட்டும் எதிரியல்ல,இன்னொரு 10 வருடம் பொறுத்திருந்து பாருங்கள் இந்த மலையாள அதிகார வாக்மும் உங்களை எதிர்க்கும்,அவர்களுக்கு ஈழவர்களை பிடிக்காது.அதனால் ஈழத்தையும் பிடிக்காமல் போகும் கவனமாய் இருங்கள்'என்று.
அவர் சொன்னது இன்று நூற்றுக்கு நூறு வீதம் உண்மையாகி இருக்கிறது.


Friday, July 29, 2011

’வேஷப் பிராமணரும்’ ’தமிழ் பிராமணரும்’ : எதிர்வினை 2 - தமிழறிஞர் வி.எஸ் .ராஜம்

அன்பின் ரவிக்குமார்,
திரு ராஜ் கௌதமனின் நூலை நான் படித்ததில்லை. இனிப் படிக்கவும் வாய்ப்பும் நேரமும் கிடைக்காது -- உடல் நலக் குறைவைச் சரிசெய்யவும் ஏற்கனவே மேற்கொண்ட இலக்கண ஆராய்ச்சிக்கும் நேரம் தேவை. ஆனால் இங்கே அவர் கூறியதாக எடுத்துச் சொல்லப்பட்ட கருத்து அவ்வளவு பொருந்துவதாக இல்லை என்று தோன்றியதால் இந்தப் பதிவு. இதற்குமேல் அடிக்கடிப் பங்குகொள்ள இயலாத நிலை. அன்புடன் பொறுத்துக்கொள்ளவேண்டும். பிறவற்றைத் தனிமடலில் எழுதுகிறேன்.

ராஜ் கௌதமன் கூறியுள்ள ஒரு கருத்தை இத்துடன் இணைத்துப் பார்க்கவேண்டும், “ சங்க காலத்தில் பிராமணர்கள் தனிக் குடியிருப்புகளில் வாழ்ந்தார்கள்.’பார்ப்பனச் சேரி’ என இவர்கள் மட்டும் வாழ்ந்த இடம் சுட்டப்பட்டது.வீட்டில் சமஸ்கிருதமும் வெளியே தமிழும் பேசினார்கள்.

இதுபற்றி என்னுள் எழுந்த கேள்விகள்:
--------------------------------------------
1. "சங்க காலம்" என்பதை ராஜ் கௌதமன் எப்படி வரையறுக்கிறார்? அதாவது அவர் கருத்துப்படி, எந்த நூற்றாண்டிலிருந்து எந்த நூற்றாண்டு வரை "சங்க காலம்"?
2. "சங்க காலம்" பற்றிக் கருத்துக்கள் சொல்ல எந்த வகை ஆவணங்களை இவர் பயன்படுத்துகிறார்? கல்வெட்டுகளா? இலக்கியமா? எந்தக் கல்வெட்டுகள்? எந்த இலக்கியங்கள்?
3. "சங்க காலத்தில் பிராமணர்கள் தனிக் குடியிருப்புகளில் வாழ்ந்தார்கள்" என்பதற்கு இவர் காட்டும் சான்று என்ன?
4. " 'பார்ப்பனச் சேரி’ என இவர்கள் மட்டும் வாழ்ந்த இடம் சுட்டப்பட்டது." -- இந்தக் குறிப்பைச் சங்க இலக்கியங்களில் எங்கே பார்க்கலாம்?
5. "வீட்டில் சமஸ்கிருதமும் வெளியே தமிழும் பேசினார்கள்" -- இதற்குச் சங்க இலக்கியங்களில் என்ன சான்று இருக்கிறது?
இந்தக் கேள்விகளுக்குத் துல்லியமான விடைகள் கிடைத்தால் நன்றியுடன் மகிழ்வேன்.
எனக்குத் தெரிந்த அளவில்...
---------------------------------
6. "சேரி" என்ற நல்ல தமிழ்ச்சொல்லின் பொருள் பிற்காலத்தில் பிறழ்ந்து உணரப்பட்டிருக்கிறது -- 'சேரி  என்பது தாழ்த்தப்பட்டவர் வாழும் இடம்' என்று. 

7. முதன் முதலாக, தொல்காப்பியச் சொல்லதிகார இளம்பூரணர் உரையில் "பார்ப்பனச் சேரி" என்ற வழக்கு காணப்படுகிறது. (சங்க இலக்கியத்தில் இல்லை.)
இளம்பூரணர் உரை: "சேரி என்பது பலர் இருப்பதுமன். ஆயினும், ஆண்டுச் சில பார்ப்பனக் குடி உளவேல், அதனைப் பார்ப்பனச் சேரி என்பது."
இளம்பூரணர் சங்க காலத்தவர் இல்லை.
அன்புடன்,
ராஜம்

Friday, July 15, 2011

கறுப்பு ஜூலை: காய்ந்து போன ரத்தம் _ ரவிக்குமார்







( மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஜூனியர் விகடனில் நான் எழுதிய கட்டுரை இது. கறுப்பு ஜூலையின் நினைவாக இங்கே வெளியிடுகிறேன். ஈழத்தில் நடந்த கொடுமைகளின் வரலாறு மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தப்பட வேண்டும். அப்போதுதான் அந்த மக்களின் போராட்டங்கள் சரியாக நமக்குப் புரியும் )




இருபத்தைந்து ஆண்டுகள் முடிந்து விட்டன. இதற்கிடையே பூமிப்பந்தில் எவ்வளவோ மாற்றங்கள். ஆட்சிகளில் மாற்றம், நாடுகளின் எல்கைளில் மாற்றம், உணவில், உடையில், பண்பாட்டில் மாற்றம்... ஆனால் மாறாமல் தொடர்கிறது அந்தக் கதறலும், கண்ணீரும். இலங்கை வீதிகளை நிரைத்த அந்த ஓலக்குரல்கள் நமது காற்றில் கலந்து பேரோசையாய்ப் பெருகுகிறது. இருபத்தைந்து ஆண்டுகள். கறுப்பு ஜூலை என வர்ணிக்கப்படும் அந்த இனப்படுகொலை நடந்து இருபத்தைந்து ஆண்டுகள்.

வாகனங்களில் சென்ற தமிழர்களை வழிமறித்து உயிரோடு எரித்துக் கொன்று நடனமாடிய சம்பவங்கள் நடந்து இருபத்தைந்து ஆண்டுகள். வாக்காளர் பட்டியலை வைத்து தமிழர்களை அடையாளம் கண்டு வீடுகளிலிருந்து இழுத்தெறிந்து வெட்டித் துண்டாடிய காட்சிகள் நிகழ்ந்து இருபத்தைந்து ஆண்டுகள். கடைகளில் தமிழனின் கறி கிடைக்கும் என பலகையில் எழுதி வைத்து எக்காளமிட்ட கோரங்கள் நிகழ்ந்து இருபத்தைந்து ஆண்டுகள். எல்லாவற்றுக்கும் விழா எடுத்துக் கொண்டாடும் தமிழர்கள் இதையும் கூட வெள்ளி விழாவாகக் கொண்டாடி மகிழலாம்.

உள்ளூர் களேபரத்தில் நாம் கொஞ்ச காலமாக இலங்கையை மறந்து விட்டோம். சிங்களக் கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக மீனவர்களை எண்ணிக் கசிந்து கண்ணீர் விட்ட நேரத்திலும் கூட தமிழர்களைப் பற்றிப் பேசாமல் தவிர்த்துவிட்டோம். ‘முன் ஜாக்கிரதை முத்தண்ணாக்களான’ நாம் ஈழப்பிரச்சனையில் எளிதில் சிக்கிக் கொள்வோமா என்ன?
‘‘சார்க்’’ மாநாட்டுக்காகத் தயாராகிக் கொண்டிருக்கிறது இலங்கை. ‘‘உலக நாடுகளுடனும் எமது பிராந்திய அயல் நாடுகளுடனும் நட்புறவை வளர்த்துக் கொள்ளவே நாம் என்றும் விரும்புகின்றாம். இதற்கான புறநிலைகளை உருவாக்கி ஒரு நட்புறவுப் பாலத்தை கட்டியெழுப்புவதிலும் இதய சுத்தியோடு இருக்கின்றோம். தமிழீழ தேசத்தினதும், தமிழீழ மக்களினதும் நலலெண்ணத்தை வெளிப்படுத்தி பரஸ்பர நம்பிக்கையை வளர்த்துவிட விரும்புகின்றோம். இந்த நல்லெண்ண நடவடிக்கையாக சார்க் மாநாடு நடைபெறுவதையிட்டு ஜூலை 26 முதல் ஆகஸ்டு 4 வரையான காலப்பகுதியை இராணுவ நடவடிக்கைகள் அற்ற அமைதி நாட்களாகக் காத்து, ஒருதலைப்பட்சமாக போர் நிறுத்தத்தைக் கடைப்படித்து, மாநாடு வெற்றி பெற ஒத்துழைப்போம்’’ என புலிகள் இயக்கம் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இந்தச் சூழலில் தான் இலங்கையில் 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24ஆம் தேதி நடைபெற்ற இனப்படுகொலையை நாம் நினைவு கூர்கிறோம். ‘‘நெருப்பையும், குருதியையும், அவலக் குரலையும் ஒன்றாகக் கேட்கும்போது வன்முறையின் சித்திரம் அல்லது கலவரம் ஒன்றின் தோற்றம் எப்போதும் மனதில் விரிகிறது... எரிந்து கொண்டிருக்கும் இந்த நெருப்பு எப்போதுதான் அணையப்போகிறது?’’ என்ற ஈழத்து எழுத்தாளர் கருணாகரனின் கேள்வியை நாமும் பகிர்ந்து கொள்கிறோம்.

எப்படி நடந்தது இந்த வன்முறை? 1983 ஜூலை 23ஆம் தேதி மாலை யாழ்பாணத்துக்கு வெளியே நாணுவ ஜீப் ஒன்று குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. அந்த ஜீப்புக்கு பின்னால் வந்த ராணுவ டிரக்கிலிருந்து வீரர்கள் இறங்கி ஓடி வருகிறார்கள். நாலாபுறமிருந்தும் அவர்கள் தாக்கப்படுகிறார்கள். எந்திரத் துப்பாக்கிகள், கையெறி குண்டுகள். தாக்குதலின் முடிவில் பதினைந்து சிப்பாய்களின் சடலங்கள் இரைந்து கிடக்கின்றன. கொல்லப்பட்ட சிப்பாய்கள் அனைவரும் சிங்களவர்கள். அவர்களைக் கொன்றதோ தமிழர்களின் விடுதலைப்புலிகள்.

கொல்லப்பட்ட சிப்பாய்களின் உடல்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பினால் கலவரம் வெடிக்கக்கூடும் என அஞ்சிய இலங்கை அரசாங்கம் அவர்கள் எல்லோரது உடல்களையும் கொழும்புவில் அடக்கம் செய்வதென்று முடிவு செய்தது. ஜூலை 24ஆம் தேதி கொழும்புவில் சிப்பாய்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படும்போது அங்கே கூடிய சிங்களவர்களின் கும்பல் கொழும்பு நகருக்குள் புகுந்து தமிழர்களின் வீடுகளைத் தேடி கண்டுபிடித்துத் தாக்கத் தொடங்கியது. தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளானார்கள். வீட்டிலிருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. வீடுகள் எரிக்கப்பட்டன. தமிழ் மக்களில் பலர் தப்பித்து ஓடி இரக்கமுள்ள சிங்களவர்கள் சிலரின் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர். அரசாங்கம் ஊரடங்கு சட்டத்தைப் பிறப்பித்தபோதிலும் கலவரம் அடங்குவதாக இல்லை.






கொழும்புவில் ஆரம்பித்த கலவரம் தமிழர்கள் வசித்த கண்டி, மாத்தளை, நாவல்பிட்டியா, பாதுல்லா, நுவாரா எலியா முதலான பகுதிகளுக்கும் பரவியது. சிங்களவர்கள் வாழ்ந்த பகுதிகளில் குடியிருந்த தமிழர்களே அதிகம் பாதிப்புக்கு ஆளானார்கள். இதுகுறித்து ஆர்.சம்பந்தன் எழுதியிருப்பது நமக்கு நல்ல விளக்கமாக இருக்கிறது. ‘‘இந்த வன்முறையின் போது குறிப்பிட்ட ஒரு தந்திரத்தை சிங்களவர்கள் கையாண்டார்கள். முதலில் இலங்கை ராணுவத்தினர் தமிழர் வாழும் பகுதிக்குள் வருவார்கள். அங்கே ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தங்களுக்கு தகவல் கிடைத்திருப்பதாகச் சொல்லி தேடுதல் வேட்டையில் ஈடுபடுவார்கள். தமிழர்களை ஆபாசமாகப் பேசி அச்சுறுத்தி களேபரம் செய்வார்கள். அங்கிருக்கும் இளைஞர்களை விசாரணைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி பிடித்துப் போவார்கள். அவர்கள் போன சிறிது நேரத்தில் அங்கே சிங்களவர்களின் கும்பல் நுழையும். தமிழர்களின் வீடுகளைக் கொள்ளையடிக்கும். அதன்பிறகு வீடுகளுக்கு தீ மூட்டும். ராணுவத்தினரின் தேடுதல் வேட்டையும், தமிழ் இளைஞர்களை அவர்கள் பிடித்துச் செல்வதும் அதன்பிறகு வருகின்ற சிங்களவர்களின் கும்பலுக்கு உதவத்தான்.’’ தங்களை தற்காத்துக்கொள்ள எதுவுமற்ற நிலையில் தமிழர்கள் சிங்களவர்களிடம் சிக்கிக் கொண்டு உயிரிழந்தனர் என்று அதை வர்ணிக்கிறார் சம்பந்தன்.

முதலில் அரசாங்க அலுவலகங்களைக் குறி வைத்துத்தான் வன்முறை ஏவப்பட்டது. அதன்பிறகு தான் அது தமிழர்களுக்கு எதிரானதாக மாறியது. தெருச்சந்திகளில் கையில் பெட்ரோல் கேன்களோடு வாகனங்களை வழி மறித்த கும்பல் டிரைவரும், வாகனத்தில் பயணம் செய்பவரும் தமிழரா என்று விசாரித்து அவர்கள் தமிழர்கள் எனத் தெரிந்தால் பெட்ரோலை ஊற்றி உயிரோடு கொளுத்தியது. அப்படியொரு சம்பவத்தை சிங்களக் கவிஞர் பாஸில் ஃபெர்னாண்டோ கவிதையொன்றில் இப்படி விவரிக்கிறார்.








ஜூலை 1983: மேலும் ஒரு சம்பவம்

இறந்தவர்களைப் புதைப்பது
ஒரு கலையாகவே வளர்ந்திருந்த எமது காலத்தில்
இந்த நிகழ்வு மட்டும் அழிய மறுத்து எஞ்சியிருப்பதற்குக்
காரணம் ஏதுமில்லை

சத்தியமாகச் சொல்கிறேன்:
நான் உணர்ச்சிபூர்வமானவன் அல்லன்
சித்தம் குழம்பியவனாகவும் ஒதுபோதும் இருந்ததில்லை
உங்களைப் போலவே
நானும் உணர்ச்சிகளை வெளிக்காட்டத் தயங்குபவன்
அன்றாட வாழ்க்கையிலும்
நான் ஒரு யதார்த்தவாதி
எச்சரிக்கை உணர்வுள்ளவனும்கூட
மறந்துவிடு என்று அரசு ஆணையிட்டால்
உடனடியாக மறந்து விடுகிறேன்
மறப்பதில் எனக்கிருக்கும் திறமை பற்றி எவருக்குமே ஐயமிருந்ததில்லை
என்னை ஒருவரும் குறை சொன்னதும் கிடையாது

எனினும் அந்தக் கும்பல் அந்தக் காரை
எப்படித் தடுத்து நிறுத்தியது என்பதை
இப்போதும் நான் நினைத்துப் பார்க்கிறேன்

காருக்குள் நாலுபேர்
பெற்றோர், நாலு அல்லது ஐந்து வயதில்
ஆணும் பெண்ணுமாய் இரு குழந்தைகள்
ஏனைய கார்களை எப்படி தடுத்து நிறுத்தினரோ
அப்படித்தான் அந்தக் காரையும் தடுத்து நிறுத்தினார்கள்
எந்த வேறுபாடும் இல்லை.
குதூகலம் கொப்பளிக்கின்ற மனநிலையில்
ஒரு சில கேள்விகள்
செய்வதைப் பிழையறச் செய்யவிரும்பும் கவனமாய் இருக்கலாம்
பிறகு செயலில் இறங்கினர் வழமைபோல

பெட்ரோல் ஊற்றுவது, பற்ற வைப்பது போன்ற விஷயங்கள்
ஆனால், திடீரென்று யாரோ ஒருவன்
கதவுகளைத் திறந்தான்.
அழுது அடம்பிடித்துப் பெற்றோரை விட்டு விலக மறுத்த
இரண்டு குழந்தைகளையும் வெளியே இழுத்தெடுத்தான்
குழந்தைகளின் உணர்வுகளைக் கவனத்தில் கொள்ளாமல் இருப்பது
சில சமயங்களில் குழந்தைகளுக்கு நல்லது என
அவன் எண்ணியிருக்கக் கூடும்
துரிதமாக செயல்பட்ட இன்னொருவனோ தீக்குச்சியைக் கிழித்தான்
சுற்றிலும் எரிந்து கொண்டிருந்த பலவற்றோடு
இந்த நெருப்பும் சேர்ந்து கொண்டது
அருகே நின்று தமது சாகசங்களைப் பற்றிப்
பேச ஆரம்பித்தனர் கொஞ்சம் பேர்
கலைந்து போனார்கள் ஒருசிலர்

காருக்குள் இருந்த இருவரும் என்ன எண்ணியிருப்பார்கள்
என்பதைப் பற்றி யார் கவலைப்பட்டார்கள்
சமாதான விரும்பிகளாக மக்கள்
தமது வீடுகளுக்குத் திரும்ப ஆரம்பித்தனர்
அப்போதுதான் திடீரென உள்ளேயிருந்தவர்
கார் கதவை உடைத்து வெளியே பாய்ந்தார்
சட்டையிலும் தலைமயிரிலும் ஏற்கனவே தீப்பற்றி விட்டிருந்தது
குனிந்தவர் தனது இரண்டு குழந்தைகளையும் வாரி எடுத்தார்
எங்கும் பார்க்காமல் கவனமாகத் திட்டமிட்டு எடுத்த முடிவை
செயல்படுத்துவது போல உறுதியுடன் காருக்குள் திரும்பி ஏறினார்
கதவை மூடினார்

தனித்துவமான அந்த சப்தத்தை நான் கேட்டேன்
எரிந்தழிந்த கார் இப்போதும் தெருவோரம் கிடக்கிறது
ஏனையவற்றோடு இன்னும் சில நாட்களில்
மாநகராட்சி அதனை அகற்றக்கூடும்
தலைநகரின் தூய்மையே ஆட்சியாளரின் தலையாய பணி’’

ஒரு சிங்களவரே அளித்த ஒப்புதல் வாக்குமூலமாக இருக்கிறது இந்தக் கவிதை. வீதிகளிலும், வீடுகளிலும் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது மட்டுமின்றி சிறையில் இருந்தவர்களும் குரூரமாக கொல்லப்பட்டனர். வெலிக்கடை சிறையில் ஜூலை 25ஆம் தேதி முப்பத்தேழு தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்பட்டனர். மூன்று நாள் கழித்து மீண்டும் பதினைந்து பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்காகப் பழிவாங்கவே இந்தக் கலவரம் நடத்தப்பட்டதென்று சிலர் கூறுகின்றனர். அது உண்மையல்ல. தமிழர்கள் மீதான ஒடுக்குமுறை பல ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பமாகி விட்டது. இலங்கை சுதந்திரம் அடைந்தது முதலே இனவொதுக்கல் கொள்கையும் தீவிரமடைய ஆரம்பித்து விட்டது. 1983ல் ª-ஜயவர்த்தனே ஆட்சிக் காலத்தில் அது புதிய பரிமாணத்தை எட்டியது. அந்த ஆண்டு ஏப்ரல் பத்தாம் தேதி திரிக்கோணமலை காவல் நிலையத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் இறந்தார். எந்தவித விசாரணையுமின்றி அடைத்து வைக்கப்பட்டிருந்த அவர் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதை அவரது உடம்பிலிருந்த காயங்கள் காட்டின. அது தமிழ் மக்களிடம் கொந்தளிப்பை கூட்டியது. 1983 ஜூன் மாதம் 3ஆம் தேதி அரசாங்கம் ஆணையொன்றைப் பிறப்பித்தது. அந்த அவசர ஆணையின்படி போலீஸார் எவ்வித விசாரணையோ, போஸ்ட்மார்ட்டமோ இன்றி எந்தவொரு சடலத்தையும் புதைக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்பே தமிழர்களின் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள் தொடங்கி விட்டன. இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே ‘‘இனிமேல் நான் தமிழர்களின் அபிப்ராயம் பற்றி கவலைப்படப் போவதில்லை. அவர்களது உயிர்களோ, கருத்துகளோ எங்களுக்கு பொருட்டல்ல. தமிழர்களைப் பட்டினி போட்டால் சிங்களவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்’’ என லண்டனிலிருந்து வெளியான பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்தார். ஆக, ஜூலை கலவரத்துக்கான தயாரிப்பை நீண்ட நெடுங்காலமாகவே சிங்களவர்கள் செய்து கொண்டிருந்தார்கள் என்பதுதான் உண்மை. 1977ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கலவரமும், 1981ஆம் ஆண்டு யாழ் நூலகம் எரிக்கப்பட்டதும் இந்தத் தயாரிப்பில் சில மைல் கற்கள்.
இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்டதை இனப்படுகொலை (Genocide) எனச் சொல்வது சரியா? என்று சிலர் கேட்கலாம். இனப்படுகொலை என்பதற்கான வரையறை என்ன என்பதை பவுல் ஆர்.ப்ராஸ் என்ற அமெரிக்க சிந்தனையாளர் தனது நூலொன்றில் (Forms of Collective Violence) விளக்கியிருக்கிறார். ‘‘மக்களில் ஒரு பிரிவினரை ஒரு குறிப்பிட்ட அடையாளத்துக்குள் அடக்கி அவர்களை ஆதிக்கம் செய்வது; அதற்கு வன்முறையை கருவியாகப் பயன்படுத்துவது; அரசியலை இனவாதத்தின் ªச்வாக்குக்குள் கொண்டு வருவது; சிறுபான்மை இனத்துக்கு எதிராக வன்முறையை ஏவுகிறவர் அரசியலில் தலைமை ஏற்பது; தங்களது சந்தோஷத்துக்காகவும், கேளிக்கைக்காகவும் எதிராளிகள் மீது வன்முறையை ஏவுவது; மக்கள் பெருமளவில் இடம் பெயர்ந்து செல்ல நிர்ப்பந்தப்படுத்தும் விதமாகத் தாக்குதல் தொடுப்பது; இன சுத்திகரிப்புக்கு வன்முறையை வழியாகக் கொள்வது; காவல்துறை, ராணுவம் முதலானவற்றின் ஒரு சார்பான அணுகுமுறை’’ - இப்படி இனஅழித்தொழிப்பு மனோபாவத்தின் அம்சங்களை அவர் பட்டியலிடுகிறார். இவை எல்லாமே 1983 ஜூலை கலவரத்துக்குப் பொருந்துகின்றன.

கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகத் தொடரும் யுத்தத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் விரும்பியும், விரும்பாமலும் அங்கு பலியாகியுள்ளனர். ஈழத் தமிழர்கள் உலகமெங்கும் அகதிகளாக விரட்டப்பட்டிருக்கிறார்கள். இப்போதும் தமிழர்களின் வீடுகளின் மீது குண்டுகள் வீழ்ந்து கொண்டிருக்கின்றன. சின்னஞ்சிறு குழந்தைகள் புன்னகை மாறாமல் புதை குழிகளுக்குள் போய்க் கொண்டிருக்கின்றனர். இதை ஐ.நா. சபை வேடிக்கை பார்க்கிறது. இதை உலக நாடுகள் வேடிக்கை பார்க்கின்றன. இதை இந்தியா வேடிக்கை பார்க்கிறது. இதைத் தமிழகமும் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. ‘மௌனம் என்பது காய்ந்து போன ரத்தம்’ என்று சொன்னான் ஒரு கவிஞன். காய்ந்து போனாலும் கவிச்சி மாறாத ரத்தம் அது. உணர்வுள்ளவர்களுக்கு குமட்டலை ஏற்படுத்தும் ரத்தம்.

கொழும்பு நகரில் சார்க் நாடுகளின் தலைவர்கள் இப்போது சந்தித்துப் பேசவுள்ளனர். நமது பிரதமர் மன்மோகன் சிங் அவர்களும் அங்கு செல்கிறார். நம்பிக்கை வாக்கெடுப்பில் பெற்ற வெற்றியை அங்கு வரும் தலைவர்களோடு அவர் பகிர்ந்து கொள்ளலாம். அவர்களுக்குப் பிரத்யேகமாக விருந்து கூட கொடுக்கலாம். மாநாடு நடக்கும் இடத்திலிருந்து சில மைல் தொலைவில் உயிரைக் கையில் பிடித்தபடி தவித்துக் கொண்டிருக்கும் தமிழர்களின் ஞாபகம் அவருக்கு வருமென்று சொல்ல முடியாது. ஏனென்றால் பாவம் அவர்கள் தமிழர்கள்.

24.07.2008 ஜுனியர் விகடன்