Showing posts with label tamil buddhism. Show all posts
Showing posts with label tamil buddhism. Show all posts

Tuesday, December 4, 2012

இந்திரர் தேச சரித்திரம் - அயோத்திதாசப் பண்டிதர்

( அயோத்திதாசப் பண்டிதர் எழுதிய இந்திரர் தேச சரித்திரம் என்னும் நூலை இங்கே தொடராக வெளியிடவுள்ளேன். இது முதல் பகுதி ) 



 இந்திரம் என்னும் மொழி ஐந்திரமென்னும் மொழியின் திரிபாகும். அதாவது, மகதநாட்டுச் சக்ரவர்த்தித் திருமகன் சித்தார்த்தி சக்ரவர்த்தி அவர்கள் கல்லாலடியில் வீற்றிருந்து ஐம்பொறிகளை வென்ற திரத்தால் ஐந்திரரென்று ஐ என்பது இ  யாகத் திரிந்து இந்திரரென வழங்கியது. அவரது சங்கத்தோர் நிலைத்த இடங்களுக்கு இந்திர வியாரமென்றும் அவரது உற்சாகங் கொண்டாடும் காலத்திற்கு இந்திரவிழா நாள், இந்திர விழாக்கோலென்றும் பெயரிட்டார்கள். இந்திரவிழாக் கொண்டாடும் காலங்களில் எல்லாம் மழை பெய்வதன் அனுபவம் கண்டு மழைக்கு முன் காட்சியாகும் வானவில்லிற்கு இந்திரதனுசென்றும், அவரை எக்காலும் சிந்தித்துக் கொண்டாடும் கூட்டத்தோருக்கு இந்தியர்களென்றும், இந்தியர்கள் வாசஞ்செய்யும் தேசத்திற்கு இந்தியமென்றும், இந்திரமென்றும் வழங்கி வந்தார்கள்.

 பண்டைய நாட்களில்  இத்தேசத்தைப் பரதகண்டம் என்று வழங்கியதும் உண்டு, காரணம் என்னவெனில் ஆதியில் இத்தேசத்தோர் சித்தார்த்தித் திருமகனை வரதரென்று கொண்டாடி வந்தார்கள். அதாவது, மக்களுக்கு அறததை போதித்தது கண்டு வரதர், பரதரென்றும், அவர் போதித்துள்ள ஆதிவேதமாம் முதல் நூலுக்கு “வரதன் பயந்த முதநூலென்றும்”, அவரைக் கொண்டாடிய இந்தத் தேசத்திற்கு வடபரதம் தென்பரதம் என்றும் கொண்டாடி வந்தார்கள்.
 இத்தகையக் கொண்டாட்டம் பரதரென்னும் பெயரால் சிறப்பாகச் செய்யப்படாமல் இந்திரரென்னும், பெயரிலே விழாக்களையும், வியாரங்களையும் சிறப்பாகச் செய்யப்பட்ட  காரணத்தால் இத்தேச மக்களை இந்தியர்க ளென்றும், இத் தேசத்தை இந்திய தேசமென்றும் வழங்கி வந்தார்கள். அதுகொண்டு வட இந்தியமென்றும், தென் இந்திய மென்றும் பிரபலப் பெயருண்டாயிற்று.

 அருங்கலைச் செப்பு
 இந்தியத்தை வென்றான் தொடர்பாட்டோடாரம்பர
 முந்தி துறந்தான் முநி.

 மணிமேகலை
 இந்திரரெனப்படு மிறைவ நம்மிறைவன்
 றந்தநூற்பிடகம் மாத்திகாயமதென்

 சூளாமணி
 மாற்றவர் மண்டில மதனுளூழியா
 லேற்றிழி புடையன விரண்டுகண்டமாந்
 தேற்றிய விரண்டினுந் தென்முகத்தது
 பாற்றரும் புகழினாய் பரதகண்டமே.

 சூளாமணி

 வேறு
 கந்துமாமணித்திரள் கடைந்த செம்பொனீள்சுவர்
 சந்துபோழ்ந்தியற்றிய தகடுவேய்ந்து வெண்பொச்ல்
 இந்திரன் றிருக்க குரிமெயோடு மிவ்வழி
 வந்திருந்தவண்ணமே அண்ணல்கோயில் வண்ணமே.

  அந்நாளில் இந்திரர் தேசத்தின் ஆதிபாஷையாகும் மகிடபாஷை என்னும் பாலியை வரிவடிவமின்றி ஒலிவடிவமாகவே பேசிவந்தார்கள். அப்போது ஆதிபகவனாகும் புத்தபிரான் ஓதி வைத்த ஆதிவேதமொழி, ஆதிமறைமொழி என்னும் திரிபீட வாக்கியங்களாம் மூவரு மொழிகளை வரிவடிவின்றி ஒலிவடிவ சுருதியாக போதிக்கவும் அதனைக் கேட்போர் சிந்தித்துத் தெளிவடைவதுமாக இருந்தனர். சிலர் கேட்டும் அவரவர்கள் மனதிற் படியாமல் சுருதி மயக்கங்கண்டனர். அதை’ கண்ட புத்தபிரான் சகடபாஷை எனப்படும்  சமஸ்கிருதத்தையும், திராவிட பாஷை என்று அறியப்படும் தழிழையும் வரிவடிவாக இயற்றி ஜினனென்னும் தனது பெயர் பெற்ற மலையில் வரிவடிவால் திரிசீலம், பஞ்சசீலம், அஷ்டசீலம், தசசீலமென்னும் மெய்யறங்களை வரைந்து சகல மக்கள் மனதிலும் பதியச்செய்தார். அதுமட்டுமின்றி இன்னும் அந்த வரிவடிவ பாஷையைத் தான் நிலைநாட்டிவருகின்ற பௌத்த சங்கத்தோர் யாவருக்கும் கற்பித்தார். சத்திய தன்மமானது மேலும் மேலும் பரவுவதற்காக ஜனகர், வாமதேவர், நந்தி, ரோமர், கபிலர், பாணினி முதலானவர்களுக்கு சமஸ்கிருதத்தையும், அகத்தியருக்குத்  திராவிட பாஷையாம் தமிழையும்  கற்பித்து ஜனகரை மகதநாட்டிற்கு வட திசையிலும், அகத்தியரை தென் திசையிலும், திருமூலரை மேற்புறத்திலும், சட்ட முனிவரை கீழ்த் திசையிலும் அனுப்பித் தானும் அந்தந்த இடங்களுக்குச் சென்று அந்த மொழிகளின் வரிவடிவங்களை ஊன்றிப் பரவச் செய்து அதன்வழியே மெய் அறமாம் புத்ததன்மத்தையும் பரவச்செய்தார்.
 வீரசோழியப் பதிப்புரை

 சிவஞான யோகியார்

 இருமொழிக்குங் கண்ணுதலார் முதல் குரவ ரியல் வாய்ப்ப
 இருமொழியும் வழிபடுத்தார் முனிவேந்த ரிசை பரப்பும்
 இருமொழியு மான்றவரே தழீஇனாரென்றாலிங்
 கிருமொழியு நிகரென்னு மிதற்கைய முளதேயோ.

 கொல்லாற்று
 திடமுடைய மும்மொழியாந் திரிபிடக நிறைவிற்காய்
 வடமொழியை பாணினிக்கு வகுத்தருளியதற் கி?ணயாத்
 தொடர்புடையத்தென்மொழியை யுலகமெலாந் தொழுதேத்த
 குடமுநிக்கு வற்புருத்தார் கொல்லாற்றுபாகர்.

 முன்கலை திவாகரம்
 வடநூற்காசன் றென்றமிழ்க் கவிஞன்
 கவியாங்கேற்று முபயக்கவி புலவன்
 செயுகுணத்தம்பற் கிழவோன் சேந்த
 னறிவுகரியாக தெரிசொற் றிவாகரத்து
 முதலாவது தெய்வப்பெயர் தொகுதி.

 வீரசோழியம்
 பாயிரம்
 ஆயுங்குணத்தவ லோகிதன்பக்கல் அகத்தியன்கேட்
 டேயும்பவனிக் கியம்பியதண்ட மிழீங்குரைக்க
 நீயுமு?ளயோவெனிற் கருடன்சென்ற நீள்விசும்பி
 லீயும்பரக்கு மிதற்கென்கொலோ சொல்லுமேந்திழையே

 தொல்காப்பியம்
 மயங்கா மரபினெழுத்து முறைகாட்டி
 மங்குநீர் வரைப்பி னைந்திரர்.

 சிலப்பதிகாரம்
 கண்களி மயக்கத்துக் காதலோடிருந்த
 தண்டமிழாசான் சாத்தனிஃதுரைக்கு

 பதஞ்சலியார் ஞானம்
 வசனசக்தி கபிலாதி மாமுனிவர் மகிதான ஜனகாதியும்
 வாமரோம முனிநந்தி தேவன் வடபாஷையோதினர்கள் வண்மெயே
 மேருலாவுவட வீதிதோருமுயர் வேதஞான ஜனகாதியர்
மேலைவீதிதிரு மூலவர்க்கமிக வேயிருந்து விளையாடினார்
பாருங்கீழ்திசையி லேயிருந்து தமிழ் பாஷையோதினன் அகத்தியன்
( தொடரும் ) 

Wednesday, November 28, 2012

பண்டிகைகள் : அயோத்திதாசப் பண்டிதர் விளக்கம்


தமிழ்நாடில் கொண்டாடப்படும் பல்வேறு பண்டிகைகள் குறித்து அயோத்திதாசப் பண்டிதர் கூறியிருக்கும் விளக்கம்

ஸ்ரீ அம்பிகையம்மன் பண்டிகை

(‘‘ஆடி மாதம் பௌர்ணமி அல்லது ஓர் ஆதிவாரத்தில் கொண்டாடப்படுவது’’)
1. இவ்வம்மன் குடிகளுக்குற்ற மாறியென்னுங் கொடுநோய் விலக்கத் தாமிருந்த வேம்புமர இலை முதலியதால் மாறியை யாற்றி ஆரோக்கியத்தை யளித்தவளாதலின் ‘‘மாறியாற்றாள், ஆரோக்கியநாயகி’’ என்ற சிறப்புப்பெயர் பெற்றதுடன்; ஆத்திச்சுவடி, குன்றைவேந்தன், மூதுரை முதலிய நூற்களைக் கற்பித்து ஔவையாரென்ற பெயரும் பெற்றார். சிலர் மாரி, மாயியென்றும்; சிலர், எங்கள் சாமியின் மனைவியென்றும், புகழ்ந்து மிகழ்ந்து மிருக்கின்றார்கள்.

ஸ்ரீமுருகன் பண்டிகை
(கார்த்திகை மாதம் கொண்டாடப்படுவது)

2. இவருலகோபகாரமாய் மஞ்சளும் அரக்குஞ் சேர்த்து மயில் போன்ற வடிவில் ஓர்ஆகாய கமனஞ்செய்துதவினார். அக்கமனம் மஞ்ஞை எனப்படும். ஒருசாராரிவரை எங்கள் சாமியின் படைக்குச் சேனாதிபதியெனவும், சாமியின் புத்திரனெனவும் புகழ்ந்து, பிறப்பு முதலியவைகளைப் பிறரிகழ வைத்திருக்கின்றார்கள்.

ஸ்ரீமாபலியன் பண்டிகை 
(‘‘புரட்டாசி மாதம் அமரவாசியில் கொண்டாடப்படுவது’’)

(மாளிய அமரவாசி) இது மாபலி அமரவாசியாகும்
3. இவர் திருவேங்கிடகிரியில் பூர்வவேதாந்திகள் தங்கி அறமளிக்கத் தக்க வியாரங்களை ஸ்தாபித்து; புத்ததர்ம ஒழுக்கப்படி சிரமுண்டிதமும், மஞ்சளாடையுமேற்று சங்கஞ்சார்ந்து தர்மாபிவிர்த்திக் காவலனாய் விளங்கி புத்ததர்ம (வாயில் காப்போன்) வழிகாட்டி யென்ற பெயர் பெற்றார். ஒருசார்பார்நெய்திருடியபெருச்சாளி யிவரென்றும், மற்றொரு சார்பார், எங்கள் சாமியின் வீட்டுவாசலில் காத்திருந்தாரென்றும் (சேவகன்) எங்கள் தேவனே யிவரைக் கொலைச்செய்தாரென்றும், உயர்த்தியுந் தாழ்த்தியு மிருக்கின்றார்கள்.
இத்தேவர்களைப்போலவே, இராகுலர், திருவள்ளுவர் முதலியவர்களுமாகுவரெனினும் அவர்களினாட்கள் முதலியவற்றை விளக்கினால் விரியுமென்றஞ்சி நிறுத்தப்பெற்றது.

குறிப்பு : இங்கெடுத்தோதிய தேவர்களின் மெய்ச்சரித்திரங்களெல்லாம், பொய்ச்சரித்திரங்களில் மாற்றிக் கூட்டப்பெற்றிருப்பது, பௌத்த சங்கங்கட்கன்றி யேனையோர்க்கு மனநோக்காடாகா. அதேனெனில், தேவேந்திரன் பெயரும், வேதமும், குருக்களும், கோவில்களும், அரசர்களும், குடிகளுங்கெட, பலபொய்ச் சரித்திரங்களை யெழுதிவிட்டவாறே, புத்தகுருவுக்குப்பின் விளங்கிய அடியார்களின் சரித்திரங்களையும் பல தூஷணமொழியால் இழிவுபடுத்திவிட்டார்கள். ஆகையால், யதார்த்த வேதாந்திகள் மூலமாய் நடத்தும் சுதேஸதெய்வ (புத்த) சங்கஞ்சார்ந்து மெய்ப்பொருளறிய பௌத்த தூதர்கள் வேண்டுகின்றோம்.