Friday, May 6, 2011

ஒரு சொல்




மழை ஓய்ந்து நீர்வடிந்த நிலத்திலிருந்து
மண்புழு ஒன்றை 
அறுந்துவிடாமல் உருவி எடுப்பதுபோல
எடுக்கிறேன் ஒரு சொல்லை

ஒரு சொல்லை வைத்துக்கொண்டு 
என்ன செய்வது? எனத் 
திகைக்கும்போது
ஒரு சொல்லால் உலகையே வாங்கலாம் 
என்கிறாய்

அந்த சொல் 
’தண்ணீர்’ என்றால் பலரின் 
தாகம் தீரும்
அது ‘உணவு’ என்றால் 
பசியை ஆற்றும்
‘புரட்சி’ என்றால் சுதந்திரம் கிடைக்கும்
உன்னிடம் இருப்பது என்ன சொல் எனக் கேட்கிறாய்

பிசுபிசுப்போடு நாவில் புரளும் அந்த சொல்லை 
உச்சரித்துப் பார்க்கிறேன்

ஏன் சிரித்துவிட்டுப் போகிறாய்?

1 comment:

  1. ஒரு சொல்லின் பெருமையினை கவிதையில் ‘ தண்ணீரினை வர்ணனையாக காட்டி விளக்கியுள்ளீர்கள்.

    ReplyDelete