Wednesday, February 1, 2012

ரவிக்குமார் கவிதை




புத்தகங்களில் இருந்த மரங்களைக்கூடப் 
பிடுங்கியெறிந்துவிட்டது காற்று 
பாவம் குழந்தைகள்
பாடப்புத்தகங்களின்
ஒவ்வொரு பக்கத்திலும் சாய்ந்துகிடந்தன 
பலப்பல விருட்சங்கள்
தென்னை வாழை பலா வேம்பு 
ஆல் அரசு என ஆயிரம் வகைகள் 


திகைத்த குழந்தைகள்  
பெற்றோரை அழைத்தனர் 
அவர்களுக்கோ ஆயிரம் வேலை
மரங்கள் இல்லாத புத்தகங்கள்
சுமப்பதற்கு சுளுவாகத்தானே இருக்கும் 
என்றொரு நினைப்பு 

குழந்தைகளுக்குத்தான் தெரியும் 
மரங்கள் இல்லாத புத்தகங்களில்
பறவைகளும் இருக்காது என்பது 
பறவைகள் இல்லாதுபோனால் 
வானமும் இருக்காது
வானம் இல்லாவிட்டால் 
மேகமும் இருக்காது 
அப்புறம் 
நிலா எங்கிருக்கும்
சூரியன் எங்கிருக்கும்
நட்சத்திரங்கள் எங்கு வசிக்கும் 

கவலையோடு புத்தகங்களைப் புரட்டுகிறார்கள்
குழந்தைகள் 
உதிரும் சருகுகள் 
ஊரெங்கும் பறக்கின்றன 

No comments:

Post a Comment