Monday, February 13, 2012

முதுபெரும் தமிழ் எழுத்தாளர் ஏ.ஆர்.இராஜாமணி காலமானார் - பேராசிரியர் நாச்சிமுத்து


இன்று ( 13.02.2012) அதி காலை தில்லியில் வாழ்ந்து வந்த முதுபெரும் தமிழ் எழுத்தாளர் ஏ.ஆர்.இராஜாமணி காலமானார்,தனியாகவே வாழ்நாள் முழுதும் வாழ்ந்து வந்த அவர் எல்லா வகையிலும் துன்பம் அனுபவித்து வந்தாலும் மானத்தோடு வாழ்ந்தவர்.அவர் எழுத்திலே ஓடும் நகைச்சுவையும் சீற்றமும் நம்மை வாட்டுவதற்குக் காரணம் அவர் வாழ்வனுபவம்தான்.'வாழத்தெரியாத' அவருக்கு யாராவது உண்டா எனத் தெரியவில்லை.இறந்தபோது சான்றிதழ் வாங்க அவர் தந்தை பெயரைச் சொல்லக்கூடத் தெரிந்த ஆளில்லை.
வடக்குவாசல் பென்னேஸ்வரன் அவரைப் பார்த்துக்கொண்டதோடு அவருக்கு ஈமத்தீயையும் ஊட்டினார். தில்லித் தமிழ்ச் சங்கத்தைத் தன் குடும்பமாகவும் அதன் உறுப்பினர்களைத் தன் உறவினராகவும் அவர் நினைத்திருந்தார்.தில்லித் தமிழ்ச் சங்க அன்பர்களும் அவருடைய சில நண்பர்களும் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர்.தமிழ் எழுத்தால் வாழ்வோம் என்று நினைத்து ஏமாந்தவர்களில் அவர் கடைசி ஆளாக இருக்கட்டும்.இதைப்போல் வாழ்வோர்க்கு உதவ ஏதாவது அறக்கட்டளைகளை மனமுள்ளோரும் பணமுள்ளோரும் நிறுவலாம்.திருக்குறளில் இல்லறத்தான் இயல்புடைய மூவருக்கு உதவுவதோடு துறந்தார்க்கும் துவ்வாதார்க்கும் இறந்தார்க்கும் உதவவேண்டும என்று சொல்லியிருக்கிறார்.அவர்களில் இராஜாமணி கடைசியாகச் சொன்ன பண்புகள் ஒருங்கே கொண்டவர் என்பதனால் அறக்கட்டளைகள் இவர்களைப்போன்றவர்களுக்கு உதவுவதாக அமையவேண்டும்.


--

No comments:

Post a Comment