Monday, January 7, 2013

கல்கி : கொலையா? துர்மரணமா ?

விழுப்புரம் மாவட்டம் வானூரில் ப்ளஸ் ஒன் படித்துவந்த தலித் பெண் கல்கி  அவரது வீட்டின் பின்புறம் இருக்கும் சவுக்குத் தோப்பில் 04.01.2013 அன்று  பகல் மூன்றரை மணியளவில் பிணமாகத் தொங்கியிருக்கிறார் .அவர் தற்கொலை செய்துகொள்ள எந்த முகாந்திரமும் இல்லை. மூன்று மணிவரை வீட்டில் டி வி பார்த்தபடி தனது தம்பியோடு சேர்ந்து படம் வரைந்து கொண்டிருந்த அவர் மின்சாரம் தடை பட்டதால் கொல்லைப்புறம் சென்றுள்ளார். அரை மணி  நேரம் ஆகியும்  அவர் வீடு திரும்பாததால் அவரது அம்மாவும் உறவினர்களும் தேடியுள்ளனர். அப்போது சவுக்குமரம் ஒன்றில் 15 அடி உயரத்தில் அவரது உடல் அவரது துப்பட்டாவில் தூக்கிடப்பட்டுத் தொங்கிக் கொண்டிருந்திருக்கிறது.

மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றபோது அவர் இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். காவல் துறை அதை சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்திருக்கிறது. அவர் கொல்லப்பட்டிருந்தால் நிச்சயம் கொலையாளிகளைக் கண்டுபிடித்துவிடுவோமென விழுப்புரம் எஸ் பி என்னிடம் போனில் உறுதியளித்தார். சந்தேக மரணம் எனப் பதிவு செய்யப்பட்டதைப் பெரும்பாலும் மறந்துவிடுவதே காவல்துறையின் வழக்கம் என நான் அவரிடம் சொன்னேன். புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் அவர் தன மீது நம்பிக்கை வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

கல்கி படித்துவந்த பள்ளி மாணவர்களும் அவரது ஊர்க்காரர்களும் மூன்று நாட்கள் போராடியும் பலன் இல்லாததால் அவரது உடல் அவரது பெற்றோர்களால் அடக்கம் செய்யப்பட்டது.

எந்தவொரு அவச் சொல்லுக்கும் ஆளாகாத கல்கி எவ்வாறு இறந்தார் என்பது புரியாத புதிராக இருக்கிறது. அண்மைக்காலமாகப் பரப்பப்பட்டுவரும் சாதி வெறியின் காரணமாக இப்படி தலித் பெண்களைக் கொலை செய்வதற்கு மர்மக் கும்பல் எதுவும் உருவாகியிருக்கிறதோ என ஐயப்பட வேண்டியிருக்கிறது.

யாருமில்லாதவர்களுக்குத் தெய்வம்தான் துணை என்பார்கள். தலித் மக்களுக்கு அரசாங்கம்தான் கண்கண்ட தெய்வம் .அந்த தெய்வம் நீதி வழங்குமா அவர்களையே பலி கொள்ளுமா என்பதை காலம்தான் சொல்லவேண்டும்.
பள்ளி மாணவி கல்கி 
கடைசியாக கல்கி வரைந்த ஓவியம் 

பிணவறையில் கல்கி 




No comments:

Post a Comment