Wednesday, January 16, 2013

தோழர் உதயகுமார் சிந்தனைக்கு



முற்போக்கு அடையாளம் என்னும் மாங்கனியைப் பெறுவதற்கு விநாயகர் பாணி குறுக்கு வழிகள் சில இருக்கின்றன. அவ்வப்போது அரசியல் தளத்தில் ஊடகங்களால் வளர்த்தெடுக்கப்படும் சில விஷயங்களில் பொது நீரோட்டத்துக்கு இசைவாக நாமும் கருத்து சொல்லிவிட்டால் எளிதாக அந்த முற்போக்கு மாங்கனியைப் பெற்றுவிடலாம். தமிழ்நாட்டில் கூடங்குளம் போராட்டம் அப்படியொரு விஷயமாக மாற்றப்பட்டிருக்கிறது. அதன் பரிமாணங்கள் மறக்கடிக்கப்பட்டு தற்போது நிகழ்காலத் தொன்மமாக அது உருமாறியிருக்கிறது.

தோழர் உதயகுமார் மீது எனக்கு மரியாதை உண்டு .அணு ஆபத்து என்னும் சிக்கலான விஷயத்தை எளிய மக்கள் புரிந்துகொள்ளச் செய்து அவர்கள் தொடர்ந்து போராடும் நிலையை அவர் உருவாக்கியிருக்கிறார். எனினும்  அவர் நமது காலத்தின் பிரச்சனைகள் அனைத்துக்குமான நிவாரணங்களை முன்மொழிவார் என நான் நம்பவில்லை. அது சாத்தியமும் இல்லை . அவரை மிகைப்படப் புகழ்ந்துரைக்கும் கட்டுரைகளை நான் ரசிப்பதில்லை என்பதுபோலவே அவரை இகழ்ந்துரைக்கும் அவதூறுகளையும் நான் ஏற்பதில்லை. அண்மையில் அவரைக் கேவலப்படுத்தி ஒரு கட்டுரை தமிழ் நாளேடு  ஒன்றில் வெளியாகியிருந்தது . அதை வாசித்தபோது வருத்தமாக இருந்தது. அதைவிடவும் வருத்தமான அனுபவம் மின்னஞ்சலில் பகிரப்பட்ட விவேகானந்தர் குறித்து உதயகுமார் எழுதிய   கட்டுரையை வாசித்தது .

உதயகுமார் நல்ல போராளி என்பதில் எனக்கு மறுப்பில்லை ஆனால் அவர் நல்ல சிந்தனையாளராக உருவெடுக்க இன்னும் நீண்ட தூரம் பயணப்படவேண்டும் என்பதென் தாழ்மையான கருத்து.பள்ளி மாணவர்களைப் போல விவேகனந்தர் குறித்து கட்டுரை எழுதி அவர் எவருடைய ஆதரவைப் புதிதாகப் பெறப் போகிறார்? விவேகானந்தர் இப்போது மதவாத  அடையாளத்துக்குள் அடைக்கப்படுவதும் இப்போதைய கொண்டாட்டங்களின் பின்னாலிருக்கும் சக்திகள் எவைஎன்பதும் தோழர் உதயகுமாருக்குத் தெரியாதா ? அவர் முன்மொழியும் பச்சைத் தமிழ்த் தேசியம் இதுதானா ?


1 comment:

  1. அவரது பல விசயங்கள் உடன்பாடில்லை என்றாலும் சாதாரண மக்களை மதிக்காமல் பெருந்திட்டங்கள் ஏதாச்சாதிகரமாக நடக்கும் சூழலை இவர் போராட்டங்கள் மாற்றியிருக்கின்றன என்பதற்காக மதிக்கிறேன் அண்ணனை.

    ReplyDelete