Saturday, May 2, 2015

காஸாவில் உறங்குதல் - நஜ்வான் தர்விஷ்


நானும் மக்கள் உறங்குவதைப்போல உறங்குவேன் 
குண்டுகள் பொழியும்போது 
தசை பிளந்ததுபோல் வானம் கிழிபடும்போது
நானும் மக்களைப்போல் கனவுகாண்பேன் 
குண்டுகள் பொழியும்போது:
துரோகங்களைப்பற்றிய கனவுகள் 

நான் நண்பகலில் விழித்தெழுந்து ரேடியோவில் கேட்பேன் 
மக்கள் கேட்கும் கேள்வியை  
குண்டுபோடுவது நின்றுவிட்டதா ?
எத்தனைபேர் செத்தார்கள் ?
  
ஆனால், துயரம் என்னவென்றால் 
மக்களில் இரண்டுவகை இருக்கிறார்கள் :
துயரங்களையும் பாவங்களையும் வீதியில் கொட்டிவிட்டு
தூங்கச் செல்பவர்கள்,
வீதியில் கொட்டப்பட்ட துயரங்களையும், பாவங்களையும்   சேகரித்து 
அவற்றைக்கொண்டு சிலுவையைச் செய்பவர்கள் 
பாபிலோன், காஸா, பெய்ரூட்டின் வீதிகளில்
இன்னும் யாராவது வர இருக்கிறீர்களா ?
இன்னும் யாராவது வர இருக்கிறீர்களா ? 
என்று வழிநெடுகக் கதறியபடி 
அதை இழுத்துச் செல்பவர்கள் 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் 
தெற்கு பெய்ரூட்டில் டஹீயாவின் வீதிகளில் 
நான் இழுத்துச் சென்றேன் 
சிதைந்து கிடக்கும் ஒரு கட்டிடத்தின் அளவுகொண்ட 
சிலுவையை
ஆனால்,இன்று 
ஜெருசலத்தில் சோர்ந்து கிடக்கும் 
மனிதனின் முதுகிலிருக்கும் சிலுவையைத் தூக்கிவிடப்போவது யார் ?  

பூமி என்பது மூன்று ஆணிகள் 
கருணை என்பதொரு சுத்தியல் 
அடியுங்கள், எஜமான்! 
விமானங்களைக்கொண்டு அடியுங்கள் 

வருவதற்கு இன்னும் யாராவது இருக்கிறீர்களா? 

அரபியிலிருந்து ஆங்கிலத்தில் : கரீம் ஜேம்ஸ் அபு ஸெய்த் 
ஆங்கிலத்திலிருந்து தமிழில் : ரவிக்குமார்

No comments:

Post a Comment