Sunday, June 8, 2014

திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி நன்றாகவா இருக்கிறது?


சந்தடி மிகுந்த சாலை, இத்துனூண்டு கடை- 300 சதுர அடி இருக்கலாம்- அதற்குள் நிற்கக்கூட முடியாத நெரிசல். கார்பன் வைத்து பில் போடுகிற முதியவர் அந்தக் கடையின் பழமைக்கு அடையாளம். கால் பிளேட் மட்டன் பிரியாணி 90 ரூபாய். கோயில்களில் தொன்னையில் வைத்துக் கொடுக்கும் பிரசாதத்தின் அளவைவிடக் கொஞ்சம் கூடுதல். அவ்வளவுதான்.


 பார்சல் கட்டும் கவுண்டரில் கிண்ணங்களில் வந்து விழுந்துகொண்டேயிருக்கும் பிரியாணியை கண் சிமிட்டும் நேரத்தில் பொட்டலமாகக் கட்டும் கைகளின் லாவகத்தை ரசிக்கலாம்.  பணம் செலுத்தி பில் வாங்கினாலும் ' லேடீஸ் வெய்ட் பண்றாங்க, இதைக் கொஞ்சம் மொதல்ல கொடுங்க' என்று காரணம் சொல்லிக் கெஞ்சுகிறவர்களுக்கு முன்னுரிமை. 


அவ்வளவு கஷ்டப்பட்டு வாங்கிய பிரியாணியை சூடு மாறாமல் சாப்பிடவேண்டும் என்ற ஆசையில் காரில் ஏசி ஐ நிறுத்திவிட்டுப் பிரித்தேன். இலவச இணைப்பாக கொடுக்கப்பட்ட ரய்த்தாவையும் பிரித்தேன். தலைக் கறி, லிவர் ஆகியவற்றையும் பிரித்து வைத்தேன். பிரியாணியில் நிறைய கறித்துண்டுகள் இருந்தன. ஒரு வாய், இரண்டு வாய்- அதன் சிறப்பு என்ன என்பதைக் கண்டுபிடித்துவிடவேண்டும் என ஒவ்வொரு கவளத்தையும் நிதானமாக சாப்பிட்டுப் பார்த்தேன். தலைக் கறி, ஈரல் எதுவும் சுவையாக இல்லை. உப்பு வேறு தூக்கலாக இருந்தது. பிரியாணியும் என்னை ஈர்க்கவில்லை. 


மசாலா இல்லை. செரிமானம் ஆவதில் பிரச்சனை இல்லை. மற்றபடி தலப்பாகட்டி பிரியாணிக்கென்று எந்த விசேஷமும் இல்லை! 


1 comment:

  1. நீங்கள் எப்போது சாப்பிட்டீற்கள் என்று தெரியவில்லை?. நான் மதுரையில் (1997) இதழியல் படித்துக் கொண்டு இருந்த போது நண்பர் சிட்டுக் குருவி' (செல்லப் பெயர் ) திண்டுக்கலில் இருந்து வரும் போது தை இலையில் தலப்பாக்கட்டியில் பிரியாணி வாங்கி வருவார். பாசுமதி போன்ற உயர்வகை சமாச்சாரகள் இல்லாமல், நம்ம ஊரு நொய்யறிசி போன்று இருக்கும் சீரகச் சம்பா அரிசியில் பிரியாணி பிரமாதமாக இருக்கும். அந்த சுவையே அதற்கான அடையாளைத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    அதே போன்று வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் இருக்கும் அம்மா பிரியாணியும் ருசிக்கக் கூடிய ஒன்றுதான்.

    ReplyDelete