Wednesday, November 18, 2015

இலங்கையில் இரகசிய சித்ரவதைக் கூடம் - ஐ.நா.குழு கண்டுபிடிப்பு


தமிழ் கைதிகளை விடுவிக்க இலங்கை அரசுக்கு 
இந்தியா அழுத்தம் தரவேண்டும்

தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

 இலங்கையில் கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் கடற்படைத் தளத்தில் ரகசிய சித்ரவதைக்கூடம் இருப்பதை ஐ.நா. ஆய்வுக் குழு கண்டறிந்து அம்பலப்படுத்தியுள்ளது. 

இலங்கையில் காணாமல் போனவர்கள் பற்றி ஆய்வு நடத்துவதற்காக மூன்று உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.குழு இலங்கைக்கு வந்து கடந்த சில நாட்களாக ஆய்வு செய்தது.  அப்போது கிழக்கு மாகாணத்தில் இருக்கும் கடற்படைத் தளம் ஒன்றில் இரகசிய சித்ரவதைக்கூடம் இருந்ததை அக்குழு கண்டுபிடித்து அம்பலப்படுத்தியுள்ளது.  இதைப் போன்ற சித்ரவதைக் கூடங்கள் இலங்கையின் ஏனைய பிற பகுதிகளிலும் இருக்கக்கூடும் என்றும் அது தெரிவித்துள்ளது.

இலங்கையில் போர் முடிவுற்றதற்குப் பிறகு ஏராளமான தமிழ் இளைஞர்களும் இளம்பெண்களும் கடத்தப்பட்டு காணாமலடிக்கப்பட்டுள்ளனர்.  அவர்களில் பலர் சித்ரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.  சிலர் இன்னும் இரகசிய இடங்களில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது.  சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்ட மனித உரிமை அமைப்பு ஒன்றின் அறிக்கை இலங்கையில் 50க்கும் மேற்பட்ட இரகசிய சித்ரவதைக் கூடங்கள் இருக்கின்றன என்று தெரிவித்தது.  இப்போது ஐ.நா. குழுவே அதை உறுதிப்படுத்தியிருப்பது ஈழத் தமிழர்களின் அச்சமும் குற்றச்சாட்டும் உண்மைதான் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது.

இலங்கைச் சிறைகளில் சட்டவிரோதமாக அடைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகளை விடுவிக்கச் சொல்லி கடந்த சில நாட்களாக ஈழத் தமிழர்கள் வடக்கு மாகாணத்தில் உண்ணாநிலை போராட்டம் உள்ளிட்ட பல்வேறு அறப்போராட்டங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர். வடக்கு மாகாண முதலமைச்சரும் அதனை ஆதரித்துக் கருத்துத் தெரிவித்துள்ளார்.  இந்நிலையில் சித்ரவதைக்கூடம் பற்றிய ஐ.நா.குழுவின் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இலங்கைச் சிறைகளில் வாடும் தமிழ் கைதிகள் அனைவரையும் உடனடியாக விடுவிக்குமாறு இந்திய அரசு இப்போதாவது அழுத்தம் தர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.  தமிழக அரசும் இது குறித்து இந்திய பிரதமருக்கு அழுத்தம் தர வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment