Friday, November 6, 2015

தமிழ் உரிமைப் போராளி ந. அரணமுறுவல் மறைந்தார் - ரவிக்குமார்



திரு அரணமுறுவல் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியை இன்று காலையில் அறிந்து அதிர்ச்சியுற்றேன். சர்க்கரை நோய் இருந்தபோதிலும் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். இப்படி அகாலத்தில் அவர் வாழ்வு முடியுமென நான் நினைக்கவில்லை. 

1980- 1990 களில் சென்னைக்குச் சென்றால் திருவல்லிக்கேணி பகுதியில் அவரைப்போய்ப் பார்ப்பது வழக்கம். பாமக துவக்கப்பட்ட காலத்தில் அக்கட்சியின்மீது நம்பிக்கை வைத்திருந்தவர்களில் அவரும் ஒருவர். தமிழர் வாழ்வுரிமை மாநாட்டு மலரை அவர்தான் தயாரித்தார். அப்போது சில நாட்கள் நானும் அவரோடு இருந்து மெய்ப்புப் பார்த்தேன். திரு குணா அவர்களின் திராவிடத்தால் வீழ்ந்தோம் நூலை அச்சிட்டதும் அவர்தான். அந்த நேரத்தில் அந்த நூலின் உள்ளடக்கம் குறித்து அவரோடு கடுமையாக விவாதித்திருக்கிறோம். 

நிறப்பிரிகை சார்பில் நாங்கள் நடத்திய புலம்பெயர்ந்த தமிழர் மாநாட்டின் முதல் ஆலோசனைக் கூட்டம் அவர் வீட்டில்தான் நடந்தது. அப்படி பல கூட்டங்கள் அவர் வீட்டில் நடந்ததுண்டு. 

ஈழப் போராளித் தலைவர்கள் பலரோடும் அவருக்கு நெருங்கிய நட்பிருந்தது. அவர்களால் பலனடைந்தவர் அல்ல அவர், அவர்களுக்குப் பயன்பட்டவர். அந்த அனுபவங்களை எழுதுங்கள் என நான் பலமுறை வலியுறுத்தினேன். அப்படி எழுதியிருந்தால் ஈழ விடுதலைப் போராட்டத்தின் பின் தளமாக தமிழகம் இருந்த காலத்து வரலாறு ஓரளவு ஆவணப்படுத்தப்பட்டிருக்கும். 

தனது கருத்துகளில் தெளிவும் அதனால் உறுதியும் கொண்டிருந்தவர். பெயருக்குப் பொருத்தமாக எப்போதும் சிரிப்பு மாறாத முகம். தளராத உழைப்பு. செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தில் பணியாற்றியபோது அடிக்கடி பார்க்கிற வாய்ப்பு இருந்தது. அதன்பின்னர் அவரைப் பார்க்கும் தருணம் வாய்க்கவில்லை. 

அவரது மரணச் செய்தி அறிந்து பேராசிரியர் கல்யாணியிடம் பேசினேன். இறுதி நிகழ்வில் கலந்துகொள்ளத் திட்டமிட்டிருந்தேன். அதற்குச் சற்று நேரத்திலேயே  அன்னை மாரியம்மாள் அவர்களின் மரணச் செய்தி வந்துவிட்டது. 

தமிழ்வழிக் கல்வி, தமிழ் மொழியுரிமை, ஈழ விடுதலை முதலான களங்களில் அவர் போல வேறு எவரும் தொடர்ச்சியாக உழைத்திருக்கமாட்டார்கள். திரு அரணமுறுவல் அவர்களுக்கு எனது அஞ்சலி

No comments:

Post a Comment