Thursday, May 18, 2017

Civility in politics - A round table


Civility in politics என்ற தலைப்பில் The Hindu Centre for Politics and Public Policy அமைப்பும் , அமெரிக்க தூதரகமும் இணைந்து கருத்துப் பரிமாற்றக் கூட்டம் ஒன்றை இன்று ஏற்பாடு செய்திருந்தனர். அதில் பங்கேற்க நான் அழைக்கப்பட்டிருந்தேன். 

அமெரிக்காவைச் சேர்ந்த செனட்டர் டேப் எம் பீட்டர்ஸ் ( குடியரசுக் கட்சி) பிரதிநிதி ஹெலென் எம் கீலி ( ஜனநாயகக் கட்சி ) ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக வந்திருந்தனர். 

பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை, சிபிஐ எம் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ஆர், அதிமுக முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன், திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பூங்கோதை, மனு சுந்தரம், இளைஞர் காங்கிரஸ் யுவராஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொஹிதீன் ஆகியோர் அரசியல் கட்சிகளின் சார்பில் கலந்துகொண்டனர். 

நீதிபதி கே.சந்துரு, முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி, முன்னாள் மாநிலத் தலைமைத்  தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா, முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோரும் பங்கேற்றனர். 

என். ராம் தலைமை வகித்தார். வி.எஸ்.சம்பந்தன் அறிமுகவுரையாற்றினார். 

சுமார் இரண்டரை மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில் பயன்மிக்க கருத்துகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. அரசியலில் கண்ணியமும் நாகரிகமும் குறைந்துவருவது உலகளாவிய போக்காக இருப்பதை எல்லோருமே கவலையோடு சுட்டிக் காட்டினார்கள். 

ஏற்றத் தாழ்வை அங்கீகரிக்கும் சமூக ஒழுங்குக்கும் சமத்துவத்தை உத்தரவாதப்படுத்தும் அரசியலமைப்பு சட்டம் உள்ளிட்ட சட்டங்களுக்கும் இடையே உள்ள முரண்பாடு எப்படி அரசியல் நாகரிகத்துக்கு எதிராக உள்ளது என்பதை நான் சுட்டிக்காட்டினேன். அதிகரித்துவரும் வெறுப்புக் குற்றங்கள் அவற்றைத் தடுப்பதற்கு தனியே சட்டம் எதுவும் இல்லாதது, ஐநா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபோதும் வெறுப்புக் குற்றங்களைத் தடுக்க இந்தியா சட்டம் இயற்றாதது ஆகியவற்றை விவரித்தேன். தற்போது இந்தியாவை அச்சுறுத்தும் வகுப்புவாதம் எப்படி அரசியல் நாகரிகத்துக்கு எதிராக செயல்படுகிறது என்பதை சுட்டிக்காட்டினேன். 

பத்திரிகையாளர்கள் கே.பி.சுனில், விஜயசங்கர், ஆர்.கே, கோலப்பன், அரவிந்தன் ஆகியோரும் வந்திருந்தனர்

Sunday, May 14, 2017

மனிதனுக்கு முன்னால் - கே.சச்சிதானந்தன் தமிழில்: ரவிக்குமார்


மனிதர்கள் பேசத் தொடங்குவதற்கு முன்னால் 
மிருகங்கள் பேசின
மிருகங்களுக்கு முன்னால் மரங்கள் பேசின, மரங்களுக்கு முன்னால் மலைகள் பேசின, மலைகளுக்கு முன்னால் சமுத்திரங்கள் பேசின, சமுத்திரங்களுக்கு முன்னால் ஆகாயம் பேசியது

பிறகு, பேசத் தொடங்கினான் மனிதன், 
அந்த கணத்தில் அற்றுப்போனது அனைத்தின் பேச்சுகளும் 
அவற்றின் மௌனத்தின் மீது உருண்டது மனிதனின் எஃகு போன்ற குரல்

விடியலின்போது நீங்கள் பார்ப்பதில்லையா எல்லாவற்றின்மீதும் படிந்திருக்கும் ரத்தத்தை?

Friday, May 12, 2017

ஃபேஸ் புக் லைவ் மூலம் நூல்கள் அறிமுகம் : ஒரு அறிவிப்பு

 

முக்கியமான தமிழ், ஆங்கில நூல்களை ஃபேஸ் புக் லைவ் மூலம் அறிமுகப்படுத்தி வருகிறேன்.அதைக் காண்பதற்கு நண்பர்கள் காட்டிவரும் ஆர்வம் ஊக்கமளிக்கிறது. 

இனி வாரத்துக்கு இரண்டு நூல்கள் அறிமுகப்படுத்தப்படும். அதன் இரண்டு நிமிட வீடியோ ட்விட்டரிலும் பகிரப்படும்.


Education Census reveals the pathetic condition of Tamilnadu

Shocking!
Education Census reveals the pathetic condition of Tamilnadu 

- Ravikumar 

Tamilnadu has a huge number of illiterate population. More than two Crore people are illiterate. 

In Tamilnadu 122 lakh women are illiterate

Tamilnadu has 81 lakh male illiterates

In Tamilnadu only 7.70% population is graduates

In Tamilnadu total number of people studied  graduate and above is 5457742

In Tamilnadu number of male graduates is 3119342

In Tamilnadu total number of female graduates is 2338400

Sunday, May 7, 2017

மத்திய அரசின் நிலத்தடிநீர் மசோதா: விவசாயிகளின்மீது இன்னொரு தாக்குதல் - ரவிக்குமார்



நிலத்தடி நீர் பயன்பாட்டை முறைப்படுத்துகிறோம் என்ற பெயரில் விவசாயப் பயன்பாட்டுக்கு பம்ப் செட்டுகள் மூலம் எடுக்கப்படும் நிலத்தடி நீருக்குக் கட்டணம் வசூலிக்கும் முயற்சியில் சட்டம் ஒன்றை இயற்றுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கான சட்ட மசோதா இப்போது மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக இன்று இந்து ஆங்கில நாளேட்டில் செய்திக் கட்டுரை ஒன்று வெளியாகியிருக்கிறது. 


மத்திய அரசு கொண்டுவரும் இந்த சட்டம் 14 ஆவது நிதிக்குழு பரிந்துரைகளின் ஒரு அம்சம் ஆகும். 2015 ல் 14 ஆவது நிதிக்குழு அறிக்கை வெளியானபோதே அதில் இடம்பெற்றிருந்த விவசாயிகளுக்கு எதிரான அம்சங்களை நான் சுட்டிக்காட்டி கட்டுரைகளை எழுதினேன். 2015 பிப்ரவரியில் நான் 26.02.2015 அன்று எழுதிய கட்டுரை ஒன்றின் ஒரு பகுதியை இங்கே தருகிறேன்: 


=====

விவசாயிகளுக்கு வேட்டுவைக்கும் 14 ஆவது நிதிக்குழு பரிந்துரைகள் 



14 ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்வதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அந்தப் பரிந்துரைகளில் முக்கியமானவை பொதுமக்கள் பயன்படுத்தும் வசதிகள் தொடர்பான பரிந்துரைகளாகும். பாசனத்துக்குப் பயன்படுத்தப்படும் தண்ணீரையும் அளக்கவேண்டும்; மின் மோட்டார்கள் அனைத்துக்கும் மீட்டர் பொருத்தவேண்டும் என அந்தப் பரிந்துரைகளில் சொல்லப்பட்டிருக்கிறது. 


பரிந்துரை எண் 84 முதல் 92 வரை அதுகுறித்துப் பேசப்பட்டிருக்கிறது. மின்சார நுகர்வு அனைத்துக்கும் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மீட்டர் பொருத்தப்படவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்துக்கு உலை வைப்பதுதவிர வேறல்ல. 


குடிதண்ணீர் மட்டுமின்றி பாசனத்துக்குப் பயன்படுத்தப்படும் தண்ணீரையும் அளப்பதற்கு 2017 ஆம் ஆண்டுக்குள் மீட்டர் பொருத்தவேண்டும். குடிப்பதற்கும், பாசனத்துக்கும் பிற தேவைகளுக்கும் பயன்படுத்தப்படும் தண்ணீர் அனைத்துக்கும் கட்டணத்தை நிர்ணயிப்பதற்கு சுயேச்சையான அமைப்பு ஒன்றை மாநில அரசுகள் உருவாக்கவேண்டும் என அது பரிந்துரை செய்திருக்கிறது. 


இந்தப் பரிந்துரைகளை மத்திய அரசு அப்படியே ஏற்றுக்கொண்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான திருத்த மசோதாவின் அச்சுறுத்தலிலிருந்து விவசாயிகள் விடுபடாத நிலையில் மேலும் அவர்கள்மீது தாக்குதலைத் தொடுத்திருக்கிறது மத்திய அரசு. இந்தப் பரிந்துரைகளைத் தமிழக அரசு ஏற்று நடைமுறைப்படுத்தப் போகிறதா? அல்லது தனது எதிர்ப்பை மத்திய அரசுக்குத் தெரிவிக்கப்போகிறதா? 


 

Thursday, May 4, 2017

மே 5: அயோத்திதாசப் பண்டிதர் ( 1845-1914) நினைவு நாள்



அயோத்திதாசப் பண்டிதர் 1845ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் தேதி சென்னையில் பிறந்தார்.  அவரது தந்தையாரின் பெயர் கந்தசாமி, தாயாரின் பெயர் தெரியவில்லை.  அயோத்திதாசருக்கு அவரது பெற்றோர் இட்ட பெயர் காத்தவராயன் என்பதாகும்.  அவரது தாத்தா கந்தப்பன் என்பவர் ஜார்ஜ் ஆரிங்டன் பிரபு என்பாரிடம் பட்லராகப் பணியாற்றியவர். அவரும் தமிழ் மீது பற்றுக் கொண்டவர்.  அவர்தான் திருக்குறள் மற்றும் நாலடி நானூறு ஆகிய நூல்களின் ஓலைப் பிரதிகளைத் தமது பாதுகாப்பில் வைத்திருந்து எல்லீஸ் துரையிடம் கொடுத்தவர்.  அந்தப் படிகளே பின்னர் அச்சில் வெளியிடப்பட்டன. ஆங்கிலேயரிடம் பணிபுரிந்த காரணத்தால் கந்தப்பனுக்கு ஆங்கிலத்திலும் நல்ல தேர்ச்சி இருந்தது.

சென்னையில் இருந்த காலத்தில் பத்ர தேசிகானந்தர் என்பவரிடமும்,  அயோத்திதாச கவிராஜ பண்டிதர் என்பவரிடமும் தமிழ் மொழியின் இலக்கண, இலக்கியங்களையும் அயோத்திதாசர் ஆழமாகக் கற்றுத் தேர்ந்தார்.  இவை மட்டுமன்றி. சமற்கிருதம், பாலி, ஆங்கிலம் ஆகிய மொழிகளையும் அவர் கற்றுத் தேர்ந்தார்.  தனது இயற்பெயரை விடுத்து  தனது ஆசிரியர்களில் ஒருவரான அயோத்திதாச கவிராஜ பண்டிதரின் பெயரையே தனக்குச் சூட்டிக் கொண்டார்.  இதனிடையே அவரது தந்தையாருடைய பணியின் நிமித்தமாக அயோத்திதாசரின் குடும்பம் குன்னூருக்குக் குடி பெயர்ந்தது.

இளம் வயதினராயிருந்த அயோத்திதாசர் தான் ஈட்டிய அறிவைப் பூட்டி வைத்திருக்கவில்லை.  அதை அரசியலில் துணிவோடு இணைத்து நடைமுறைப் பணிகளில் ஈடுபட்டார்.  குன்னூர் பகுதிகளில் வாழ்ந்திருந்த தோடர் என்னும் பழங்குடியினரிடையே அரசியல் பணிகளை மேற்கொண்டு அவர்களை அமைப்பாக்கிட முயன்றார்.  அந்த சமூகத்துப் பெண் ஒருவரை மணந்து பின்னர் அவரோடு ரங்கூனுக்குச் சென்றார்.  அங்கு ஆண் குழந்தையொன்று பிறந்ததெனவும் அங்கே அவர் மனைவி இறந்து போனதால் அயோத்திதாசர் சென்னைக்குத் திரும்பி வந்தாரெனவும் தி. பெ. கமலநாதன் கூறுகிறார்.  (பார்க்க: போதி _ காலாண்டிதழ் ஏப்ரல் 2005, பக் 15).  ரங்கூனில் பிறந்த மகன் அங்கேயே தங்கிவிட்டாரெனவும் அவர் குறிப்பிடுகின்றார்.  இந்தச் செய்தியைத் தவிர பண்டிதரின் ரங்கூன் வாழ்க்கை குறித்த செய்திகள் நமக்கு அதிகம் கிடைக்கவில்லை.

அயோத்திதாசர் தமது இருபத்தைந்தாவத வயது முதற் கொண்டே (1870) ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் மேம்பாட்டுக்காகப் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டாரெனத் தெரிகிறது. தமிழ் இலக்கியத்தில் அவருக்கிருந்த ஆழ்ந்த புலமை தனித்துவமான தத்துவப் பார்வையொன்றை நோக்கி அவரை இட்டுச் சென்றது. அவரது மெய்யியலின் உள்ளீடாகத் தொடக்ககாலம் முதலே பகுத்தறிவு என்பதுதான் இடம் பெற்றிருந்தது.  கடவுள் நம்பிக்கை, சடங்குகளை உயர்த்திப் பிடித்தல், பார்ப்பன வைதீக மதக் கொள்கை முதலானவற்றை முற்றாக நிராகரித்து மானுட விடுதலைக்கான ஒரு தத்துவமாகவே அவரது பார்வை உருப்பெற்றிருந்தது.

அயோத்திதாசரின் அரசியல் பணிகள் தொடங்குவதற்கு சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பே அதாவது 1779ஆம் ஆண்டிலேயே- _ பறையர் சமூகத்தவர் ஒன்று திரண்டு தமது உரிமைகளுக்காக ஆங்கில அரசிடம் மனு ஒன்றைக் கொடுத்துள்ளனர்.  புனித சார்ச் கோட்டைக்கு அருகில் குடியிருந்த பறையர்களை அங்கிருந்து காலி செய்துவிட்டு வெளியேறும்படி ஆங்கில அரசாங்கம் கூறியபோது, தாமும் தமது முன்னோரும் ஆங்கில அரசுக்குச் செய்த பணிகளைக் குறிப்பிட்டு அப்பகுதியில் தாம் தொடர்ந்து குடியிருக்க இசைவுதரும்படி அம்மனுவில் அந்த மக்கள் கேட்டிருந்தனர்.

சென்னை சார்ச் டவுனில் பறையர் குடியிருந்த பகுதி பெரிய பறைச் சேரி எனவும், பின்னர் அது ப்ளாக் டவுன் எனவும் வழங்கப்பட்டது.  அங்க குடியிருந்தவர்கள் அரசுக்கு வரி கட்ட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது அந்த வரியை ரத்து செய்ய வேண்டுமென 1810ஆம் ஆண்டு அங்கே குடியிருந்த அரசுக்கு வேண்டுகை ஒன்றை அளித்தனர்.

தீண்டாத மக்களின் இந்த அரசியல் நடவடிக்கைகளுக்கும் இந்தியாவில் ஆங்கிலேயர் நிலை பெற்றதற்குமிடையே ஒரு தொடர்பு உள்ளது.  இக் காலகட்டத்தில்தான் இந்தியா வெற்றி கொள்ளப்பட்டது என அம்பேத்கார் குறிப்பிடுகிறார். (தொகுதி 23 பக்கம் 122_123) 1757ஆம் ஆண்டில் நடைபெற்ற பிளாசிப்போர் தொடங்கி 1818இல் நடைபெற்ற கோரேகௌன் போரின் வெற்றியோடு ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் உறுதிப்பட்டது.

"பிளாசிப் போரில் கிளைவுடன் சேர்ந்து போரிட்டவர்கள் துசாத்துகள்.  அவர்கள் தீண்டாத சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.  கோரேகௌன் போரில் பங்குகொண்டு சமர் புரிந்தவர்கள் மகர்கள்.  அவர்களும் தீண்டாத சமூகத்தவரே ஆவார்கள்." என அம்பேதகர் குறிப்பிடுகின்றார்.  ஆங்கிலேயர் ஆட்சிக்குத் தாங்கள் தந்த பலிகளையும் உழைப்பையும் குறிப்பிட்டே தீண்டாத மக்கள் வேண்டுகைகளை அளித்தார்கள்.

இப்படிக் கூட்டாகச் சேர்ந்து கோரிக்கைகளை அளிப்பதே அக்காலத்தில் தீண்டாதாரின் போராட்ட மரபாக இருந்துள்ளது.  ஆனால், அதே காலகட்டத்தில் பிராமணர்கள் தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள அச்சுறுத்துவது, தம்முடைய குழந்தைகளையும் பெண்களையும் கொலை செய்வது, அவர்களை உயிரோடு எரிப்பது முதலான வழிமுறைகளைக் கையாண்டு வந்தனர்.  இந்த வழக்கத்தைத் தடைசெய்து 1795ஆம் ஆண்டு வங்காள ஒழுங்குமுறைச் சட்டம் என்றொரு சட்டத்தை ஆங்கிலேயர் கொண்டு வந்தனர். (அம்பேத்கார் நூல் தொகுதி 23 பக்கம் 165_ 177)

சென்னை மாகாணத்தைச் சேர்ந்த சாதியற்ற தொல்குடி மக்களின் அரசியலில் ஒரு முடுக்கத்தை ஏற்படுத்தியவர் அயோத்திதாசர் ஆவார்.  இந்தியாவில் குடிக்கணக்கெடுப்பு எடுக்கும் வழக்கம் தொடங்கியபோது அதனை ஒரு அரசியல் போராட்டத்துக்கான வாய்ப்பாக அயோத்திதாசர் அடையாளம் கண்டார்.  தீண்டாதாராய் வைக்கப்பட்டிருந்த தொல்குடி மக்களிடம் அரசியல் ரீதியான விழிப்புணர்வை உண்டாக்க, அவர்கள் தம்மை "சாதியற்ற திராவிடர்கள்" எனக் குடிக் கணக்கெடுப்பில் பதிந்து கொள்ள் வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

1881ஆம் ஆண்டுதான் இந்தியாவில் முதன் முதலாக பொதுக்குடிக்கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.  பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்களின் மக்கள் தொகையைக் கண்டறிந்து இந்தியாவின் மொத்த மக்கள் தொகையை அளவிடுவது ஒன்றே அந்த குடிக்கணக்கெடுப்பின்போது சாதிவாரியகக் கணக்கெடுக்குமட் முயற்சி மேற்கொள்ளப் பட்டது.  1901இல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டபோது "உள்ளூர் மக்களின் கருத்துகிணங்க சமூக ரீதியில் வகைப்படுத்துதல்" என்ற புதிய முறையை ஆங்கில அரசு அறிமுகப்படுத்தியது.

1911ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட நான்காவது குடிக்கணக்கெடுப்பின் போதுதான் தீண்டாத மக்கள் எவ்வளவு பேர் இந்த நாட்டில் உள்ளனர் என்று தனியே கண்டறிவதற்கான முயற்சியை அரசாங்கம் மேற்கொண்டது.  இருபதாம் நூற்றாண்டின் முதல் பத்து ஆண்டுகளில்தான் இந்திய அரசியலில் முஸ்லிம்களின் போராட்டம் எழுச்சி பெற்றது.

சட்டமன்றங்களில் தங்களுக்கு வேண்டிய பிரதிநிதித்துவம் வேண்டுமெனக் கேட்டு அவர்கள் போராடி வந்தனர்(அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுதி 5, பக்கம் 229_246) 1909ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி இசுலாமியர்களின் குழு ஒன்று மார்லி பிரபுவைச் சந்தித்து மனு ஒன்றைத் தந்தது.  அதுவரை தீண்டாத மக்களை ஒரு பொருட்டாகவே நினைக்காத சாதி இந்துக்கள் அப்போதுதான் தீண்டாதாரின் மக்கள்தொகை முகாமைத்துவத்தை உணர்ந்தனர்.  தீண்டாத மக்களைத் தனியே கணக்கெடுப்புச் செய்வது ஆங்கில ஆட்சியாளர்களும் இசுலாமியர்களுக்கும் செய்யும் கூட்டுச்சதி என அவர்கள் கூக்குரலிட்டனர்.  ஆனால், அந்த எதி£ப்புகளைத் தாண்டி குடிக்கணக்கெடுப்பு முற்றுப் பெற்றது.  

1911ஆம் ஆண்டு குடிக்கணக்கெடுப்பின் போது இந்துக்களையும், இந்துக்கள் அல்லாதவர்களையும் பிரித்தறிய கேட்கப்பட்ட வினாக்களை ஆதரித்து அயோத்திதாசர் எழுதினார் (31.11.1910), "பாப்பானுக்கு வேறு தெய்வம் பறையனுக்கு வேற தெய்வமென்று பாடித் திரிகின்றவர்களும்; பறையனை பிணத்திற்கு ஒப்பானவன், பிணத்தைக் கண்டாலும் தொட்டாலும் ஸ்நானம் செய்வது போல பறையனைக் கண்டாலும் தொட்டாலும் ஸ்நானம் செய்ய வேண்டுமென்ற மனுசாஸ்திரம் எழுதி வைத்துக் கொண்டிருப்பவர்களும்" சென்சஸ் கமிஷனர் தான் பிளவுபடுத்தப் பார்க்கிறார் என வீண் கூச்சல் போடுவது ஏனென்று கேட்டார்.  "இக்குடிமதிப்புக் காலத்தையே குலச் சிறப்பின் காலமெனக் கருதி சீலம் பெற்று இராஜாங்கத்ததார் நன்னோக்கத்திற்கு இசைந்து நன்மார்க்கமும் நற்சீரும் அடைய வேண்டும்" என்பதே அவரது நோக்கமாக இருந்தது.

நமக்கு இப்போது கிடைக்கிற விவரங்களைக் கொண்டு பார்த்தால் இந்திய அளவில் குடிக்கணக்கெடுப்பின்போது அயோத்திதாசரைப் போல அதனை ஓர் அரசியல் பிரச்சினையாக மாற்றியவர்கள் வேறு யாரும் கிடையாது.  இந்துக்களை விட்டு அகன்ற கிறித்தாவ்களாகவோ, இசுலாமியர்களாகவோ, பௌத்தர்களாகவோ மாறிவிடுங்கள் என தீண்டாத மக்களுக்கு அப்போது அவர் ஆலோசனை கூறினார்.

1881 குடிக்கணக்கெடுப்பின்போது தொடங்கி பின்னர் 1911இல் குடிக்கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட காலம் வரை சாதியற்ற தொல்குடி மக்களின் தனித்துவமான அடையாளத்தைப் பேண அவர் கடுமையாகப் போராடியிருப்பது வியப்பளிக்கிறது.

"இந்துக்களுக்கு மத்தியில் இந்துவல்லாமல் வாழ்பவர்கள் இத்தேசப் பூர்வக்குடிகளேயாகும்.  இக்கூட்டத்தோருக்கு இந்துக்கள் சத்துருக்களேயன்றி மித்துருக்கள் ஆகமாட்டார்கள்.  பெரும்பாலும் இவர்கள் சாதிபேதமற்ற திராவிடர்களும், மதத்தில் பௌத்தாகளுமேயாகும். . . சென்ற குடிமதிப்பெடுத்த காலத்தில் பறையனென்னும் பெயர் ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்குப் பின்னரே தோன்றிய சாதிப் பெயரென்று சென்ற சென்சஸ் கமிஷனர் தன்னுடைய குடிமதிப்பு ரிப்போர்ட்டு புத்தகத்திலும் வெளியிட்டுருக்கின்றார்கள்.  இவைகள் யாவையும் தற்கால சென்சஸ் கமிஷனர் கனந்தங்கிய மிஸ்டர் கேய்ட் அவர்கள் கண்ணுற்று குடிமதிப்பு எடுக்குங்கால் தங்கள் அறியாமையாலும், பயத்தினாலும் இந்துக்களுக்குப் புறம்பான பூர்வ குடிகளில் சிலர் பறையர்களென்றும் கூறுவார்கள்.  அவர்கள் யாவரையும் அப்பெயரால் குறிக்காது 'சாதிப்பேதமற்ற திராவிடர்களென' ஒரே பெயரால் -குறிப்பது உத்தமமும், பிரிட்டிஷ் ஆட்சியில் இந்துக்கள் அடையும் சுதந்திரங்களைச் சாதிபேதமற்ற திராவிடர்டகள் அடையவும் ஏதுவுண்டாகும்," என அயோத்திதாசர் எழுதியுள்ளார் (17.12.1910)

அதுமட்டுமல்லாது கிருத்தவர்களையும், இசுலாமியர்களையும் தவிர்த்து பிறர் அனைவரையும் இந்துக்களென்றே குடிக்கணக்கெடுப்பில் குறிக்க வேண்டும் என்று வடநாட்டினர் சிலர் ஏடுகள் வாயிலாகத் தெரிவித்துவந்த கருத்துக்களையும் கடுமையாக அவர் எதிர்த்துள்ளார்.

ஏசு கிறித்துவின் போதனைகள் கிருத்தவ மதத்தின் மையமாக இருப்பது போல; நபிகளின் போதனைகள் மகம்மதியர்களின் மதநம்பிக்கைக்கு ஆதாரமாக இருப்து போல இந்து மதத்துக்கு எதுவும் கிடையாது என்பதை கேலியோடு அவர் சுட்டிக் காட்டினார்.  "இந்து என்பவனுக்கு தேசமும் கிடையாது.  பெற்று வளர்த்த தந்தையாரும் கிடையாது. அவன் போதித்த தர்மமும் இன்னதென்று கிடையாது.  அவனால் சீர்திருத்திய மக்கள் கூட்டமும் கிடையாது.  அவனது சரித்திரமும் கிடையாது.  இத்தகைய யாதுமற்றோன் மதம் இந்து மதமாம்.  எந்த மதத்திற்கும் சொந்த மில்லாத மாம் இந்து மதமெனில் அவை யாருக்குரியவை? யார் அவற்றைத் தழுவுவார்?. . . . . .  இந்து ஒருவன் உண்டாவென்னில் வேதாந்தி மதம் என்பதும்; வேதாந்தி ஒருவன் உண்டாவென்னில் அத்துவித மதம் என்பதும்; அத்துவிதி என்பவன் ஒருவன் உண்டாவென்னில் விசிட்டாத்துவித மதம் என்பதுமாகிய மாறுதலைக் கூறிவருவார்களன்றி எதற்கும் தக்க ஆதாரங்களைக் கொடுக்கமாட்டார்கள்." என்று குறிப்பிட்ட அயோத்திதாசர், கிருத்தவர்களும் மகமதியர்களும் இந்த தேசத்தாருடன் சகல பாவனைகளிலும் சம்பந்தித்திருக்கின்றார்கள்.  அவர்களை விலக்கச் சொல்வின்றவர்கள் இந்த தேசத்தோருடன் ஒரு சம்பந்தமும் வைத்துக் கொள்ளாத ஆரியர்களை இந்த நாட்டிலிருந்து அகற்ற முன் வருவார்களா? என்றும் கேட்டார்.

ஆக, அயோத்தி தாசரின் திராவிட அடையாளம் என்பது சாதிபேதமற்றது.  தனித்துவமானது. அது, கிறித்தவர்களை, இசுலாமியர்களை சகோதரர்களாகப் பார்க்கின்ற ஓர் அடையாளமுமாகும்.   

தமிழ்ச் சமூகத்துக்கு இன்றும் பயன்படக்கூடிய சிந்தனைகளை முன்வைத்த அயோத்திதாசப் பண்டிதர் 1914 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் நாள் சம்மணமிட்டு அமர்ந்த நிலையில் பௌத்த மந்திரங்களை உச்சரித்தபடி இந்த உலகைத் துறந்தார். இன்று அவரது நினைவு நாள். 

பகவன் புத்தர் துவக்கிய யுத்தத்தில் பங்கேற்போம்! " -ரவிக்குமார்



தலித் மக்கள் இந்த தேசத்தை வளப்படுத்த தமது வியர்வையை வழங்குகிறவர்கள்; தலித் மக்கள் ஒரு கவளம் சோறு தந்தவர்க்கும் நன்றி பாராட்டி தம் உதிரத்தை வழங்குகிறவர்கள்; தலித் மக்கள் தமது தன்மானத்துக்கு ஊறு நேரிட்டால் தம் உயிரையும் கொடுப்பவர்கள்- வழங்கி வாழும் அந்த மக்களின் தொடர்ச்சியாக இந்த விருது வழங்கும் விழா!

இந்த நாள் விடுதலைச் சிறுத்தைகளின் வரலாற்றில் மட்டுமல்ல இந்திய வரலாற்றிலும் முக்கியமான நாள். கடந்த ஆறு நாட்களாக உச்சநீதிமன்றத்தில் நடந்துவந்த வழக்கின் வாதம் நிறைவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆதார் எண்ணுடன் வரி செலுத்துவதற்கான பான் கார்டை இணைப்பதென்று மத்தியில் ஆளும் பாஜக அரசு பிறப்பித்துள்ள ஆணையை எதிர்த்த வழக்கு அது. வெறும் ஆதார் தொடர்பான பிரச்சனை அல்ல இது, இந்தியாவின் அரசியல் போக்கையே ஆட்சி முறையையே மாற்றப்போகிற ஆதாரமாக அமையப்போகிற வழக்கு.

இந்த வழக்கில் இந்தியாவின் தலைமை வழக்குரைஞர் எடுத்து வைத்துள்ள வாதம் இந்த நாடு எந்தத் திசை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறது என்பதற்கு சாட்சியமாக இருக்கிறது. " இந்தியக் குடிமக்களுக்கு அவர்களது உடல்மீதுள்ள அதிகாரம் முழுமையானதல்ல. அவர்களது உடல்மீது அரசாங்கத்துக்கு இருக்கும் அதிகாரத்தை எவராலும் தடுக்கமுடியாது. கை ரேகையை, கண்ணின் கருவிழி ரேகையை மட்டுமல்ல குடிமக்களின் ரத்தத்திலுள்ள  டிஎன்ஏவைக்கூட பதிவுசெய்யப்போகிறோம்" என்று அவர் கூறியிருக்கிறார். நமது உடலும் நமக்கு சொந்தமில்லை என்று சொல்கிறார்கள் இன்றைய ஆட்சியாளர்கள்.

இன்று ஆதார் வழக்கில் அரசை எதிர்த்து வாதங்களை முன்வைத்த வழக்குரைஞர் அர்விந் தத்தார் தனது வாதத்தை முடிக்கும்போது அமெரிக்காவில் நிறபெறிக்கு எதிராக பாடுபட்ட நீதிபதி வில்லியம் டக்ளஸ் அவர்களின் வார்த்தைகளை மேற்கோள் காட்டியிருக்கிறார். " இரவு சட்டென்று கவிந்துவிடுவதில்லை. அதுபோலத்தான் ஒடுக்குமுறையும். எல்லாம் மாறாமல் இருக்கிறது எனத் தோன்றும்போது அந்த இருளுக்கிடையே விடியலின் வெளிச்சக்கீற்று அவ்வப்போது தென்படும். அதில் நாம் சிறிய சிறிய அளவில் நடந்துகொண்டிருக்கும் மாற்றங்களைப் பார்க்கிறோம். நாம் இந்த இருட்டின் பலிகளல்ல என்பதை உணர்கிறோம்" என்று அவர் கூறியிருக்கிறார். அந்த நம்பிக்கையை நாம் வழிமொழிகிறோம்.

வாஜ்பாய் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்றபோது அரசியலமைப்பு சட்டத்தை மாற்றியெழுத முயற்சித்தார்கள். அப்போது குடியரசுத் தலைவராக இருந்த கே.ஆர்.நாராயணன் " இந்த நாட்டில் ஒரு எதிர்ப்புரட்சி நடைபெறுகிறது " என புரட்சியாளர் அம்பேத்கரின் சொற்களைப் பயன்படுத்தி எச்சரித்தார். ஒற்றை மனிதராக நின்று அப்போது வகுப்புவாத செயல்திட்டத்தை முறியடித்தார். இன்று அந்த எதிர்ப்புரட்சி மிக வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தின்மீது ஒரு யுத்தத்தை வகுப்புவாத சக்திகள் தொடுத்திருக்கின்றன. இதை எதிர்த்து நிற்கப்போகும் சக்திகள் யார்? என்ற கேள்வி இப்போது எழுந்திருக்கிறது.

விடுதலைச் சிறுத்தைகள் ஒரு சிறிய கட்சியாக இருக்கலாம், எங்களுக்கு சட்டமன்ற உறுப்பினரோ, நாடாளுமன்ற உறுப்பினரோ இல்லாமல் இருக்கலாம், ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பறிக்கிற வகுப்புவாதத்தை எதிர்க்கவேண்டிய  இந்தக் கடமையை நாங்கள் உணர்ந்திருக்கிறோம்.

வகுப்புவாதத்துக்கு எதிரான இந்த யுத்தம், சமத்துவ உரிமைகளை காப்பதற்கான இந்த யுத்தம் - இது 2600 ஆண்டுகளுக்கு முன்னால் பகவன் புத்தர் தொடுத்த யுத்தம், புரட்சியாளர் அம்பேத்கர் முன்னெடுத்த யுத்தம், சமத்துவத்துக்கான அந்த யுத்தத்தில் தலைவர் எழுச்சித் தமிழர் தலைமையில் உதிரத்தை மட்டுமல்ல உயிரையும் கொடுப்போம். அதற்கு இந்த நாளில் சூளுரை ஏற்போம்! நன்றி,  வணக்கம்!


( 04.05.2017 அன்று சென்னை காமராசர் அரங்கில் விசிக சார்பில் நடைபெற்ற விருதுகள் வழங்கும் விழாவில் ஆற்றிய உரை)

Tuesday, May 2, 2017

சமஸ்கிருத அறிஞர் திரு. வரத தேசிகர் (1923-2017) மறைந்தார் - ரவிக்குமார்



பிரெஞ்சு கீழ்த் திசைப் பள்ளியில் (EFEO) நீண்டகாலம் பணியாற்றி ஓய்வுபெற்ற சமஸ்கிருத அறிஞர் திரு வரத தேசிகர் அவர்கள் இன்று (02.05.2017) காலை 11.30 மணி அளவில் இயற்கை எய்தினார் என்ற துயரச் செய்தியை திரு ழான் லுய்க் செவ்வியார் மின்னஞ்சல் மூலம் தெரிவித்திருக்கிறார். 

கிரந்த யூனிகோடு பிரச்சனை தீவிரமாக இருந்த நேரத்தில் அது தொடர்பாகத் தெளிவு வேண்டி நான்  பாண்டிச்சேரியில் இருக்கும் EFEO நிறுவனத்துக்குச் சென்று திரு.செவ்வியார் அவர்களைச் சந்தித்து அவரிடம் பல்வேறு ஐயங்களையும் எழுப்பி விளக்கங்களைப் பெற்றேன். அப்போது அங்கு பணியாற்றும் சமஸ்கிருத அறிஞர் திரு. வரத தேசிகர் அவர்களைப் பார்த்துப் பேசியது ஒரு அபூர்வமான நிகழ்வு. 

அபோது ஏறத்தாழ தொண்ணூறு வயதை நெருங்கிக்கொண்டிருந்த அவர் தமிழ், சமஸ்கிருதம், கிரந்தம், ஆங்கிலம் என நான்கு மொழிகளில் ஆழ்ந்த புலமை கொண்டவர். கிரந்த ஏட்டுச்சுவடிகளை படிக்கத் தெரிந்த மிகச்சிலரில் ஒருவர். திரு. செவ்வியாரின் உதவியால் அவரது பணிகள் குறித்துக் கேட்டு அறிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

கிரந்த எழுத்துகள் கலந்து எழுதப்பட்ட ஓலைச் சுவடிகளை அவர் என்னிடம் படித்துக் காட்டினார். 

சுவடிகளில் இருப்பவற்றை இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் அச்சில் வெளிக்கொண்டுவந்தபோது கிரந்த எழுத்துகளோடுதான் அச்சிட்டிருக்கிறார்கள். அப்படி 1910 ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்ட நாலாயிரத் திவ்வியப் பிரபந்த நூலை நான் அவரிடம் பார்த்தேன். 

அதுபோன்ற நூல்களைப்  பின்னர் பதிப்பித்தபோது கிரந்த எழுத்துகள் இருந்த இடங்களில் எல்லாம் தேவநாகரி எழுத்துகள்கொண்டு அச்சிடப்பட்டிருக்கிறது. அப்படியான நூல்களையும் அங்கு பார்க்க முடிந்தது. 

இப்படி தேவநாகரி கலந்து அச்சிடுவதைவிட கிரந்த எழுத்துகளைக்கொண்டு அச்சிடுவதே சிறந்தது என திரு. ஜார்ஜ் ஹார்ட் அவர்கள் எழுதியிருப்பது நினைவுக்கு வந்தது.

கிரந்த யூனிகோடு சர்ச்சை குறித்து திரு. வரத தேசிகர் எதுவும் அறிந்திருக்கவில்லை. அவர் தானுண்டு தன் பணியுண்டு என இருந்தார்.

1923 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் பிறந்த திரு வரத தேசிகர்  தனது தந்தையிடமிருந்து கிரந்தம் படிக்கக் கற்றுக்கொண்டார்.கலித்தொகை உள்ளிட்ட சங்க இலக்கிய நூல்களையும்,  ஆழ்வார் பாடல்களையும், மத்தியகால இலக்கியங்கள் சிலவற்றையும்  ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க அவர்  உதவினார். அயல்நாட்டு ஆய்வாளர்கள் பலர் அவரால் தமிழ் ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். 

தம்மிடம் கிரந்தம் கற்றுக்கொள்ள எவரும் முன்வரவில்லையென அவரை சந்தித்தபோது வருத்தத்தோடு என்னிடம் சொன்னார். அவரது அறிவுச்செல்வம் தொடர்ச்சியின்றி அழியப்போவதை எண்ணி அப்போது எனக்குக் கவலையாக  இருந்தது.

இப்போது கிரந்தம் படிக்க யாராவது விரும்பினாலும்கூட கற்றுத்தர அவர் இல்லை. திரு வரத தேசிகருக்கு என் அஞ்சலி