Thursday, December 31, 2015

நிராசை - ரவிக்குமார்

  

ஆசையாகத்தான் இருக்கிறது

இன்னொரு வீடு எரிக்கப்படாது
இன்னொரு கழுத்து அறுக்கப்படாது
இன்னொரு மானம் பறிக்கப்படாது 
இன்னொரு பாதை மறுக்கப்படாது
இன்னொரு கதவு மூடப்படாது
இன்னொரு வாய்ப்பு பறிக்கப்படாது
எனச் சொல்ல 

ஆசையாகத்தான் இருக்கிறது

எல்லோரது குரலும் கேட்கப்படும்
எல்லோரது குறையும் தீர்க்கப்படும்
எல்லோரது காயமும் ஆற்றப்படும் 
எல்லோரது கண்ணீரும் துடைக்கப்படும்
எல்லோரது பேச்சும் மதிக்கப்படும் 
எனச் சொல்ல 

ஆசையாகத்தான் இருக்கிறது 

நிரபராதிகள் இனம் காணப்படுவார்கள்
குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்
அயோக்கியர்கள் அகற்றப்படுவார்கள்
நல்லவர்கள் அங்கீகரிக்கப்படுவார்கள்
எனச் சொல்ல 

எனக்கும்
ஆசையாகத்தான் இருக்கிறது 
இந்த வருடத்தைப்போல இருக்காது 
அடுத்த ஆண்டு 
எனச் சொல்ல

Wednesday, December 30, 2015

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கொல்கத்தா ப்ளீனம்: வரவேற்கத்தக்க முடிவுகள்!


இந்தியாவெங்குமிருக்கும் கட்சியின் முழுநேர ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுவரும் ஊதியத்தை நாட்டில் நிலவிவரும் குறைந்தபட்ச ஊதியத்துக்கு ஏற்ப உயர்த்தி வழங்கிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்திருப்பதாக எக்கனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க செய்தி. 

அக்கட்சியின் உறுப்பினர்களில் சுமார் இருபது விழுக்காடு வரை எஸ்.சி சாதிகளைச் சேர்ந்தவர்கள் இருக்கின்றனர் எனவும் கட்சியின் அதிகாரப் பொறுப்புகளில் அவர்களுக்கு உரிய பங்கினை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதையொட்டி கட்சியின்  மாநிலக் குழுக்கள், மத்தியக் குழு ஆகியவற்றில் சமூகரீதியான பிரதிநிதித்துவம் எப்படி உள்ளது என ப்ளீனத்தில் ஆய்வுசெய்யப்பட்டதாகவும் தோழர் பிரகாஷ் காரத் கூறியதாக இந்து ஆங்கில நாளேட்டில் செய்தி வெளியாகியுள்ளது. இதுவும் வரவேற்கத்தக்கதே! கட்சி துவக்கப்பட்டு அரை நூற்றாண்டைக் கடந்த பின்னரும் அக் கட்சியின் பொலிட்பீரோவில் எஸ்.சி பிரிவினர் ஒருவரும் இடம்பெறவில்லை என அக்கட்சியின் தேசிய மாநாடு நடைபெற்றபோதே ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இடதுசாரிக் கட்சிகளில் தலித்துகளுக்கு உயர் பொறுப்புகள் வழங்கப்பட்டால் அதை சிறப்பாக நிறைவேற்றும் திறமையும் அர்ப்பணிப்பும் அவர்களுக்கு உண்டு என்பதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தேசிய செயலாளராக பொறுப்பு வகிக்கும் தோழர் டி.ராஜா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. 

இடதுசாரிக் கட்சிகள் தமிழ்நாட்டில் தீண்டாமையை ஒழிக்க தனி அமைப்புகளை உருவாக்கியிருப்பதைப்போல எல்லா மாநிலங்களிலும் உருவாக்கவேண்டும். அவர்கள் ஆட்சியிலிருந்த மேற்கு வங்கத்திலும், கேரளாவிலும் அத்தகைய அமைப்புகள் உள்ளனவா? 

ஆண்டின் மரணம் - ரவிக்குமார்



செத்துக்கொண்டிருக்கிறது 
ஒரு ஆண்டு
மணி மணியாக
நொடி நொடியாக 
 
காலத்தைத் தடுத்து நிறுத்தினாலன்றி 
காப்பாற்ற முடியாதெனக்
கைவிரித்துவிட்டார்கள் 

செத்துக்கொண்டிருக்கிறது .... 
கைவிடப்பட்ட ஒரு மூதாட்டியைப்போல
நொடி நொடியாக 

அஸ்தமிக்கும் ஆண்டினருகில் அமர்ந்திருக்கிறேன்
மரணத்தைவிடக் கொடுமையாயிருக்கிறது
உயிர் அடங்குவதைக்
கவனித்துக்கொண்டிருப்பது 

நினைவுகூர்ந்து மகிழ்ச்சியடைய 
எதுவுமில்லை. எல்லாம் துயரம். 

' என் புத்திரர்களைக் கொன்றுவிட்டார்கள்! 
செம்மரக் காட்டில் கட்டிவைத்து சுட்டார்கள்; 
என் மூத்த மகனைக் கொன்றார்கள்
வீட்டுவாசலில் 
நெற்றியில் சுட்டார்கள்; 
மாட்டின்பெயரால் ஒரு மகனைக் கொன்றார்கள்' 

' என் புதல்வியரைக் கொலைசெய்தார்கள் 
இரவில் பகலில் வீட்டில் சாலையில் 
ஓடும் பேருந்தில் ஒதுக்குப்புற கட்டிடத்தில்' 

' எத்தனை பிணங்கள் எத்தனை பிணங்கள்' 
ஆண்டின் வாய் 
தானே அரற்றியது

'இறுதி விருப்பத்தைச் சொல்' எனக் கேட்டேன்
கசியும் விழிகளால் 
சுவரைத் துழாவியது  

அருகில் சென்றேன், 
வண்ணத்துப் பூச்சிகளோடு சிரித்துக்கொண்டிருக்கும்
சிறுமியின் ஓவியம்
அருகில் - 
விருது ஒன்றைத் தாங்கியிருந்த
சட்டகத்தைக் 
கழற்றிய வெற்றிடம்

Tuesday, December 29, 2015

நவீன கன்னட இலக்கியம் தமிழைவிட முன்னே இருக்கிறது- ரவிக்குமார்

கன்னட தலித் இலக்கியத்துக்கும் தமிழ் தலித் இலக்கியத்துக்கும் இடையிலான ஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும் விளக்கமுடியுமா? என கன்னடப் பேராசிரியையும் தமிழருமான மலர்விழி கேட்டார் அதற்கு நான் ஆங்கிலத்தில் அளித்த பதிலின் தமிழாக்கம்:




" இரண்டுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. சொல்லப்போனால் தமிழ் தலித் இலக்கியம் கன்னட தலித் இலக்கியத்துக்கு நிறையவே கடன்பட்டிருக்கிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இங்கே பணியாற்றிக்கொண்டிருந்த பாவண்ணன் எனது வேண்டுகோளின் அடிப்படையில் சித்தலிங்கையாவின் ஊரும் சேரியும், அரவிந்த மாளகத்தியின் கவர்ன்மெண்ட் பிராமணன் ஆகிய சுய சரிதைகளையும், இதோ இந்த அரங்கில் இருக்கிறாரே மொகள்ளி கணேஷ் அவரது பம்பரம் உள்ளிட்ட சிறுகதைகளையும் தமிழில் மொழிபெயர்த்தார். அவற்றை நான் விடியல் பதிப்பகத்தின்மூலம் வெளியிடச் செய்தேன். அந்த சிறுகதைத் தொகுப்புக்கு புதைந்த காற்று என நான்தான்  தலைப்பிட்டேன். நானும் இன்னும் சில நண்பர்களுமாக சேர்ந்து நடத்திய நிறப்பிரிகை இதழின் சார்பாக தலித் இலக்கியச் சிறப்பிதழ் ஒன்றைக் கொண்டுவந்தேன். அதில் சித்தலிங்கையாவின் நீண்ட பேட்டி இடம்பெற்றது. நான் நடத்திய தலித் என்ற இலக்கிய இதழில் தேவனூரு மகாதேவாவின் மிக முக்கியமான படைப்பான குசுமபாலெவின் தமிழ் மொழிபெயர்ப்பைத் தொடராக வெளியிட்டேன். நஞ்சுண்டன் மொழிபெயர்த்தார். 

மராத்தி தலித் இலக்கியத்தைவிட கன்னட தலித் இலக்கியம் தான் தமிழ் தலித் எழுத்தாளர்களுக்கு ஆதர்சமாக இருந்தது. இதை நன்றியோடு கூறிக்கொள்கிறேன். 

கன்னடத்தைப் போலவே தமிழ் தலித் எழுத்தாளர்கள் பெரும்பாலோர் யதார்த்தவாத எழுத்துமுறையையே கையாளுகிறார்கள். அவர்களது சித்திரிப்பு, தொனி போன்றவற்றில்கூட பெரிதாக வேறுபாடு இல்லை. 

ஆனால் தமிழ் தலித் இலக்கியம் வலுவான தத்துவார்த்த பின்னணியைக் கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு கன்னடம், மராத்தி, பஞ்சாபி உள்ளிட்ட மொழிகளில் தெளிவு இருப்பதாகத் தெரியவில்லை. இதற்குக் காரணம் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர்  தலித் இலக்கியம் தொடர்பான விவாதங்களை முன்னெடுத்த என் போன்றோருக்கு இருந்த மார்க்சியப் பின்னணி. மார்க்சிய லெனினிய இயக்கத்தில் செயல்பட்டுக்கொண்டிருந்த நானும் சில தோழர்களும் ரஷ்யாவின் தகர்வுக்குப் பிறகு கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட மாற்றங்களுக்குப் பிறகு அதுவரை சோஷலிசம் குறித்து சொல்லப்பட்டுவந்த கோட்பாடுகளைக் கேள்விக்குட்படுத்தினோம். அந்த சிக்கலை விளங்கிக்கொள்ள மார்க்சிய மைய நீரோட்டத்தால் புறக்கணிக்கப்பட்ட சிந்தனையாளர்களைப் பயின்றோம். 

அந்தப் பின்புலத்திலிருந்து வந்த நாங்கள்தான் தமிழில் தலித் இலக்கியம் குறித்த விவாதங்களை முன்னெடுத்தோம் என்பதால் மிஷெல் ஃ பூக்கோ, எட்வர்ட் செய்த், பூர்தியூ,  முதலானோரின் சிந்தனைகளோடும், ஹெகல், பகூனின் உள்ளிட்ட கார்ல் மார்க்சுக்கு முந்திய சிந்தனைகளோடும் இணைத்து தலித் கருத்தியலை நாங்கள் பேசினோம். அரசு குறித்த அம்பேத்கரது பார்வை பகூனினின் கருத்துகளோடு ஒத்துப்போவதை நான் சுட்டிக் காட்டினேன். இத்தகைய அணுகுமுறை இந்தியாவின் பிற மொழிகளில் இல்லை. இது தமிழ் தலித் இலக்கியத்துக்கு இருக்கும் சிறப்பு. 

கருத்தியல் தளத்தில் இருக்கும் இந்த அனுகூலம் இன்னும் படைப்புகளில் சரிவர வெளிப்படவில்லை. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழில் தலித் இலக்கியம் படைக்கப்படுகிறது. ஆனால் தேவனூரு மகாதேவாவைப் போல ஒரு படைப்பாளி தமிழில் உருவாகவில்லை. அந்தவிதத்தில் கன்னட தலித் இலக்கியம் தமிழைவிட முன்னே நிற்கிறது. 

பொதுவாகவும்கூட நவீன கன்னட இலக்கியம் தமிழைவிட முன்னால்தான் இருக்கிறது. இங்கே வந்து சிறப்பித்த ஞானபீட விருதுபெற்ற எழுத்தாளர் சந்திரசேகர கம்பாரைபோல, யு.ஆர்.அனந்தமூர்த்தியைப்போல, சிவராம காரந்த்தைப்போல ஒருத்தரைக்கூட தமிழில் சொல்லமுடியாது. ஆற்றல்வாய்ந்த கன்னட படைப்பாளிகளுக்கு என் வணக்கம். 

சாகித்ய அகாடமி: பெங்களூர் ஆய்வரங்கம்

நாடுமுழுதும் ' அவார்டு வாப்ஸி' என விருதுகளைத் திருப்பித் தரும் போராட்டம் குறித்துப் பேசிக்கொண்டிருக்கும் சூழலில் தென்னிந்திய மொழிகளில் தலித் இலக்கியம் குறித்துப் பேசுவதற்காக இங்கே நாம் கூடியிருக்கிறோம். இந்த மாநிலத்தில் சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்ட பேராசிரியர் கல்புர்கி அவர்களுக்கு என் அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது படுகொலைக்குக் கண்டனம் தெரிவித்து விருதுகளையும் பதவிகளையும் துறந்த கன்னட தலித் எழுத்தாளர்கள் அரவிந்த மாளகத்திக்கும் தேவனூரு மகாதேவாவுக்கும் என் வணக்கம். 

நான் சபிக்கப்பட்ட ஒரு மாநிலத்திலிருந்து வந்து குற்றவுணர்வோடு உங்கள் முன் நிற்கிறேன். வளமான தொன்மையான இலக்கியப் பாரம்பரியம் கொண்டது தமிழ் என சொல்லக் கேட்டிருப்பீர்கள். அது உண்மைதான். ஆனால் சகிப்பின்மைக்கு எதிராக நாடெங்கும் எழுந்த எதிர்ப்பில் விருதுபெற்ற தமிழ் எழுத்தாளர்கள் ஒருவரும் பங்கேற்கவில்லை. இது தமிழ் இலக்கிய உலகின்மீது நீங்காக் கறையாகப் படிந்து கிடக்கிறது. 

( இன்று - 29.12.2015- சாகித்ய அகாடமி சார்பில் பெங்களூர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆய்வரங்கில் தலித் புனைவுகள் என்ற தலைப்பில் நான் ஆற்றிய ஆங்கில உரையின் துவக்கப் பகுதி ) 


Monday, December 28, 2015

வடியாத கருணை

வடியாத கருணை: தலித் பெண்ணுக்கு ஊடகவியலாளர் தன்யா ராஜேந்திரன் உதவி 

மழை வெள்ளத்தில் தனது குடிசையை இழந்து இரண்டு கைக்குழந்தைகளோடு பரிதவித்த வடக்குமாங்குடி கிராமத்தைச் சேர்ந்த தலித் பெண்ணுக்கு அந்த வீட்டைப் புதுப்பித்துக்கொள்வதற்காக ஊடகவியலாளர் தன்யா ராஜேந்திரன் பத்தாயிரம் ரூபாய் வழங்கியிருக்கிறார். அதே கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி மகாலட்சுமியின் வீடு சேதமடைந்தது பற்றி ட்விட்டர் மூலம் நான் விடுத்த செய்தியை அறிந்து மூன்று பேர் சேர்ந்து ஏற்கனவே 13000/- ரூபாய் அளித்துள்ளனர். அந்த செய்தியைப் பார்த்த தன்யா அவர்கள் அந்த கிராமத்தில் வேறு எவருக்கும் அப்படி உதவி தேவைப்படுகிறதா எனக் கேட்டார். இந்தப் பெண்ணின் விவரங்களைக் கூறினேன். அதன் அடிப்படையில் அவரது வங்கிக் கணக்குக்கு பத்தாயிரம் ரூபாயை அனுப்பியிருக்கிறார். 

வெள்ளத்தின்போது கவிதா முரளிதரன் உள்ளிட்ட அவரது நண்பர்களோடு இணைந்து பல லட்ச ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை அவர் சென்னைக்கும் கடலூர் மாவட்டத்துக்கும் அனுப்பினார். பெங்களூரில் இருந்தபடி தமிழ்நாட்டுக்கு உதவிக்கரம் நீட்டும் தன்யா அவர்களுக்கு நன்றி. 

Saturday, December 26, 2015

புத்தகத்தின் நிறை - ரவிக்குமார்


புத்தகத்தின் நிறை
- ரவிக்குமார்

பொருட்களின் நிறை 
எப்படி வருகிறதென 
அறிவியலார் சொல்லக்கூடும்
ஆனால் 
பொருட்களுக்கான விதி
புத்தகத்துக்குப் பொருந்தாது

புத்தகத்தின் எடையை 
காகிதங்களைக்கொண்டு 
தீர்மானிக்க முடியாது

ஒரு ஊர் சூறையாடப்பட 
ஒரு புத்தகம் காரணமானதுண்டு
ஒரு நாட்டையே 
உடைத்து நொறுக்கிய 
புத்தகங்களை அறிவோம் நாம்

இன்று ஒரு புத்தகம் கிடைத்தது
'இழந்த மாலைகள் 
இழந்த வாழ்வுகள்'
ஈழத் துயரம் கசியும் கவிதைகள்

கையில் எடுத்தபோது 
கனக்கவே இல்லை

படிக்கத் தொடங்கினேன் 
பாரம் தாங்காது 
செத்துக்கொண்டிருக்கிறேன் 

- 26.12.2015 


Monday, December 21, 2015

பெண்களை அர்ச்சகராக நியமிக்கவேண்டும் - ரவிக்குமார்



( 26.09.2008 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் வெளியான கட்டுரையின் ஒரு பகுதி )

2008 செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி நீதிபதி கே.சந்துரு  வழங்கியுள்ள தீர்ப்பு முக்கியமானது (W.P.(MD) No. 9704 of 2007 M.P. (MD) Nos. 1 of 2007 and 1 of 2008). மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவைச் சேர்ந்த நல்லுத்தேவன் பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு துர்க்கையம்மன் கோயிலில் பூசாரியாக பணிபுரிந்து வந்த பின்னியக்காள் என்பவர் தொடுத்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு அது. அந்தக் கோயிலில் பின்னியக்காளின் தந்தை பின்னத்தேவர் என்பவர் பூசாரியாக பணியாற்றி வந்தார். அவர் 2004ஆம் ஆண்டுவாக்கில் நோய்வாய்ப்பட்ட நிலையில் அவரது ஒரே மகளான பின்னியக்காள் கோயில் பூஜைகளை செய்து வந்தார். பின்னத்தேவர் 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இறந்து விட்டார். அவருக்குப் பிறகு தொடர்ந்து பின்னியக்காளே கோயில் பூஜைகளை நடத்தி வந்தார். இந்நிலையில் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் பின்னத்தேவருக்கு ஆண் வாரிசு எவரும் இல்லாத காரணத்தால் பூஜை செய்யும் உரிமை அவரது குடும்பத்தைச் சார்ந்த பிற தாயாதிகளுக்குத்தான் வரவேண்டும். அதை ஒரு பெண் செய்யக்கூடாது என்று பிரச்சனை கிளப்பினார். அதற்கு அந்த ஊர்க்காரர்களும் ஆதரவு தெரிவித்தார்கள். இதனிடையே தாசில்தார் முன்னிலையில் கிராமத்தார்களின் கூட்டம் நடத்தப்பட்டு அந்தக் கோயிலின் பூசாரியாக ஆண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அந்த முடிவு செல்லாது என அறிவித்துத் தன்னையே தொடர்ந்து பூசாரியாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று பின்னியக்காள் நீதிமன்றத்தைக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி திரு. சந்துரு அவர்கள் அந்தக் கோயிலில் பூசாரியாக பெண் ஒருவர் இருக்கக்கூடாது என சட்டம் எதுவும் இல்லை. இந்த விஷயத்தைத் தாசில்தார் தீர்மானிக்க முடியாது. அதுமட்டுமல்லாமல் அந்தக் கோயிலின் வழிபாட்டுக்குரிய தெய்வமாகப் பெண் தெய்வமான துர்க்கையம்மன்தான் உள்ளது. அந்தத் தெய்வத்துக்கு பூஜை செய்ய ஒரு பெண்ணுக்கு அனுமதி மறுப்பது வேடிக்கையாக இருக்கிறது என்று தனது தீர்ப்பில் கூறியிருக்கிறார்.

‘‘அதிர்ஷ்ட வசமாக இந்தக் கோயில் ஆகம விதிகளுக்கு உட்பட்ட ஒன்று அல்ல. இந்தியாவின் தென் பிராந்தியங்களில் அமைந்துள்ள உப பண்பாடுகளைச் சேர்ந்த தெய்வங்கள் மனு ஸ்மிருதியின் தளைகளிலிருந்து விடுபட்டவையாகும். எனவே பெண்ணை வீட்டு வேலைகளோடு மட்டுமே அடக்கி வைத்திருக்கும் நிலைமை இங்கு எழவில்லை. புகழ் பெற்ற தத்துவ அறிஞர் ஒருவர் குறிப்பிட்டதுபோல பெண்கள்தான் இந்த பிரபஞ்சத்தின் பாதியை ஆண்டுகொண்டிருக்கிறார்கள். மனிதகுலம் முன்னேறிச் செல்லவேண்டுமென்றால் அது ஆண், பெண் என்ற இரண்டு கால்களாலும் நடந்தால்தான் சாத்தியம். கடவுளின் சன்னதிகள் ஆண், பெண் பாகுபாடுகளிலிருந்து விடுபட்டு சுதந்திரமானவையாக விளங்க வேண்டும்’’ என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள அவர், பின்னியக்காளே தொடர்ந்தும் அந்தக் கோயிலில் பூசாரியாக பணி புரியலாம் எனக் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டுக் கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தைத் தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர் அவர்கள் கொண்டு வந்திருக்கிறார். அந்தச் சட்டம் குறித்துத் தமிழக சட்டப்பேரவையில் பேசியபோது, ‘‘இந்து அறநிலையத்துறைக்கு உட்படாத கிராமக் கோயில்களுக்கும்கூட இந்தச் சட்டம் பொருந்தக்கூடியதாக அமைக்கப்பட வேண்டும். அதுமட்டுமல்லாமல் பெண்களும் அர்ச்சகராவதற்கு இந்தச் சட்டத்தில் வகை செய்யப்பட வேண்டும்’’ என்று நான் கோரிக்கை விடுத்தேன். இப்போது அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தையேகூட நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருக்கிறது. 

தமிழ்நாட்டில் மடங்கள், சமணக் கோயில்கள் உட்பட இந்து அறநிலையத்துறையின் கீழ் 38,422 கோயில்கள் உள்ளன. அதில் ஆண்டுக்கு பத்து லட்சத்திற்கும் அதிகமாக வருமானம் வருகிற கோயில்கள் 160. பத்தாயிரத்துக்கும் குறைவாக வருமானம் வருகிற கோயில்கள் 34,415 ஆகும். இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் வராத கிராமக்கோயில்கள் எவ்வளவு உள்ளன என்பது துல்லியமாகக் கணக்கிடப்படவில்லை.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழக அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள ஆறு மையங்களில் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் மொத்தம் 207 பேர் பயிற்சி பெற்றுள்ளனர். அவர்களில் நாற்பது பேர் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர்கள், ஐம்பத்தைந்து பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பையும், எண்பத்தெட்டு பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பையும், இருபத்துநான்கு பேர் இதர வகுப்புகளையும் சேர்ந்தவர்கள். அவர்களுள் பெண்கள் எவரும் கிடையாது.

ஆகம விதிகளின்படி பூஜை செய்வது பரம்பரை உரிமையாக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. வேத காலத்தில் பெண்களும் ஆண்களுக்கு சமமாக உரிமை பெற்றிருந்தார்கள் எனச் சொல்லப்பட்டாலும், அதற்குப் பிறகு பெண்களுக்கு வேதங்களைப் படிப்பதற்கான உரிமை மறுக்கப்பட்டது. அதனால் பூஜை செய்கிற உரிமையையும் அவர்கள் இழந்தார்கள். இன்று ஆண்களுக்குச் சமமாக அனைத்துத் துறைகளிலும் அவர்கள் உரிமைகளையும், வாய்ப்புகளையும் பெற்றபோதிலும் மதம் சார்ந்த நிறுவனங்களுக்குள் அவர்கள் பாரபட்சமாகவே நடத்தப்படுகிறார்கள். அதன் ஒரு அடையாளம்தான் பெண்கள் அர்ச்சகராக முடியாது என்ற நிலைமை ஆகும்.

நீதிபதி சந்துரு அவர்கள் அளித்துள்ள இந்தத் தீர்ப்பு நல்லுத்தேவன்பட்டி கிராமத்தில் உள்ள துர்க்கையம்மன் கோயிலுக்கானதுதான் என்றபோதிலும், அதை அனைத்துக் கோயில்களுக்கும் பொருத்திப்பார்க்க முடியும். தென்னிந்தியாவில் உள்ள கோயில்கள் மனுஸ்மிருதியில் இருந்து விடுபட்டவை என்று அவர் கூறியிருப்பது மிகவும் முக்கியமானதொரு கூற்றாகும். தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் இந்தத் தீர்ப்பை தமிழக அரசு எடுத்துக்கூறுவது பயனுள்ளதாய் இருக்கும்.

இன்றைய சூழலில் பாதுகாப்பு போன்ற காரணங்களைச் சொல்லி அரசாங்கங்கள் உருவாக்குகிற சில சட்டங்கள் ஜனநாயகத்தின் எல்லையை சுருக்கிக் கொண்டிருக்கிற நிலையில் இத்தகைய தீர்ப்புகளே அதை விரிவுபடுத்தவும், வலிமையாக்கவும் உதவுகின்றன. நீதிபதி சந்துரு அவர்களே, இப்படியான தீர்ப்புகள் பலவற்றை தொடர்ந்து நீங்கள் வழங்க வேண்டும். இந்திய நீதித்துறையில் புகழ் பெற்று விளங்கிய நீதிபதிகளின் வரிசையில் உங்கள் பெயரும் இடம் பெறுவது தமிழர்களுக்கு, தமிழ் நாட்டுக்குப் பெருமை.

-----------------------------

Sunday, December 20, 2015

நூலகங்களைக் காப்போம்!



வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நூலகங்களில் ஆயிரக் கணக்கான நூல்கள் சேதமடந்துள்ளன. சென்னையில் மட்டும் ஏழு நூலகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆர்வம் உள்ளவர்கள் தனி நபராகவோ அல்லது ஒரு குழுவாகவோ ஏதேனும் ஒரு நூலகத்தைத் தத்தெடுத்துக் கொள்ளலாம். அதற்குக் குறைந்தபட்சம் ஆயிரம் நூல்களை வழங்கலாம். 

எனது வேண்டுகோளை ஏற்று சென்னை அரங்கநாதன் சப்வே வுக்கு அருகிலுள்ள புதுத் தெரு நூலகத்தை சுமார் ஆறு லட்ச ரூபாய் செலவில் புனரமைத்துத்தர அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் (AIBEA) பொதுச்செயலாளர் திரு சி.ஹெச்.வெங்கடாசலம் ஒப்புக்கொண்டிருக்கிறார். 

திருவள்ளூர் மாவட்டத்தில் சேதமுற்ற நூலகங்களுக்கு புத்தக அடுக்குகள் சிலவற்றை வாங்கித்தர பெங்களூரைச் சேர்ந்த திரு நவீன் மெத்தில் என்பவர் முன்வந்திருக்கிறார். 

கேரள மாநிலத்தில் 'கிராமத்துக்கு ஒரு நூலகம்' என்ற திட்டத்தைப் பிரச்சாரம் செய்துவரும் திரு சுஜய் அவர்கள் சென்னையில் சேதமுற்ற நூலகங்களுக்கு நூல்களை சேகரித்துத்தர முன்வந்திருக்கிறார். 

நமது முயற்சியை ஒன் இந்தியா இணைய இதழ் மூலம் அறிந்த போட்டித் தேர்வுகளுக்கான நூல்களை வெளியிட்டுவரும் பதிப்பாளர் திரு சக்திவேல் திங்களன்று முதல் தவணையாக 50 நூல்களைத் தருவதற்கு முன்வந்துள்ளார். 

நாளை (திங்கள் 21.12.2015 ) காலை சுமார் 11.30 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலகக் கட்டிடத்தில் இருக்கும் மாவட்ட நூலக அலுவலரை சந்தித்து முதல் தவணை நூல்களை வழங்கவுள்ளோம். என்னுடன் பத்திரிகையாளர் திரு ஸ்ருதி சாகர் யமுனன், எழுத்தாளர் மருதன், பதிப்பாளர் 'ஆழி' செந்தில்நாதன் ஆகியோரும் இணைந்துகொள்வதாக உறுதியளித்துள்ளனர். 

இந்தத் திட்டத்தில் பங்களிக்க விரும்பும் நண்பர்கள் அங்கே வருமாறு அல்லது தொலைபேசி/ மின்னஞ்சலில் தொடர்புகொள்ளுமாறு வேண்டுகிறேன். 

அன்புடன்
ரவிக்குமார்
ஆசிரியர்,மணற்கேணி 

தொடர்புக்கு 94430 33305 
மின்னஞ்சல் : manarkeni@gmail.com

Friday, December 18, 2015

பிம்பங்களின் அரசியல்- ரவிக்குமார்



வெள்ளம் பாதித்த விருகம்பாக்கம் முதலான சில இடங்களில் தந்தி டிவி ' மக்கள் யார் பக்கம்?' நிகழ்ச்சிக்காக தேர்தலைப் பற்றிக் கேள்வி கேட்டபோது பதில் சொன்னவர்களிடம் தலைகாட்டிய கோபத்தைப் பார்த்தவர்கள் இளையராஜாவின் எதிர்வினையை வேறுவிதமாகப் புரிந்துகொள்ளக்கூடும். 

வெள்ளத்தோடு அதைப்பற்றிய நியூஸ் வேல்யூவும் வடிந்துவிட்டதாகக் கருதிய காட்சி ஊடக காமிராக்கள் தங்களுக்கு எப்போதும் செய்திச் சுரங்கமாக இருக்கும் சினிமா குப்பையை சீய்க்க ஆரம்பித்துவிட்டன. அதன் அடையாளம்தான் சிம்பு- அனிருத் பாடல் பிரச்சனை 

இளையராஜா பதில் சொல்லியிருந்தால் அதில் நியூஸ் வேல்யூ இந்த அளவுக்கு இருந்திருக்காது. அனிருத்தைவிட இளையராஜா மோசம் என்று 'நிரூபித்து'விட்டார்கள் 

கணங்களில் துடித்துக்கொண்டிருக்கும் காட்சி ஊடகப் போட்டியில் பலியிடப்படுகிறது ஊடகவியலாளர்களின் தன்மானம். அவர்களின் அறச் சீற்றம் ஊடக மூலதன அரசியலுக்கு எதிராகவும் திரும்பவேண்டும்.

Thursday, December 17, 2015

அர்ச்சகர் நியமனம்: சன் நியூஸ் விவாத மேடை

அனைத்துசாதியினரும் அர்ச்சகராவதற்கு வகைசெய்யும் தமிழக அரசின் சட்டம் குறித்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு: சன் நியூஸ் விவாதமேடை நிகழ்ச்சியில் நானும் பங்கேற்றேன். 



https://m.youtube.com/watch?v=LOsqVVeOVU8

Wednesday, December 16, 2015

மகளிரையும் அர்ச்சகராக்குக!

மகளிரையும் அர்ச்சகராக்கும் வகையில் சட்டத்  திருத்தம் செய்யவேண்டும் என நான் 2006 ஆம் ஆண்டே சட்டப்பேரவையில் வலியுறுத்தினேன். 

25-7-2006 அன்று தமிழக சட்டப்பேரவையில் திருத்திய வரவு-செலவுத் திட்டம், 2006-2007ன் மீதான பொது விவாதத்தில் கலந்துகொண்டு பேசியதில் ஒரு பகுதி (முற்பகல் 11-10 )

திரு. து. ரவிக்குமார்: ”அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்கின்ற வரலாற்றுச் சிறப்புவாய்ந்த ஒரு சட்டம், இப்பொழுது இயற்றப்பட்டிருக்கின்றது. (மேசையைத் தட்டும் ஒலி) அந்தச் சட்டத்தின் அடிப்படையிலே சாதிப் பாகுபாடு களையப்படுகிறது.  ஆனால், பாலினப் பாகுபாடு களையப்படவில்லை.  அந்தச் சட்டத்திலே பெண்களும் அர்ச்சகராகலாம் என்கின்ற விதியினைச் சேர்த்து, (மேசையைத் தட்டும் ஒலி) மகளிருக்கு, தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவரும் அந்தக் கருவறைகளை நீங்கள் திறந்துவிட வேண்டுமென்று அன்போடு உங்களைக் கேட்டுக்கொள்கின்றேன்.”

அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்குங்கள் என்பது எல்.இளையபெருமாள் கமிட்டியின் பரிந்துரை! - ரவிக்குமார்




பாரம்பரியமாக அர்ச்சகர் நியமனம் செய்யப்படுவதை ஒழித்து கல்வி, பயிற்சி ஆகிய தகுதிகளின் அடிப்படையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்கப்படவேண்டும் என்ற பரிந்துரையை முதலில் வழங்கியவர் மறைந்த தலித் தலைவர்  எல்.இளையபெருமாள் ஆவார். இந்தியாவில் மணடல் கமிஷன் நியமிக்கப்படுவதற்கு முன்னர் மத்திய அரசால் உருவாக்கப்பட்ட கமிஷன் எல்.இளையபெருமாள் தலைமையிலான ஒரு நபர் கமிஷன். committee on untouchability, Economic and Educational Development of the Scheduled Castes என ஆங்கிலத்தில் அழைக்கப்பட்ட அந்தக் குழு பொதுவாக ’இளையபெருமாள் கமிட்டி’ என்றே அழைக்கப்படுகிறது. அந்தக் குழுவின் சார்பில் அவர் இந்தியாவெங்கும் சுற்றுப்பயணம் செய்து தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களின் சமூக கல்வி பொருளாதார மேம்பாட்டுக்கான ஆலோசனைகளை 1969 ஆம் ஆண்டு மத்திய அரசிடம் அறிக்கையாக சமர்ப்பித்தார்.

இளையபெருமாள் கமிட்டியின் அறிக்கையை மத்தியிலிருந்த காங்கிரஸ் அரசு செயல்படுத்தவில்லை என்றபோதிலும் அப்போது தமிழ்நாட்டில் இருந்த திமுக அரசு அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட அர்ச்சகர் நியமனம் குறித்த பரிந்துரையின் முக்கியத்துவத்தைக் கருத்தில்கொண்டு தமிழ்நாடு இந்து சமய அறநிலைய சட்டத்துக்கு திருத்த சட்டம் ஒன்ற 1970 ஆம் ஆண்டு கொண்டுவந்தது. அதை எதிர்த்து அர்ச்சகர்கள்,மடாதிபதிகள் சார்பில் 12 வழக்குகள் தொடுக்கப்பட்டன. பராசரன், பல்கிவாலா என மூத்த வழக்கறிஞர்களை நியமித்து அந்த திருத்த சட்டத்துக்குத் தடைபோட முயன்றார்கள். நீதித்துறை வரலாற்றில் ’சேஷம்மாள் மற்றும் இதரர் எதிர் தமிழக அரசு’ என அந்த வழக்கு அறியப்படுகிறது.

சேஷம்மாள் வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் இளையபெருமாள் கமிட்டியின் பரிந்துரையின் அடிப்படையில் சமூக சீர்திருத்தத்தை மேற்கொள்ளவேண்டும் என்ற நோக்கில்தான் இந்தத் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது (அதை கீழே தந்திருக்கிறேன்)

அர்ச்சகர் நியமனம் குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் இப்போது தீர்ப்பளித்திருக்கும் நிலையில் தலைவர் எல்.இளையபெருமாள் அவர்களை நன்றியோடு நினைவுகூர்வோம்.

சேஷம்மாள் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் பக்கம் 6 ல் இருக்கும் பகுதி இது:

The Principal Act of 1959 was amended in certain respects by the Amendment Act of 1970 which came into, force on January 8, 1971. Amendments were made to sections 55, 56 and 116 of the Principal Act and some consequential provisions were made in view of those amendments. The
Amendment Act was enacted as a step towards social reform on the recommendation of the
Committee on Untouchability, Economic and Educational Development of the Scheduled Castes.

The Statement of Objects and Reasons which are reiterated in the counter-affidavit filed on behalf of
the State of Tamil Nadu is as follows :
 
"In the year 1969 the committee on untouchability, Economic and Educational Development of the Scheduled Castes has suggested in its report that the hereditary
priesthood in the Hindu Society should be abolished, that the system can be replaced by an ecclesiastical Organisation of men possessing the requisite educational qualifications who may be trained in recognised institutions in priesthood and that the line should be open to all candidates irrespective of caste, creed or race. In Tamil Nadu Archakas, Gurukkals and Poojaries are all Ulthurai servants in Hindu temples. The duties of Ulthurai servants relate mainly to the performance of poojas, rituals and other services to the deity, the recitation of mantras, vedas, prabandas, the varams and similar invocations and the performance of duties connected with such performance and recitations. Sections 55 and 56 of the Tamil Nadu Hindu Religious and Charitable, Endowments Act, 1959 (Tamil Nadu Act 22 of 1959) provide for
appointment of office holders and servants in the religious institutions by the trustees by applying the rule of hereditary succession also. As a step towards social reform Hindu temples have already been thrown open to all Hindus irrespective of caste........
 
In the light of the recommendations of the Committee and in view of the decision of this Court in
Gazula Dasaratha Rama Rao v. State of Andhra Pradesh & Ors.(1) and also as a further step towards social reform the Government considered that the here- ditary principle of appointment of all office holders in the Hindu temples should be abolished and accordingly it proposed to amend sections 55, 56 and 116 of the Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Act, 1959 (Tamil Nadu Act XXII of 1959).

Tuesday, December 15, 2015

மழை வெள்ளம்: நூலகங்களைப் புனரமைப்போம்! - ரவிக்குமார்




சென்னையில் பெய்த கனமழையாலும், வெள்ளத்தாலும் பொதுநூலகங்கள் பல மூழ்கிப்போயின. அவற்றை சீர்படுத்தவும் சென்னை, திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் மழையால் சேதமடைந்த நூலகங்களுக்குப் புதிய புத்தகங்களை வழங்கவும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறேன். 

சேதமடைந்த நூலகங்கள்: 

முதல்கட்டமாக இந்த மாவட்டங்களில் சேதமடைந்த நூலகங்களின் பட்டியல் அந்தந்த மாவட்ட நூலக அலுவலர்களின் உதவியோடு தயாரிக்கப்பட்டது. சென்னை புதுத் தெருவில் உள்ள நூலகக் கட்டிடம் முற்றாக சேதமடைந்துள்ளது. சில நூலகங்களில் புத்தகங்களை வைப்பதற்கான அடுக்குகள் தேவைப்படுகின்றன. பாதிக்கப்பட்ட நூலகங்கள் அனைத்துக்கும் நூல்கள் தேவைப்படுகின்றன. 

சுத்தப்படுத்தப்பட்ட நூலகங்கள்: 

சென்னை அசோக்நகர், சிஐடி நகர் நூலகங்கள் சேறும் சகதியும் நிரம்பிக் கிடந்தன. அவற்றை சுத்தம் செய்வதற்கு தன்னார்வலர்கள் தேவை என நான் ட்விட்டரில் விடுத்த வேண்டுகோளைப் பார்த்து பலர் தொடர்புகொண்டனர். எனது வேண்டுகோள் தந்தி தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டது. அதன்மூலமும் பலர் சென்னை மாவட்ட நூலக அலுவலதைத் தொடர்புகொண்டனர். அறுபது தன்னார்வலர்களின் பங்கேற்புடன் இரண்டு நூலகங்களும் சுத்தப்படுத்தப்பட்டு இப்போது செயல்படத் தொடங்கிவிட்டன. 

தேவைப்படும் உதவிகள்: 

சென்னை, திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நூலகங்களுக்கு புத்தக அடுக்குகளும், புதிய புத்தகங்களும் தேவைப்படுகின்றன.  

அறிவுப் பசி போக்குங்கள்: 

மழை வெள்ளப் பாதிப்பை அறிந்து தன்னார்வத்துடன் உணவும் உடைகளும் பிற பொருட்களும் கொடுத்து உதவியவர்கள் தன்னார்வலர்களும் நிறுவனங்களும்தான். வயிற்றுப் பசி போக்கியதைப்போல அறிவுப் பசி போக்குவதற்கு அவர்கள் முன்வரவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். 

தொடர்புக்கு: 

உதவிசெய்ய முன்வருவோர் 94430 33305 என்ற கைபேசியிலோ, manarkeni@gmail.com என்ற மின்னஞ்சலிலோ என்னைத் தொடர்புகொள்ளுமாறு வேண்டுகிறேன்.

அன்புடன்
ரவிக்குமார் 
ஆசிரியர், மணற்கேணி

Sunday, December 13, 2015

பெனடிக்ட் ஆண்டர்ஸன் (1936-2015)காலமானார் - ரவிக்குமார்



தேசியம் குறித்து முக்கியத்துவம் வாய்ந்த கோட்பாட்டை முன்வைத்த சிந்தனையாளர் பெனடிக்ட் ஆண்டர்சன் (1936-2015) இன்று (13.12.2015) காலமானார். அவரது ஆய்வுகளின் மையமாக விளங்கிய இந்தோனேஷியாவில் தங்கியிருக்கும்போது உறக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்தது என நியூயார்க் டைம்ஸ் செய்தி கூறுகிறது. 

" கடந்த இருபது ஆண்டுகளாக மார்க்சியத்தின்மீதான ஈர்ப்பு குறைந்திருக்கிறது என்றபோதிலும் பிரச்சனைகள் முடியாத காரணத்தால் மார்க்சியத்தின் தேவையும் முடிந்துவிடாது" என்று நம்பிக்கை தெரிவித்த மார்க்சியர் அவர். 

" யுத்தத்தின்மூலம் புதிய நாடுகளை வெல்வது சாத்தியமில்லை என்பது நிதர்சனமாகிவிட்டது. இப்போது தேசங்களை அச்சுறுத்துவது அன்னிய நாடுகளல்ல, உள்நாட்டுச் சிதைவுதான்."எனக் குறிப்பிட்ட அவர் " ரஷ்யாவிலும், செக்கோஸ்லேவேக்கியாவிலும் அதுதான் நடந்தது. அது இந்தியாவிலும் நிகழக்கூடும். நாடுகள் இனி பெரிதாக முடியாது, சிறியவையாக மாறுவதே சாத்தியம்" என்று 2009 ஆம் ஆண்டில் நேர்காணல் ஒன்றில் அவர் தெரிவித்திருந்தார். 

தேசியத்தின் உருவாக்கத்துக்கும் அச்சுத் தொழில்நுட்பத்துக்கும் இடையே இருக்கும் தொடர்பை அவர் எடுத்துக்காட்டினார். தேசியம் குறித்த அவரது பார்வை ஆசிய நாடுகளுக்கு அதிலும் குறிப்பாக இந்தியாவுக்கு மிகவும் பொருந்தக்கூடியது. சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகி இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் அவரது உலகப்புகழ்பெற்ற நூலான Imagined Communities தமிழில் எப்போதோ மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தமிழ்ச் சிந்தனையுலகம் அந்த அளவுக்கு நுண்ணுணர்வு கொண்டதாக இல்லை. 

தேசியம் என்ற கருத்தாக்கம் குறுந்தேசிய வெறியாக மாற்றப்பட்டு சீரழிக்கப்படும் இன்றைய சூழலில் அந்த நூலை முன்வைத்து தீவிரமான விவாதங்களை முன்னெடுக்க இனியாவது இடதுசாரிகள் முன்வரவேண்டும். 

Saturday, December 12, 2015

ட்விட்டர் மூலம் வந்த உதவி - ரவிக்குமார்



சிதம்பரத்தை அடுத்த வடக்குமாங்குடியிலிருக்கும் தலித் தெருவைச் சேர்ந்த மூதாட்டி ஒருவரின் குடிசை இந்த மழையில் மிகவும் சேதமடைந்துவிட்டது. அவரது கணவரும் மகன்களும் இறந்துவிட்டனர். அவரது குடிசையோடு அவரைப் படமெடுத்து ட்விட்டரில் பகிர்ந்திருந்தேன். அதைப் பார்த்துவிட்டு அமெரிக்காவிலிருந்து தொடர்புகொண்ட ஒரு தமிழ் இளைஞர் அந்த மூதாட்டியின் குடிசையை சரிசெய்ய தான் உதவ விரும்புவதாகத் தகவல் அனுப்பினார். 


மகாலட்சுமி என்ற அந்த மூதாட்டிக்கு வங்கிக் கணக்கு இருந்தது. அவரது பாஸ் புத்தகத்தைப் படமெடுத்து ட்விட்டரில் அனுப்பினேன். அமெரிக்க இளைஞர் அந்தக் கணக்கில் உடனடியாக மூவாயிரம் ரூபாயை அனுப்பினார். அந்தத் தொகை அவரது கணக்கில் வரவு வைக்கப்பட்டதை படம் எடுத்து ட்விட்டர் மூலமே அனுப்பி வைத்தேன். அந்த இளைஞருக்கு மிகுந்த மன நிறைவு.


நான் எவ்வளவோ வற்புறுத்திக் கேட்டும் அவர் தனது பெயரைத் தெரிவிக்க மறுத்துவிட்டார். அந்த நல்ல மனிதருக்கு என் நன்றி. 

Monday, December 7, 2015

தமிழக வெள்ளம்: இளைஞர்களின் தொண்டு = அரசியல்வாதிகள்மீதான வெறுப்பு



சென்னை, கடலூர் பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இளைஞர்கள் செய்யும் நிவாரணப் பணிகள் அரசாங்கத்தின் தேவையையே மறக்கடித்துவிட்டது. இளைஞர்களின் இந்த அர்ப்பணிப்பில் தார்மீக ஆவேசம் வெளிப்படுவதைக் காண்கிறேன். அது கருணையால் உந்தப்பட்டதல்ல, மாறாக அரசியல்வாதிகள்மீதான கோபத்தால் எழுந்த உணர்வு. 

இளைஞர்கள் மட்டுமல்ல அரசியல் கட்சிகளைச் சாராத பொதுமக்கள் எல்லோரிடமும் இந்தக் கோபம் வெளிப்படுகிறது. உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கட்ஜு சிலநாட்களுக்குமுன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருப்பதைப்போல இந்த அரசியல்/ சமூக அமைப்பை மாற்றியமைக்கிற ஒரு புரட்சிதான் இதற்குத் தீர்வு. 

அரசியல்வாதிகள் இனியும் காலம் தாழ்த்தாமல் சுயபரிசீலனை செய்துகொண்டு ஜனநாயகத்தின் மாண்பைக் காப்பாற்ற முன்வரவேண்டும். 

தனிநபர் துதிக்கும், பிம்ப வழிபாட்டுக்கும் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். 

இலவசங்களாலும், பணத்தாலும் மக்களை ஏமாற்றிவிடலாம் என நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு இனி அரசியலில் இடம் இருக்காது. 

Tuesday, December 1, 2015

2005 ஆம் ஆண்டு பெய்த மழையில் தமிழக அரசு கற்ற பாடம் என்ன? -ரவிக்குமார்



2005 ஆம் ஆண்டு அக்டோபர் இரண்டாவது வாரத்தில் ஆரம்பித்து டிசம்பர் முதல் வாரம் வரை நான்கு கட்டங்களாகப் பெய்த கடும் மழையால் தமிழ்நாடு பாதிக்கப்பட்டது. தூத்துக்குடி தவிர மற்ற மாவட்டங்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டன. அந்த மழை வெள்ளத்தில் 497 பேர் உயிரிழந்தனர். 1520 கால்நடைகள் இறந்தன. தஞ்சாவூர் மாவட்டத்தில்தான் அதிகபட்சமாக 62 பேர் உயிரிழந்தனர். 

2005 ஆம் ஆண்டு மழை வெள்ளத்திலும் அதிகம் பாதிக்கப்பட்டது சென்னைதான். வடகிழக்குப் பருவமழை காலத்தில் சென்னையில் 753.1 மிமீ மழை பெய்யவேண்டும். ஆனால் அந்த ஆண்டில்  சென்னையில் 1984.5 மிமீ மழை பெய்தது. அது 164% அதிகமாகும். அக்டோபர் மாதம் 27,28 ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் 436.90 மிமீ மழை பெய்தது. 

அன்றைக்கு ஆட்சியிலிருந்த அதிமுக அரசு அப்போது மத்தியில் ஆட்சி நடத்திய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசிடம் 13684.16 கோடி ரூபாய் நிதி உதவி கேட்டது. 2.58 லட்சம் டன் அரிசியும் 43200 கிலோ லிட்டர் மண்ணெணையும் கேட்டது. 

மத்திய அரசோ முதல் தவணையாக 500 கோடி அடுத்து 500 கோடி அதன்பின்னர் 808.35 கோடி என மொத்தமாக 1808.35 கோடி நிவாரணம் வழங்கியது. அத்துடன் 2.44 லட்சம் மெட்ரிக் டன் அரிசியும் 21 ஆயிரம் கிலோலிட்டர் மண்ணெண்ணையும் வழங்கப்பட்டது. 

வெள்ளம் பாதித்த பகுதிகளை உள்துறை அமைச்சரும் நிதி அமைச்சரும் ஹெலிகாப்டரில் உடனடியாகப் பார்வையிட்டனர். மத்திய அரசின் அதிகாரிகளைக் கொண்ட குழு இரண்டுமுறை வெள்ளப் பகுதிகளைப் பார்வையிட்டு ஆய்வுசெய்தது. 

2005 ஆண்டில் பெய்த மழையைவிட இப்போது சென்னை, திருவள்ளூர், கடலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெய்துவரும் மழை அதிகம்தான். இன்னும் எத்தனை கட்டங்களாக மழை பொழியும் என்பதை நாம் இப்போது சொல்ல முடியாது. ஆனால் 2005 ஆம் ஆண்டைப்போல இந்த ஆண்டு மழையில் தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்கள் பாதிக்கப்படவில்லை. 

2005 ஆம் ஆண்டு மழை வெள்ள அனுபவத்திலிருந்து தமிழக அரசு ஏதாவது கற்றுக்கொண்டதா? அதை வைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்ததா? தத்தளிக்கும் சென்னையையும் பிற மாவட்டங்களையும் பார்க்கும் மக்களே அதை முடிவுசெய்துகொள்ளட்டும். 

( இந்தப் பதிவில் பயன்படுத்தப்பட்டுள்ள புள்ளி விவரங்கள் தமிழக அரசு வெளியிட்ட Annual Report on Natural Calamities 2005-2006 என்ற அறிக்கையிலிருந்து எடுக்கப்பட்டவை) 

ஏரியில் கட்டிய வீடு மட்டுமா மூழ்கிக் கிடக்கிறது? - ரவிக்குமார்



"ஏரியில் குளங்களில் வீடு கட்டிவிட்டு வெள்ளம் வந்துவிட்டது என்பது சரியா?" என டிவி விவாதங்களில் சில அன்பர்கள் கேட்கிறார்கள். ஏரி, குளம் என்பவை இயற்கையாக உருவானவையா? அவற்றையும் செயற்கையாக மனிதர்கள்தானே உருவாக்கினார்கள்? ஏரி குளத்தைத் தூர்த்து கட்டிய கட்டிடங்கள் அனைத்தும் வெள்ளத்தில் மிதக்கவுமில்லை, மற்ற இடங்களில் கட்டிய வீடுகளை வெள்ளம் சூழாமலும் இல்லை. 

நகரங்களில் உட்கார்ந்துகொண்டு நகரமயம் மோசம் என்பதும், கிராமங்களில் மழையை கொடையாகப் பார்க்கிறார்கள் என்பதும் கிர்ரமங்களை தமிழ்த் திரைப்படங்களில் மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கும் நகரவாசிகள் சிலரின் பாசாங்கு. 

நகரமயம் தவிர்க்க முடியாதது மட்டுமல்ல தவிர்க்கக்கூடாததும் ஆகும். நகரங்களில் இருப்பவர்கள் பிளாட்பாரங்களிலா வாழ முடியும்? அவர்களுக்கு வீடு வேண்டாமா? எல்லோரும் குன்றுகளின்மீதா வீடு கட்டமுடியும்? 

கடல்மீதே கட்டிடம் கட்டி வாழ்கிற காலம் இது. இயற்கை நேசம் என்ற பெயரில் அபத்தமாகப் பேசுவதை நிறுத்துவோம். திட்டமிட்ட நகரமயத்தை வலியுறுத்துவோம். 

மழைக்காலத்திலாவது மது விற்பனையை நிறுத்தக்கூடாதா?



சென்னையிலும்,  மழை வெள்ளத்தால் தொடர்ந்து அல்லல்பட்டுவரும் பிற மாவட்டங்களிலும் மருத்துவமனைகள் திறந்திருக்கின்றனவோ இல்லையோ டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கின்றன; அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கிறதோ இல்லையோ தட்டுப்பாடில்லாமல் மது கிடைக்கிறது. 

குடிமகன்கள் மழைக்காலக் குளிரைப் போக்க அளவுக்கதிகமாக மது அருந்தக்கூடும். அப்படி குடிப்பவர்கள் இப்போது விழுந்து கிடக்க பிளாட்பாரங்கள் கூட இல்லை. விழுந்தால் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழப்பது நிச்சயம். 

தமிழ்நாட்டில் மழை வெள்ளத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை ஏற்கனவே 200 ஐ எட்டிக்கொண்டிருக்கிறது. இப்படி தொடர்ந்துகொண்டிருக்கும் மது விற்பனையால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது. 

தமிழக அரசு மனமிரங்கி டிசம்பர் 5 வரையிலாவது மழை வெள்ள பாதிப்புக்காளாகிவரும் பகுதிகளில் மது விற்பனையை நிறுத்தக்கூடாதா? 

Saturday, November 28, 2015

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்: தமிழக அரசியல் கட்சிகளால் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறதா? -ரவிக்குமார்



காங்கிரஸ் கட்சியில் நடந்துவரும் உட்கட்சி சண்டை மோசமான நிலையைத் தொட்டிருக்கிறது. மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் விஜயதாரணி எம்.எல்.ஏ வைத் தரக்குறைவாகப் பேசியதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மீது வழக்கு பதியப்பட்டிருக்கிறது. விஜயதாரணி தன்னை சாதிப்பெயரைச் சொல்லி அவமதித்ததாக அவர்மீது மகளிர் காங்கிரஸைச் சேர்ந்த ஒருவர் புகார் கொடுத்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. 

உட்கட்சி சண்டை கட்சி அரசியலின் பிரிக்கமுடியாத அங்கமாகிவிட்ட நிலையில் காங்கிரஸில் நடந்துவரும் சண்டைகள் வியப்பளிப்பவை அல்ல. ஆனால் இந்தச் சண்டையில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பயன்படுத்தப்படுவதுதான் நமக்குக் கவலையளிக்கிறது. 

காங்கிரஸில் மட்டுமின்றி திமுகவின் உட்கட்சி சண்டையிலும் இதேபோல் வன்கொடுமைத் தடுப்பு சட்டம் பயன்படுத்தப்பட்டது. மதுரை மாவட்டத்திலும் சேலம் மாவட்டத்திலும் திமுகவினரின் ஒரு பிரிவினர் எதிர்த் தரப்புமீது இப்படித்தான் வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தில் புகார் அளித்தனர். முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டபோது இந்தப் புகாரும் ஒரு காரணமாக சுட்டப்பட்டதை இங்கே நினைவுகூரலாம். 

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை உட்கட்சி சண்டையில் ஆயுதமாகப் பயன்படுத்துவது அந்த சட்டம் குறித்து செய்யப்பட்டுவரும் அவதூறுப் பிரச்சாரத்துக்கு வலுசேர்த்துவிடும். 

வன்கொடுமைத் தடுப்பு திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டு இப்போது மாநிலங்களவையில் நிலுவையில் உள்ளது. அதற்காகத் தமிழ்நாட்டில் திமுகவோ காங்கிரஸோ ஒரு அறிக்கைகூட வெளியிட்டதில்லை. ஆனால் உட்கட்சி சண்டைக்கு மட்டும் அதைப் பயன்படுத்த இக்கட்சியினர் தயங்குவதில்லை. 

கட்சிப் பொறுப்புகளுக்கும் , MLA, MP, உள்ளாட்சி அமைப்புகள் என மக்கள் பிரதிநிதிகளாகவும் தேர்ந்தெடுக்கப்படும் தலித் சமூகத்தினர் அரசியல் கட்சிகளின் தலைமைகளால் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை மனசாட்சி உள்ளவர்கள் உணர்வார்கள். திமுகவில் சத்தியவாணிமுத்துவும், காங்கிரஸில் எல்.இளையபெருமாளும் அதற்குச் சான்றுகள். 

அரசியல் கட்சிகளில் பொறுப்பு வகிக்கும் தலித் சமூகத்தினருக்கு ஒரு வேண்டுகோள்!

நீங்கள் இடம்பெற்றிருக்கும் கட்சிகளில் தலித்  சமூகத்துக்கு உரிய மதிப்பும், பிரதிநிதித்துவமும் கிடைக்கப் பாடுபடுங்கள். அதைச் செய்யமுடியாவிட்டால்கூட பரவாயில்லை இப்படி உட்கட்சி சண்டையில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைத் துஷ்பிரயோகம் செய்ய துணைபோகாதீர்கள். அது தலித் சமூகத்துக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகம் என்பதை உணருங்கள். 

தமிழக அரசியல் கட்சித் தலைவர்களே! 

தலித் மக்களின் பாதுகாப்புக்காக இயற்றப்பட்ட வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை உங்களது சுயநலத்துக்காகப் பயன்படுத்துவதைத் தயவுசெய்து நிறுத்துங்கள்!

Friday, November 27, 2015

அம்பேத்கரும் அரசியலமைப்புச் சட்டமும்:



தந்தி டிவியின் 'ஆயுத எழுத்து' விவாதத்தில் பங்கேற்றேன்
~~~~~~~~~~~~~~~~~~
அரசியலமைப்புச் சட்டம் குறித்த தந்தி டிவியின் ஆயுத எழுத்து விவாதத்தில் இன்று பங்கேற்றேன். அதில் நான் தெரிவித்த சில கருத்துகள்: 

Riddles of Rama and Krishna என்ற அம்பேத்கரின் நூலைத் தடைசெய்யவேண்டுமென்று போராடியவர்கள், மராத்வாடா பல்கலைக்கழகத்துக்கு அம்பேத்கரின் பெயரை சூட்டக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தவர்கள், 2000 ஆவது ஆண்டில் அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தி எழுதுவதற்காகப் பாராளுமன்றத்தில்கூட தீர்மானம் நிறைவேற்றாமல் நிர்வாக ஆணையின் மூலம் வெங்கடாசலையா கமிஷனை அமைத்தவர்கள், இந்தப் பாராளுமன்ற முறையே வேண்டாம், அதிபர் ஆட்சிமுறை வேண்டும் என மாநாட்டில் தீர்மானம் போட்டவர்கள் இன்று அரசியலமைப்புச் சட்ட தினம் கடைபிடிக்கிறார்கள். 

இன்று பிரதமர் ஆற்றிய உரை சிறப்பாக இருந்தது. 

மகராஷ்டிர மாநில அரசு அம்பேத்கரின் பேச்சுகளையும் எழுத்துகளையும் ஆங்கிலத்தில் தொகுப்புகளாக வெளியிட்டுவந்தது. அதை இப்போது நிறுத்திவிட்டார்கள். தற்போது பாஜக அரசுதான் அங்கு உள்ளது. உண்மையிலேயே அம்பேத்கர்மீது அக்கறை இருந்தால் அந்தத் தொகுப்புகளைத் தொடர்ந்து வெளியிட பாஜக நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இட ஒதுக்கீட்டுக்கொள்கையில் மாற்றம் வேண்டும் என்பது உண்மைதான் தனியார் துறைக்கும், இதுவரை இட ஒதுக்கீடு இல்லாத துறைகளுக்கும், மாநிலங்களவை உள்ளிட்ட மேலவைகளுக்கும் இட ஒதுக்கீட்டை விரிவுபடுத்தவேண்டும். அத்தகைய மாற்றம் வரவேண்டும். 

இட ஒதுக்கீட்டுக்கு காலவரம்பு விதிப்பதற்கு முன்பு இட ஒதுக்கீட்டை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும். கூட்டுகிற பெருக்குகிற வேலையைத் தவிர வேறு எந்தப் பதவியிலும் இட ஒதுக்கீடு முழுமையாக நடைமுறையாக்கப்படவில்லை. நாடு சுதந்திரம் அடைந்தபோது அனைவருக்கும் கல்வி கொடுப்பதற்கும்கூடத்தான் பத்து ஆண்டு என கால நிர்ணயம் செய்தார்கள். 65 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது கட்டாயக் கல்வி சட்டம் கொண்டுவந்திருக்கிறார்கள். இத்தனை ஆண்டுகளாக கல்வியறிவைக்கூட தர இயலாத அரசாங்கம் சமத்துவத்தை எப்படி வழங்கப்போகிறது? 1947 ல் நடந்ததைவிட இப்போது தலித்துகள்மீது அதிகமான தாக்குதல்கள் நடக்கின்றன. 

ஹிட்லருடன் பாஜகவுக்கு கருத்தியல்ரீதியில் நெருக்கம், காங்கிரசுக்கு நடைமுறை ரீதியான நெருக்கம். 

அரசியல் சட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளில் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவேண்டும் என்பதும் கூறப்பட்டிருக்கிறது. இரண்டுமுறை ஐந்தாண்டுத் திட்டங்களில் அதற்காக நிதி ஒதுக்கப்பட்டது. காங்கிரஸ் அதை செயல்படுத்தவில்லை. பாஜகவாவது அதைச் செய்ய முன்வரலாம்.

நொபோரு கரஷிமா காலமானார் - இ.அண்ணாமலை

சமூகம் எப்படி இயங்கியது, எப்படி மாறியது என்பது தெரியாமல் அரசியல் வரலாற்றை – ஆட்சி வரலாற்றை- புரிந்துகொள்ள முடியாது என்னும் கொள்கையில் ஆழமான நம்பிக்கை கொண்டவர்.

தமிழகத்தின் மன்னர் ஆட்சிகளைப் பேரரசுகளின் ஆட்சிகளாகப் பார்த்து வரலாறு எழுதிய பழைய தலைமுறை வரலாற்று ஆய்வாளர்களிடமிருந்து வேறுபட்டுத் தமிழக வரலாற்றைப் பார்த்தவர். இன்றைய தமிழ்த் தேசியத்துக்கு உரம் போடும் செய்திச் சுரங்கமாக அவர் தமிழக வரலாற்றைப் பார்க்கவில்லை.

அன்றைய தமிழ்ச் சமூகத்தின் வாழ்முறையை அறிந்துகொள்ளும் செய்திச் சுரங்கமாகவே அவர் கல்வெட்டுகளைப் பார்த்தார்.

அரசர்களின் போர் வெற்றிகளைப் பறைசாற்றும் சாதனமாக மட்டும் அவற்றை அவர் பார்க்கவில்லை.

கல்வெட்டுகளிலிருந்து அரச வெற்றிகள் பற்றி நாம் கேட்கும் உரத்த குரலை மட்டுமல்லாமல், அவற்றிலிருந்து வரும் முனகல்களையும் கேட்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். இந்த முனகல்களில்தான் சாதாரண மக்களின் குரலைக் கேட்கலாம்.

அதே நேரத்தில், தமிழகத்தின் வணிக உறவுகள், கலாச்சார உறவுகள் தூரத்து நாடுகளிலும் நிலைபெற்றிருந்ததை உலகுக்கு எடுத்துச் சொன்னார். சீனாவில் தமிழ்க் கல்வெட்டு இருப்பதைக் கண்டு சொன்னவர் கரஷிமா. அவருடைய ஆய்வு பெரும்பாலும் சோழர் காலத்தைச் சார்ந்தது. ஆனாலும், அது சிங்கநோக்காக சோழருக்கு முந்திய காலத்தையும் பிந்திய காலத்தையும் பார்க்க இன்றியமையாதது. கரஷிமாவின் விஜயநகர ஆட்சி பற்றிய ஆராய்ச்சியில் இதைக் காணலாம்.

Image copyrightsubbarayulu
Image captionநொபோரு கரஷிமா 

தமிழ் மீது காதல் கொண்ட கரஷிமா

இவருடைய ஆராய்ச்சியின் தரவுகள் பெரும்பாலும் கல்வெட்டுகளிலிருந்து வருபவை. தொடர்ந்து கல்வெட்டுகளில் மற்ற ஆய்வாளர்களும் இளம் தலைமுறை ஆய்வாளர்களும் ஈடுபடப் பல தரவுகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார் கரஷிமா. இவற்றைப் பயன்படுத்தாமல் செய்யும் எந்தத் தமிழக வரலாற்று ஆராய்ச்சியும் மேலோட்டமானதாகவே இருக்கும்.

கரஷிமா தமிழ்க் கலாச்சாரத்தின்மீதும் மக்களின் மீதும் காதல் கொண்டவர். தமிழ்க் கலாச்சாரத்தைப் பற்றித் தன்னுடைய ஜப்பானிய மாணவர்களுக்காக ஒரு ஆவணப்படம் எடுத்திருக்கிறார். இந்தப் படம் தமிழ்ப்படுத்தப்பட்டுத் தமிழர்களின் பார்வைக்குக் கொண்டுவரப்படவேண்டும்.

கரஷிமா உலகப் புகழ்பெற்ற டோக்கியோ பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி ஒய்வு பெற்றவர். அந்தத் துறையில் தென்னிந்திய வரலாற்றைப் படிக்க இடம் தேடித் தந்தவர். இந்த ஆராய்ச்சிக்குப் பல ஜப்பானிய மாணவர்களை உருவாக்கியவர், ஐரோப்பா, அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் பெயர்போன தென்னிந்திய ஆய்வாளர்கள் பலர் உண்டு. அவர்களின் செல்வாக்கு இந்தியாவில் உள்ள வரலாற்று அறிஞர்களிடம் அதிகம், அந்த மேல்நாட்டு அறிஞர்களின் ஆராய்ச்சிப் போக்கில் கரஷிமாவின் அணுகுமுறையின் தாக்கத்தைக் காணலாம். இந்தத் தாக்கம் தமிழ் நாட்டு வரலாற்று அறிஞர்களிடமும் நேரடியாக ஏற்பட வேண்டும்.

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத் தலைவர்

கரஷிமா உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக இருந்தபோது நான் அதன் செயலாளாராக இருந்தேன். அப்போது அவரோடு நெருங்கிப் பழகியிருக்கிறேன். அவர் மனம் செயல்படும் விதம் தெரியும். தஞ்சை மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய பிறகு அடுத்த மாநாட்டை நடத்தக் காலம் தாழ்த்தியதற்கு அவரிடம் வலுவான காரணங்கள் இருந்தது எனக்குத் தெரியும். உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் எதிர்காலம் பற்றிச் சில சிந்தனைகள் அவரிடம் இருந்தன. தமிழ் ஆய்வை இக்காலத் தமிழ் அரசியலிலிருந்து பிரிப்பது அவற்றில் ஒன்று. அதையே அவருடைய வாழ்க்கைச் செய்தியாக நாம் கொள்ளலாம்.

கரஷிமா என்னுடைய அறிவுலக நண்பர் மட்டுமல்ல; குடும்ப நண்பரும்கூட. அவரை நான் கடைசியாக 2013 டிசம்பரில் டோக்கியோவில் அவர் வீட்டில் பார்த்தேன். ஜப்பானிய கலாச்சாரமும் தமிழ்க் கலாச்சாரமும் கலந்த வீடு அது. அவருடைய மனைவி தக்காக்கோவோடும் மூன்று மகன்களோடும் கரஷிமாவை இழந்த துயரத்தை பகிர்ந்துகொள்கிறோம்.

(கட்டுரையாளர் - டாக்டர் இ.அண்ணாமலை, வருகைதரு பேராசிரியர், தமிழ்த்துறை, சிகாகோ பல்கலைக்கழகம்)

Thursday, November 26, 2015

நொபோரு கரஷிமா: தமிழக வரலாற்றைத் துலக்கப்படுத்தியவர் - ரவிக்குமார்



வரலாற்றறிஞர் திரு நொபோரு கரஷிமா அவர்கள் இன்று காலமானார். சற்றுமுன் பேராசிரியர் திரு ஒய்.சுப்பராயலு அவர்களிடம் பேசி இதை உறுதிப்படுத்திக்கொண்டேன். " சிலநாட்களாக உடல் நலிவுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்த ஆண்டு இந்தியாவுக்கு வருவதாகக் கூறியிருந்தார்.அதற்குள் இப்படியொரு துயரம் நேர்ந்துவிட்டது" என திரு ஒய்.எஸ் கூறினார். 

சோழர்கால வரலாற்றைக் கல்வெட்டுகளின் துணையோடு துல்லியமாக முன்வைத்ததில் அவரது பங்களிப்பு முக்கியமானது. திரு நொபோரு கரஷிமா அவர்களும் பேராசிரியர் ஒய்.எஸ் அவர்களும் இணைந்து மேற்கொண்ட ஆய்வுகள் தமிழ் வரலாற்றை எழுதுவதில் மிகப்பெரிய தாக்கத்தை நிகழ்த்தியிருப்பதை எவரும் மறுக்கமுடியாது. 

' இந்திய கிராமங்கள் தன்னிறைவுபெற்ற குடியரசுகளாகத் திகழ்கின்றன' என்று மெட்கால்ஃப் கூறியதை வழிமொழிந்துதான் கார்ல் மார்க்ஸ் வரை பல்வேறு அறிஞர்களும் இந்தியாவைப்பற்றிப் பேசினார்கள். அதை சோழர்கால கல்வெட்டுகளை ஆதாரமாகக்கொண்டு நொபோரு கரஷிமா மறுத்தார். 

தமிழ்நாட்டில் தீண்டாமை கடைபிடிக்கப்பட்டதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் ராஜேந்திர சோழன் காலத்திலிருந்துதான் கிடைக்கின்றன என்று அவர் நிறுவினார். தமிழ்நாட்டில் சாதிகளின் வரிசை மாற்றியமைக்கப்பட்டு அதிகாரப் படிநிலை உருவாக்கப்பட்டது அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாதிருந்த  13 ஆம் நூற்றாண்டைச் சுற்றிதான் தான் நடந்தது என்று திருக்கச்சூர் கல்வெட்டுகளை ஆதாரமாகக்கொண்டு அவர் விளக்கினார். 

தமிழக வரலாறு இன்னும் பொய்களாலும் புராணங்களாலும் மூடுண்டே கிடக்கிறது. அறிவியல் அணுகுமுறையோடு தமிழக வரலாற்றை எழுதிய ஒருசிலருள் திரு நொபோரு கரஷிமா முக்கியமானவர். அவரது இழப்பு ஏற்படுத்தும் வெற்றிடத்தை ஈடுசெய்யக்கூடியவர்கள் இங்கே எவருமில்லை என்ற உண்மை அவரது மரணத்தைத் தாங்கமுடியாததாக்குகிறது. திரு கராஷிமா அவர்களுக்கு என் அஞ்சலி!

Wednesday, November 25, 2015

புதிய அரசியலமைப்புச் சட்டம்: திசை மாறிய ஏவுகணை - ரவிக்குமார்


~~~~~~~~~~
( 2007 ஆம் ஆண்டு தமிழக அரசு அரசியலமைப்புச் சட்டத்தைப் புதிதாக எழுதவேண்டும் என ஆளுநர் உரையில் குறிப்பிட்டபோது அதை எதிர்த்து நான் சட்டப்பேரவையில் பேசினேன். இந்தக் கட்டுரையை 21-1-2007 அன்று ஜூனியர் விகடனில் எழுதினேன்) 
~~~~~~~~~~~~~~~~

மாநில அரசு நிறைவேற்றப்போகும் நலத்திட்டங்களின் முன்னறிவிப்பாகவே பெரும்பாலும் ஆளுநர் உரை அமைந்திருக்கும். ஆளுநர் அதை வாசித்தாலும் அது மாநில அரசால் தயாரிக்கப்படுவது என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். கடந்த ஆண்டு ஆளுநர் உரை முழுவதும் இலவசத் திட்டங்கள் குறித்த அறிவிப்புகளால் நிரம்பியிருந்தது. இந்த ஆண்டும் அப்படித்தான் இருக்கும் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு மாறாக இந்த ஆளுநர் உரை ஒரு ஏவுகணையை எடுத்து வீசியிருக்கிறது. ''அரசியல் சட்டத்தைப் புதிதாக இயற்ற வேண்டும்'' என்பது தான் அந்த ஏவுகணை.

பல நாடுகளில் அரசியலமைப்பு சட்டங்கள் புதிதாக எழுதப்பட்டிருப்பதாகவும், இந்திய அரசியல் சட்டத்தை திருத்தி எழுத வேண்டுமென அரசியல் கட்சிகள், சட்ட வல்லுநர்கள் பலர் கோரி வருவதாகவும், ஆளுநர் தமது உரையில் குறிப்பிட்டிருக்கிறார். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே இந்த கோரிக்கையை அறிஞர் அண்ணா மாநிலங்களவையில் எழுப்பினார் எனவும், இதுவரை அரசியலமைப்பு சட்டத்தில் ஏறத்தாழ 100 திருத்தங்கள் செய்யப்பட்டு விட்டன என்றும், கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவின் அரசியல், சமூக, பொருளாதார பரிமாணங்களும், உழைக்கும் வர்க்கத்தின் தேவைகளும் முற்றிலுமாக மாறிவிட்டன என்றும் பல்வேறு காரணங்களை ஆளுநர் தமது உரையில் குறிப்பிட்டிருந்த போதிலும் தமிழக அரசின் 69 சதவீத இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியின் காரணமாகவே இப்படியரு தீவிரமான நிலையை தமிழக அரசு எடுத்துள்ளது எனத் தோன்றுகிறது.

''பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்கள் தாம் போராடிப் பெற்றிடும் சமூக நீதியைப் பேணிக் காப்பதற்கும், மேலும் சிறுபான்மையினர் உரிமை மற்றும் பெண்ணுரிமை உள்ளிட்ட சமூக நீதியை உறுதி செய்வதற்கும் கம்பி மீது நடப்பதைப் போன்ற நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள்'' என்று ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதான் புதிய அரசியலமைப்புச் சட்டம் வேண்டும் என்கிற தமிழக அரசின் நிலைப்பாட்டுக்கு உண்மையான காரணம்.

தற்போது இடஒதுக்கீடு சட்டத்துக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிக்குக் காரணம் நமது அரசியலமைப்பு சட்டமா? என்ற கேள்வி இங்கே எழுகிறது. உலக நாடுகளிலுள்ள அரசியலமைப்பு சட்டங்களிலேயே மிகவும் விரிவான சட்டம் நம்முடையது தான். பல நாடுகளின் அரசியலமைப்பு சட்டங்களை ஒப்பிட்டுப் பார்த்து, நமது நாட்டுக்கு ஏற்ற ஜனநாயக அமைப்பை நிறுவும் விதமாக அதை அம்பேத்கர் இயற்றினார். நம் நாட்டின் குடிமக்களுக்கு நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை நமது அரசியலமைப்பு சட்டம் உறுதியளித்துள்ளது. அதன் முகவுரையிலேயே (Preamble) இவை கூறப்பட்டுள்ளன. அரசியலமைப்பு சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று இதற்கு முன்பும் பலபேர் பேசியுள்ளனர். பிஜேபி போன்ற அரசியல் கட்சிகளும் கோரி வந்துள்ளன. ஆனால் இந்த அரசியல் அமைப்பு சட்டமே வேண்டாம், புதிதாக எழுத வேண்டும் என்று மாநில அரசே சட்டமன்றத்தில் அதுவும் ஆளுநர் மூலமாக கோரிக்கை விடுப்பது இதுதான் முதல் முறை எனத்தோன்றுகிறது.

மத்தியில் பிஜேபி தலைமையிலான ஆட்சி நடந்த போது அரசியலமைப்பு சட்டத்தைத் திருத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது அந்த ஆட்சியில் திமுக உள்ளிட்ட 24 கட்சிகள் இடம் பெற்றிருந்தன. கூட்டணிக் கட்சிகளின் ஒப்புதல் எதையும் பெறாமலேயே, அரசியல் அமைப்பு சட்டத்தைத் திருத்துவது பற்றிய அறிவிப்பை குடியரசுத் தலைவரின் உரை மூலமாக அன்றைய பிஜேபி அரசு அறிவித்தது. அந்த அறிவிப்பைத் தொடர்ந்து பிப்ரவரி 2000த்தில் அதற்கென ஒரு தேசிய கமிஷனும் அமைக்கப்பட்டது. முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வெங்கடாசலையா அதன் தலைவராக நியமிக்கப்பட்டார். வழக்கறிஞர்கள் சோலி சொராப்ஜி, பராசரன், முன்னாள் மக்களவை சபாநாயகர் பி.ஏ.சங்மா உள்ளிட்ட பத்து உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டனர்.

அந்த கமிஷனின் நோக்கம் அரசியலமைப்பு சட்டத்தை மறு ஆய்வு செய்வது தானே தவிர புதிதாக எழுதுவதல்ல என்று அப்போது பிஜேபி அரசு அறிவித்தது. ஆனால் அதைக்கூட காங்கிரஸ் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் ஏற்கவில்லை. குடியரசு தினப் பொன்விழாவில் உரையாற்றியபோது அன்றைய குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன், அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தும் பிஜேபி அரசின் முயற்சியை கடுமையாக விமர்சித்தார்.

அண்ணல் அம்பேத்கர் பிறந்த தினமான ஏப்ரல் 14ஆம் நாளை ''அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்பு நாளாக'' கடைபிடிக்குமாறு அறிவித்த காங்கிரஸ் கட்சி அதற்காக நாடெங்கும் ஆர்ப்பாட்டங்களையும், பேரணிகளையும் நடத்தியது. இந்தியாவெங்கும் தலித் இயக்கங்களும் களமிறங்கின. இந்த எதிர்ப்புகளின் காரணமாக அந்தக் கமிஷனின் பரிந்துரைகள் கைவிடப்பட்டன.

அன்று தமிழக சட்டப்பேரவையிலும் அதுபற்றிய விவாதங்கள் எழுந்தன. இந்திய கம்யூனிஸ்டு கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் உறுப்பினர்கள் அப்போது கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் கலைஞர் அவர்கள் ''சிறுபான்மையினர் உரிமைகளுக்கோ, மதச்சார்பின்மைக்கோ, மாநிலங்களின் உரிமைகளுக்கோ அரசியலமைப்பு சட்ட மறுஆய்வு கமிஷனால் ஆபத்து வந்தால் அதை திமுக எதிர்க்கும்'' என்று தெரிவித்தார்.

அரசியலமைப்பு சட்டத்தைத் திருத்துவதை திமுக அப்போது ஏற்றுக் கொண்டிருந்தாலும் அதைப் புதிதாக எழுத வேண்டும் என்று அன்றைக்கு கோரவில்லை. இடைப்பட்ட ஆறு ஆண்டுகளில் அதன் நிலைப்பாடு இப்படி மாறுவதற்கு இடஒதுக்கீடு விஷயத்தில் உச்சநீதிமன்றம் அளித்து வரும் தீர்ப்புகளும், ஜனநாயகத்தின் பிற அமைப்புகளை விட நீதித்துறையே அதிக அதிகாரம் கொண்டது என்பது போல ஒரு நிலை உருவாகி வருவதும் தான் காரணம் என்று கூறலாம்.

நீதித்துறையே அதிக அதிகாரம் கொண்டது என அரசியலமைப்பு சட்டத்தில் எங்கும் கூறப்படவில்லை. பல்வேறு தீர்ப்புகளின் மூலமாக அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகளுக்குப் புதிது புதிதாக விளக்கங்களைக் கூறி மெல்ல, மெல்ல தனது மேலாண்மையை இன்று நீதித்துறை நிலை நாட்டிக்கொண்டுள்ளது. சட்டமியற்றும் அதிகாரம் கொண்ட பாராளுமன்றத்தைத் தனக்குக் கீழே இருத்தி வைக்கும் நீதித்துறையின் முயற்சியே இன்று ஆட்சியாளர்களை இன்னொரு துருவத்தை நோக்கி விரட்டியுள்ளது.

ஆனால் இவை எதுவும் அரசியலமைப்புச் சட்டத்தைப் புதிதாக எழுத வேண்டும் என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டை நியாயப்படுத்தி விடாது. நமது அரசியலமைப்புச் சட்டமானது மிகவும் நெகிழ்ச்சித் தன்மை (flexibility) கொண்டது. அதனால் தான் இத்தனை திருத்தங்களையும் அது ஏற்றுக் கொண்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தை நமது பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தும் போது ''நெகிழ்ந்து கொடுப்பதாக இருப்பது தான் இதன் சிறப்பு'' என்று அம்பேத்கர் குறிப்பிட்டார். ''இது செயல்படக்கூடியது, இது நெகிழ்ந்து கொடுக்கக்கூடியது, அமைதி காலத்திலும் சரி, யுத்த  காலத்திலும் சரி இந்த நாட்டை ஒற்றுமைப்படுத்திக் கட்டிக்காப்பாற்றும் ஆற்றல் கொண்டது'' என அரசியலமைப்புச் சட்டத்தை அவர் வர்ணித்தார்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தைப் பற்றி விரிவாக ஆராய்ந்துள்ள கிரான்வில் ஆஸ்டின் என்பவர்,  (The Indian Constitution: Corner stone of a Natrion) கூறியிருப்பதை இங்கே சுட்டிக்காட்டுவது பொருந்தும்: 
''இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றியவர்கள் இந்த நாட்டின் குறிக்கோள்களையும் அவற்றை அடைவதற்கான வழிமுறைகளையும் அதற்கான அமைப்புகளையும் அதில் ஏற்படுத்தியுள்ளனர். ஒருமைப்பாடு, சமூகப்புரட்சி, ஜனநாயகம் ஆகிய மூன்றும் அதன் பிரிக்க முடியாத அங்கங்களாகும். இந்த மூன்றையும் தனித்தனியே அடைந்து விட முடியாது... கடந்த ஐம்பது ஆண்டுகளின் அனுபவத்தில் பார்க்கும் போது இந்த அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்கள் இந்த நாட்டின் குறிக்கோள்களை, அதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தியதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றே கூற வேண்டும். இந்த அரசியலமைப்பு சட்டம் மிகச்சிறப்பாக இந்த நாட்டுக்கு சேவை புரிந்துள்ளது'' என்று கிரான்வில் ஆஸ்டின் கூறியுள்ளார்.

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் இன்று ஓரளவு காப்பாற்றப்படுவதற்கும், இந்த நாடு இன்றும மதச்சார்பின்மையைத் தனது கொள்கையாகக் கொண்டிருப்பதற்கும் நமது அரசியலமைப்புச் சட்டம் தான் காரணம். அதனால் தான் இந்துத்துவவாதிகள் அதை எப்படியாவது மாற்றிவிட வேண்டும் என்று படாதபாடு படுகிறார்கள். இன்று தமிழக அரசு எடுத்துள்ள நிலை அவர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக மாறிவிடக்கூடாது.

மாநிலங்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்பதை யாரும் மறுக்க முடியாது. மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியைப் பொதுப்பட்டியலுக்குக் கொண்டு சென்றார்கள். மீண்டும் அதை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரவேண்டும் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் வலியுறுத்தி வருகிறார். அதுபோலவே காவிரி பிரச்சனையிலும், முல்லைப்பெரியாறு சிக்கலிலும் தமிழகத்தின் உரிமைகள் இன்று கேள்விக்குறியாகி உள்ளன. ஆனால் இவற்றை இப்போதுள்ள அரசியலமைப்புச் சட்ட எல்லைக்குள்ளேயே தீர்த்துக்கொள்ள முடியும். மத்தியில் கூட்டணி அரசு என்பது யதார்த்தமாகி விட்ட சூழலில், மத்திய அரசின் மீது மாநில கட்சிகளின் செல்வாக்கு முன்பு எப்போதையும் விட கூடுதலாக இருக்கும் இன்றைய நிலையில் முன்பு திமுக வலியுறுத்திய மாநில சுயாட்சியின் கீழ் சொல்லப்பட்ட உரிமைகளைக் கூட  அதனால் இப்போது பெற்று விட முடியும். அதற்காக இன்றுள்ள அரசியலமைப்புச் சட்டத்தையே தூக்கி எறிந்து விட வேண்டும் என்பது அவசியமில்லை.

அரசியலமைப்பு சட்டம் என்பது மாற்றவே கூடாத 'புனித நூல்' அல்ல. ஆனால் எதற்காக அதை மாற்றப்போகிறோம் என்பது தான் முக்கியம். தற்போது தமிழக அரசு கூறியுள்ள காரணங்கள் புதிய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியே தீரவேண்டும் என்பதற்கான நியாயத்தை வழங்கவில்லை. 

'அரசியலமைப்பு சட்டத்தை எரிப்பேன்' என அம்பேத்கரே கூறியிருக்கிறாரே எனச் சிலர் சொல்லக்கூடும். ''இந்த அரசியலமைப்பு சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுமேயானால் அதை எரிக்கிற முதல் ஆளாக நானே இருப்பேன்'' என்றுதான் அவர் கூறியிருக்கிறார். அரசியல் அமைப்பு சட்டத்தை அறிமுகப்படுத்திப் பேசிய போது அவர் கூறிய இறுதி வார்த்தைகளை இத்துடன் இணைத்துப் புரிந்து கொள்ள வேண்டும். ''புதிய அரசியல் அமைப்பு சட்டத்தின் கீழ் ஏதேனும் தவறுகள் இழைக்கப்பட்டால் அதற்குக் காரணம் இந்த அரசியலமைப்பு சட்டம் மோசமானது என்பதல்ல, அதை நடைமுறைப்படுத்துபவர்கள் மோசமானவர்கள் என்பதே அதற்குக் காரணமாக இருக்கும்'' என்று அம்பேத்கர் கூறினார். அந்த வார்த்தைகள் இப்போதும் பொருத்தமாகத்தான் இருக்கின்றன.

Tuesday, November 24, 2015

வரலாறு சொல்லும் 'வரலாறு'

இந்தியாவின் வரலாற்றை எழுதுவதற்கு முதன்மைத் தரவாக விளங்கும் கல்வெட்டுகள் தமிழ்நாட்டில்தான் அதிகம் கிடைக்கின்றன. ஆனால் அவற்றைப் படியெடுத்துத் தொகுத்து ஆவணப்படுத்தும் பணி அரசாங்கத்துக்கு முக்கியமானதாகப் படவில்லை. அரசாங்கத்தின் தொல்லியல் துறையைவிட இதில் ஆர்வமுள்ள தனி நபர்களின் பங்களிப்பே அதிகம். அதற்கு சாட்சியாக இருப்பது 'வரலாறு' என்னும் இதழ். 

1993 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட அந்த இதழ் இப்போது வெள்ளிவிழா கண்டு 25 ஆவது இதழ் வெளிவந்திருக்கிறது. டாக்டர் ராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மையத்தின் சார்பில் ஆவணம் இதழ் துவக்கப்பட்டு இரண்டு இதழ்கள் வெளிவந்த பிறகு அதன் ஆசிரியர் குழுவினரிடையே ஏற்பட்ட கருத்து மாறுபாடு காரணமாக இந்த வரலாறு இதழ் துவக்கப்பட்டதென திரு கலைக்கோவன் குறிப்பிட்டிருக்கிறார். அவர்தான் இதன் பொறுப்பாசிரியர். திருமதி நளினி, திருமதி அகிலா ஆகியோர் இணையாசிரியராகவும், துணையாசிரியராகவும் இருக்கின்றனர். இந்த மூவர் குழுவின் பணி மலைக்க வைக்கிறது. 

வரலாறு 25 ஆவது இதழில் 13 புதிய கல்வெட்டுகள் பதிப்பிக்கப்பட்டுள்ளன. முத்தரையர் காவல் உரிமைச் செப்பேட்டில் இருக்கும் செய்தி பதிவுசெய்யப்பட்டுள்ளது. அது நீண்டதொரு வரலாற்றை சிறு கதையின் சுவாரசியத்தோடு கூறுகிறது. 

திருச்சிராப்பள்ளி மாவட்ட கோயில் கட்டடக் கலை என்ற தலைப்பில் மு.நளினி ஆற்றிய சொற்பொழிவு நிறைய தகவல்களைக் கூறுகிறது.  குடைவரை, கற்றளி,மாடக்கோயில் என மூன்றாக வகைப்படுத்திக்கொண்டு அம்மாவட்டத்தில் இருக்கும் கோயில்கள் குறித்து அவர் விவரித்திருக்கிறார். திருச்சிராப்பள்ளியில் இரண்டு, வெள்ளாறையில் இரண்டு, பைஞ்ஞீலியில் ஒன்று என இந்த மாவட்டத்தில் ஐந்து குடைவரைகள் இருப்பதாக அவர் குறிப்பிடுகிறார். கிபி ஏழு, எட்டாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த இந்தக் குடைவரைகளை நாமும் பார்க்கவேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது இந்தச் சொற்பொழிவு. 

இந்த இதழில் திரு கலைக்கோவனின் நாட்குறிப்புகளின் தொகுப்பு போன்ற ஒரு கட்டுரை உள்ளது. அது அதிகமான பக்கங்களை ஆக்கிரமித்திருப்பது இதழின் நோக்கத்தை நீர்த்துப்போகச்செய்து திசைதிருப்புவதாக உள்ளது. 

கல்வெட்டுகளில் ஆர்வம் கொண்டவர்கள் இந்த இதழை அறிவார்கள். மற்றவர்களும்கூட இதைப் படித்துப் பயனுறவேண்டும். 

Monday, November 23, 2015

ஆங்கிலத்தில் அகநானூறு

திரு ஜார்ஜ் ஹார்ட் அவர்களின் அரும்பணி
-ரவிக்குமார்
~~~~~~~~~~~~

திரு ஜார்ஜ் ஹார்ட் அவர்களின் பல்லாண்டுகால கடும் உழைப்பின் விளைபொருளாக அகநானூறு ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியாகியிருக்கிறது. புதுச்சேரி பிரெஞ்சு ஆராய்ச்சி நிறுவனம் (IFP) அதை மிகவும் சிறப்பாக, குறைந்த விலையில் ( 1000/- ரூபாய்) வெளியிட்டிருக்கிறது. 

இன்று சுமார் நான்குமணி நேரம் ஒதுக்கி அந்த நூலைப் படித்தேன். மழைக்காலத்தில் ஈரக் காற்றுடன் அலைகளின் இரைச்சல் கசிந்து உள்நுழையும் நூலகத்தில் கழிந்த அந்த நான்குமணி நேரம் - வாழ்வின் பயனுள்ள காலம். அதற்காக திரு ஜார்ஜ் ஹார்ட் அவர்களுக்கு நன்றி. 

" எனது மொழிபெயர்ப்பில் வெளிப்படும் குரல் என்னுடையதாக இருக்கவேண்டும் என்பதால் இந்தப் பிரதியின் பிற மொழிபெயர்ப்புகளைப் படிப்பதை நான் தவிர்த்துவிட்டேன்" என முன்னுரையில் திரு ஜார்ஜ் ஹார்ட் குறிப்பிட்டிருக்கிறார். அது ஒருவிதத்தில் சரியென்றே எனக்குத் தோன்றுகிறது. 

" புறநானூறு மொழிபெயர்ப்பின்போது Hank Heifetz ம் நானும் கையாண்ட அணுகுமுறையைத்தான் இப்போதும் நான் பின்பற்றினேன். தமிழில் எத்தனை வரிகள் உள்ளனவோ அதே எண்ணிக்கை ஆங்கில மொழிபெயர்ப்பிலும் இருக்கும்படி கவனமாகப் பார்த்துக்கொண்டேன்" எனவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். 

திரு மா.இலெ.தங்கப்பாவின் Love stands alone நினைவுக்கு வர அதையும் எடுத்து திரு ஜார்ஜ் ஹார்ட் அவர்களின் மொழிபெயர்ப்போடு ஒப்பிட்டுப்பார்த்தேன். அகநானூறிலிருந்து ஆறு பாடல்களைத் தங்கப்பா மொழிபெயர்த்திருக்கிறார்( பாடல் எண்கள்: 134,136,224,354,355,395) இரண்டு மொழிபெயர்ப்புகளையும் ஒருசேர படித்தபோது ஜார்ஜ் ஹார்ட்டின் மொழிபெயர்ப்பில் எனது வாசக மனம் நிலைகுத்தி நின்றது. (ஆராய்ச்சியாளர்கள் வேறு முடிவுக்கு வரக்கூடும் ) 

திரு ஜார்ஜ் ஹார்ட் அவர்களுக்கும் , இந்த மொழிபெயர்ப்பை வெளியிட்ட புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்துக்கும் பாராட்டுகள்.

Wednesday, November 18, 2015

இலங்கையில் இரகசிய சித்ரவதைக் கூடம் - ஐ.நா.குழு கண்டுபிடிப்பு


தமிழ் கைதிகளை விடுவிக்க இலங்கை அரசுக்கு 
இந்தியா அழுத்தம் தரவேண்டும்

தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

 இலங்கையில் கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் கடற்படைத் தளத்தில் ரகசிய சித்ரவதைக்கூடம் இருப்பதை ஐ.நா. ஆய்வுக் குழு கண்டறிந்து அம்பலப்படுத்தியுள்ளது. 

இலங்கையில் காணாமல் போனவர்கள் பற்றி ஆய்வு நடத்துவதற்காக மூன்று உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.குழு இலங்கைக்கு வந்து கடந்த சில நாட்களாக ஆய்வு செய்தது.  அப்போது கிழக்கு மாகாணத்தில் இருக்கும் கடற்படைத் தளம் ஒன்றில் இரகசிய சித்ரவதைக்கூடம் இருந்ததை அக்குழு கண்டுபிடித்து அம்பலப்படுத்தியுள்ளது.  இதைப் போன்ற சித்ரவதைக் கூடங்கள் இலங்கையின் ஏனைய பிற பகுதிகளிலும் இருக்கக்கூடும் என்றும் அது தெரிவித்துள்ளது.

இலங்கையில் போர் முடிவுற்றதற்குப் பிறகு ஏராளமான தமிழ் இளைஞர்களும் இளம்பெண்களும் கடத்தப்பட்டு காணாமலடிக்கப்பட்டுள்ளனர்.  அவர்களில் பலர் சித்ரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.  சிலர் இன்னும் இரகசிய இடங்களில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது.  சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்ட மனித உரிமை அமைப்பு ஒன்றின் அறிக்கை இலங்கையில் 50க்கும் மேற்பட்ட இரகசிய சித்ரவதைக் கூடங்கள் இருக்கின்றன என்று தெரிவித்தது.  இப்போது ஐ.நா. குழுவே அதை உறுதிப்படுத்தியிருப்பது ஈழத் தமிழர்களின் அச்சமும் குற்றச்சாட்டும் உண்மைதான் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது.

இலங்கைச் சிறைகளில் சட்டவிரோதமாக அடைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகளை விடுவிக்கச் சொல்லி கடந்த சில நாட்களாக ஈழத் தமிழர்கள் வடக்கு மாகாணத்தில் உண்ணாநிலை போராட்டம் உள்ளிட்ட பல்வேறு அறப்போராட்டங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர். வடக்கு மாகாண முதலமைச்சரும் அதனை ஆதரித்துக் கருத்துத் தெரிவித்துள்ளார்.  இந்நிலையில் சித்ரவதைக்கூடம் பற்றிய ஐ.நா.குழுவின் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இலங்கைச் சிறைகளில் வாடும் தமிழ் கைதிகள் அனைவரையும் உடனடியாக விடுவிக்குமாறு இந்திய அரசு இப்போதாவது அழுத்தம் தர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.  தமிழக அரசும் இது குறித்து இந்திய பிரதமருக்கு அழுத்தம் தர வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

Friday, November 6, 2015

தமிழ் உரிமைப் போராளி ந. அரணமுறுவல் மறைந்தார் - ரவிக்குமார்



திரு அரணமுறுவல் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியை இன்று காலையில் அறிந்து அதிர்ச்சியுற்றேன். சர்க்கரை நோய் இருந்தபோதிலும் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். இப்படி அகாலத்தில் அவர் வாழ்வு முடியுமென நான் நினைக்கவில்லை. 

1980- 1990 களில் சென்னைக்குச் சென்றால் திருவல்லிக்கேணி பகுதியில் அவரைப்போய்ப் பார்ப்பது வழக்கம். பாமக துவக்கப்பட்ட காலத்தில் அக்கட்சியின்மீது நம்பிக்கை வைத்திருந்தவர்களில் அவரும் ஒருவர். தமிழர் வாழ்வுரிமை மாநாட்டு மலரை அவர்தான் தயாரித்தார். அப்போது சில நாட்கள் நானும் அவரோடு இருந்து மெய்ப்புப் பார்த்தேன். திரு குணா அவர்களின் திராவிடத்தால் வீழ்ந்தோம் நூலை அச்சிட்டதும் அவர்தான். அந்த நேரத்தில் அந்த நூலின் உள்ளடக்கம் குறித்து அவரோடு கடுமையாக விவாதித்திருக்கிறோம். 

நிறப்பிரிகை சார்பில் நாங்கள் நடத்திய புலம்பெயர்ந்த தமிழர் மாநாட்டின் முதல் ஆலோசனைக் கூட்டம் அவர் வீட்டில்தான் நடந்தது. அப்படி பல கூட்டங்கள் அவர் வீட்டில் நடந்ததுண்டு. 

ஈழப் போராளித் தலைவர்கள் பலரோடும் அவருக்கு நெருங்கிய நட்பிருந்தது. அவர்களால் பலனடைந்தவர் அல்ல அவர், அவர்களுக்குப் பயன்பட்டவர். அந்த அனுபவங்களை எழுதுங்கள் என நான் பலமுறை வலியுறுத்தினேன். அப்படி எழுதியிருந்தால் ஈழ விடுதலைப் போராட்டத்தின் பின் தளமாக தமிழகம் இருந்த காலத்து வரலாறு ஓரளவு ஆவணப்படுத்தப்பட்டிருக்கும். 

தனது கருத்துகளில் தெளிவும் அதனால் உறுதியும் கொண்டிருந்தவர். பெயருக்குப் பொருத்தமாக எப்போதும் சிரிப்பு மாறாத முகம். தளராத உழைப்பு. செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தில் பணியாற்றியபோது அடிக்கடி பார்க்கிற வாய்ப்பு இருந்தது. அதன்பின்னர் அவரைப் பார்க்கும் தருணம் வாய்க்கவில்லை. 

அவரது மரணச் செய்தி அறிந்து பேராசிரியர் கல்யாணியிடம் பேசினேன். இறுதி நிகழ்வில் கலந்துகொள்ளத் திட்டமிட்டிருந்தேன். அதற்குச் சற்று நேரத்திலேயே  அன்னை மாரியம்மாள் அவர்களின் மரணச் செய்தி வந்துவிட்டது. 

தமிழ்வழிக் கல்வி, தமிழ் மொழியுரிமை, ஈழ விடுதலை முதலான களங்களில் அவர் போல வேறு எவரும் தொடர்ச்சியாக உழைத்திருக்கமாட்டார்கள். திரு அரணமுறுவல் அவர்களுக்கு எனது அஞ்சலி

Thursday, November 5, 2015

அன்னை மாரியம்மாள் : புதிய புறநானூற்றுத் தாய் - ரவிக்குமார்



மதிமுகவின் பொதுச்செயலாளரும் மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணப்பாளருமான திரு வைகோ அவர்களின் அன்னையார் மாரியம்மாள் அவர்கள் இன்றுகாலை உயிர்நீத்தார் என்ற செய்தி அறிந்து துயருற்றேன். 

ஒரு மாதத்துக்கு முன்னர் கலிங்கப்பட்டியில் திரு வைகோ அவர்களின் உதவியாளர் சந்துரு அவர்களின் இல்லத் திறப்புவிழாவுக்குச் சென்றிருந்தபோது அன்னையாரை சந்தித்து வாழ்த்துபெற்றோம். 

ஈழத்துக்கான போராட்டங்களிலும், மது ஒழிப்புப் போராட்டக் களங்களிலும் தனது வயதைப் பொருட்படுத்தாமல் முன்னணியில் நின்றவர் அன்னை மாரியம்மாள் அவர்கள். திரு வைகோ அவர்களது உணர்வின் ஊற்று, உள்ளுறை ஆற்றல் அன்னை மாரியம்மாள் அவர்கள்தான் என்பதை அவரோடு பழகியவர்கள் அறிவார்கள். ஈன்று புறந் தருதல் மட்டுமின்றி சான்றோனாக்கி, வேல் எடுத்துக் கொடுத்துப் போராளியாக வளர்த்தெடுப்பதும் தாயின் கடமைதான் எனப் புதிய புறநானூற்றுத் தாயாகத் திகழ்ந்தவர். 

அன்னை மாரியம்மாள் அவர்களுக்கு என் அஞ்சலி. அவரை இழந்து வாடும் அண்ணன் திரு வைகோ அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

தனித் தமிழீழம் அடைவதும், தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதும் அன்னை மாரியம்மாள் அவர்களின் நிறைவேறாக் கனவுகள். அவற்றை நிறைவேற்ற உறுதியோடு உழைப்பதே அவருக்கான பொருள்பொதிந்த அஞ்சலியாக இருக்கும்.


Wednesday, November 4, 2015

ஈழத்துத் தமிழறிஞர் ஆ.வேலுப்பிள்ளை சிறப்பிதழ்



ஈழத்தைச் சேர்ந்த தமிழறிஞர் திரு ஆ.வேலுப்பிள்ளை அவர்கள் நவம்பர் 2 ஆம் நாள் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் மரணமடைந்தார் என்ற செய்தியை அறிந்திருப்பீர்கள். 

 தமிழ்ச் செவ்வியல் இலக்கியம், இலக்கணம்,கல்வெட்டியல்,தொல்லியல்,சமய வரலாறு எனப் பல்வேறு துறைகளில் ஆழ்ந்த புலமைகொண்டிருந்தவர். தமிழியல் ஆய்வுகளில் அவரது பங்கு மகத்தானது.அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக மணற்கேணி 32 ஆவது இதழ் அறிஞர் ஆ.வேலுப்பிள்ளை சிறப்பிதழாக 2015 டிசம்பர் மாதத்தில்  வெளிவரவுள்ளது. அதில்  கட்டுரை  எழுத விரும்புவோர் தமிழியலுக்கான அவரது பங்களிப்புகள் குறித்தும் அவரோடு, அவரது படைப்புகளோடு தங்களுக்கிருந்த உறவு குறித்தும்  எழுதலாம். 

500 முதல் 750 சொற்கள் வரையிலும் உங்கள் கட்டுரை அமையலாம். யூனிகோடு அல்லது பாமினி  எழுத்துருவில்  கட்டுரையை தட்டச்சு செய்து manarkeni@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 30.11.2015 க்குள் அனுப்புமாறு வேண்டுகிறேன். 

அன்புடன்
ரவிக்குமார்
ஆசிரியர்,மணற்கேணி

Friday, October 30, 2015

மாட்டிறைச்சி அரசியல் - ரவிக்குமார்







அவர்கள்
திரிசூலங்களோடு பாய்ந்தார்கள்
அந்த முதியவனை 
வீட்டுக்குள்ளிருந்து இழுத்துவந்தார்கள்
நெஞ்சைப் பிளந்து
இதயத்தைப் பிடுங்கியெடுத்துக் காட்டினார்கள்
' இதோ இவன் மறைத்து வைத்திருந்த மாட்டிறைச்சி'

**

அவர்கள்
சேரிக்குள் நுழைந்தார்கள்
அந்தச் சகோதரியைப் 
பிடித்திழுத்து நிர்வாணமாக்கி
ஊர்வலம் விட்டார்கள்
கத்தியால் அவள் மார்பை அரிந்தெடுத்துக்
கூவினார்கள்
' இதோ இவள் ஒளித்து வைத்திருந்த
மாட்டிறைச்சி'

**

அவர்கள்
நள்ளிரவில் வந்தார்கள்
பெட்ரோல் ஊற்றி
தீப்பந்தத்தை வீசினார்கள்
கருகிக் கிடந்த குழந்தைகளின் சடலங்களைக் காட்டிக் 
கும்மாளமிட்டார்கள்
' இதோ இவர்கள் சமைத்து வைத்திருந்த
மாட்டிறைச்சி'

**

அவர்கள்
அவனைப் பின்தொடர்ந்தார்கள்
கடத்திச் சென்று
கழுத்தை அறுத்தார்கள்
முண்டத்தை வீசியெறிந்து  சொன்னார்கள்
' இதோ இவர்கள் சாப்பிட்டு மீந்த
மாட்டிறைச்சி'


**
வனவாசிகளுக்கு சேவை செய்தவரைக் 
குழந்தைகளோடு எரித்தவர்கள் 
குற்றம்சாட்டினார்கள்
' பரங்கியரின் உணவு 
மாட்டிறைச்சி '

**

ஒரு கையில் 
நியாயத் தராசைப் பிடித்திருந்தவன்
இன்னொரு கையால் எழுதினான் :
' கர்ப்பிணிப் பெண்களின்
வயிற்றைக் கிழித்தவர்கள்
நிரபராதிகள்.
அவர்கள் கொலைசெய்யவில்லை 
மாட்டிறைச்சியைத் தேடினார்கள் '







Wednesday, October 28, 2015

எதிர்ப்பின் அறம் :

’ஆன்லைன் பெட்டிஷனும்’ அறம் குறித்த ஒரு கேள்வியும்

-ரவிக்குமார் 

 

’ ஆன்லைன் பெட்டிஷன்’ எனப்படும் இணையவழி மனு செய்யும் போராட்டம் சர்வதேச அளவில் இப்போது பிரபலமாகிவிட்டது. ஒரு பிரச்சனை குறித்து உடனடியாகக் கருத்து திரட்டுவதற்கு உகந்த வழியாக அது கருதப்படுகிறது. இந்தப் போராட்டத்துக்கு உதவும் விதமாக ஏராளமான இணைய தளங்கள் இப்போது உருவாகிவிட்டன. Change.org என்பது அவற்றுள் புகழ்பெற்ற ஒரு தளமாகும். 

இந்தத் தளங்கள்மூலம் அனுப்பப்படும் ஏதேனும் ஒரு மனுவில் உங்கள் பெயரை நீங்கள் இணைத்திருந்தால் அதன்பின்னர் உங்கள் மின்னஞ்சலுக்கு எல்லாவிதமான மனுக்களையும் அந்தத் தளம் அனுப்பிக்கொண்டிருக்கும். அப்படித்தான் இன்று Change.org தளத்திலிருந்து எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் இரண்டு மனுக்கள் இணைக்கப்பட்டிருந்தன. மாட்டிறைச்சி உண்பதைத் தடை செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தும் ஒரு மனு , மாட்டிறைச்சி உண்பதைத் தடை செய்யக்கூடாது என இன்னொரு மனு. எது உங்களுக்கு உடன்பாடோ அதில் கையெழுத்திடுங்கள் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. தடை செய்யவேண்டும் என்ற மனுவை ஷிவானி ஷர்மா என்பவரும், தடை செய்யக்கூடாது என்ற மனுவை சன்கேட் சாப்ராவும் துவக்கியிருந்தனர். முதல் மனு ஏழு மாதங்களுக்கு முன்னர் துவக்கப்பட்டது. இரண்டாவது மனு ஒரு மாதத்துக்கு முன்னர் துவக்கப்பட்டது. இரண்டு மனுக்களையும் ஒன்றாக ஏன் சுற்றுக்கு அனுப்புகிறார்கள் என்ற ஐயத்தைவிடவும் இத்தகைய தளங்களுக்கான அறம் குறித்த கேள்வியை என்னுள் எழுப்பியது. 

ஆம்னஸ்டி இண்டர்நேஷனல், ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் போன்ற அமைப்புகள்தான் முதலில் இத்தகைய இணையவழிப் போராட்டங்களை ஆரம்பித்தன. அதிகாரத்துவ அரசாங்கங்களால் எவரேனும் கைது செய்யப்பட்டால், அல்லது ஒரு அத்துமீறல் நடந்தால் அதை உலகின் கவனத்துக்கு எடுத்துச் சென்று ஐநா முதலான சர்வதேச அமைப்புகளையும், அரசாங்கங்களையும் வலியுறுத்தும் விதமான மனுக்களை அனுப்புமாறு இந்த மனித உரிமை அமைப்புகள் கோருவது வழக்கம்.அந்த மனுக்கள் ஆதிக்கக் கருத்தியலுக்கு எதிராகவே இருக்கும். 

இணையப் பெருக்கத்துக்குப் பின்னர் ‘ஆன்லைன் பெட்டிஷன் ‘ என்பது பிரபலமானதொரு எதிர்ப்பு வடிவமாக மாறிவிட்டதால் அதற்கான இணையதளங்கள் பெருகியபின்னர் எவரும் எளிதாகஇப்படி ஆன்லைன் பெட்டிஷனை உருவாக்கலாம் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தத் தளங்கள் போராட்டங்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்ததால்தான் பிரபலமடைந்தன, அந்தப் பிரபலத்தை இப்போதுஆதிக்கக் கருத்தியலைப் பரப்புவதற்காகவும் அவை பயன்படுத்தத் துவங்கியிருக்கின்றன. இதுவொரு அறம் பிறழ்ந்த ஆபத்தான போக்கு எனத் தோன்றுகிறது. மாட்டிறைச்சி என்பதன் பெயரால் இப்போது இந்தியாவெங்கும் வன்முறை ஏவப்படுகிரது. கொலைகள் நடக்கின்றன.மாநில அரசுகளின் உணவகங்கள்கூட சோதனை என்ற பெயரால் அச்சுறுத்தப்படுகின்றன. இது சர்வதேச ஊடக கவனத்தைப் பெற்றிருக்கிறது.இந்தச் சூழலில் மாட்டிறைச்சி உண்பதைத் தடைசெய்யவேண்டும் என வலியுறுத்தும் ஒரு மனுவை Change.org தளம் ஊக்குவித்து சுற்றுக்கு விடுவதன்மூலம் சகிப்புத் தன்மையற்ற பாசிச செயலுக்கு அது துணைபோயிருக்கிறது. பத்திரிகை சுதந்திரத்தைப் பறியுங்கள் என ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு கேட்டால் அது எத்தகைய அநீதியோ அத்தகைய அநீதிதான் Change.org செய்திருப்பதும். 

மனித உரிமைகளுக்கு எதிரான, பாசிசத்துக்குத் துணைபோகிற , அறம் பிறழ்ந்த Change.org தளத்தின் இந்தச் செயலைக் கண்டிப்போம். எதிர்காலத்தில் ஆன்லைன் பெட்டிஷன் தளங்கள் இத்தகைய மனுக்களை சுற்றுக்கு அனுப்புவதில்லை என்ற உறுதிமொழியை அவற்றிடம் பெறுவோம். இத்தகைய தளங்களுக்கென அறம்சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கச் செய்வோம். நமது எதிர்ப்பை mail@change.orgஎன்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தெரிவிப்போம்.

Wednesday, October 14, 2015

மணற்கேணி - ஆய்வரங்குக்கு வாருங்கள்



மணற்கேணி தமிழ் ஆய்வுலகுக்கும் அறிவுலகுக்கும் ஆற்றிவரும் பங்களிப்பு எத்தகையது என்பதற்கு மணற்கேணி இதழ்களில் வெளியான நேர்காணல்களே சான்று. 

தமிழ்ச் சிறுபத்திரிகைகள் ஆங்கில ஏடுகளில் வெளிவரும் நேர்காணல்களை மொழிபெயர்த்து வெளியிடுவது வழக்கம். அதற்கு மாறாக மணற்கேணியில் வெளியான நேர்காணல்கள் இரண்டின் ஆங்கில வடிவத்தை The Hindu நாளேடு Sunday Magazine ல் வெளியிட்டது. 

இதுவரை மணற்கேணியில் பின்வரும் ஆளுமைகளின் நேர்காணல்கள் வெளியாகியுள்ளன. 

1. மினி கிருஷ்ணன்
2. ஃ ப்ரான்ஸுவா குரோ
3. இந்திரா பார்த்தசாரதி
4. கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன்
5. செஹ்பா சர்வார்
6. சாமியா பஷிர்
7. சூஸன் ஹாரீஸ் 
8. சோனியா கமால் 
9. பேராசிரியர் கே. ராஜன்
10. டெஸ்மோண்ட் பொப்பி ஆராச்சி
11. திலிப் சக்ரவர்த்தி 
12. பண்டிதர் நாகலிங்கம்
13. எம். ஏ. நுஃமான்
14. கவிஞர் கே.சச்சிதானந்தன் 
15. பேராசிரியர் இ. அண்ணாமலை 

மணற்கேணி ஆறாவது ஆண்டில் நுழையும்  இந்த நேரத்தில் அது நடந்து வந்த பாதையை மதிப்பிடவும் இனி நடக்கவேண்டிய திசையை சுட்டிக்காட்டவும்தான் இந்த ஆய்வரங்கம். 

ஆய்வரங்குக்கு வாருங்கள்! ஆலோசனைகளைத் தாருங்கள் ! 

Monday, October 12, 2015

சாகித்ய அகாடமி விருதும் தமிழ் எழுத்தாளர்களும்

தமிழ் எழுத்தாளர்கள் எவரும் சாகித்ய அகாடமி விருதைத் திருப்பிக் கொடுக்கவில்லையே என்ற ஆதங்கத்தைப் பலரும் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் விருதுபெற்ற தமிழ் எழுத்தாளர்களில் சிலர் ஒரு கூட்டறிக்கையினை வெளியிட்டுள்ளனர். அந்தப் பெருந்தன்மைக்காக அவர்களைப் பாராட்டுவோம். 

கவிஞர் கே.சச்சிதானந்தனிடம் நான் எடுத்த நேர்காணலில் இடம்பெற்றுள்ள ( மணற்கேணி இதழ் 26 ) இந்தப் பதிலை நம் எழுத்தாளர்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன். 
========

* ரவிக்குமார்: நோபெல் பரிசுக்காக உங்கள் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.இப்போது பாரத் ரத்னா விருது குறித்து சர்ச்சைகள் நடக்கின்றன. எந்தவொரு விருது வழங்கப்பட்டாலும் அதன்கூடவே சர்ச்சையும் எழுவது இங்கே வழக்கமாகிவிட்டது. இத்தகைய விருதுகளைத் தேர்வு செய்வதில் இன்னும் ஜனநாயகப்பூர்வமான முறைகள் கடைபிடிக்கப்படவேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களா?

** கவிஞர் கே. சச்சிதானந்தன்: ஒருநிறுவனம் ஓரளவுக்குத்தான் அந்த தேர்வை கட்டுப்படுத்தமுடியும். சாகித்ய அகாடமியில் எனது அனுபவங்களிலிருந்து சொல்கிறேன்.அங்கே 23 பேர்கள் ஒரு விருதைத் தேர்வு செய்வதில் சம்பந்தப்படுகிறார்கள். உள்ளேயிருந்து 10 உறுப்பினர் கொண்ட ஆலோசனைக்குழு, அடுத்து வெளியேயிருந்து 10 உறுப்பினர் கொண்ட குழு கடைசியில்  3 பேரைக்கொண்ட நடுவர் குழு. இந்த 23 பேரும் ஒரே கருத்தோடு இருப்பார்கள் எனக் கூற முடியாது. பெரும்பாலும் இந்த விருது பொருத்தமானவர்களுக்குத்தான் போகிறது.தகுதியில்லாதவர்களுக்குக் கொடுக்கப்பட்டது என்ற புகார் சில மொழிகளில்தான் எழுகிறது, பொருத்தமில்லாதவர்களென்றால் தேர்வுசெய்யப்பட்டவர்களைவிடவும் தகுதி வாய்ந்தவர்கள் இருப்பதாகச் சொல்லப்படுவதைக் குறிப்பிடுகிறேன். இப்படிப் புகார் எழும்பும் மொழிகளில் தமிழ் ஒன்று. தமிழ், பஞ்சாபி, ராஜஸ்தானி போன்ற மொழிகளில் இந்தப் புகார்கள் எழுகின்றன.

மாநில ஒருங்கிணைப்பாளரைத் தேர்வு செய்த பின்னர் மற்றதை அவர் பொறுப்பில் விட்டுவிடுகிறார்கள். சில நேரங்களில் அவர் ஒரு குழுவின் நலனை மட்டும் கவனத்தில் கொண்டு செயல்படுகிறார்.அதனால்தான் இந்தப் பிரச்சனை. மலையாளத்தில் இந்த விருது தகுதியில்லாத ஒருத்தருக்குக்கூட வழங்கப்பட்டதில்லை. அதற்கு இங்கு இருக்கும் விழிப்புணர்வு ஒரு காரணம். நடுவர்களும் இங்கே பொறுப்போடு நடந்துகொள்கிறார்கள். சில மொழிகளில் மிகவும் சாதாரணமான ( mediocre) எழுத்தாளர்கள்கூட இந்த விருதைப் பெற்றுவிடுகிறார்கள்.

சில எழுத்தாளர்கள் அடுத்த விருது எப்போது வழங்கப்படுகிறது என்பதைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். நான், அடுத்த கவிதையை அடுத்த வரியை சிந்திக்கிறேன்.

Thursday, October 8, 2015

கவிதையில் வாழ்பவன் - ரவிக்குமார்



அவர்கள் அவனைப் பிடித்தபோது
அவனிடம்
ஒரு துப்பாக்கியும் 
ஒரு பையும் தான் இருந்தன
குழந்தைகள் வைத்திருப்பதுபோன்ற 
நாய்க் காது பை
பச்சை நிறத்தில் ஒரு நோட்டுப் புத்தகம் அதில் எழுதப்பட்டிருந்தன 
நான்கு கவிகளின்
அறுபத்தொன்பது கவிதைகள்

துப்பாக்கியில் ரவைகள் இல்லை
பையில் ஒரு ரொட்டித் துண்டு இல்லை
குடிப்பதற்குத் தண்ணீர்கூட இல்லை 

இத்தனை நாள் எப்படி உயிரோடிருந்தான்
எதனைக்கொண்டு சண்டை போட்டான்

எப்படியெப்படியோ விசாரித்துப் பார்த்தார்கள் 
சிரித்தானே தவிர பதில் சொல்லவில்லை

அலுத்துப்போன சிப்பாய்கள் 
ஆணையின்படி அவனை சுட்டுக்கொன்றார்கள்

பச்சை நிற நோட்டுப் புத்தகம்
அதிலிருந்த
அறுபத்தொன்பது கவிதைகள்

தாகிக்கும்போது தண்ணீராகும்
பசித்திருக்கும்போது உணவாய் மாறும்
துப்பாக்கியில் போடும் தோட்டாக்களாய் உருவெடுக்கும் 

சுட்டுக் கொன்றார்கள்

ஆனால்,
பச்சை நிற நோட்டுப் புத்தகத்தில் 
படியெடுத்து வைத்த கவிதை வரிகளில்
இன்னமும் அவன் 
வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறான் 

( அக்டோபர் 9 - சே குவேராவின் 48 ஆவது நினைவு நாள்)