Thursday, December 30, 2010

கடிதங்கள் வரலாற்று ஆவணங்கள்



கடிதம் எழுதும் பழக்கம்  கொஞ்சம் கொஞ்சமாக நம்மிடையே குறைந்து வருவதை நாம் அறிவோம் . கடிதங்கள் வரலாற்று ஆவணங்கள் மட்டுமல்ல அவை அக கால கட்டத்தின் கலாச்சார நடவடிக்கைகளின் பதிவுகளாக இருப்பதால் மானுடவியல் நோக்கிலும் முக்கியமான தரவுகளாக உள்ளன. 
மனித அபிலாஷைகள் அதில் பதிவாகின்றன . ஒரு மகன் அம்மாவுக்கு எழுதிய கடிதம் பாசத்தின் கவிதையாக இருக்கிறது. தந்தை மகனுக்கு எழுதிய கடிதம் அறிவுரைகளின் தொகுப்பு. நண்பர்கள் பரிமாறிக்கொள்ளும் கடிதங்கள் பிரத்யேகமான உலகங்களின் வாசல்கள் . காதல் கடிதங்கள் பற்றி சொல்லவே வேண்டாம் . ஆசைகள் நிராசைகள் வாக்குறுதிகள் பொய்கள் என எல்லாவற்றின் பதிவுகளாகவும் இருக்கின்றன கடிதங்கள் . 
கொஞ்சமே படித்த கிராமத்து மனிதன் தன்னை கடிதத்தின் மூலம் தான் வெளிப்படுத்தி வந்தான் . ஒவ்வொருத்தருக்குள்ளும் இருக்கும் எழுத்தாளனை வெளிக் கொண்டு வர கடிதம் தான் வாய்ப்பேற்படுத்தித் தந்தது. கடிதம் எழுதுவது மொழியில் தன்னை எப்படித் திறந்து வைக்க முடியும் என்ற பயிற்சியை நமக்கு அளிக்கிறது. கடிதத்தைவிடவும் சிறந்த படைப்பு என்ன இருக்க முடியும்? 

இன்றைய உலகம் எதற்கும் முக்கியத்துவம் தருவதில்லை. இங்கு நேசம், பாசம், நட்பு,  ஏன் காதல் கூட தற்காலிகமானதுதான். எல்லாமே எஸ் எம் எஸ்ஸில் முடிந்துவிடுகிறது. இன்றைய இளைஞர்களால்  காதலிக்கு ஒரு நல்ல கடிதத்தை எழுதமுடியுமா தெரியவில்லை.  மிஞ்சிப்போனால் ஒரு போன் கால் அவ்வளவுதான். மின்னஞ்சல் இருக்கிறதே என்று கேள்வி எழலாம் . மின்னஞ்சலின் வேகம் பிரமிக்க வைப்பதுதான். ஒரு சில நொடிகளில் உலகின் எந்தப் பகுதிக்கும் ஒரே சமயத்தில் நூற்றுக் கணக்கானவர்களை அடைந்துவிட முடியும் என்ற அதன் சாத்தியம் அபாரமானதுதான். ஆனால் அது வியாபாரத்துக்கு வேண்டுமானால் பயன்படலாம்.   மகனிடமிருந்து வரும் கடிதத்தை தனது மகனாகவே எண்ணி தடவி உச்சி முகரும்  தாயின் மன நிலை தெரியாதவர்கள் வேண்டுமானால் மின்னஞ்சலை கொண்டாடலாம . காதலியிடமிருந்து வந்த முதல் கடிதத்தை புதையலாகப் பாதுகாக்காதவர் யார் இருக்க முடியும்?  நேசம் என்பது 'வர்ச்சுவல் ரியாலிட்டி' அல்ல. அது யதார்த்தத்தைவிடவும் ஆழமானது. வரலாற்றைவிடவும் நீண்டகாலம் வாழக் கூடியது .

நம் இளைய தலைமுறையிடம் கடிதம் எழுதும் வழக்கத்தைப் புதுப்பிக்க வேண்டும் என்பது என் ஆசை. அது பாசத்தைக் கொண்டாடும் மனிதாபிமானம்  சார்ந்தது மட்டுமல்ல. மொழி, படைப்பாற்றல், வரலாற்றுணர்வு , கலாச்சார அறிவு என பல பரிணாமம் கொண்டது. ஒரு ஆயிரம் பேரிடமாவது நாம் அந்த பழக்கத்தை தூண்டிவிட்டோமேனில் அது மகத்தான சாதனைதான். 

திட்டம்:


தமிழில் கடித இலக்கியம் என்று ஒரு தனித் துறையே உண்டு.மிகச்  சிறந்த எழுத்தாளர்களின் நல்ல படைப்புகளைப் போலவே அவர்களது கடிதங்களும் அற்புதமான அனுபவத்தை தருகின்றன. கி ராவின் கரிசல் காட்டுக் கடுதாசியை  மறக்க முடியுமா? எந்த ஒரு எழுத்தாளரையும் கேளுங்கள் அவரிடம் நல்ல புத்தக  சேமிப்பு இருக்கிறதோ இல்லையோ நிச்சயம் சில அபூர்வ கடிதங்கள் இருக்கும். அப்படி உங்களிடம்  அபூர்வமான கடிதம் இருந்தால் அதன் ஒளிப்பட நகலை மணற்கேணி முகவரிக்கு அனுப்புங்கள் . அத்துடன் உங்களைப் பற்றிய விவரத்தையும் எழுதுங்கள் . பிரசுரிக்கப்படும் கடிதத்தை அனுபபுகிறவருக்கு நினைவுப் பரிசும் சான்றிதழும் அனுப்பப்படும். 


அனுப்பவேண்டிய முகவரி :


மணற்கேணி இலக்கிய இதழ் 
அறை எண் 2, நோபிள்  மேன்ஷன் 
ஐஸ் ஹவுஸ் காவல் நிலையம் எதிரில் 
டாக்டர் நடேசன் சாலை 
திருவல்லிக்கேணி
சென்னை 600005




அன்புடன்
ரவிக்குமார் 

Tuesday, December 28, 2010

தமிழர் இறையாண்மை மாநாடு

மாநாட்டு மேடையை நோக்கி 
ஈகச் சுடர் ஏற்றுதல் 
திருமாவின் உரைகள் அடங்கிய காணொளிக் குறுந்தகடுகளை அவர் வெளியிட நான் பெற்றுக்கொள்கிறேன் 
சங்கர் கணேஷ் இசையமைத்த இயக்கப் பாடல்கள் அடங்கிய குறுந்தகடு வெளியீடு 
மேலும் சில குறுந்தகடுகள் வெளியிடப்படுகின்றன 
தி.க. தலைவர் கி.வீரமணிக்கு பூங்கொத்து , நினைவுப்பரிசாக செம்மொழித் தமிழ் நூல் 
மாநாட்டு மலர் வெளியிடப்படுகிறது 
மாநாட்டுத் தீர்மானங்களை வாசிக்கிறார் 

Monday, December 27, 2010

"தனித் தமிழ்நாடு கோரிக்கைக்கான காரணங்களும் தேவைகளும் இன்றும் அப்படியே இருக்கின்றன!"



தமிழர் இறையாண்மை மாநாட்டில் 
தொல்.திருமாவளவன் ஆவேசம்! 

 திசம்பர் 26, 2010 அன்று மலைநகரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழர் இறையாண்மை மாநாடு நடைபெற்றது.  மாநாட்டிற்கு கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமை தாங்கினார்.  திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி சிறப்புரையாற்றினார்.
  மாலை 6 மணியளவில் மாநாட்டுக் கொடியை தொல்.திருமாவளவன் ஏற்றி வைத்ததையடுத்து, மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின. கட்சியின் பொதுச்செயலாளர்கள் சிந்தனைச்செல்வன், இரவிக்குமார், கா.கலைக்கோட்டுதயம், பொருளாளர் முகம்மது யூசுப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டு சிறப்பு மலரை தொல். திருமாவளவன் வெளியிட,
கி. வீரமணி அவர்கள் பெற்றுக்கொண்டார்.  பின்னர் ஐ.நா. அவை போல் அமைக்கப்பட்டிருந்த மேடையில் தமிழர்க் கொடியை கி.வீரமணி ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.

 லட்சக் கணக்கானோர் திரண்டிருந்த தமிழர் இறையாண்மை மாநாட்டில் தொல். திருமாவளவன் ஆற்றிய நிறைவுரை வருமாறு:

அனைவருக்கும் வணக்கம்.
என்னுடைய அழைப்பை ஏற்று இலட்சக்கணக்கில் திரண்டு வந்திருக்கும் உங்களுக்கு முதலில் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.  தேர்தல் நெருங்குகிற சூழலில் எல்லாக் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக இருக்கிறார்கள். ஆனால் நாமோ தமிழர்க்கு இறையாண்மை வேண்டுமென்று கடந்த ஆறு மாத காலமாக தமிழகமெங்கும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து இந்த மாபெரும் மாநாட்டை நடத்திக் கொண்டிருக்கிறோம்.  இந்த மாநாட்டைப் பற்றி பலரும் பலவிதமான கருத்துகளைப் பரப்பி வருகின்றனர்.  தனித்தமிழ்நாடு வேண்டுமென்று கோருகிற மாநாடாக விடுதலைச் சிறுத்தைகள் நடத்துகிறார்கள் என்று சிலர் கருத்துப் பரப்பி உள்ளனர்.  எப்படியாவது தி.மு.க. கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த வேண்டுமென்பதும், விடுதலைச் சிறுத்தைகளைத் தனிமைப்படுத்த வேண்டுமென்பதும் சிலருடைய விருப்பமாக இருக்கிறது.  அதனால் இந்த மாநாட்டின் அடிப்படை நோக்கத்தைத் திசைதிருப்புகிற வகையில் இவ்வாறு வதந்திகளைக் கிளப்பியுள்ளனர். நாங்கள் தனித் தமிழ்நாடு கோரவில்லை.  ஆனால் அவ்வாறு கோருவதற்கு காரணங்களும் தேவைகளும் இருப்பதை மட்டும் நான் சுட்டிக்காட்டுகிறேன்.  திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டபோது, பேரறிஞர் அண்ணா அவர்கள், ""கோரிக்கையை நாங்கள் கைவிட்டாலும், அதற்கான காரணங்கள் அப்படியே உள்ளன'' என்று கூறினார்.  ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் தனித்தமிழ்நாடு கோரிக்கையை வைக்கவுமில்லை, கோரிக்கையை கைவிடவுமில்லை.  கோருவதற்கான காரணங்கள் இருக்கின்றன என்பதையே சுட்டிக்காட்டுகிறோம்.
இந்த உலகில் தமிழருக்கு ஒரு நாடு வேண்டுமென்றும், அது தமிழீழமாக மலர வேண்டும் என்றும், அதனைச் சர்வதேசச் சமூகம் அங்கீகரிக்க வேண்டுமென்றும் கோருவதே இம்மாநாட்டின் முதன்மையான நோக்கம்.  ஈழத் தமிழர்கள் வாழும் வடகிழக்கு மாநிலங்கள் அவர்களது பூர்வீகத் தாயகமாகும்.  அதனை அங்கீகரிக்க வேண்டுமென்பதே ஈழத் தமிழர்களின் கோரிக்கை. அதன் அடிப்படையில்தான் தாயகம், தேசியம், தன்னாட்சி என்கிற கொள்கை முழக்கங்களை விடுதலைப் புலிகள் முன்வைத்தனர்.  தொடர்ந்து அதனை உலகம் தழுவிய அளவில் முன்னெடுத்துச் செல்வது ஒவ்வொரு தமிழரின் கடமை என்று விடுதலைச் சிறுத்தைகள் உணருகிறது.  அதன் வெளிப்பாடாகவே இம்மாநாட்டை ஒருங்கிணைத்திருக்கிறோம்.
தமிழீழம் வேண்டுமென்பது ஈழத் தமிழர்களுக்கு மட்டும் உரிய கோரிக்கை அல்ல. ஒட்டுமொத்தத் தமிழர்களுக்குமான கோரிக்கை.  இந்திய இறையாண்மை என்கிற பெயரில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கக்கூட முடியாத நிலையில் தமிழ்நாட்டுத் தமிழர்கள் சிக்குண்டு கிடக்கிறோம்.  தமிழ்நாட்டில் வாழ்கிற தமிழ்த் தேசிய இனத்திற்கும் இறையாண்மை வேண்டுமென்பதே நமது கோரிக்கையாகும்.  தமிழர்க்கு இறையாண்மை வேண்டுமென்றால் ஒவ்வொரு தேசிய இனத்திற்குமான இறையாண்மையையும் மதிக்கிறோம் என்றே பொருளாகும்.  தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் தமிழ்நாட்டில் பிறமொழி பேசுகிறவர்களும் கணிசமாக வாழ்கின்றனர்.  குறிப்பாக, தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி, உருது போன்ற மொழிகளைப் பேசும் மக்களும் இருநூறு, முந்நூறு ஆண்டுகளுக்கு மேலாக இங்கு வாழ்ந்து வருகின்றனர்.  அவர்களின் மொழி உரிமை, கலாச்சார உரிமை பாதுகாக்கப்பட வேண்டுமென்பதில் விடுதலைச் சிறுத்தைகள் தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளோம்.  இன்னும் சொல்லப்போனால், தமிழ்நாடுதான் அவர்களுக்குத் தாயகமும் ஆகும்.  இந்நிலையில் தமிழர் இறையாண்மை என்பது தமிழ்த்தேசிய இனத்தின் இறையாண்மையாகும்.  என்றாலும் தமிழகத்தில் வாழும் அனைவருக்குமான இறையாண்மையாகவும் அமையும்.  அதாவது தமிழக அரசின் இறையாண்மையையே நாம் இங்கு வலியுறுத்துகிறோம்.
மாநில அரசுகளின் அதிகாரங்களிலும் உரிமைகளிலும் குறுக்கீடுகளும் தலையீடுகளும் இருக்கக் கூடாது. இன்று நிலைமை அவ்வாறு இல்லை.  மாநில அரசுகளின் உரிமைகளை இந்திய அரசு பறித்து வருகிறது.  மத்திய அரசின் ஏஜெண்டுகளாகவே மாநில அரசுகளை இந்திய அரசு நடத்துகிறது. அமெரிக்காவில் உள்ளதுபோல் ஒவ்வொரு மாநில அரசுக்குமான இறையாண்மையோடு மத்தியில் ஒரு கூட்டாட்சியை இங்கு உருவாக்க வேண்டும்.  இந்திய அரசு தற்போது பல கட்சிகளின் கூட்டணி அரசாக இயங்குகிறது.  ஆனால், அது கூட்டரசாக இயங்கவில்லை.  ஒவ்வொரு மாநிலத்திற்கும் முழு அதிகாரங்களையும் உரிமைகளையும் வழங்க வேண்டும்.  அதுதான் ஒவ்வொரு தேசிய இனத்திற்குமான இறையாண்மையாகும்.  ஆனால், காவல்துறை, கல்வித்துறை போன்ற பல துறைகளிலும் இந்திய அரசின் மேலாண்மையே மேலோங்கி இருக்கிறது.  அண்மையில் தேசியப் புலனாய்வுக் கழகம் என்ற ஓர் அமைப்பை இந்திய அரசு உருவாக்கியுள்ளது.  இது மாநிலக் காவல்துறையின் அதிகாரங்களில் தலையிடும் அமைப்பாக உள்ளது.  இந்த அமைப்பை உடனடியாகக் கலைக்க வேண்டும்.  மருத்துவக் கல்வி மற்றும் உயர் கல்வி தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரத்தைப் பறிக்கிற வகையில் இந்திய அரசு ஓர் அமைப்பை உருவாக்கியுள்ளது.  இதுவும் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் செயலாகும்.  இந்த அமைப்பையும் உடனடியாகக் கலைக்க வேண்டும் என்பதுடன் கல்வி தொடர்பான அதிகாரங்களை மாநிலப் பட்டியலில் சேர்க்க வேண்டும்.  அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குகிறபோதே மாநில அரசுகள், மத்திய அரசின் ஏஜெண்டுகளாக இருக்க முடியாது என்று புரட்சியாளர் அம்பேத்கர் தெளிவுபடுத்தியிருக்கிறார்.  அதிகாரங்களை மத்திய பட்டியல், மாநிலப் பட்டியல், பொதுப்பட்டியல் என்று வகைப்படுத்தியிருக்கிறார்.  பொதுப்பட்டியல் என்றால் அவை முழுவதும் மத்திய அரசுக்கே உரியது என்று இந்திய அரசு கருதுகிறது.
இந்நிலையில் பொதுப்பட்டியல் என்ற பட்டியலையே நீக்கிவிட்டு அதிலுள்ள அதிகாரங்களை மாநிலப் பட்டியலில் சேர்க்க வேண்டும்.  அமெரிக்காவில் உள்ளதுபோல் மாநில அரசுக்கு என்று மாநிலக் கொடி வைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும்.  ஒவ்வொரு ஆகஸ்டு 15 அன்றும் மாநிலக் கொடிகளை கோட்டையில் ஏற்ற வேண்டும்.   சனவரி 26 குடியரசு நாளில் மட்டும் இந்திய அரசின் கூட்டரசாக தேசியக் கொடியை ஏற்றலாம். ஆளுநர் பதவியை இந்திய அரசு, மாநில அரசுகளைக் கண்காணிக்கும் ஒரு கங்காணியாகவே நடத்துகிறது. எனவே ஆளுநர் பதவியை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.  மாநிலக் கல்வித் துறை அமைச்சர்களே பல்கலைக்கழக வேந்தர்களாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும்.  வெளியுறவுக் கொள்கையிலும் தேசிய இனச் சிக்கல் தொடர்பான பிரச்சினைகளிலும் அந்தந்த மாநில அரசுகளுடன் கலந்துபேசித்தான் முடிவெடுக்கவேண்டும்.    ஈழ விவகாரத்தில் தமிழக அரசுடன் அல்லது தமிழக மக்களுடன் கலந்துபேசாமல் இந்திய அரசு முடிவுகளை எடுத்தது.  சிங்கள வெறியர்களை ஆதரித்தது.  இது தமிழர் இறையாண்மைக்கு எதிரான செயலாகும்.
இவ்வாறு மாநில அரசுகளின் உரிமைகளைக் கோருவது இம்மாநாட்டின் நோக்கங்களில் ஒன்றாகும். தமிழக அரசுக்கும் இந்த மாநாட்டின் மூலம் தோழமையுடன் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறோம்.  உழைக்கும் ஏழை எளிய மக்களை வெகுவாகப் பாதிக்கிற டாஸ்மாக் மதுக்கடைகளை உடனடியாக இழுத்து மூட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். எண்ணற்ற நலத் திட்டங்களைத் தீட்டி அவற்றை வெற்றிகரமாக நடத்தும் மாண்புமிகு முதல்வர் அவர்களை விடுதலைச் சிறுத்தைகள் நெஞ்சாரப் பாராட்டுகிறோம்.  அதே வேளையில் இளைய தலைமுறையினரைப் பாழ்படுத்துகின்ற மதுக் கடைகளை மூட வேண்டியதையும் சுட்டிக்காட்டுகிறோம்.
தமிழகத்தின் நீர்வளத்தை வெகுவாகப் பாதிக்கச் செய்யும் காரணத்தால் ஆறுகளில் மணல் அள்ளுவதைத் தடுக்க வேண்டும் என்றும், மணல் பயன்பாட்டிற்குப் பதிலாக மாற்றுப் பொருளை கண்டறிய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.  அத்துடன் தமிழக நிலவளங்களைப் பாதிக்கச் செய்வதுடன் நீர் ஆதாரத்தையும் பாதிக்கிற வகையில் தமிழகமெங்கும் வேலிக் கருவைக் காடுகளை முற்றிலுமாக ஒழித்திடச் சிறப்புத் திட்டம் ஒன்றை உருவாக்கிடக் கேட்டுக்கொள்கிறோம்.
காந்தியடிகளை தேசத் தந்தை என்று போற்றும் காங்கிரசார்  மதுவிலக்குக் கொள்கையை  ஏன் ஒரு தேசியக் கொள்கையாக அறிவிக்கக் கூடாது.  மதுவிலக்குத் தொடர்பாக தேர்தல் முடிந்த கையோடு விடுதலைச் சிறுத்தைகள் தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொள்ளும்.  இந்தத் தேர்தலில் திமுகவுடன் தேர்தல் கூட்டணி தொடரும்.  விடுதலைச் சிறுத்தைகள் அனைவரும் தேர்தல் பணிகளைத் தொடங்க வேண்டும்.  இந்தத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை வென்றாக வேண்டும்.  2011ஆம் ஆண்டை விடுதலைச் சிறுத்தைகளின் ஆண்டு என்று நாம் பிரகடனப்படுத்தியிருக்கிறோம். தை முதல் நாள் அன்று 2011ஆம் ஆண்டை வரவேற்கும் வகையில் ஆங்காங்கே இனிப்புகள் வழங்க வேண்டும்.  கடந்த 6 மாத காலத்தில் உறுப்பினர் சேர்க்கையில் இதுவரை 45 இலட்சம் உறுப்பினர்கள் பதிவு செய்துள்ளனர்.  இதில் 15 லட்சம் பேர் தலா 10 ரூபாய் கட்டணம் செலுத்தி தங்களைத் தீவிர உறுப்பினர்களாகப் பதிவு செய்துள்ளனர்.  தமிழகமெங்கிலும் 20 ஆயிரம் கிளைகளைக் கொண்ட பேரியக்கமாக நாம் வளர்ந்திருக்கிறோம்.  தலித்துகளின் விடுதலையும் தமிழீழ விடுதலையும் நமது முதன்மையான இலட்சியம் என்பதை நெஞ்சில் நிறுத்தி களப்பணியைத் தொடருவோம்.
நன்றி வணக்கம்.


ரவிக்குமாரின் நான்கு நூல்கள் வெளியீட்டு நிகழ்ச்சி




புத்தக வெளியீடு : (இடமிருந்து வலம் )மனுஷ்யபுத்திரன் , முனைவர் கே ஏ குணசேகரன் , பேராசிரியர் காதர் மொய்தீன் , முனைவர் மு. நாகநாதன் , தொல். திருமாவளவன் , ரவிக்குமார் , பத்திரிகையாளர் பகவான் சிங் 

ரவிக்குமாருக்கு சால்வை அணிவிக்கும் திருமா 

முனைவர் நாகநாதன் உரையாற்றுகிறார் 

திருமா உரையாற்றுகிறார் 

                                                        ரவிக்குமாரின்  ஏற்புரை

தமிழர் இறையாண்மை மாநாடு தீர்மானங்கள்

காஞ்சிவரம் மாவட்டம், செங்கல்பட்டு அருகேயுள்ள மறைமலை நகரில்  
26-12-2010 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு
எழுச்சித் தமிழர்  தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமையிலும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி  , வி.சி.க பொதுச் செயலாளர்  ரவிக்குமார்ஆகியோர்  முன்னிலையிலும்  நடைபெற்ற
தமிழர் இறையாண்மை மாநாடு 

 தீர்மானங்கள்


1.வீரவணக்கம்
அன்னைத் தமிழையும் அருந்தமிழ் இனத்தையும் ஆதித்தமிழ் மண்ணையும் பாதுகாத்திடவும் மேம்படுத்திடவும், முதல் மொழிப்போர் தொடங்கிய காலமான 1938 இலிருந்து இதுவரையிலும் தமிழகம், தமிழீழம் உள்ளிட்ட அனைத்துலக நாடுகளெங்கிலும் அரசியல், இலக்கியம், பண்பாடு உள்ளிட்ட அனைத்துத் தளங்களிலும் பாடாற்றித் தம்வாழ்வை ஈகம் செய்த அனைத்துச் சான்றோருக்கும், அற வழியிலும் ஆயுத வழியிலும் போராடி களப்பலியான தமிழகத்தைச் சார்ந்த கரும்புலி முத்துக்குமார் உள்ளிட்ட போராளிகளுக்கும் தமிழீழ விடுதலைப்போரில் உயிரீந்த பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து மாவீரர்களுக்கும் விடுதலைச்சிறுத்தைகளின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இம்மாநாடு தமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறது.
அத்துடன், புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், போன்ற மாமனிதர்களின் மகத்தான கொள்கை வழியில், தமிழகத்திலும் பிற இந்திய மாநிலங்களிலும் தீண்டாமை உள்ளிட்ட இந்துத்துவ வன் கொடுமைகளை எதிர்த்து, சாதி ஒழிப்புக் களத்தில் போராடிக் களப்பலியான சாதி ஒழிப்புப் போராளிகள் அனைவருக்கும் இம்மாநாட்டில் திரண்டிருக்கும் இலட்சக்கணக்கான விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம். மேலும் கடந்த 2004 ஆம் ஆண்டு திசம்பர் 26 அன்று நடந்த ஆழிப்பேரலையின் தாக்குதலில் உயிர்நீத்த அனைவருக்கும் இந்நேரத்தில் எமது அஞ்சலியைச் செலுத்துகிறோம்.

2.இறையாண்மையை வென்றெடுப்போம்

உலகிலுள்ள ஒவ்வொரு இனமும், மொழிவழி தேசியத்தின் அடிப்படையில் அல்லது மதவழி தேசியத்தின் அடிப்படையில் தமக்கான நாடு மற்றும் அரசை உருவாக்கி தம்மைத்தாமே ஆட்சி செய்து கொள்ளும் இறையாண்மையைப் பெற்றுள்ளது. மேலும் பல தேசிய இனங்கள் புதிது புதிதான தேசங்களையும், அரசுகளையும் உருவாக்கி தத்தமது இறையாண்மையென்னும் தன்னாட்சி உரிமைகளை வென்றெடுத்து வருகின்றன. இந்நிலையில் உலகமெங்கும் ஏறத்தாழ பத்து கோடி மக்கள் தொகையைக்கொண்ட உலகின் மூத்தக்குடியும் முதல் குடியுமான தமிழ்க்குடி மக்களுக்கென ஒரு நாடு வேண்டும் என்றும் அது தமிழீழமாக மலர வேண்டுமென்றும் கடந்த அரைநூற்றாண்டுக்கும் மேலாக ஆயுதமில்லா அறவழியிலும் ஆயுதமேந்திய அறவழியிலும் தமிழீழ விடுதலைப்போர் நடந்து வருகிறது. அப்போர், தற்போதைய சூழலில் இடைக்காலமாக ஒரு பெரும் பின்னடைவுக்குத் தள்ளப்பட்டிருந்தாலும், அது முற்றும் முழுதாக முடிந்து விட்ட ஒன்றல்ல! ஏனெனில், அது வெறும் மண்மீட்புப்போர் அல்ல ஒரு  தேசிய இனத்தின் இறையாண்மை மீட்சிக்கான போர் ! ஏற்கனவே நாடு, அரசு, ஆட்சி என்னும் கட்டமைப்புக்களைக் கொண்ட இறையாண்மையையுடைய ஒரு தேசிய இனமாக வாழ்ந்த தமிழினம், இழந்து போன இறையாண்மையை வென்றெடுக்கவே இன்று இந்த விடுதலைப் போரை நடத்தி வருகிறது. 
எனவே தமிழ்த்தேசிய இனத்தின் வரலாற்றத் தேவைகளான தாயகம், தேசியம், தன்னாட்சி என்னும் இறையாண்மைக் கோரிக்கைகளை, அனைத்துலகச் சமூகம் முதலில் கொள்கையளவில் இசைந்தேற்க வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது!  ஆயுதப்போராட்ட வடிவம் அங்கே இடைக்காலமாக அழித்தொழிக்கப்பட்டாலும், விடுதலைப்போரட்டத்திற்கான தேவைகளும் காரணங்களும் அழித்தொழிக்க முடியாதவைகளாக உள்ளன. எனவே, இலங்கைத் தீவில் நீடிக்கும் இனச்சிக்கலுக்கு, தமிழீழ விடுதலைதான் ஒரே தீர்வாகும் என்பதை அனைத்துலகச் சமூகம் கொள்கையளவில் ஏற்பதுடன், தமிழீழத்தை மீட்பதற்கு அனைத்து வகை ஆதரவையும் வழங்கிட வேண்டுமென இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.


3.ஈழத் தமிழர்களின் இறையாண்மை

50 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்களப் பேரினவாதத்தை எதிர்த்து அனைத்து  வழிகளிலும் போராடித் தனித் தமிழ் ஈழ அரசை நடத்தி வந்த ஈழத்தமிழர்களின் இறையாண்மையினையும், அதன் வெளிப்பாடான தமிழ் ஈழ அரசையும் உலக நாடுகள் அங்கீகரிக்க தவறிவிட்டன. 
வல்லரசிய நலன்களைக் கருத்தில்கொண்டு, உலக நாடுகளால் ஈழ அரசு அங்கீகரிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டது என்பது அய்.நா.பேரவை தேசிய இனங்களுக்கு வழங்கியுள்ள அரசியல் பாதுகாப்பை மீறிய செயலாகும். உலகிலுள்ள எண்ணற்ற தீவு நாடுகளில், மிகக்குறைந்த மக்கட்தொகையைக் கொண்ட 38 நாடுகளை, உறுப்பு நாடுகளாக அய்.நா.பேரவை ஏற்றுக்கொண்டுள்ளது. மேலும், மிகக்குறைந்த மக்கட்தொகையைக் கொண்ட 14 தீவு நாடுகளை உறுப்பினரல்லாத அங்கீகரிக்கப்பட்ட நாடுகளாக அய்.நா.பேரவை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதனடிப்படையில் தமிழ் ஈழத்தையும் அங்கீகரிக்க வலியுறுத்தி அய்.நா.பேரவைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென இம்மாநாடு தமிழக மற்றும் இந்தியஅரசுகளுக்கும், உலகத்தமிழர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறது.

4.சிங்களமயப்படுத்தும் போக்கிற்கு கண்டணம்

தமிழீழ மக்களின் பூர்வீகத்தாயகமான இலங்கைத்தீவின் வடக்கு-கிழக்கு மாகாணப் பகுதிகளில், நிலையான சிங்களப்படை முகாம்களை நிறுவியும், படையினரின் குடும்பத்தினர் என்ற பெயரில் சிங்களர்களை வெகுவாக குடியேற்றம் செய்தும், ஊர்கள், நகரங்கள், வீதிகள், என யாவற்றின் தமிழ்ப்பெயர்களையும் அகற்றி சிங்களப்பெயர்களைச் சூட்டியும், ஒட்டு மொத்த தமிழீழத்தையும் சிங்கள-பௌத்த மயமாக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் சிங்கள இன        வெறியர்கள்! தமிழீழத்தை ஆக்கிரமிக்கும் இந்தக் கொடூரப்போக்கைத் தடுத்து நிறுத்தவும் அப்புறப்படுத்தவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அய்க்கிய நாடுகள் பேரவை மற்றும் இந்தியா உள்ளிட்ட அனைத்துலகச் சமூகம் உடனடியாக முன்வரவேண்டுமென விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

5.போர்க்குற்றங்களின் மீது விசாரணை

நாடுகளுக்கிடையில் நடக்கும் போர்களாக இருந்தாலும் ஒரு நாட்டுக்குள்ளேயே நடக்கும் உள்நாட்டுப்போர்களாக இருந்தாலும், அப்போரின் போது எத்தகைய மரபுகளை அல்லது விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென்று அனைத்துலக நாடுகளுக்கிடையே சில வரையறைகள் உள்ளன. பள்ளிகள் வழிபாட்டுத்தலங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றின் மீதும் முதியோர், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிப்பெண்கள், நோயாளிகள் போன்றவர்களின் மீதும் தாக்குதல் நடத்தக்கூடாது என்பதும், பொதுமக்களைக் கொத்துக் கொத்தாகக் கொல்லும் சதிநோக்கில் அதிஉயர் நச்சுவகைப் பொருள்களைப் பயன்படுத்தக்கூடாது என்பதும், உயிருடன் பிடிபடும் போராளிகளைக் கையாளுவதாக இருந்தாலும் போராளிகளின் இறந்த உடல்களைக் கையாளுவதாக இருந்தாலும் மனித உரிமைகளை மீறக்கூடாது என்பதும் போர்க்களத்தில் பின்பற்ற வேண்டிய மரபுகளாகும். 
ஆனால், அத்தகைய போர்மரபுகள் எதனையும் மதிக்காமல் காட்டுமிராண்டித்தனமாக ஈவிரக்கமில்லாமல் இலட்சக்கணக்கானத் தமிழர்களைக் கொன்று குவித்த இராஜபக்சேவையும் இராஜபக்சேவின் சகோதரர்களையும், இன்னும் பிற சிங்கள இனவெறிக் கும்பலையும் போர்க்குற்றவாளிகளாக அறிவித்து அனைத்துலக நீதிமன்றத்தின்  போர்க்குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி தண்டனை வழங்கிட அய்.நா பேரவை உள்ளிட்ட அனைத்துலகச் சமூகத்திற்கு இம்மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.

6.போர்க்கைதிகளின் மனித உரிமைகள் பாதுகாப்பு
தமிழீழ விடுதலைப்புலிகளையும், புலிகள் என்ற அய்யத்தின் பெயரில் அப்பாவி இளைஞர் மற்றும் இளம்பெண்களையும் போர்க்கைதிகளாகக் கைது செய்து இருட்டுச் சிறைகளில் அடைத்து விசாரணைகள் ஏதுமின்றி மாந்தநேயமற்ற முறையில் சொல்லொணாக் கொடுமைகளை சிங்கள இன வெறி அரசு ஒவ்வொரு நாளும் அரங்கேற்றி வருகிறது. 

இத்தகைய காட்டுமிராண்டித்தனமான அரசப்பயங்கரவாதப் போக்கைத்தடுத்து நிறுத்தி, இலங்கையில் சிறைப்படுத்தப்பட்டுள்ள தமிழர்கள் அனைவரையும் சட்டப்பூர்வமாக விசாரிக்கவும், போர்க்கைதிகளுக்கான மனித உரிமைகளைப்பாதுகாக்கவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அய்.நா பேரவை உள்ளிட்ட அனைத்துலகச் சமூகத்தை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

7.அகதிகள் மறுவாழ்வு
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையைத் தொடர்ந்து அகதிகளாகச் சிறைப்படுத்தப்பட்ட சுமார் 3.5 இலட்சம் பேரில் இன்னும் ஏறத்தாழ இரண்டு இலட்சம் பேர் முள்வேலி முகாம்களிலேயே அடைக்கப்பட்டுள்ளனர். அங்கிருந்து விடுவிக்கப்பட்ட மக்களும் கூட தமது சொந்த வாழிடங்களை இழந்து விட்டதுடன்,  உடைமைகள் மற்றும் உடனுறை உயிர்களையும் பறிகொடுத்ததனால் நடுத்தெருவில் நிற்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். எனவே, அம்மக்களுக்கு மீள்வாழ்வு அளிக்கும் வகையில் 'மறுவாழ்வு மற்றும் மறுகட்டுமான" பணிகளைத் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மூலமாக நேரடியாக மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென அய்க்கிய நாடுகள் பேரவை உள்ளிட்ட அனைத்துலகச் சமூகத்திற்கு இம்மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.

8. அய்.நா பேரவை அகதிகள் நல ஒப்பந்தங்களில்  கைச்சாத்து

தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய மாநிலங்கள் பலவற்றிலும் அகதிகளாக வாழ்ந்து வரும் தமிழீழ மக்களின் வாழ்நிலை, கொத்தடிமைகளின் வாழ்க்கையை விட மிகுந்த வேதனைக்குரியதாகவுள்ளது. தங்குமிடம், குடிநீர், மருந்து போன்ற அடிப்படை வசதிகளும் போதிய அளவில் இன்றி அல்லல்படும் கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளனர். இதற்கு இந்திய அரசின் தமிழின விரோத அணுகுமுறைகளும் அகதிகளுக்கான அய்.நா பேரவை ஆவணத்தில் கையெழுத்திடாத  நிலைப்பாடுமே காரணங்களாகும். எனவே, இந்திய அரசின் இத்தகைய தமிழர் விரோதப்போக்கை மாற்றிக்கொள்ள வேண்டுமென்பதுடன், அகதிகளுக்கான அய்.நா பேரவை ஒப்பந்தங்களில்  கையெழுத்திட வேண்டுமென்றும் இம்மாநாடு இந்திய அரசை வலியுறுத்துகிறது.

9.தமிழீழ விடுதலைப்புலிகளின் மீதான தடை நீக்கம்

ஈழத்தமிழினத்தின் ஒற்றைப் பாதுகாவல் அரணாகவும் ஆயுதமாகவும் விளங்குகிற தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் ஒரு மகத்தான விடுதலை இயக்கமாகும். வெகுமக்களின் பேராதரவோடும் பங்களிப்போடும் ஆட்சி நிர்வாகக் கூட்டமைப்புடன் கூடிய ஒரு தனி அரசையே நிறுவி, ஆட்சி நடத்திய ஒரு பேரியக்கமாகும். ஆனால், அமெரிக்க வல்லரசின் ஒருங்கிணைப்பில் அனைத்துலகப் பயங்கரவாத ஒழிப்பு எனும் பெயரில், தமிழீழ விடுதலைப்புலிகளின் மீது பயங்கரவாத முத்திரையைக் குத்தி, அவ்வியக்கத்திற்கு எதிராக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தடை விதிக்கப்பட்டு, அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டும் வருகிறது. போர்மரபுகளை மீறாமல், சிங்களப் பொதுமக்கள் மீது தாக்குதல்களை நடத்தாமல் சிங்களப்படையினரோடு மட்டுமே போர் நடத்திய-நடத்தி வருகிற தமிழீழ விடுதலைப்புலிகளை ஒரு வெகுமக்கள் இயக்கமாக இசைந்தேற்பு செய்து, அதன் மீதான அனைத்துலகத் தடைகளை நீக்க வேண்டுமென்று, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட அனைத்துலக நாடுகளுக்கும் இம்மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.

10.அநீதியாக சிறைப்படுத்தப்பட்டோரின் விடுதலை

இராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக்குரிய சராசரி கால அளவையும் தாண்டி, ஏறத்தாழ 20 ஆண்டுகளாகச் சிறையிலிருந்து வரும் நளினி, பேரறிவாளன், உள்ளிட்ட அனைத்து தண்டனைக் கைதிகளையும், கோவை குண்டு வெடிப்பு வழக்கிலும் இன்னபிற வழக்குகளிலும் சுமார் பத்தாண்டுகளுக்கும் மேலாகச் சிறையிலிருந்து வரும் இசுலாமியர் உள்ளிட்ட தண்டனைக்கைதிகளையும் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டுமென இம்மாநாடு கோருகிறது. அத்துடன், எந்த விசாரணையுமில்லாமல் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இலங்கைச்சிறையில் சிக்கி வாடும் தமிழக, கேரளா உள்ளிட்ட தென்னிந்தியர்களை இந்திய நீதிமன்ற விசாரணைக்கு மாற்றி, அனைவரையும் உடனே இந்தியாவுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இம்மாநாடு இந்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது.


11.தமிழக மீனவர்கள் பாதுகாப்பு மற்றும் கட்சத் தீவு மீட்பு

தமிழக மீனவர்கள் மீது இலங்கை இராணுவத்தாலும், இந்திய கடலோர பாதுகாப்புப் படையினராலும் கடல் எல்லை பாதுகாப்பு எனும் பெயரில் தாக்குதல்களும் ஒடுக்குமுறைகளும் தொடர்கதையாகி வருகிறது. கடல் வளத்தில் மீனவர்களுக்குள்ள இயற்கையான உரிமைகளை பறிக்கும் வகையில் இந்திய கூட்டரசின் கடல்சார் சட்டங்கள் உள்ளன. இச்சட்டங்கள் உடனடியாக திரும்பப்பட பெறவேண்டும். 
மேலும் சர்வதேச கடல் பரப்பில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும் உரிமையை நிலைநாட்டும் வகையில் சிறப்பு சட்டம் ஒன்று இயற்றப்பட வேண்டும். தென்தமிழக மீனவர்களுக்குத் தொடர்ந்து அச்சுறுத்தலாக இருக்கும் இலங்கை அரசு மீது இந்தியக் கூட்டரசு பொருளாதாரத்தடையை விதிக்க வேண்டும். கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்த இந்திய இலங்கைக்கு இடையே ஏற்படுத்திக்கொண்டு ஒப்பந்தம் தமிழக மீனவர்களின் பாதுகாப்பையும் - இந்திய கூட்டரசின் எல்லைப் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு ரத்து செய்யப்பட்டு, கச்சத்தீவு தமிழக எல்லைக்கு மீட்டுத்தர வேண்டுமென இந்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

12.இந்தியாவில் உள்ள தேசிய இனங்களுக்கு அங்கீகாரம்

இந்தியா என்பது ஆங்கிலேயர்களின் சுரண்டலுக்கு வசதியாக ஒருங்கிணைக்கப்பட்டு, உருவாக்கப்பட்ட ஒரு நிர்வாகக் கட்டமைப்பேயாகும். வெள்ளையனால் உருவாக்கப்பட்ட இன்றைய இந்தியாவில், தேசிய இன உணர்வுகள் மேலோங்கி வருகின்றன. அதன் அடையாளமாகவே இங்கு மொழிவழி மாநிலங்கள் 1956 இல் உருவாக்கப்பட்டன. அதாவது தேசிய இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் கூர்மையடைந்து வருவதால், இவ்வாறு மொழிவழி மாநிலப் பிரிவினைகள் தோன்றின ஒவ்வொரு தேசிய இனத்திற்குமான மொழி, இன உரிமைகளும், மண்ணுரிமை, கனிமவள உரிமை, ஆற்றுநீர் உரிமை, போன்ற பிற உரிமைகளும் இங்கே இன்னும் கேள்விக்குறிகளாகவே இருக்கின்றன. இவ்வாறான நிலையில், தேசிய இனங்களுக்குரிய அனைத்து உரிமைகளும் அதிகாரங்களும் பகிர்ந்தளிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து, ஒவ்வொரு தேசிய இனமும் இறையாண்மையுள்ள தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும். அதனடிப்படையில் முழுஅதிகாரம் பெற்ற மாநில அரசுகளைக்கொண்ட கூட்டரசாக இந்திய அரசு அமைந்திட மையத்தில் கூட்டாட்சி முறையைக் கொண்டு வர வேண்டுமென விடுதலைச்சிறுத்தைகளின் இம்மாநாடு முன் மொழிகிறது. 

13.மாநிலங்களுக்கு தன்னாட்சி அதிகாரம்
                     
மத்திய - மாநில பொதுப் பட்டியலில் உள்ளடக்கப் பட்டுள்ள அதிகாரங்கள் தவிர ஏனையவை குறித்து சட்டமியற்றும் அதிகாரத்தை மத்திய அரசுக்கே அரசமைப்புச் சட்;டம் வழங்கியுள்ளது. இந்த அதிகாரத்தை மாநில அரசின் வரம்புக்குள் கொண்டு வரவேண்டும் எனவும் குறிப்பாக, இத்தகைய இனங்களின் மீது வரிவிதிப்பு அதிகாரத்தை மாநில அரசிடம் வழங்க அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் எனவும் மாநாடு வலியுறுத்துகிறது. தற்போது திரட்டப்படும்  மத்திய வரிகளிலும் கூடுதல் வரிகளிலும் மாநிலங்களுக்கு எழுபத்தைந்து விழுக்காடு வழங்கப்பட வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது. 

14.மாநிலங்களின் அரசு கொடி

ஆகத்து -15 இந்திய விடுதலை நாள் மற்றும் சனவரி26, இந்தியக் குடியரசு நாளில் இந்திய தேசியக் கொடியுடன் மாநிலத்தின் கொடியை தலைமைச்செயலகம் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஏற்றி வைத்திட வேண்டுமெனவும் இம்மாநாடு இந்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது.  

15.கனிம வளங்கள் மீது மாநிலங்களுக்கு உரிமை

ஒவ்வொரு மாநில எல்லைகளுக்கும் உள்ள கனிம வளங்கள் மீதுள்ள உரிமை அந்தந்த மாநிலங்களுக்கே உரிய உயிராதார உரிமையாகும். இத்தகைய கனிம வளங்கள் மீது மாநிலங்கள் பயன்பெற வேண்டுமெனில், இந்தியக் கூட்டரசு ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டின் அடிப்படையில் பயன்படுத்திக் கொள்ளலாம், ஆனால்  அதற்கான வருவாயை மாநில அரசுகளே பயன்படுத்திக்கொள்ளவும் வகை செய்யப்பட வேண்டும். 
இதற்கு ஏதுவாக இந்தியக்கூட்டரசு கனிம வளங்களின் மீது செலுத்தும் மேலாண்மையை விலக்கிக்கொள்ளும் பொருட்டு, கனிம வளங்கள் மேலாண்மையை  மாநில அரசுகளின் அதிகாரப்பட்டியலுக்கு மாற்றி அறிவிக்க வேண்டுமென இந்திய அரசை இம்மாநாடு வலியுத்துகிறது. 
 16.மருத்துவம், உயர்கல்வி மற்றும் உயராய்வுக்கல்வி
மத்தியில் ஆளும் காங்கிரசு தலைமையிலான கூட்டணி அரசு மாநிலங்களின் உணர்வை மதிக்காமல்  உயர்கல்வி மற்றும் மருத்துவக்கல்வி தொடர்பான அதிகாரங்களை மத்தியில் குவித்துக்கொள்ளும் நோக்கோடு உருவாக்கியிருக்கும் மருத்துவம், உயர்கல்வி மற்றும் உயராய்வுக்கல்வி தொடர்பான அமைப்புகளைக் கலைத்திட வேண்டும் என  இம்மாநாடு வலியுத்துகிறது.   
                                
17.தேசிய புத்தக ஆதரவுக் கொள்கை

நூல்களின் அச்சு, விநியோகம் உள்ளிட்டவற்றை மேலாண்மை செய்யும் வகை                    யில் தற்போது மத்திய அரசு உருவாக்கியிருக்கும் தேசிய புத்தக ஆதரவுக்கொள்கை (யேவழையெட டீழழமள Pசழஅழவழைn Pழடiஉல) மாநில உரிமைகளைப் பறிக்கும் நிலையில் இருப்பதால் அதைக்கைவிட வேண்டும் என இம்மாநாடு கோருகிறது. அதற்கு பதிலாக அந்தக் கொள்கையை மாநில அரசே உருவாக்க வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.

18.தேசிய புலனாய்வு நிறுவனம் கலைக்கப்பட வேண்டும்

தேசியப்  புலனாய்வு நிறுவனம்( National Investigation Agency- NIA)  என்ற அமைப்பு மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் மாநில காவல்துறை தொடர்பான உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது. எனவே இந்த அமைப்பை கலைத்திட வேண்டுமென இந்திய அரசை இம்மாநாடு வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

19.வெளியுறவுக் கொள்கை முடிவுகளில் மாநிலங்களின் நலன்

மத்திய அரசு வெளியுறவுக்கொள்கை தொடர்பான முடிவுகளை எடுக்கும் போதும் அண்டை நாடுகளுடன் ஒப்பந்தங்கள் செய்து கொள்ளும் போதும் சம்பந்த்தப்பட்ட மாநிலங்களில் உள்ள தேசிய இனங்களின் உரிமைகள் தொடர்புடையவையாக இருந்தால் அந்த தேசிய இனத்தைச் சார்ந்த மக்களின் கருத்தைக் கேட்ட பிறகே முடிவை எடுக்க வேண்டும். இதற்கு மாநில அரசு மட்டுமின்றி அங்கீகாரம் பெற்ற அனைத்து அரசியல் கட்சிகளும் இடம்பெறக்கூடிய அமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.  
 
20.வெளிநாடுகளில் தூதரகங்களில் தமிழ் அதிகாரிகள்

கடல் கடந்து திரவியம் தேடல் என்பது தமிழர்களின் பொருளாதார வாழ்வில் ஒரு பிரிக்கமுடியாத அம்சமாக இருந்து வருகிறது. எனவே தான் கடல் கடந்த நாடுகளில் தமிழர்கள் இன்றும் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது எழுந்துள்ள பொருளாதார மாற்றங்களினால் இலட்சக்கணக்கான தமிழர்கள் வெளிநாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். ஆனால், அவர்கள் பாதுகாப்பாக தங்கி பணிபுரியவில்லை என்ற செய்திகள் நாள்தோறும் வந்தவண்ணம் உள்ளன. 
அப்படி சென்ற அவர்கள் அந்நிய நாட்டில் பணிகளை இழந்து, உயிருக்கும் பாதுகாப்பின்றி இருக்கின்ற நிலையில் அந்நிய நாடுகளில் அவர்களுக்கு இருக்கக்கூடிய ஒரே நம்பிக்கை இந்திய தூதரகங்கள்தான். ஆனால் கெடு வாய்ப்பாக இந்திய தூதரகங்கள் வெளிநாடுவாழ் - பணிபுரியும் தமிழர்களுக்கு சரிவர உதவுவதில்லை என்பதுடன், தமிழர்களிடம் பாராமுகமாய் பொறுப்பற்று நடந்து கொள்கின்றன என்கின்ற அதிர்ச்சி தரக்கூடிய தகவல்கள் வருகின்றன. 
இதற்கு காரணம் அந்த தூதரகங்களில் பெரும்பாலும் தமிழர் அல்லாதவர்கள் பணிபுரிவது தான். மொழி வேற்றுமைகளால் அவர்கள் இப்படி கடுமையாக நடந்து கொள்வதை இந்த மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. மேலும் வெளிநாடுவாழ் மற்றும் பணிபுரியும் தமிழர்களின் நலனைக் காக்கும் வகையில் தமிழர்கள் பெரும்பான்மையாக பணி செய்யும் நாடுகளில் உள்ள தூதரகங்களில் தமிழ் அதிகாரிகள் பெருமளவில் நியமிக்கப்பட வேண்டும் என இந்த மாநாடு இந்திய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
மேலும் லட்சக்கணக்கான ரூபாய் சம்பளமாக வழங்கப்படும் என்றும் தங்கும் இடம் ஏற்பாடு செய்து தரப்படும் என்று பொய்;யான வாக்குறுதிகளை அளித்து இளைஞர்களை ஏமாற்றி வெளிநாடுகளுக்கு அனுப்பி மோசடியாக பணம் சம்பாதிக்கும் முகமைகளுக்கு தடை விதித்து அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இப்போது இருக்கக்கூடிய அனைத்து முகமைகளையும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டுமென இந்த மாநாடு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

21.தாய்மொழி வழிக் கல்வி

கல்வி என்பது உலகிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் இயற்கையான அடிப்படை உரிமையாகும். ஒவ்வொருவரும் அவரவர் தாய்மொழியில் கல்வி கற்கவும் அதன் மூலம் உலகை புரிந்து கொள்ளவும் சமூகத்துடன் சுமூகமாக கலந்துறவாடவும் சமூக வளர்ச்சியோடு தம்மை மேம்படுத்திக்கொள்ளவும் கல்வி அடிப்படையான ஓர் உரிமையாகும். தாய்மொழி வழியில் கற்பதும், கற்பிப்பதும் அறிவு வளர்ச்சிக்கு அடிப்படையாக இருக்கும் என்பது உலகம் முழுவதும் பல்வேறு ஆய்வுகள் மூலம் நிறுவப்பட்டுள்ளன. இந்த அறிவியல் ஆய்வு முடிவுகளை இந்தியக் கூட்டரசு ஏற்றுக்கொண்டு எல்லா குடிமகனும் அவரவர் தாய்மொழி வழியில் முழுமையான கல்வி பெற இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தகுந்த காப்புகளை உருவாக்க வேண்டும்.
 அ) அதற்கு, முதற்படியாக கல்வி மீது தனக்குள்ள அதிகாரத்தை இந்திய கூட்டரசு விட்டுக்கொடுக்கும் வகையில் கல்வித்துறையை முழுமையாக அரசமைப்புச் சட்டத்தின் பின் இணைப்பில் உள்ள பொதுப்பட்டியலில் இருந்து விடுவித்து மாநில அதிகாரங்களுக்கான பட்டியலில் இணைக்க வேண்டும். 
ஆ) இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள 1600க்கும் மேற்பட்ட மொழிகளும் தமது இறையாண்மையைக் காத்துக்கொள்ளும் வகையில், அந்தந்த மொழிகளின் மீது பிற மொழிகளின் ஆதிக்கத்தை ஒழிக்கவும் மொழி இன நலன்களுக்கான தேசிய பேராயம் ஒன்று அமைக்கப்பட்டு, அதன் மூலம் “தாய்மொழி வழிக்கல்வி கண்காணிப்பிற்கும் பாதுகாப்பிற்கும் உட்படுத்த இந்திய அரசமைப்புச் சட்டத்தில் புதிய திருத்தம் கொண்டுவர வேண்டுமென இந்திய, தமிழக அரசுகளை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

22.எங்கும் தமிழ் எதிலும் தமிழ்

தமிழகத்தில் தமிழ்மொழியைக் காக்கும் வண்ணம் தமிழ்ப்பெயர் ஏற்போருக்கு ‘பெயர்மாற்ற அரசிதழ் பதிவிற்கு முழு கட்டண விலக்கு அளிக்க வேண்டும். 
தமிழ்ப்பெயரில்லாத திரைப்படங்களுக்கு இரட்டிப்பு வரி விதிக்க வேண்டும். 
வணிக நிறுவனங்கள் தமிழ்ப்பெயர் பலகைகள் வைப்பதை தமிழ்நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டும். 
ஆங்கில வழி மழலையர் வகுப்புகள (Pசந.முபுஇ டு.மு.புஇ ரு.மு.பு) முற்றிலும் நீக்கப்பட வேண்டும்.
மருத்துவம்,  பொறியியல், சட்டம் முதலிய உயர்கல்வி, தமிழ்வழியில் வழங்கப்பட வேண்டும் என்று இந்த மாநாடு வலியுத்துகிறது.
தமிழகத்தில் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எனும் நிலையை எட்ட தமிழக அரசின் ஆட்சி மொழியாக தமிழ் இருப்பதுபோல, உயர்நீதிமன்றம் மற்றும் அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் தமிழே வழக்காடு மொழியாக இருக்க வேண்டும். 
அதற்கு தமிழக அரசால் எடுக்கப்பட்ட முன்முயற்சி அப்படியே தேங்கிப்போய் உள்ளது. எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இதற்கு முனைப்புக்காட்டி வழக்காடு மொழியாக தமிழை சட்டப்பூர்வமாக அறிவிக்க வேண்டுமென இம்மாநாடு வலியுத்துகிறது. 

23.மனிதவள மேம்பாட்டுத்துறை பட்டியலில் தமிழ் செம்மொழி

தமிழ்மொழியை “செம்மொழி” என ஏற்பளித்த இந்திய கூட்டரசுக்கு இம்மாநாடு நன்றியை தெரிவித்துக்கொள்வதுடன், தமிழ்மொழியை செம்மொழியாய் அறிவிக்கச் செய்ய உறுதுணையாக இருந்த தமிழக முதல்வர் சமத்துவப் பெரியார் கலைஞர் அவர்களுக்கு இம்மாநாடு நன்றி தெரிவித்துக்கொள்கிறது. மேலும், தமிழ் செம்மொழி என்பதை இந்தியக் கூட்டரசின் பண்பாட்டுத்துறையின் பட்டியலில் இருந்து மனிதவள மேம்பாட்டுத்துறையின் பட்டியலில் சேர்த்து அறிவிக்க வேண்டும். அதன் மூலம் உலக நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழுக்கு ஓர் இருக்கை அமைத்து, தமிழில் உள்ள அரிய இலக்கியங்களை உலக மொழிகளில் மொழிபெயர்க்கவும், பதிப்பித்து வெளியிடவுமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என இந்திய அரசை இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. 
24.தமிழக எல்லைகள் மீட்பு 

1956-ம் ஆண்டு நடந்த மாநிலங்கள் எல்லை வரையறையின் போது தமிழகத்தின் பல பகுதிகள், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களோடு இணைக்கப்பட்டுவிட்டன. இது தமிழ் மக்களின் இறையாண்மைக்கு எதிரான செயலாக இம்மாநாடு கருதுகிறது. எனவே, தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும், தேவிகுளம், பீர்மேடு, மூணாறு முதலிய பகுதிகளிலும், கர்நாடக மாநிலத்தில் சேர்க்கப்பட்டுள்ள கோலார் தங்கவயல் பகுதியிலும் பொதுவாக்கெடுப்பு நடத்தி, அவ்வாக்கெடுப்பின் முடிவின் அடிப்படையில் இப்பகுதிகள் வாழும் தமிழர்கள் விருப்பப்படி இப்பகுதிகள் தமிழ்நாட்டின் எல்லைக்குள் கொண்டுவரப்பட வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. 

25.தமிழகத்தில் உள்ள மொழிச் சிறுபான்மையினர் பாதுகாப்பு

பிரிட்டிசார் ஆட்சிக்கு முன்பிருந்தே தமிழகத்தில் திராவிட மொழிக் குடும்பத்தை சேர்ந்த பல இலட்சம் பேர் தமிழகத்தில் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். இரண்டு, மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாக வாழ்ந்துவரும் தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு மற்றும் சிறு மொழிகளைப் பேசும் பழங்குடிகள் ஆகியோர் தமிழகத்தின் தாயக மக்களாகவே கருதப்பட்டு, அவர்களின் தாய் மொழி பாதுகாக்க அவர்களின் விருப்பப்படியான திட்டங்கள் தீட்டப்பட வேண்டுமென தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

26.நதிநீர் உரிமை

ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில எல்லைக்குள் ஓடும் நதிகள் அந்தந்த மாநிலத்தின் ஆளுகைக்கு உட்படும், அதற்கு முன்னோட்டமாக தமிழக அரசு தமிழக எல்லைக்குள் ஓடும் நதிகளைப் பாதுகாக்கும் வகையிலும் நீர்வள ஆதாரங்களைப் பாதுகாக்கும் வகையிலும் சட்டப்படி செயல் அதிகாரம் பெற்ற நதிகள் மற்றும் நீர்வள பாதுகாப்பு ஆணையம் உருவாக்கப்பட வேண்டும். 
ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கிடையே ஓடும் நதிகள் அனைத்தும் இந்திய கூட்டரசின் உடைமையாக்கப்பட வேண்டும். அதற்கு ஏதுவாக, மாநிலங்களுக்கிடையே ஓடும் நதிகள் அனைத்தையும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பின் இணைப்பில் கூட்டரசின் பட்டியலில் அறிவிக்க வேண்டும்.
ஆறுகள், நீர் நிலைகள், நீர்வழிகள் ஆகியன இயற்கை அன்னையின் உயிர்நாடிகள் இவற்றின் இயற்கைத் தன்மையில் எந்த ஒரு குறைபாடு ஏற்பட்டாலும் அது நிகழ்காலம் மற்றும் எதிர்கால சந்ததியை கடுமையாக பாதிக்கும். எனவே ஆறுகள், கனிமவள வரையறையில் இருந்து நீக்கப்பட வேண்டும். ஆறுகளில் மணல் அள்ளுவது தடை செய்யப்பட வேண்டும். மணலுக்கு மாற்றான பொருளை மக்களிடையே பிரபலப்படுத்த வேண்டும். மேலும், ஆறுகளிலிருந்து மணல் கொள்ளயடிப்போர் மீது ஆயுள் தண்டனை வழங்கக்கூடிய அளவில் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். அதைப்போலவே ஏரிகள் மற்றும் குளங்கள் போன்ற நீர் நிலைகளில் கருவேல மரங்கள் வளர்ப்பது போன்ற நீர் வள ஆதாரங்களை சீர்குலைக்கும் நடவடிக்கை முற்றிலும் தடுக்க வேண்டும்.

27.தமிழக நிலங்களை பாதுகாக்க

தமிழகத்தில் உள்ள நிலங்கள் அனைத்தும் இன்றைக்கு கேட்பாரின்றி வடஇந்தியர்கள், அன்னிய நாட்டு முதலாளிகள் மற்றும் இவர்களின் நிறுவனங்களால் அபகரிக்கப்பட்டு வருகின்றன. மேலும், வேளாண் விளைநிலங்களும் “ரியல் எஸ்டேட்” என்ற பெயரில் ஊக வணிகத்திற்கு உட்படுத்தப்பட்டு, வீட்டு மனைகளாகவும் தொழில் வளாகங்களாக மாற்றுவதாக் கூறி தரிசாக்கப்பட்டு வருகின்றன. இதனால் வேளாண் தொழில் தழைக்கும் என்பதற்கான நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாய் மறையத் தொடங்கி விட்டது. இந்நிலை தொடருமானால் சமூக உணவுச் சங்கிலி என்பது அற்றுப்போய்விடும் என்கிற மாபெரும் அச்சுறுத்தல் பெருகிவருகிறது. எனவே, தமிழக நிலங்களின்மீது தமிழ்நாடு அரசு தன்னுடைய சட்டப்பூர்வமான ஆளுமையை கொண்டுவர வேண்டும். அதற்கு ஐந்து பரிந்துரைக்கான இம்மாநாடு முன்வைக்கிறது.
அ) தமிழகத்தில் உள்ள அனைத்து நிலங்களையும் மாநில அரசின் மேலாண்மைக்கு உட்படுத்தும் வகையில் “தமிழக நில ஆணையம்” ஒன்று உருவாக்கப்பட வேண்டும். இவ்வாணையத்தின் வழியாக விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கான நிலங்கள் அனைத்தும் பட்டியலிடப்பட்டு கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும். 
இவ்வகை நிலங்களின் விற்பனை மற்றும் பரிமாற்றங்கள் எதுவாயினும் இவ்வாணையத்தின் இசைவின்றி இறுதி செய்யப்படக்கூடாது. இவ்வாணையத்தில் அரசியல் கட்சிகளின் பிரதிநிகள், சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் முதலானோர் இடம் பெற்றிருக்க வேண்டும்.
ஆ) விவசாய நிலங்களை விவசாய பயன்பாடுகளுக்கு மட்டும் விற்கவோ - வாங்கவோ முடியும் என்ற சட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டுவர வேண்டும். நிலங்கள் தொடர்ச்சியாக வடஇந்திய, வெளிநாட்டு நிறுவனங்கள் கைப்பற்றுவதைத் தடுக்க, சீனாவில் நிகழ்ந்த அந்நிய நிறுவனங்களின் நிலபறிப்பு மோசடியை படிப்பினையாகக்   கொண்டு நிதி மூலதன நோக்கிலான தமிழ்நாடு அரசின் தொழிற்கொள்கை மாற்றியமைக்கப்பட வேண்டும். பெரிய அளவுகளிலான தொழில் முனைவுகள், மாபெரும் பொருளாதார அச்சுறுத்தல்களை உருவாக்கியுள்ள இச்சூழலில், நகர்புறம் சார்ந்த தொழில்துறை வளர்ச்சி என்பது புதுவித காலனியத்தை உருவாக்கியுள்ளது. இது, தமிழர்களின் வாழ்வுரிமையை கேள்விக் குறியாக்கி யுள்ளதால், பெருநகர் சார்ந்த தொழில்கள் பரவலாக்கப்பட வேண்டும்.
இ) தமிழ்நாடு முழுவதும் தொழில் முனைவுகள் பரவலாக்கப்படும் நிலையில்  அதற்கு “நில ஆணையம்” அங்கீகரிக்கும் தரிசு நிலங்களையே பயன்பாட்டிற்காக அனுமதிக்கப்பட வேண்டும்.
ஈ) கோயில் நிலங்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்படவேண்டும். நாட்டுடமையாக்கப்பட்ட அந்நிலங்கள் ஏழைத் தமிழ் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அதற்கு ஏதுவாக இந்திய அறக்கட்டளைகள் சட்டம் மற்றும் தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத்துறை சட்டங்களில் திருத்தங்கள் ஏற்படுத்த வேண்டும்.
உ) தமிழகத்தின் வேளாண் தொழிலை சீர்குலைத்து, விதைகள் மற்றும் உணவு உற்பத்தி முறையை ஏகாதிபத்திய மூலதன மற்றும் விதை நிறுவனங்களை சார்ந்து இருக்கும்படி உருவாக்கப்பட்டதன் விளைவாக தமிழகத்தில் வேலிக் கருவை மரங்கள் விதைக்கப்பட்டன என்பதை சுற்றுச்சூழல் ஆய்வுகள் நிறுவியுள்ளன. இதனால் தமிழகத்தின் தென்கிழக்குக் கடலோர மாவட்டங்களின் ஒட்டுமொத்த வேளாண் நிலங்களும் தரிசாகிப் போயின. மேலும் இது தமிழகத்தி;ன் பிற மாவட்டங்களுக்கும் பரவிக் கிடக்கிறது எனவே, தமிழக விவசாயிகளின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கவும், நிலத்தடி நீராதாரத்தைப் பாதுகாக்கவும் வேலிக்கருவை மரங்களை ஒழிக்க சிறப்பு திட்டத்தை உருவாக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுத்துகிறது.

28.சென்னை குடிசைப் பகுதி மக்களின் வாழ்வுரிமைப் பாதுகாப்பு

சென்னை மாநகர் உருவாக்கப்பட்ட நாள் முதல் தலித் மற்றும் மத சிறுபான்மையினர் மாநகரின் உருவாக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் ஆதார ஆற்றலாக இருந்து வருகின்றனர். இம்மக்கள் இல்லையெனில் சென்னை என்பது இன்று உலகம் முழுவதும் தமிழர்களின் பெருமைமிகு பெருநகரமாக மாறியிருக்காது, ஆனால் எந்த மக்கள் இம்மாநகரை உருவாக்கினார்களோ அவர்கள் சென்னை மாநகரை விட்டு வெளியேற்றப்படுவது இன்று தொடர்ந்து கொண்டிருக்கிறது. 
சென்னை நகராக இருந்த போதும் மாநகராக வளர்ந்த போதும் பின்பு பெருநகராக மாறிய போதும் ஒவ்வொரு வளர்ச்சிப் படிநிலையிலும் இம்மக்கள் வெளியேற்றப்பட்டு வந்துள்ளனர். குடிசை மக்களின் வாழ்விடங்களை மேம்படுத்த தொடங்கப்பட்ட தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் இம்மக்களை சென்னையை விட்டு வெளியேற்றும் வாரியமாக மாறியுள்ளது. எனவே சென்னையில் உள்ள குடிசைப்பகுதி மக்களுக்கு அவர்கள் வாழுகின்ற பகுதியிலேயே வீடுகளைக் கட்டிக்கொள்ள தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும். அப்படி கட்டாயமாக வெளியேற்றப்படும் குடிசைப் பகுதி மக்களுக்கு அவர்கள் குடியிருந்த இடத்திற்கு அருகிலேயே கலைஞர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடுகளைக் கட்டித்தர வேண்டும் என தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்திக் கொள்கிறது. 

29.முழு மதுவிலக்கு

மது உள்ளிட்ட போதைப் பழக்கவழக்கங்களால் நாடு தழுவிய அளவில் ஏழை எளிய மக்களின் வாழ்வு வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. எண்ணற்ற பல குடும்பங்களின் உறவுகள் சிதைந்து சிதறும் நிலை ஏற்படுகிறது. குறிப்பாக இளைய தலைமுறையினர் பள்ளிப்பருவத்திலிருந்தே குடிப்பழக்கத்திறகும் இன்னும் பிற போதைப் பழக்கங்களுக்கும் அறிமுகமாகின்றனர். 
இதனால் அவர்களின் எதிர்காலம் இருண்டு பாழாகிறது. இதற்கு அரசின் கொள்கை முடிவுகளே காரணமாக அமைகின்றன என்பதை வேதனையோடு விடுதலைச்சிறுத்தைகள் சுட்டிக்காட்டுகிறது. தமிழகத்தில்  ஏழை எளியோரின் நலன்களுக்கென எண்ணற்ற பல திட்டங்களைத்தீட்டி தமிழக அரசு அவற்றை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. எனினும் தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடைகள்  தலித்துகள், மீனவர்கள் மற்றும் பிற மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களை வெகுவாக பாதிக்கச் செய்கின்றன. 
எனவே மாண்புமிகு முதல்வர் கலைஞர் அவர்கள் அடித்தட்டு மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு முழு மதுவிலக்குக் கொள்கையை ஏற்று அனைத்து மதுக்கடைகளையும் உடனடியாக இழுத்து மூட வேண்டுமெனவும் பிற போதைப்பொருட்களின் புழக்கத்தை தீவிரமாக தடுத்திட வேண்டுமெனவும் இம்மாநாடு தோழமையோடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. அத்துடன், டாஸ்மாக் மதுக்கடைகளில் பணியாற்றும் அனைவருக்கும் பிற துறைகளில் தகுதிக்குரிய மாற்று வேலைகளை வழங்க வேண்டுமெனவும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது. தேசத்தந்தை என காந்தியடிகளைப் போற்றும் இந்திய ஆட்சியாளர்கள் காந்தியடிகளின் மதுவிலக்குக் கொள்கையை இந்திய அரசின் தேசியக் கொள்கையென ஏன் அறிவிக்கக்கூடாதென இம்மாநாடு கேள்வியெழுப்புகிறது. இந்நிலையில் முழு மதுவிலக்குக் கொள்கையை அனைத்திந்திய அளவில் நடைமுறைப்படுத்திட சட்டம் இயற்ற வேண்டுமென இந்திய அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. 

30.விக்கிலீக்ஸ் ஜுலியன் அசாங்கேவுக்குப் பாராட்டு

உலகிலுள்ள ஒவ்வொரு நாட்டின் இறையாண்மைக்குள்ளும் மூக்கை நுழைத்து, தனது வல்லாதிக்கத்தை திணித்து வரும் அமெரிக்க வல்லரசின் உச்சந்தலையில் இடி இறக்கியதைப்போல் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளி நாடுகளின்  அதிஉயர் கமுக்க நடவடிக்கைகளை விக்கிலீக்ஸ் எனும் இணைய தளத்தினூடாக அம்பலப் படுத்தியிருக்கிறார், ஆஸ்திரேலியாவைச் சார்ந்த இணையத்தள ஊடக வியலாளர் ஜுலியன் அசாங்கே! 
அவரின் இந்த அளப்பெரிய செயல் ஊடகவியல் அறத்திற்கு எதிரானது அல்ல! தனிநபரின் கமுக்கங்களை அம்பலப்படுத்துவதில் அரசும் ஆட்சியாளர்களும் ஊடகவியல் அறத்திற்கு ஊறு விளைவிக்காது என்று ஞாயப்படுத்தப்படுமேயானால் அமெரிக்க போன்ற வல்லரசியல் கொடு நெறியாளர்களின் கமுக்கங்களை அம்பலப்படுத்துவதிலும் ஞாயமுண்டு என விடுதலைச்சிறுத்தைகள் நம்புகிறது. 
எனவே, அமெரிக்க வல்லரசின் வல்லாதிக்க இடுப்பை முறித்து, வளரும் நாடுகளின் இறையாண்மைக்கு வலுவான பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ள ஜுலியன் அசாங்கேவை இம்மாநாடு நெஞ்சார பாரட்டுகிறது. அவருடைய உயிருக்கு உரிய பாதுகாப்பை வழங்கிட வேண்டுமெனவும் ஐ.நா பேரவைக்கு இம்மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.

Saturday, December 25, 2010

ஹரிஜன்கள் அல்ல தலித்துகள்




தமிழகத்துக்கு ராகுல் காந்தி வந்துசென்றதைப்பற்றி ஊடகங்கள் பரபரப்போடு  செய்திகளை வெளியிட்டுவருகின்றன.இங்குவந்தவர் காங்கிரஸில் இருக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நிர்வாகிகளைத் தனியே அழைத்துப் பேசியதாகச் செய்திகள் வந்தன. அதுகுறித்து என்னிடம் குமுதம் ரிப்போர்ட்டர் இதழின் நிருபர் ஒருவர் கருத்து கேட்டார். இப்படி தனியே சந்திப்பதைப் பற்றி காங்கிரஸ்காரர்களே அதிருப்தி அடைந்திருப்பதாகவும் அதுபற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்றும் கேட்டார். “ காங்கிரஸ் கட்சி தாழ்த்தப்பட்டவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து வந்திருக்கிறது. திரு.கக்கன் அவர்களை உள்துறை அமைச்சராக்கியது. மரகதம் சந்திரசேகர் மற்றும் எல்.இளையபெருமாள் ஆகியோரை மாநிலத் தலைவர்களாக நியமித்தது. அதன் தொடர்ச்சியாகவே இப்போது ராகுல் காந்தியும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் தர விரும்புகிறார் என நினைக்கிறேன். இப்படி ஒரு தேசிய கட்சி தாழ்த்தப்பட்டவர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது நல்லதுதான். அதைப் பார்க்கும் மற்ற மாநிலக் கட்சிகள் தாங்களும் அப்படிச் செய்தாகவேண்டும் என்று எண்ணக்கூடும்.அது அந்த மக்களுக்கு நன்மை பயப்பதாகவே இருக்கும்.” என நான் சொன்னேன்.

நல்லவர்கள் அரசியலில் ஈடுபடவேண்டும் என்ற ராகுலின் கருத்துபற்றிய எனது எதிர்வினையை ஹலோ எஃப் எம் வானொலியில் கேட்டார்கள். “ நல்லவர்கள் என்பதற்கு அவர் என்ன விளக்கம் வைத்திருக்கிறாரோ தெரியவில்லை. படித்தவர்கள், மேல்தட்டு வகுப்பைச் சேர்ந்தவர்கள்- அவர்களைத்தான் அவர் நல்லவர்கள் என்று கருதமாட்டார் என நம்புகிறேன். நாட்டுப்பற்று மிக்கவர்கள். எளிமையாக இருப்பவர்கள். மக்களுக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொள்பவர்கள்.அப்படியானவர்கள் இப்போது அரசியலில் குறைந்துவிட்டார்கள். இதற்குத் தொண்டர்கள் மற்றும் பொது மக்களின் மனோபாவமும் மாறவேண்டும். எப்படியான வாழ்க்கை நெறியைப் பின்பற்றவேண்டும் என்பதை சங்க காலத் தமிழர்கள் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள். நாம் அதிகம் மேற்கோள் காட்டும் கணியன் பூங்குன்றனின் ‘ யாதும் ஊரே .. என்ற பாடலில் வரும் கடைசி வரிகள் மிகவும் முக்கியமானவை. “ பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே ‘ என்ற வரிகள் நமக்கு மிக முக்கியமான செய்தியைச் சொல்கின்றன. சிறியோரை இகழ்தல் இலமே என்பதை நாம் எல்லோருமே ஏற்றுக்கொள்வோம்.   ஆனால் பெரியோரை வியத்தலும் இலமே என்பதை அப்படி எளிதில் ஏற்க மாட்டோம். அரசியலில் மட்டுமின்றி வாழ்வின் அனைத்துத் தளங்களிலுமே இந்த பண்பு மேலோங்கி இருக்கிறது. ' ஹீரோ வொர்ஷிப் ‘ எனப்படும் தனிமனித வழிபாட்டைக் களைய வேண்டியது உடனடித் தேவை ஆகிவிட்டது. மாமனிதர்களைக் கொண்டாடுவது வேறு தனிமனிதர்களை பூஜிப்பது என்பது வேறு. பெரியோரை வியத்தல் இலமே என முடிவு செய்துவிட்டால் தானாகவே இந்த கட் அவுட் கலாச்சாரம் முடிவுக்கு வந்துவிடும்.எளிமையும் நாட்டுப்பற்றும் மக்களுக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொள்ளும் உணர்வும் கொண்டவர்கள் காங்கிரஸில் இருப்பார்கள். அத்தகையவர்களைக் கண்டறிந்து அவர்களை முன்னிலைப்படுத்த ராகுல் காந்தி அவர்கள் முன்வரவேண்டும். காங்கிரஸின் பொதுச் செயலாளராக இருக்கும் ராகுல் முயற்சித்தால் இது சாத்தியம்தான்” என நான் பதில் சொன்னேன்.

தமிழகத்தின் முதல்வராக தலித் ஒருவரை ஆக்குவோம் என ராகுலும் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் பேசி வருகின்றனர். இது மிகவும் வரவேற்கத்தக்கதாகும். ஆனால் அவர்கள் தலித் என்ற சொல்லின் அரசியல் பரிமாணத்தைப் புரிந்துகொண்டு பயன்படுத்துகிறார்களா என்று தெரியவில்லை. வர்ணாசிரமக் கோட்பாட்ட்டை அடிப்படையாகக் கொண்ட வைதீக இந்து மதத்தை நிராகரிப்பதே தலித் அடையாளம். அதைப் புரிந்துகொள்ளவேண்டுமெனில் அவர்கள் அம்பேத்கரின் ‘ இந்துயிசத்தின் தத்துவம்’ என்ற நூலைப் படிக்கவேண்டும். சாதி ஒழிப்பை தனது குறிக்கோளாகக் கொண்டதே தலித் அடையாளம். அதன் ஆழத்தை விளங்கிக்கொள்ள அவர்கள் அம்பேதகரின் ‘ சாதி ஒழிப்பு ‘ என்ற நூலைப் படிக்கவேண்டும். அவற்றையெல்லாம் படித்தால் அவர்களுக்கு ஒரு உண்மை  புலப்படும். காங்கிரஸில் இந்து மதத்தை நிராகரிக்கிற சாதி ஒழிப்பை வலியுறுத்துகிற ' தலித்’ எவரும் இல்லை என்ற உண்மைதான் அது.காங்கிரஸில் மட்டுமல்ல இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்ட எந்தவொரு அரசியல் கட்சியிலுமே ’ தலித்’ ஒருவர் இருக்க முடியாது. அதனால்தான் தனியே தலித் கட்சிகள் உருவாகி இருக்கின்றன.   அரசியல் கட்சிகளில்  தாழ்ததப்பட்டவர்கள் இருக்கலாம், ஹரிஜன்கள் இருக்கலாம், தலித் இருக்க முடியாது.
அதைத்தான் அம்பேத்கரின் மிக முக்கியமான ஆய்வு நூலான ‘ காந்தியும் காங்கிரசும் தீண்டாத மக்களுக்குச் செய்ததென்ன” என்ற நூல் எடுத்துக்காட்டுகிறது.
ஏனென்றால் அரசியல்  கட்சிகள் இந்துமதத்தை எதிர்த்துப் போராடவில்லை . சாதி ஒழிப்புக்காகப் பாடுபடவும் இல்லை . உண்மையிலேயே அரசியல் கட்சிகள் சாதி ஒழிப்பை ஏற்றுக்கொள்வார்களெனில் முதலில் தமது கட்சியில் உள்ளவர்கள் தமது பெயர்களில் சாதிப் பெயர்களை பின்னொட்டாகப் பயன்படுத்தக்கூடாது என அறிவிக்கவேண்டும்.

 காங்கிரஸ் தலைவர்கள் சாதி ஒழிப்பை ஏற்பது உண்மையென்றால் பாபு ஜகஜீவன்ராமைப் பிரதமராக விடாமல் தடுத்த பாவத்துக்குப் பிராயச்சித்தமாக அடுத்த பிரதமராக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை ஆக்குவோம் என அறிவிக்கவேண்டும்.

காங்கிரஸ் தலைவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களை வாக்கு வங்கியாகப் பார்த்து அதைச் சுரண்டலாம் என எண்ணக்கூடாது . காந்தி இன்றில்லை, அதுபோலவே காந்திகால ஹரிஜன்களும் இன்றில்லை, தமிழகத்தில் இருப்பவர்கள் விழிப்புணர்வுபெற்ற தலித்துகள்.அதை அவர்கள் புரிந்துகொண்டால் நல்லது.

அணு ஆயுத ஒழிப்புக்குப் பாடுபட்ட விஞ்ஞானி ஹான்ஸ் பெத்தே,




முன்னுரை: அமெரிக்காவின் 'மன்ஹாட்டன் ' இரகசியத் திட்டத்தில் கூடி உழைத்து முதன்முதல் கோர அணு  ஆயுதங்களைப் படைத்து, மக்கள் பேரழிவுக்கும், மானிடத் தலை வேதனைக்கும் காரணமான சில முக்கிய  விஞ்ஞானிகளில்  ஹான்ஸ் பெத்தேவும் ஒருவர் ,  ஜெர்மெனியில் பிறந்து அமெரிக்கரான பெளதிக விஞ்ஞானி  ஹான்ஸ் பெத்தே 98 வயது வரை வாழ்ந்தார்.  இரண்டாம் உலகப் போரின் சமயத்தில் ஹிட்லருக்கு அஞ்சி  அமெரிக்காவில் சரண்புகுந்த ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் போன்ற அநேக ஜெர்மென் விஞ்ஞானிகளில் ஒருவர்  பெத்தே! அணு ஆயுதப் பிதா ராபர்ட் ஓப்பன்ஹைமர் ஆணையின் கீழ், நியூமெக்ஸிகோ லாஸ் அலமாஸ் அணு  ஆய்வுக் கூடத்தில், கோட்பாடு ஆணையாளராகத் தலைமைப் பதவியில் பணியாற்றி ஜப்பானில் வீசப்பட்ட  யுரேனிய, புளுடோனிய அணுப்பிளவு ஆயுதங்களைத் தயாரிக்க முழுமையாக உதவியவர்!
ஹான்ஸ் பெத்தே எட்வெர்டு டெல்லர், ஜார்ஜ் காமாவ் [1904-1968] ஆகியோருடன் வேலை செய்து,  அணுப்பிணைவு இயக்கங்களில் ஆய்வுகள் புரிந்து, வெப்ப அணுக்கரு ஆயுதமான ஹைடிரஜன் குண்டு  தயாரிக்கவும் ஆலோசகராகப் பங்கேற்றவர்! பரிதியிலும், விண்மீனிலும் எவ்விதம் அணுக்கரு இயக்கங் கள்  நிகழ்ந்து, பேரளவு சக்தி உண்டாகிறது என்று விளக்கியதற்கு 1967 இல் நோபெல் பரிசைப் பெற்றவர்! 1960-1970  ஆண்டுகளில் பெத்தே ஆக்க வினைகளுக்கு உதவும் அணுசக்தியைப் [Peacful Uses of Atomic Energy] பற்றிப்  பறைசாற்றி வந்தவர். நாற்பத்தி ஐந்து ஆண்டுகளாக உலக வல்லரசுகளை நோக்கி அணு ஆயுதக் குறைப்புக்கு  வழிமுறைகள் வகுத்து அறிவுரை கூறி வருபவர்! ஹான்ஸ் பெத்தே தனது வாழ்க்கையின் பெரும் பகுதியில்  அணு ஆயுதப் படைப்பிலும், அணு ஆயுத எதிர்ப்பிலும் முன்னுக்குப் பின் முரணாக சம பங்கேற்றுள்ளது உலக  சிந்தனையாளருக்குப் பெரு வியப்பை அளிக்கிறது!
ஹான்ஸ் பெத்தே சாதித்த விஞ்ஞானச் சாதனைகள்
1930 ஆண்டுகளில் பெத்தே விண்மீன்களில் எவ்விதம் சக்தி உற்பத்தியாகிறது என்று முதலில் கண்டு பிடிக்கச்  செய்த மகத்தான அணுக்கரு இயக்கச் சாதனைகளே அவர் பின்பு 1967 இல் நோபெல் பரிசு பெற வழியிட்டது.  அவரது முக்கிய பெளதிகப் படைப்பு 'அணுவின் உட்கரு நியதி ' [Theory of Atomic Nuclei]. 1934 இல் பெத்தே,  பெளதிக விஞ்ஞானி ரூடால்ஃப் பையெரிஸ் [Rudolf Peieris] இருவரும் சேர்ந்து 'டியூடிரான் கோட்பாடைப்' [Deuteron Theory] படைத்து விருத்தி செய்தார்கள். டியூடிரான் என்பது ஹைடிரஜனின் ஏகமூலம் [Deuteron is an  Isotope of Hydrogen]. ஹைடிரஜன் அணுக்கருவில் ஒரே ஒரு புரோட்டான் உள்ள போது, அதன் ஏகமூலமான  டியூடிரான் அணுக்கருவில் ஒரு புரோட்டானும், கூடவே ஒரு நியூடிரானும் உள்ளன. ஏகமூலங்கள் [Isotopes]  என்றால் இரண்டு மூலகங்கள் தமது அணுக்கருவில் ஒரே புரோட்டான் எண்ணிக்கை கொண்டு, வெவ்வேறு  நியூட்ரான் எண்ணிக்கை கொண்டவை. அதாவது ஒரே அணு எண் கொண்டு, வெவ்வேறு நிறை எண்  கொண்டவை [Isotopes have same Atomic Number, but different Mass Numbers] என்று விளக்கப்படும்.
1935-1938 ஆண்டுகளில் பல மூலகங்களின் அணுக்கரு இயக்கங்களை ஆய்ந்து அவற்றின் 'அணுக்கரு நிகழ்ச்சிப்  பரப்புகளை ' [Nuclear Cross Sections] அனுமானம் செய்தார். நியூட்ரான் கணைகள் யுரேனியம் போன்ற கன  மூலகங்களைத் தாக்கும் போது, கணைகள் விழுங்கப் படலாம் [Absorption Cross Section]! சிதறித் தெறிக்கலாம்  [Scattering Cross Section]! அல்லது அணுப்பிளவு ஏற்படலாம் [Fission Cross Section]! அணுக்கரு இயக்கங்களில் நியூட்ரான் வேகத்திற்கு ஏற்ப நிகழ்ச்சிப் பரப்புகள் வேறுபடும். அதாவது நிகழ்ச்சிப் பரப்பளவு என்பது ஒருவித  அணுக்கரு விளைவு எதிர்ப்பார்த்தலைக் குறிக்கிறது.
டென்மார்க் விஞ்ஞான மேதை நீல்ஸ் போஹ்ர் [Niels Bohr (1885-1962)], ஹான்ஸ் பெத்தே, என்ரிகோ ஃபெர்மி  [Enrico Fermi (1901-1954)] ஆகிய மூவரும் அணுப்பிளவு இயக்கங்களின் பண்புகளைப் புரிந்து அணு ஆயுதத்  தயாரிப்புக்கு அடிகோலிய முக்கிய விஞ்ஞானிகள் ஆவர். 1935 இல் அமெரிக்காவின் கார்நெல் பலகலைக்  கழகத்தில் அப்போதிருந்த ஹான்ஸ் பெத்தே 'ஹைடிரஜன் அணுக்கருவுடன் மோதிய நியூட்ரான்கள் தம்  வேகத்தை இழந்து மெதுவாகும் போது, அவற்றை யுரேனிய அணுக்கரு பிடித்துக் கொள்கிறது ' என்று  கண்டுபிடித்து வெளியிட்ட ஓர் அறிக்கை, நீல்ஸ் போஹ்ர் கவனத்தைக் கவர்ந்தது! 'இப்போது அணுப்பிளவு  (Fission) எனக்குப் புரிகிறது' என்று கூறினார் போஹ்ர். 1936 இல் பெத்தேயின் கோட்பாடைப் பயன்படுத்திப் போஹ்ர் தனது புகழ்பெற்ற 'அணுக்கருப் பிளவு நீர்த்துளி மாடலை ' [Liquid Drop Model of Nuclear Fission]  வெளிப்படுத்தினார்! பெத்தே எழுதிய 'நவீனப் பெளதிகத்தின் மேலுரை' [Review of Modern Physics] என்னும் நூல்  நீல்ஸ் போஹ்ர் பிளவு நியதியை விளக்க உதவியது. அந்நூலே 'பெத்தே யின் பைபிள் ' [Bethe 's Bible] என்று  அழைக்கப்பட்டுப் பல ஆண்டுகள், ஓர் அணுக்கருப் பெளதிகப் பாட நூலாகப் [Nuclear Physics Textbook] பலரால் படிக்கப்பட்டு வந்தது.
'நியூட்ரான், புரோட்டான் ஆகிய பரமாணுக்கள் [The Nucleons] அணுக்கருவினுள் நீர்த்துளி மூலக்கூறு [Water  Molecules] போல் நடந்து கொள்கின்றன. அணுக்கரு இயக்கத்தில் மீண்டும் ஒரு நியூட்ரானை அணுக்கரு  விழுங்கும் போது, அதன் கூட்டுச்சக்தி மிஞ்சி, கோளமான அணுக்கரு திரிபு பெற்று, ஏறக் குறைய சமமான  நிறையுள்ள இரண்டு சிறு துளிகளாகப் பிரிகிறது. இவ்வித நீர்த்துளிப் பிரிவு போன்ற நிகழ்ச்சி அணுக்கருவின்  தனித்துவமான பண்பாடு ' என்று நீல்ஸ் போஹ்ர் தனது அணுப்பிளவு இயக்க மாடலை அறிவித்தார். அதுவே  போஹ்ரின் புகழ்பெற்ற அணுப்பிளவு நியதியாக நிலவி வருகிறது.
1934 இல் பெத்தே, ஜெர்மென் விஞ்ஞானி வால்டர் ஹையட்லருடன் [Walter Heitler] இணைந்து ஒப்பியல்  எலக்டிரான்களுக்குக் குவாண்டம் யந்திரவியல் நியதியை விருத்தி செய்தார். அகிலக் கதிர்களில் [Cosmic Rays]  உண்டாகும் எலெக்டிரான், புரோட்டான் பொழிவுகளைப் பற்றி ஒரு கோட்பாடை அமைத்தார். பின்னர் பல  சகாக்களுடன் பணியாற்றி பெத்தே 'திடவ நிலையியல் கோட்பாடு ' [Solid State Theory] துறையில் தனது  பெளதிகப் பங்கை அளித்துள்ளார். அவரது படைப்பு ஓரணு படிகத்துள் புகுந்திடும் போது [Atom in a Crystal], படிகத்தின் அணுசக்தி நிலை மட்டம் பிரிபடுவதைக் காட்டியது. அத்துடன் அப்படைப்பு உலோகக்  கோட்பாடையும் [Metal Theory] ஆய்வு செய்து, உலோகக் கலவைச் சீரமைப்பு, மாறமைப்பு [Order & Disorder of Alloy]  ஆகியவற்றையும் விருத்தி செய்தது.
பெத்தேயின் முக்கியப் பணி வானியல் பெளதிகத்தில் [Astrophysics] அவர் கண்டுபிடித்தது. விண்மீன்களின் சக்தி மூலத்தைக் கண்டுபிடித்தவர் ஹான்ஸ் பெத்தே! பெத்தேயின் (1935-1938) காலத்திய அணுக்கரு இயக்கப்  படைப்புகளே, அவர் விண்மீன்களின் சக்தியைப் பற்றி கண்டுபிடிக்க ஏதுவாயிற்று. 1938 இல் பெத்தே முழுக்க  முழுக்க சூரியன் போன்ற ஒரு விண்மீனின் சக்தி யாவும், நேரடியாக ஹைடிரஜன் அணுக்கள் பிணைந்து  ஹீலியமாக மாறும் போது எழும், அணுக்கருப் பிணைவு சக்தியே [Nuclear Fusion Energy] என்று அழுத்தமாகக்  கூறினார்! சூரியன் ஒவ்வொரு வினாடியும் 600 மில்லியன் டன் ஹைடிரஜன் வாயுவை ஹீலியமாக  மாற்றுகிறது! அந்த வீதத்தில் ஹைடிரஜன் வாயு தீர்ந்தாலும், பரிதி இன்னும் பல பில்லியன் ஆண்டுகளுக்கு ஒளியையும், உஷ்ணத்தையும் நமக்கு அளிக்கும்!
விண்மீன்களில் நிகழும் இரண்டு வித அணுக்கரு இயக்கங்களை அவர் யூகித்தார். ஒன்று: பெருநிறையும் 27  மில்லியன் டிகிரிச் சூடும் கொண்ட பேருருவ விண்மீன்களில் நேர்ந்திடும் 'கரி-நைடிரஜன்-ஆக்ஸிஜென் சுற்றியக்கம்  ' [Carbon-Nitrogen-Oxygen or CNO Cycle]. அடுத்தது பரிதி போன்ற மந்தமான விண்மீன்களில் நிகழும்  'புரோட்டான்-புரோட்டான் பிணைவியக்கம் ' [Proton-Proton Fusion Reaction]. 1967 இல் நோபெல் பரிசும் அவரது  வானியல் பெளதிகப் படைப்புக்கே அளிக்கப்பட்டது.
பெளதிக விஞ்ஞானி ஹான்ஸ் பெத்தேயின் வாழ்க்கை வரலாறு
1906 ஜூலை 2 ஆம் தேதி ஹான்ஸ் பெத்தே ஜெர்மெனியில் உள்ள ஸ்டிராஸ்பர்க் அல்ஸாஸ்-லொரேன்  என்னும் ஊரில் பிறந்தார். தந்தையார் பல்கலைக் கழக உளவியல்வாதி [University Psychologist]. 1924 இல்  கல்லூரிக்குச் சென்று ஃபிராங்க்ஃபெர்ட், மியூனிச் பல்கலைக் கழகங்களில் படித்து 1928 கோட்பாடுப் பெளதிகத்தில்  டாக்டர் [Ph.D in Theoretical Physics] பட்டம் பெற்றார். அவரது குரு புகழ்பெற்ற பேராசிரியர் ஆர்னால்டு  சோமர்ஃபெல்டு [Arnold Sommerfeld]. பிறகு பெத்தே நாலாண்டுகள் (1929-1933) மியூனிச் பல்கலைக் கழகத்தில்  புகட்டாளராகப் பணியாற்றினார். 1930 இல் உலகப் பயிற்சிப் பயண உபகார நிதி [Travel Fellowship of International  Education] பெற்று பிரிட்டனுக்குச் சென்று ஓராண்டு கேம்பிரிட்ஜிலும், ஈராண்டு ரோமிலும் விஞ்ஞானக் கல்வி  புகட்டினார்.
மியூனிச்சில் மூன்றாண்டுகள் இருந்த போது, அணுவின் குவாண்டம் நியதி [Quantum Theory of Atom] பற்றி பல ஆய்வுத்தாள்கள் எழுதினார். அவற்றில் ஒன்று அவரும் இத்தாலிய விஞ்ஞான மேதை என்ரிகோ ஃபெர்மியும்  இணைந்து வெளியிட்ட, மின்னேற்றப் பரமாணுக்கள் [Study of Charged Particles] சம்பந்தப்பட்ட 'குவாண்டம்  மின்கொந் தளிப்பு'  [Quantum Electrodynamics] பற்றிய ஆய்விதழ். அப்போதுதான் அவரது மகத்தான நவீனப் பெளதிக  நியதிகள் படைக்கப் பட்டன. பெத்தே தெளிவாக எழுதிய அணுவின் குவாண்டம் யந்திரவியல் கோட்பாடு முதன்முதலில் விளக்கமான அவரது 'பெளதிக கைநோக்கு நூலில்' [Handbook of Physics] இடம் பெற்றது.
அடுத்து ஓர் ஆய்வுத்தாள் உலோகங்களின் எலெக்டிரான் கோட்பாடு [Electron Theory of Metals] பற்றி, பெத்தே  அவரது குரு சோமர்ஃபெல்டுடன் எழுதியது. அந்த வெளியீடு ஃபெர்மி-டிராக் [Fermi-Dirac] இருவரும் படைத்த  உலோகவியல் ஆய்வுப் புள்ளி விபரத்தின் பயன்களுக்குச் சீராக விளக்கம் அளித்தது. ஹான்ஸ் பெத்தேயின்  முக்கிய பெளதிக்கக் கண்டுபிடிப்பு, அணுவின் பண்பை விளக்கும் 'குவாண்டம் யந்திரவியல் நியதி ' அதன்  உட்கருவான அணுக்கருவின் [Nucleus] பண்பை விவரிக்கவும் பயன்படுகிறது, என்பதுதான். அப்படைப்புகள்  யாவும் ஹான்ஸ் பெத்தேயை ஓர் சிறந்த பெளதிக நிபுணராகக் காட்டின.
1933 ஆண்டு ஜெர்மெனியில் ஹிட்லரின் ஆதிக்கம் வலுக்க ஆரம்பித்தும், பல்கலைக் கழகங்களில் பணி செய்த  யூதப் பேராசிரியர்களும், கல்வி புகட்டாளர்களும் வேலையிலிருந்து நீக்கப்பட்டனர்! தந்தையார் யூதராக  இல்லாது, தாய் மட்டும் யூதராக இருந்ததாலும், பெத்தே வேலை இழந்தார்! வேலையிலிருந்து நீக்கப் பட்டதைத் தனது மாணவர் மூலமாக அறிந்த ஹான்ஸ் பெத்தே உடனே பிறந்த பூமியை விட்டுப் பிரிட்டனுக்குப்  புலம்பெயர வேண்டியதாயிற்று! அங்கு ஓராண்டு மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தில் புகட்டாளராகப் பணியாற்றினார்.
1934 ஆம் ஆண்டு நியூயார்க் மாநிலத்தின் இதாகா கார்நெல் பல்கலைக் கழகத்தி லிருந்து துணைப் பேராசிரியர்  பதவி கிடைத்து, பெத்தே அமெரிக்காவுக்கு விரைந்தார். 1937 ஆண்டில் பெத்தே பேராசிரி யராகப் பதவி  மேன்மை பெற்றார். இரண்டாம் உலகப் போர் சமயத்தில் MIT கதிர்வீச்சு ஆய்வ கத்தில் நுண்ணலை ரேடார்  விருத்தியில் [Microwave Radar Development] வேலை செய்தார்.
அதன்பின் நியூமெக்ஸிகோவின் லாஸ் அலமாஸ் ஆயுதக் கூடத்தில் கோட்பாடுத் துறையின் [Theoretical Division]  தலைமைப் பதவியை ஏற்று ஹான்ஸ் பெத்தே [1943-1946] நான்கு ஆண்டுகள் அணுப்பிளவு குண்டு திட்டத்தில்  வேலை செய்தார். இரண்டாம் உலகப்போர் முடிந்ததும், எட்வெர்டு டெல்லருடன் சேர்ந்து பூதப் போராயுதத்  திட்டத்தில் [Super Bomb Project] முதல் ஹைடிரஜன் குண்டு ஆக்கத்தில் உதவினார்.
ஹான்ஸ் பெத்தே பெயர் பெற்ற எக்ஸ்ரே பெளதிகவாதி பி.பி. ஈவால்டுவின் [P.P. Ewald, X-Ray Physicist] புதல்வி  ரோஸை மணந்து, ஹென்ரி, மோனிகா என்னும் இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையானவர்.
அணு ஆயுதப் படைப்புத் திட்டங்களில் பூரணப் பங்களிப்பு
1942 ஆம் ஆண்டு வேனிற் காலத்தில், இரண்டாம் உலகப் போர் சமயத்தில், மன்ஹாட்டன் அணு ஆயுதத்  திட்டத்திற்குச் திறமைமிக்க பெளதிக விஞ்ஞானிகளைச் சேமித்துக் கொண்டிடுந்த ராபர்ட் ஓப்பன்ஹைமர்,  ஹான்ஸ் பெத்தேயைக் காலிஃபோர்னியா பெர்க்கிலியில் பணிபுரிய அழைத்தார். அணு ஆயுதத் தயாரிப்பு பற்றி  அறிந்த போது, அது சாத்தியமற்ற ஒரு திட்டமாகவும், அப்பணியில் இறங்கிப் பங்கெடுக்கத் தனக்கு விருப்பம்  இல்லை என்றும் முதலில் ஹான்ஸ் பெத்தே மறுத்தார்! பிரான்ஸ் ஹிட்லர் கைவசம் ஆனதும், பெத்தே  ஆத்திரம் மிகுந்து நாஸி ஜெர்மெனிக்கு எதிராகப் போருக்கு உதவிட முன்வந்து, அணு ஆயுதத் தயாரிப்புக்  குழுவில் பணி புரிய ஒப்புக் கொண்டார்!
கார்நெல் பல்கலைக் கழகத்திலிருந்து தன் மனைவி ரோஸுடன் [Rose] பெக்கே கிளம்பி, வரும் வழியில்  சிகாகோவில் ஆப்த நண்பர் எட்வெர்டு டெல்லர், அவரது மனைவி மிஸ்ஸியையும் [Mici] காரில் ஏற்றிக்  கொண்டு பெர்க்கிலிக்குப் புறப்பட்டார். சிகாகோ பல்கலைக் கழகத்தில் என்ரிகோ ஃபெர்மி அமைத்த, முதல்  ஆய்வு அணு உலை அடுக்கைக் [Experimental Atomic Pile] கண்டதும், பெத்தே அணு ஆயுதத் தயாரிப்பு  நிறைவேறும் என்று இறுதியில் நம்பினார்!
அதன்பின் நியூமெக்ஸிகோவின் லாஸ் அலமாஸ் ஆயுதக் கூடத்திற்கு மாற்றலாகி கோட்பாடுத் துறையின் [Theoretical Division] தலைமை பதவி அளிக்கப்பட்டு ஹான்ஸ் பெத்தே [1943-1946] நான்கு ஆண்டுகள் அணுப்பிளவுக்  குண்டுத் திட்டத்தில் வேலை செய்தார். அந்த நிகழ்ச்சி நண்பர் எட்வெர்டு டெல்லருக்குப் பெரும் அதிர்ச்சியைக்  கொடுத்தது! யாவருக்கும் மூத்தவராய்த் தன்னை எண்ணிய எட்வெர்டு டெல்லர் தான் பெற வேண்டிய  தலைமைப் பதவியைப் பெத்தே பெற்றதும் மிக ஏமாற்ற மடைந்தார்! வயதான பழைய விஞ்ஞான  நண்பர்களுக்கு இடையே வெறுப்பும், மன வேற்றுமையும் எழுந்தது! அணுப்பிளவு ஆயுதத்தில் உள்வெடிப்புக்  கணக்கீடுகளைச் [Implosion Calculations] செய்வதற்குப் பதிலாக, டெல்லர் பின்னால் ஒத்தி வைக்கப்பட்ட  அணுப்பிணைவு ஆயுதமான ஹைடிரஜன் குண்டு திட்ட வேலையில் தனியாக மூழ்கினார்!
இரண்டாம் உலகப் போரின் காலத்தில் தனியாக பெத்தே 'இரும்புக் கவசத்தில் ஏவு கணைகள் ஊடுருவுக்  கோட்பாடை' [Theory of Penetration of Armour by Projectiles] அமைத்தார். ஹான்ஸ் பெத்தே, நண்பர் எட்வெர்டு டெல்லருடன் இணைந்து 'அதிர்ச்சி அலைகளைப் ' [Shock Waves] பற்றி ஓர் அறிவுத்தாளை எழுதி வெளிட்டார்.
அணுப்பிளவு சக்தி, அணுப்பிணைவு சக்தி இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன ? இரண்டு அணுக்கரு  இயக்கங்களிலும் விளைவுக்குப் பின்பு நேரும் 'நிறை இழப்பே' [Mass Defect] ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பளு-சக்திச்  சமன்பாடு [Mass Energy Equation] நியதியின்படி சக்தியாக மாறுகிறது! யுரேனியம்-233, யுரேனியம்-235, புளுடோனியம்-239 ஆகிய குறிப்பிட்ட நிறைஎண் [Mass Number] கொண்ட கன மூலகங்களே   நியூரான் கணைகளால் உடைக்கப் பட்டு, சிறு மூலகங்கள் உண்டாகும் போது தோன்றும் நிறை இழப்பு பிளவு  சக்தியாக [Fission Energy] உண்டாகிறது! அதன் நிறை இழப்பு சக்தியாக மாறும் போது, உதாரணமாக ஒரு  பவுண்டு யுரேனியம்-235, 1300 டன் நிலக்கரி எரிந்து தரும் எரிசக்திக்குச் சமம்!
அணுப்பிணைவு சக்தி ஹைடிஜன், லிதியம் போன்ற எளிய மூலகங்கள் [Light Elements] மிகையான அழுத்தத்தில்  பல மில்லியன் டிகிரி உஷ்ணத்தில் இணைந்து பெரு மூலகம் உண்டாகும் போது எழும் நிறை இழப்பு பிணைவு சக்தியாக [Fusion Energy] மாறுகிறது! அம்முறையில் ஒரு பவுண்டு ஹைடிரஜன் வாயுவை மிகையான  அழுத்தமும், பேரளவு உஷ்ணமும் பிணைக்கும் போது ஒரு பவுண்டுக்கும் குன்றிய நிறையான ஹீலியம்  உண்டாகி, எஞ்சிய நிறை இழப்பு சக்தி 10,000 டன் நிலக்கரி ஈன்றும் எரிசக்திக்குச் சமமாக எழுகிறது!
ஆதி முதற்கொண்டே ஹைடிரஜன் குண்டு ஆக்கத்திற்கு எதிர்ப்புகள் கூறி வந்தவர் பெத்தே! 1946 இல் கார்நெல்  பலகலைக் கழகத்திற்கு மீண்டு, பணி புரிந்து வந்த பெத்தேயை, சோவியத் யூனியன் தனது முதல்  அணுகுண்டை 1949 ஆகஸ்டில் வெடித்ததும், பூத அணு ஆயுதத்தைப் படைக்க டெல்லர் வற்புறுத்தி லாஸ்  அலமாஸ் வருவதற்குப் பெரு முயற்சி செய்தார்! இறுதியாக பெத்தே ஆலோசராகப் பணி செய்ய  ஒப்புக்கொண்டு அடிக்கடி லாஸ் அலமாஸ் அணு ஆயுதக் கூடத்திற்கு வருகை தந்தார்!
யுத்ததிற்குப் பிறகு பெத்தே அணுக்கருப் பிண்டம், மேஸான் நியதி [Nuclear Matter & Meson Theory] ஆகிய ஆராய்ச்சியில்  பணியாற்றினார். அத்துடன் சூபர்நோவா, நியூட்ரான் விண்மீன்கள், கருந்துளைகள் [Supernova, Neutron Stars, Black  Holes] போன்ற விண்வெளித் தலைப்புகளிலும் தொடர்ந்து ஆய்வுகள் செய்து தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
வல்லரசுகள் அணு ஆயுதக் குறைப்புக்குப் பெத்தே செய்த முயற்சிகள்
அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமன் 1949 இல் ஹைடிரஜன் குண்டு தயாரிக்க அனுமதி அளித்த போது, ஹான்ஸ்  பெத்தே கூறியது. 'எதிர்கால யுத்தத்தில் ஹைடிரஜன் குண்டுகளை வீசி நாம் போரிட்டு வெற்றி பெற்றாலும்,  நாம் காத்திடப் போகும் உலகே நமக்கில்லாது அழிந்துவிடும்! எந்த பூமிக்காக நாம் போரிடு கிறோமோ, அந்த  பூமியையே நாமிழக்க நேரிடும் ' என்று எச்சரிக்கை செய்தார்! 1956-1964 ஆண்டுகளில் ஹான்ஸ் பெத்தே  அமெரிக்க ஜனாதிபதியின் விஞ்ஞான ஆலோசனைக் குழுவில் [President 's Science Advisory Committee] ஓர்  உறுப்பினராய்ப் பணியாற்றினார்.
1958 இல் உலகப் பெரு வல்லரசுகளான அமெரிக்க-ரஷ்யா அணு ஆயுதத் தகர்ப்பு [Nuclear Disarmament] பற்றி ஓர்  ஆய்வறிக்கையைத் தயாரித்து ஜனாதிபதிக்குச் சமர்ப்பித்தார். 1963 இல் அணு ஆயுதச் சோதனை நிறுத்த  ஒப்பந்தம் பேசச் சோவியத் யூனியனிடம் சென்று, முழு வெற்றி பெறாமல் 'பகுதி நிறுத்த ஒப்பந்தம் ' [Partial  Disarmament Treaty] அடைந்த தூதர் குழுவில் பெத்தேயும் ஒருவராக இருந்தார்! ஆயினும் அணு ஆயுதப்  பந்தயத்தில் அணு ஆயுதப் பெருக்கத்தை எதிர்த்தும், அணு ஆயுதக் குறைப்பை ஆதரித்தும், அமெரிக்கா ரஷ்யா  ஆகியோர் இடையே பதுங்கியுள்ள அணு ஆயுதத் தகர்ப்புக்கும் முயன்று தொடர்ந்து வாக்குவாதம் புரிந்து  வந்தார்!
1980 இல் ஜனாதிபதி ரேகன் முயற்சி செய்து கொண்டுவந்த விண்வெளியில் பாய்ந்து செல்லும் 'அகில தேசக்  கட்டளை உந்துகணை எதிர்ப்படை ஏற்பாடு ' [Intercontinental Ballistic Missile Defense System (ICBM)] திட்டத்தை எதிர்த்து, அந்த ஏற்பாடு மேலும் அமெரிக்க-ரஷ்ய ஊமைப் போரை [Cold War] இன்னும் மிகைப்படுத்திப்  படைத்திறச் சமன்பாட்டிற்குச் சீர்கேடு விளைவிக்கும் என்று ஆலோசனை கூறினார்.
1997 பிப்ரவரியில் 90 வயதான ஹான்ஸ் பெத்தே அமெரிக்க செனட் குழுவினர் 'அணு ஆயுதச் சோதனை நிறுத்தும் ஒப்பந்தத்தை' [Comprehensive Test Ban Treaty (CTBT)] அங்கீகரிக்க விவாதனை நடத்த முயலும் போது,  ஜனாதிபதி கிளின்டனுக்கு அனைத்து அணு ஆயுதச் சோதனைகளை நிறுத்துப்படியும், இனிமேலும் புதிய முறை  அணு ஆயுதங்கள் தயாரிக்க வேண்டாம் என்றும் வற்புறுத்திக் கடிதம் எழுதினார்! அக்டோபர் 13 ஆம் தேதி அமெரிக்க செனட் குழு CTBT ஒப்பந்தத்துக்கு உடன்படாமல் நிராகரித்த போது, ஹான்ஸ் பெத்தே பெரிதும் வருந்தினார்!
அமெரிக்கா, ரஷ்யா ஆகிய வல்லரசுக்கிடையே அணு ஆயுதக் குறைப்பு, அணு ஆயுதச் சோதனை நிறுத்தம், அணு ஆய்தத் தகர்ப்பு ஒப்பந்தங்களில் மூத்த விஞ்ஞான ஆலோசகராக ஜனாதிபதிகள் ஐஸன்ஹோவர் முதல் கென்னெடி, ஜான்ஸன் ஆகிய மூவருக்கும் பணியாற்றியவர், ஹான்ஸ் பெத்தே! ரஷ்யாவும், அமெரிக்காவும்  அணு ஆயுதத் தகர்ப்பை முழுமையாக நிறைவேற்றாவிட்டாலும், அணு ஆயுத ஆக்கம் குறைந்து, 1990  இடைத்துவ ஆண்டுகளில் அணு ஆய்தச் சோதனைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டன என்பது இங்கே  குறிப்பிடத் தக்கது!
1994 ஆம் ஆண்டு நீல்ஸ் போஹ்ர் நினைவுச் சொற்பொழிவை நிகழ்த்திய போது ஹான்ஸ் பெத்தே கூறியது  'இரண்டாம் உலகப் போர் முடிந்து ஐம்பது ஆண்டுகள் கடந்த காலத்தை நினைத்துப் பார்த்தால், ஜப்பானில்  வீசிய அணு ஆயுதங்களுக்குப் பிறகு யாரும் அவற்றை எவர் மீதும் பயன்படுத்த வில்லை! ஆனால் லாஸ்  அலமாஸில் நாங்கள் தயாரித்ததை விட 100 மடங்கு பேராற்றல் கொண்ட கோர அணு ஆயுதங்கள் பல்லாயிரக்  கணக்கில் இப்போது படைக்கப் பட்டுள்ளன! தற்போது நமது காலம் 'அணு ஆயுதத் தகர்ப்பு ', 'அணு ஆயுத அவிழ்ப்பு ' [Disarmament & Dismantlement] என்னும் நற்போக்குத் திசையில் போய்க் கொண்டுள்ளது! ஆனால் சில  நாடுகளில் இன்னும் அணு ஆயுத உற்பத்தி தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது! அந்த நாடுகள் எப்போது அணு  ஆயுதத் தயாரிப்பை நிறுத்த உடன்படும் என்பது நிச்சயமில்லை! ஆனால் அந்த நாட்டு விஞ்ஞானிகள்  அனைவரும் அத்துறைக்கு ஒத்துழைக்க ஒருங்கே மறுத்து, நமது போராட் டத்திற்கு ஆதரவு அளிக்கலாம்! '
உலகில் அணு ஆயுதங்கள் குறைக்கப்பட்டு நீக்கப்பட வேண்டும் என்றும், அணு ஆயுதச் சோதனைகளை அறவே நிறுத்த வேண்டும் என்றும், அமைதிப் பணிக்கு அணுசக்தி பயன்படுத்த வேண்டும் என்றும், ஐக்கிய  நாட்டுப் பேரவை அணுசக்தி ஆக்கத்தைக் கட்டுப் படுத்திக் கண்காணித்து வர வேண்டும் என்றும் பறைசாற்றி  அயராது உழைத்தவர் ஹான்ஸ் பெத்தே! 1955 இல் ஹான்ஸ் பெத்தே ஜெர்மெனியின் உன்னத பிளாங்க்  பதக்கத்தைப் [Plank Medal of Germany] பெற்றார். அணுசக்தி துறை விருத்திக்கு ஆக்கிய அவரது அணுக் கருப்  பெளதிகப் பணியைப் பாராட்டி, அமெரிக்காவின் 50,000 டாலர் நாணய வெகுமதி யுள்ள என்ரிகோ ஃபெர்மி  பதக்கம் பெத்தேயிக்கு அளிக்கப்பட்டது. 2001 ஆம் ஆண்டில் பெத்தேயிக்கு புரூஸ் பதக்கம் [Bruce Medal] அளிக்கப்பட்டது.
ஹான்ஸ் பெத்தே 2005 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் தேதி காலமானார்.
++++++++++++++++++++
தகவல்கள்:
2. Bethe Hans (1906) from Eric Weisstein's World of Scientific Biography
3. Explore the History Sience & Consequenses of the Atomic Bomb
4. Hans Bethe on the Senat's Deadly Decision to Reject the Comprehensive Nuclear Test Ban Treaty [Nov 8, 1999]
5. The American Experience Race for the Superbomb -Hans Bethe's Statement [Feb 14, 1950]
6. My Life in Physics By: Hans Bethe [1993-1994]
7. Hans Bethe & the Steller-Energy Problem [1936-1941]
8. Was H-Bomb Necessary ? Nuclear Age Peace Foundation [2002]
9. The Atomic Scientists -A Biographical History By: Henry Boorse, Lloyd Motz & Jefferson Weaver [1989]
10 The Atomic Scientists -The Sense of Wonder & the Bomb By: Mark Fiege (July 2007)
11. The Road From Los Alamos By: Hans Bethe (1991)

நன்றி :ஜெய பாரதன்,  தமிழ் மன்றம் மடல் குழு  
**************