Sunday, May 19, 2019

மீளும் வரலாறு

நந்தன் கதையை நான் எப்போது தெரிந்துகொண்டேன் என்பது எனக்கு சரியாக நினைவில்லை.  நான் ஆரம்பப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த நேரம் எங்கள் கிராமத்தைச் சுற்றி பல்வேறு கிராமங்களிலும் கோடை காலத்தில் நாடகங்கள் நடைபெறும்.  தஞ்சாவூர், மதுரை என்று பல்வேறு ஊர்களிலும் இருந்து பிரபலமான நாடக குழுக்களை அழைத்து வந்து நாடகங்களை போடுவார்கள்.  டி.ஆர். மகாலிங்கம், உடையப்பா, கண்ணப்பா என்று புகழ்பெற்ற நடிகர்கள் வருவார்கள்.  அப்படி நாடகம் நடந்துகொண்டிருந்த நாளில்தான் நான் நந்தன் கதையைப் பற்றி முதலில் கேள்விப்பட்டேன்.  உடையப்பாவின் நாடகங்களில் அரிச்சந்திராவுக்கு ஒரு தனி இடம் உண்டு.  அந்த நாடகத்தில் சுடலையில் நின்று பாடுவதுபோல் வரும் காட்சியில் 'பறையன்' என்ற சொல் இடம்பெற்ற பாடல் ஒன்று வரும்.  அவருடைய கம்பீரமான குரல் உருகி குழைந்து கேட்பவரை கண்ணீர்விட வைக்கும்.  அந்த பாடல் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்துவதாக இருக்கிறது என சொல்லி பல்வேறு ஊர்களில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகவும் அதனால் இனிமேல் அந்த பாடல் அரிச்சந்திராவில் இடம்பெறாது என்றும் அப்பா யாரோடோ பேசிக்கொண்டிருந்ததை நான் அப்போது கேட்டேன்.  "இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது சரிதான், ஆனால் நந்தனார் நாடகத்தில் வரிக்குவரி இப்படி கேவலம் வருகிறதே அதை எவனும் கேட்கவில்லையே" என்று அப்பா அப்போது சொல்லிக்கொண்டிருந்தார்.  பிற்காலத்தில் நந்தன் கதை மீது எனக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டதற்கு அந்த உரையாடல்தான் காரணமாக இருந்திருக்குமோ தெரியவில்லை.

ஐந்தாம் வகுப்புவரை என் சொந்த கிராமத்தில் படித்த நான் ஆறாம் வகுப்புக்காக சிதம்பரம் சென்றேன்.  தினமும் ரயிலில் சென்று படித்து வரவேண்டும்.  அப்படி போகும்போது என் வயதையத்தவர்களோடு நான் போவதில்லை.  எப்போதும் பெரிய ஆட்களோடுதான் சினேகம்.  என்னுடைய உறவினர் கலியபெருமாள் என்பவர் அப்போது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருந்த ஓவியக் கல்லூரியில் பயின்று வந்தார்.  வகுப்பை கட் அடித்துவிட்டு அவரோடும், அவரது நண்பர்களோடும் சுற்றிக்கொண்டிருப்பேன்.  அவர்கள் சிதம்பரம் நடராசர் கோயிலுக்கு சென்று ஸ்கெட்ச் பண்ணுவார்கள்.  அப்போது அவர்களோடு பல சமயம் நானும் சென்றிருக்கிறேன்.  சனி ஞாயிறுகளில் சிதம்பரம் நடராஜா தியேட்டரில் காலை காட்சியில் ஆங்கிலப் படம் பார்த்துவிட்டு மதிய சாப்பாட்டுக்கு நடராசர் கோயில் புளியோதரையை வாங்கி சாப்பிடுவோம்.  அந்த கோயில் எனக்கு மிகவும் நெருக்கமானது அப்படித்தான்.  அந்த கோயிலுக்குள் நுழையும் ஒவ்வொரு தருணத்திலும் எனக்கு வினோதமான ஒரு உணர்வு ஏற்படுவதுண்டு.  சிதம்பர ரகசியம் என்று சொல்லப்படுகிற கதையையும் தாண்டி அந்த கோயிலுக்குள் மேலும் பல ரகசியங்கள் இருக்கின்றன.  அவை இன்னும் யாராலும் அறியப்படாமல் கிடக்கின்றன என்று எனக்கு தோன்றும்.  சிதம்பரம் குறித்து வெளிவந்துள்ள நூல்களையெல்லாம் அப்படித்தான் நான் சேகரித்து படிக்க ஆரம்பித்தேன்.  தமிழ் பௌத்தம் குறித்த அயோத்திதாசரின் எ-ழுத்துகளை படித்ததற்கு பிறகு சிதம்பரத்தின் மீதான எனது இச்சை தீவிரம் அடைந்துவிட்டது. 

தமிழக தலித்துகளின் வரலாற்றை தொகுப்பதிலும் மறுவாசிப்பு செய்வதிலும் ஈடுபட்டபோது சிதம்பரம் புதிய பரிமாணம்பெற்று என்முன் நின்றது.  தமிழகத்தில் தீண்டாமை நிலைநிறுத்தப்பட்டதற்கு சிதம்பரம்தான் முக்கிய காரணமாக இருந்துள்ளது.  அதிலும் குறிப்பாக நந்தன் கதை அதில் பிரதானபங்காற்றியிருக்கிறது என்ற உணர்வு என்னுள் வலுப்பெற்றது.  அதைத் தொடர்ந்து பெரியபுராண நந்தன் கதையை மறுத்து நந்தன் என்ற மன்னனின் வரலாற்றை முன்வைக்கவேண்டும் என்ற வேட்கை அதிகரித்தது.  அப்போது ஒருநாள் இதுபற்றி திரு. தொல். திருமாவளவன் அவர்களோடு நான் பேசிக்கொண்டிருந்தபோது அவர் மிகவும் வியப்போடு இதை ஏன் நீங்கள் எழுதக்கூடாது என்று கேட்டார்.  விடுதலைச் சிறுத்தைகளின் மாத இதழான தாய் மண்ணில் அதை தொடராக எழுதுமாறு வலியுறுத்தினார்.  2003 மார்ச்&ஏப்ரல் இதழில் இந்த தொடரை நான் ஆரம்பித்தேன்.  பன்னிரெண்டு அத்தியாயங்கள் எழுதினேன்.  அக்டோபர் 2004 வரை அது வெளிவந்தது.  அதன்பிறகு நான் அதை தொடர்ந்து எழுத முடியவில்லை.

இந்திரா பார்த்தசாரதியின் நந்தன் கதை நாடகம் புதுவையில் நிகழ்த்தப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது.  நானும் நண்பர்களுமாக சேர்ந்து நடத்தி வந்த தலித் கலைவிழாவில் கூட அதை போட்டிருக்கிறோம்.  ஆனால் நந்தன் என்ற மன்னனின் வரலாற்றை பரவலாக அறியச் செய்யவேண்டும் என்ற எனது ஆசைக்கு அது உகந்ததாயில்லை.  அப்போது பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தில் நாடகத்துறை தலைவராக இருந்த கே.ஏ. குணசேகரன் அவர்களிடத்தில் அயோத்திதாசப் பண்டிதரின் நந்தன் கதையைப் பற்றி பேசி அதை நாடகமாக போடலாம் என்று கேட்டேன்.  அவரும் அப்போது ஆர்வமாக சம்மதித்தார்.  ஆனால் அந்த நாடகத்தை நான் எழுதமுடியாமல் போய்விட்டது.  நாங்கள் சந்திக்கும்போதெல்லாம் அவ்வப்போது அதைப்பற்றி பேசுவதுண்டு.  அதன் தொடர்ச்சிதானோ என்னவோ இன்று

அதே நந்தன் கதையைப் பற்றி சொற்பொழிவு ஆற்றும்படி அவர் என்னை அழைத்திருக்கிறார்.   உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனராக பொறுப்பேற்று இப்படி ஒரு வாய்ப்பை எனக்கு அளிப்பார் என நான் கற்பனையும் செய்ததில்லை.  உலகத் தமிழ் மாநாட்டுக்கான தயாரிப்புகள் நடந்துகொண்டிருக்கும் சூழலில் இந்த சொற்பொழிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  நிச்சயமாக அந்த மாநாட்டில் இந்த புதிய நந்தன் கதை ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.  இந்த சொற்பொழிவுக்கான வாய்ப்பை அளித்த உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் இந்த பொழிவுக்கு தலைமை ஏற்கவிருக்கும் டாக்டர் அ. ராமசாமி அவர்களுக்கும் எனது நன்றி.
( மீளும் வரலாறு நூலுக்கு நான் எழுதிய குறிப்பு )

உலகு தழுவி விரியும் பார்வை - அரவிந்தன்



தமிழின் முக்கியமான சிந்தனையாளர்களில் ஒருவரான ரவிக்குமாரின் அறிவுத் தளச் செயல்பாடுகளை இரண்டு விதமாகப் பிரித்துப் பார்க்கலாம். ஒன்று புதிய சிந்தனைகளை, கோட்பாடுகளை, அரிய நிகழ்வுகளை, ஆளுமைகளைத் தமிழ் வாசகருக்கு முறையாக அறிமுகம் செய்துவைத்தல். இன்னொன்று அனைவரும் அறிந்த (அல்லது அவ்வாறு நினைத்துக்கொள்கிற) விஷயங்கள் குறித்துப் புதிய வெளிச்சம் பாய்ச்சுதல். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அறிவுத் தளத்தில் தீவிரமாகச் செயல்பட்டுவரும் ரவிக்குமாரின் எழுத்துக்களில் இந்த இரட்டை அம்சத்தைத் தவறாமல் பார்க்க முடியும். ரஜினிகாந்த்தும் புதுமைப் பித்தனும் என்னும் இந்த நூல் அதற்கான சிறந்த உதாரணம்

இலக்கியம், திரைப்படம், உள்ளூர் அரசியல், சர்வதேச அரசியல், பயங்கரவாதம், உடல் நலம், பெண்களின் வாழ்நிலைசூழியல், காட்சி ஊடகங்கள், தொல்லியல், பொருளாதாரம், தகவல் பெருக்கம்சாதிப் பெரும்பான்மைவாதம், ஈழப் பிரச்சனை, ரஜினியின் அரசியல் எனப் பல விஷயங்களைப் பற்றியும் ரவிக்குமார் தெளிவாகவும் தீர்க்கமாகவும் தன் சிந்தனைகளை முன்வைக்கிறார். எந்த விஷயத்தையும் பிறர் கண்ணுக்குப் படாத அலாதியான ஒரு கோணத்தில் பார்ப்பதும், விரிவான பின்புலத்தில் வைத்து அதை அலசுவதும் ரவிக்குமாரின் அணுகுமுறை. அறிவியல், உளவியல், இலக்கியம் முதலான துறைகள் சார்ந்த பார்வைகளின் துணையுடன் எதையும் நுணுகி ஆராய்வது அவருடைய தனித்தன்மை. 
ரஜினிகாந்த் சொன்ன பாபா கதையையும் புதுமைப்பித்தன் எழுதிய உபதேசம் கதையையும் ஒப்பிட்டு எழுதப்பட்ட கட்டுரை இத்தகைய நுட்பமான அணுகுமுறைக்கான சிறந்த உதாரணம், குஷ்புவின் ‘கவர்ச்சி’  குறித்த அலசல் இன்னொரு உதாரணம். இவற்றை அலசும் அவர், தேர்ந்துகொண்ட பொருளின் வரையெல்லைகளுக்குள் நிற்காமல் அவற்றை வாழ்வின் விரிந்த பரப்புக்கு எடுத்துச்சென்று அலசுகிறார். இதன் மூலம் மேற்பரப்பில் தெரியாத பல விஷயங்களை உணர்த்துகிறார். ஒசாமா பின் லேடன் கொலையை முன்னிட்டு எழுதும்போது அமெரிக்காபிரதிநிதித்துவப்படுத்தும் கொள்கையும்பயங்கரவாதத்தின்கருத்தியலும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்தாம் என்பதை அவர் நிறுவும் விதமும் இத்தகையதுதான். அசல் சிந்தனையாளரின் பண்பு இது. 
அணு உலை, மாவோயிஸ்டுகளின் வன்முறை, பேட்ட திரைப்படம், கூகுளைசேஷன், ஈழத்து நிலவரம், தொல்லியல், மொழி, குரு வணக்கம், காட்சி ஊடகங்கள், தொழில்நுட்பத்தின் ஆபத்து, கனவுகள் என எதை எடுத்துக்கொண்டாலும் இத்தகைய பயணம் நிகழ்வதைக் கானலாம். 
கட்டுரைக்கான பொருள் என்பது சிலருக்குக் கட்டுரையின் கருவாகவும் மையமாகவும் இருக்கும். ரவிக்குமாருக்கோ அது வெறும் தொடக்கப் புள்ளி மட்டுமே. அதை முன்னிட்டு அரசியல், தத்துவம் வாழ்வியல் எனப் பல்வேறு அம்சங்களையும் தழுவி விரிவது அவருடைய அறிவுசார் பயணத்தின்  இயல்பு. 
அத்தகைய பயணத்தின் தடங்களை அழுத்தமாகக் கொண்ட இந்தத் தொகுப்பு நம்மையும் அத்தகைய பயணத்தை மேற்கொள்ளச் உதவக்கூடியது. இந்தக் கட்டுரைகளைக் கவனமாகப் படிக்கும் யாரும் தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை மேலோட்டமாகப் பார்த்துவிட்டுக் கடந்துவிட முடியாது. இந்த நூலின் ஆகப் பெரிய பலன் இதுதான்.

( ‘ ரஜினிகாந்தும் புதுமைப்பித்தனும்’ நூலுக்கு எழுதப்பட்ட அணிந்துரை ) 

எல்லையற்று விரியும் எழுத்தின் சாத்தியங்கள் - செல்வ புவியரசன்

எல்லையற்று விரியும் எழுத்தின் சாத்தியங்கள்…

ஆய்வுக் கட்டுரைகள் ஸ்வரம் பிசகக் கூடாத கீர்த்தனைகள் என்றால் பத்தி எழுத்து அனைவரையும் உள்ளிழுக்க எதைச் செய்யவும் தயங்காத திரையிசைப் பாடல்கள். இலக்கிய வடிவங்களில் கதை, கவிதை போல கட்டுரைக்கும் பிரதான இடமுண்டு. கட்டுரையின் வகைமைகளில் ஒன்றான பத்தி எழுத்தின் சாத்தியங்களோ நாளும் பொழுதும் வளர்ந்துகொண்டே இருப்பது. ஆய்வு, பத்தி என்று இருவகை எழுத்துமே ரவிக்குமாருக்கு இயல்பாக கைவருகிறது. 

கடைசியாய் நான் படித்த ரவிக்குமாரின் புத்தகம், ‘ஆயிரம் பூக்கள் கருகட்டும்’. கல்விப் புல ஆய்வு முறைமைகளின் அடியொற்றி அத்துறையையே விமர்சனத்துக்கு உள்ளாக்கும் கட்டுரைகளின் தொகுப்பு அது. ‘ரஜினிகாந்தும் புதுமைப்பித்தனும்’ அதிலிருந்து வித்தியாசப்பட்டு நிற்கிறது. இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் பத்தி எழுத்துக்குரிய சுதந்திரத்தையும், அது அளிக்கும் வாசிப்பு சுவாரஸ்யத்தையும் அனுபவித்து மகிழ முடிகிறது. கோட்பாட்டு விவாதங்களில் தீவிரமாகப் பங்கெடுத்துக்கொள்ளும் ஒருவர் இறுக்கமான மொழிநடைக்குள் உறைந்துபோய்விடாமல், நாம் பார்க்கும் சினிமாவை, நாம் ரசிக்கும் நடிகர்களை, நாம் தினந்தோறும் கடந்துபோகும் நிகழ்வுகளை முற்றிலும் வேறு கோணங்களிலிருந்து அணுகுகிறார், அதற்கான காரணங்களை நமக்குப் புரியும் மொழியில் எழுதுகிறார் என்பதுதான் இந்தக் கட்டுரைகளின் சிறப்பு. 

ரஜினியின் நடிப்புத் திறமையை வியந்து, அவர் சொன்ன அபத்தக் கதைகளைப் பரிகசித்து, அங்கிருந்து புதுமைப்பித்தனின் உபதேசம் கதைக்குப் போய், நவீன மருத்துவ வரலாற்றில் சஞ்சரித்து, மாந்தரீக எதார்த்தவாத அழகியல் பேசி மீண்டும் ரஜினிக்கே திரும்பிவந்து முடிகிறது கட்டுரை. ஒரு நான்கு பக்கக் கட்டுரைக்குள் நடப்புச் செய்திகள், இலக்கியம், வரலாறு, தத்துவம் என்று வெவ்வேறு துறைகளுக்கிடையில் பயணம். இளையராஜாவின் திரையிசைப் பாடல்களைப் போல சரணங்களுக்கு இடையில் எங்கெங்கோ பயணித்துவிட்டு, தொடங்கிய இடத்துக்குத் திரும்பிவருகிறார் ரவிக்குமார். வாசிப்பு ஒரு குதூகலமாகவே மாறுகிறது.

ஆடி மாத தள்ளுபடியிலிருந்து கிராமத்து அப்பாவியின் கதைக்குப் போய் அங்கிருந்து ஜார் மன்னராட்சியின் கொடுங்கோன்மையை நினைவுபடுத்தி இன்றைய அமெரிக்கப் பொருளாதாரத்தின் சரிவை, அதை விமர்சிப்பதில் உள்ள அப்பாவித்தனமான மனோநிலையை விளக்குகிறது மற்றொரு கட்டுரை. ஆமி வைன் ஹவுஸின் மரணத்தில் பாப் மார்லியை நினைவுகூர்ந்து அவன் பாடிய காதலுக்குப் பின்னாலிருந்த சமூக நிலையைப் பேசுகிறது இன்னொரு கட்டுரை. 

சொற்பிறப்பியல், பண்பாட்டு அரசியல், பொருளாதாரம், உளவியல், தொல்லியல், கல்வெட்டியல், மருத்துவம், கலை இலக்கியம் என்று துறைவிட்டு துறை தாவும் வினோதங்கள் வெகு இயல்பாய் நடந்திருக்கின்றன இக்கட்டுரைகளில். நினைவுகள், நகைச்சுவைகள், உவமைகள், ஆய்வுக் கட்டுரைகள், கவிதைகள், மொழிபெயர்ப்புகள், புத்தக அறிமுகங்கள், வாசகர்களுடனான நேரடி உரையாடல்கள் என்று வாய்ப்புள்ள அனைத்தையும் தன்வயப்படுத்திக்கொண்டிருக்கின்றன. ஜோர்ஜ் லூயி போர்ஹே, காப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ், ழாக் தெரிதா, ஸ்லாவோஸ் சிசேக், சிக்மண்ட் ஃபிராய்டு, ழான் போத்ரியா, அஸ்கோ பர்போலோ, டேவிட் ஷுல்மேன், பியர் பூர்தியூ என்று ஏகப்பட்ட அறிவாளுமைகள் பொருத்தமான இடங்களில் தேவைப்பட்ட அளவுக்கு மட்டுமே வாய்திறக்கிறார்கள். மேற்கோள் என்பது படித்ததைக் காட்டிக்கொள்வதற்காக அல்ல, பேசுகிற விஷயத்தின் மீது ஒரு அழுத்தமான பார்வையை உருவாக்குவதற்காகத்தான். ரவிக்குமார் அதற்கு ஒரு உதாரணமாகவே இருக்கிறார். 

உலகம் முழுவதும் கொண்டாடப்படும் நமது சமகாலத்தின் முதன்மையான அறிவாளுமைகளில் ஒருவரான ஸ்லாவோஸ் சிசேக்கையும்கூட ரவிக்குமார் போன்று ஒரு சிலரே பேசுகிறார்கள் என்பதுதான் தமிழின் நிலை. ஸ்லாவோஸ் சிசேக் தனது கட்டுரைகளில் ஆல்பர்ட் ஹிட்சாக்கின் திரைப்படக் காட்சிகளிலிருந்து லக்கானின் உளப் பகுப்பாய்வைப் பற்றி பேசுவதுபோல ரவிக்குமாரும் தமிழ்த் திரைப்படங்களின் காட்சிகளிலிருந்து சமூகப் பகுப்பாய்வை நோக்கி நகர்கிறார். பதினாறு வயதினிலே படத்திலிருந்து தொடங்கி முன்கூட்டியே பூப்படையும் பிரச்சினையையும் கருவாய்ப் புற்றுநோய்ப் பரவலையும் கவனப்படுத்துகிறார். குண்டுவெடிக்கும் நகைச்சுவைக் காட்சிகளிலிருந்து தொடங்கி இரட்டைக் கோபுரங்களின் தகர்ப்பின் பின்னாலிருக்கும் நோக்கத்தைச் சுட்டுகிறார். குஷ்புவிலிருந்து தொடங்கி உடற்கூறு சார்ந்த உளவியலையும் உடைசார்ந்த பண்பாட்டு நிலைகளையும் பேசுகிறார். கவுண்டமணியிலிருந்து தொடங்கி இந்தியாவின் சுகாதாரச் சவால்களை விவரிக்கிறார். 
அரசியலை மட்டுமல்ல, அறிவியலையும்கூட பத்தி எழுத்தால் சுவை கூட்டலாம் என்பதற்கு இத்தொகுப்பின் ‘கனவு எந்திரம்’ ஒரு உதாரணம். காட்சி ஊடகங்கள், இணையம் ஆகியவற்றின் பின்னாலிருக்கும் அபாயங்கள் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன. கவிஞர் கே.சச்சிதானந்தம், வரலாற்றறிஞர் கா.ராஜன், அணு விஞ்ஞானி மேக்நாத் சாஹா ஆகியோர் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். கூடங்குளம், பயங்கரவாதத்துக்கும் மாவோயிஸ்ட் தீவிரவாதத்துக்கும் இடையிலான வேறுபாடு, குரு உத்சவ், இந்தித் திணிப்பு, சிறைவாசிகளின் உரிமைகள் போன்ற சில கட்டுரைகள் மட்டுமே தங்களது பேசுபொருளால் முழுவதும் தீவிரத் தன்மையைக் கொண்டிருக்கின்றன. 

ஈழப் பிரச்சினைகளையும் போர் அவலங்களையும் குறித்த சர்வதேச சமூகத்தின் பார்வைகளைப் பேசுகின்றன சில கட்டுரைகள். எல்லோரும் ஈழத் தமிழர்களைக் கைவிட்டுவிட்ட நிலை. “சொற்களில் சிந்திய ரத்தம் மட்டும்தான் பிசுபிசுப்போடு இருக்கிறது. அதைத் தொட்டுணர விழையின் பிம்பங்களை விடுத்து ஈழத்துப் படைப்பிலக்கியங்களை நோக்கிச் செல்லுங்கள்” என்கிறார் ரவிக்குமார். சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன், ஷோபாசக்தி ஆகியோரின் படைப்புகளைப் பற்றிய விரிவான கட்டுரைகளை உள்ளடக்கியது அவரது முந்தைய தொகுப்பான ‘ஆயிரம் பூக்கள் கருகட்டும்’.

அகராதியைப் போல ரஜினியில் தொடங்கி ரஜினியில் வந்து முடிகிறது இந்தக் கட்டுரைத் தொகுப்பு. புத்தகத்தின் தலைப்பு, கவன ஈர்ப்புக்காக மட்டுமில்லை. ரஜினியின் அரசியல் பிரவேசம் அடிப்படையிலேயே ஜனநாயக விரோதம் என்பது தொடங்கி போராட்டங்கள், காவல் துறை தொடர்பாக அவர் யாருடைய குரலை எதிரொலிக்கிறார் என்பதையும் பேசுகின்றன இறுதிக் கட்டுரைகள்.  ‘எந்திரன்’ போலவே ‘பேட்ட’யும் எங்கெங்கு சொதப்பிவிட்டது என்பதையும் ஒரு ரசிகராக பகிர்ந்துகொள்கிறார். நல்ல நடிகர், திரைப்படத்தில் அவருக்குக் கிடைப்பதோ மோசமான வாய்ப்புகள், அரசியலில் கிடைத்திருப்பதோ அபாயகரமான வாய்ப்பு. 

மொத்தத்தில், தமிழின் பத்தி எழுத்தில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னகர்வு இது. பத்தி எழுத்தைப் பொறுத்தவரை பத்திரிகையாளர்களின் பங்களிப்பு செய்தி விமர்சனங்களிலேயே முடிந்துபோகிறது என்றால், மொழிநடை கைவரப்பெற்ற எழுத்தாளப் பெருந்தகைகளுக்கோ சொல்வதற்கும் பெரிதாய் ஒன்றுமில்லை. வறண்டுகிடக்கும் பாலைவனத்தின் ஊற்று இத்தொகுப்பு. நீர்நிலைகள் பெருகட்டும்.