Monday, July 17, 2017

ரவிக்குமார் கவிதை

 

பகலில் எரிந்துகொண்டிருக்கும் 
தெருவிளக்குபோல்
இவன் நேசம்

நாய்க்குட்டிக்கு வைக்கும் சோற்றை
கோழிகள் தின்றுவிடுகின்றன என்கிறாய் நீ

காக்கை வராததால் 
விரதத்தோடு காத்திருக்கிறேன் என்கிறான் இவன்


2015 ல் எழுதியது

Friday, July 14, 2017

மணற்கேணி ஆய்விதழ் குறித்து தினமணி ஆசிரியர் திரு வைத்தியநாதன்

21.04.2013 தினமணி நாளேட்டில் அதன் ஆசிரியர் திரு வைத்தியநாதன் அவர்கள் ' கலாரசிகன்' என்ற பெயரில் எழுதியிருக்கும் பத்தியில் மணற்கேணி ஆய்விதழ் குறித்து எழுதியிருக்கிறார். அவருக்கு நன்றி.இங்கே அதைப் படியுங்கள்: 

நண்பர் ஒருவரின் மேஜையில் ரவிக்குமார்  நடத்தும் "மணற்கேணி' இருமாத இதழின் நவம்பர் - டிசம்பர் 2012 இதழ் இருந்தது.  இப்படி ஓர் அற்புதமான இலக்கிய ஆய்வு இதழை நண்பர் ரவிக்குமார் நடத்தி வருவதற்காகவே அவருக்கு ஒரு பாராட்டு விழா எடுக்க வேண்டும்.

புதுவையில் "மணற்கேணி' சார்பில் நடத்திய, "தமிழும் சமஸ்கிருதமும்' என்கிற ஆய்வரங்கச் சொற்பொழிவுகள் கட்டுரைகளாகத் தரப்பட்டிருக்கின்றன. அ. மணவாளன், இரா. கோதண்டராமன், பெ. மாதையன், இரா. அறவேந்தன், பக்தவத்சல பாரதி ஆகியோரின் சிந்தனையைத் தூண்டும் வாதங்கள் வருங்கால ஆய்வுகளுக்கே கூடத் தரவுகளாக அமையும் தன்மையன.

அம்பை எழுதியிருக்கும் "மரத்தடியில் திருவள்ளுவர்' என்கிற சிறுகதை, தமிழும் தமிழனும் இன்று எப்படி இருக்கிறார்கள் என்பதை உணர்த்துவதாக இருக்கிறது. படித்து முடித்து விட்டு, அடுத்த பக்கத்தைத் திருப்புவதற்கு பதிலாக, மீண்டும் ஒருமுறை படிக்கத் தோன்றியது.
அரை நூற்றாண்டு காலத் தொல்லியல் ஆய்வைப் பற்றிய சிறப்புப் பகுதியில் படிக்க வேண்டிய 33 நூல்களையும், தொல்லியல் துறை தொடர்பாகச் செய்ய வேண்டிய 50 பரிந்துரைகளையும் தொகுத்து வழங்கி இருப்பது பயனுள்ள முயற்சி.
ஐயாயிரம் ரூபாய் கொடுத்து "மணற்கேணி'யின் புரவலராகலாம்; மூவாயிரம் கொடுத்து "மணற்கேணி' குழாமில் சேரலாம்; ஆயிரம் கொடுத்து "ஊருணி' திட்டத்தின் மூலம் யாருக்காவது "மணற்கேணி' பரிசளிக்கலாம். முன்னூற்று அறுபது கொடுத்து ஆண்டு சந்தாதாரர் ஆகலாம். என்ன செய்வது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். ஆனால், தமிழில் வெளிவந்து கொண்டிருக்கும் சிற்றிதழ்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, தனக்கெனத் தனித்துவமானதொரு அடையாளத்தை உருவாக்கிக்கொண்டு இலக்கியப் பணியாற்றிவரும் "மணற்கேணி' தொடர்ந்து வெளிவர உதவாமல் இருந்து விடாதீர்கள். தொடர்புக்கு9443033305 அல்லது manarkeni@gmail.com.

Saturday, July 8, 2017

நாம் என்ன செய்யப்போகிறோம்? - ஃபைஸ் அகமது ஃபைஸ் தமிழில்: ரவிக்குமார்



எண்ணற்ற ஏக்கங்கள்
சமைந்து கிடக்கின்றன 
உனது விழிகளில் எனது விழிகளில்
வகிரப்பட்ட இருதயங்கள்
திருகிக்கொண்டு கிடக்கின்றன 
உனது தேகத்தில் எனது தேகத்தில்
மரத்துப்போன விரல்கள்
செயலற்ற எழுதுகோல்கள்
விறைத்துச் சிதைந்த மனங்கள்
நமது விருப்பத்துக்குரிய 
நகரின்
ஒவ்வொரு வீதியிலும் 
சமாதியாக்கப்பட்டுள்ளன 
உனது தடங்கள் எனது தடங்கள்

நமது இரவு விண்மீன்கள்
திறந்த புண்கள் 
நமது காலை ரோஜாக்களின்
உதிர்ந்த இதழ்கள்
இருட் காற்று சூறையாடி
பிய்த்தெறியப்பட்ட விழித்திரைகள்
குணப்படுத்தமுடியாதவை
நமது வாதைகள்
ஆற்ற இயலாதவை 
நமது காயங்கள் 
சிலவற்றின்மீது 
நிலவின் சாம்பல்
சிலவற்றின்மீது
காலைப் பனியின் ரத்தம்
இது நிஜமா? 
இது பிரமையா? 
இது
உனது எனது மூடநம்பிக்கையெனும் 
சிலந்தி பின்னிய வலை மட்டும்தானா ? 

இது உண்மையென்றால்
நாம் என்ன செய்யப்போகிறோம்?
இது உண்மையில்லையென்றால்
நாம் என்ன செய்யப்போகிறோம்?
எனது புத்தியில் கூர் ஏற்று.
எனக்குப் புரிதலை உண்டாக்கு. 
சொல்!

( ஃபைஸ் அகமது ஃபைஸின் O City of Lights , OUP, 2006 தொகுப்பிலிருந்து )


Tuesday, July 4, 2017

யாருமில்லை ஹமா துமா தமிழில்: ரவிக்குமார்

I

இறந்துபோன மனிதன் 
அவன் யாருமில்லை, கிழிசல்களை உடுத்தியிருந்தான், 
செருப்புகூட இல்லை
சட்டைப்பையில் ஒரு நாணயம்
அடையாள அட்டை ஏதுமில்லை
பேருந்துக்கான பயணச் சீட்டும் இல்லை
அவன் யாருமில்லை
அழுக்காக, எலும்பும் தோலுமாக
அடையாளமற்றவன், அவன் யாருமில்லை, 
இறப்பதற்கு முன்னர் கையை இறுக மூடியிருந்தான் 
கஷ்டப்பட்டு அவர்கள் அவன் விரல்களைப் பிரித்துப் பார்த்தபோது 
அந்த யாருமில்லை என்ற 
மனிதனின் கையில்
மொத்த நாடும் இருக்கக் கண்டார்கள்  

* ஹமா துமா : எதியோப்பிய கவிஞர், சிறுகதை ஆசிரியர், அரசியல் செயற்பாட்டாளர். தற்போது ஃப்ரான்ஸில் வாழ்கிறார்