Thursday, December 26, 2013

2013 ஆம் ஆண்டின் சமூக அநீதியாளர் யார்?



தமிழ்நாட்டில் சமத்துவ சிந்தனைக்குத் தடைபோட்டு, குடி அரசுக் கோட்பாடுகளைக் குழிதோண்டிப் புதைத்து,   எளிய மக்களின் வாழ்வில் மிகப்பெரும் இன்னல்களை ஏற்படுத்தியதில் முதலில் நிற்கும் ஒரு நபரை அடையாளம் கண்டு அவருக்கு ' சமூக அநீதியாளர்' என்ற விருதை வழங்க விரும்புகிறேன். இந்த விருதை அவர் தனது பெயரில் முன்னாலோ பின்னாலோ போட்டுக்கொள்வதில் எந்தத் தடையும் இல்லை. இந்த விருது ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் அறிவிக்கப்படும். 


தகுதிகள்: 


1. சமூக அநீதியாளர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர் ஒரு சமூக இயக்கம்/ அரசியல் கட்சி/ அமைப்பு ஆகியவற்றைச் சேர்ந்தவராகத்தான் இருக்கவேண்டும் என்பது அவசியமில்லை. அப்படி இருந்தால் அதில் தடையும் இல்லை.


2. விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர் சொல்லாலும் செயலாலும் சமூக சமத்துவத்துக்கு எதிரானவராகவும்; சமூக அமைதியைக் கெடுப்பவராகவும்; இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் நெறிகளைப் புறக்கணிப்பவராகவும் இருக்கவேண்டும். 


3. விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவரால் சட்டம் ஒழுங்குக்குப் பாதிப்பு ஏற்பட்டு சமூக அமைதி சீர்குலைந்ததற்கான ஆதாரங்கள் சுட்டிக்காட்டப்படவேண்டும். 


விருதாளரைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறை: 


விருதாளரைத் தேர்ந்தெடுப்பதில் முழுமையான ஜனநாயகத்தையும், வெளிப்படைத் தன்மையையும் கடைப்பிடிக்க விரும்புகிறேன். எனவே சமூக வலைத் தளங்களில் பங்கேற்றுள்ள அனைவரும் இதில் பங்களிப்புச் செய்யலாம். 


விருது பெறுபவருக்கு சமூகநீதியைப் போதிக்கும் விதமாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரதி ஒன்று அனுப்பி வைக்கப்படும். தாங்கள் விரும்பினால் அதுபோலவே  யார்வேண்டுமானாலும் அனுப்பிவைக்கலாம். 


விருதுக்குத் தகுதியானவர் யார் என்பதை ஓரிரு வரிகளில் விளக்கி இங்கே பின்னூட்டமாக இடுங்கள். 


இதைக் கண்ணுறும் ஊடக நண்பர்கள் இந்தச் செய்தியைத் தமது ஊடகங்களில் வெளியிட்டு உதவுங்கள். 


இந்த அறிவிப்பை நண்பர்கள் தமது முகநூல் மற்றும் வலைப் பூக்களில் பகிரும்படி வேண்டுகிறேன். 

No comments:

Post a Comment