Saturday, December 28, 2013

ஆம் ஆத்மி அரசாங்கம் தமிழ்நாட்டில் மின்கட்டணத்தைக் குறைக்குமா ?



டெல்லியில் ’மின் கட்டணத்தைப் பாதியாகக் குறைப்போம்’ என அர்விந் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி வாக்குறுதி அளித்திருந்தது. இப்போது ஆட்சியில் அமர்ந்திருக்கும் அக்கட்சி முதலில் நிறைவேற்றவேண்டிய வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று. 


தற்போது டெல்லியில் ஒருவர் 600 யூனிட் மின்சாரத்தைப் பயன்படுத்தினால் அவர் 3300 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும். முதல் 200 யூனிட்டுகளுக்கு 3.90 வீதம் 780/- அடுத்த 200 யூனிட்டுகளுக்கு 5.80 வீதம் 1160/- அடுத்த 200 யூனிட்டுகளுக்கு 6.80 வீதம் 1360/-. ஆக மொத்தம் 3300 ரூபாய். இதைப் பாதியாகக் குறைக்கப்போவதாக கெஜ்ரிவால் சொல்லியிருக்கிறார். அப்படிக் குறைத்தால் 1650/- ரூபாய்தான் வரும். 


தமிழ்நாட்டில் ஒருவர் அதே 600 யூனிட் மின்சாரத்தை இப்போது வீட்டுக்குப் பயன்படுத்தினால் முதல் 200 யூனிட்டுகளுக்கு 3 ருபாய் வீதம் 600/- அடுத்த 300 யூனிட்டுகளுக்கு 4 ரூபாய் வீதம் 1200/- அடுத்த 100 யூனிட்டுகளுக்கு 5.75 வீதம் 575/- ரூபாய். ஆக மொத்தம் 2375/- ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும். 


தற்போதிருக்கும் நிலையில் டெல்லியைவிட தமிழகத்திலிருக்கும் மின்கட்டணம் குறைவு என்றாலும் கெஜ்ரிவால் கட்டணக் குறைப்பு செய்துவிட்டால் அதனுடன் ஒப்பிட தமிழ்நாட்டு மின்கட்டணம் அதிகமாகவே இருக்கும். ஊழல் காரணமாகவே டெல்லியில் மின்கட்டணம் அதிகமாக இருக்கிறது என ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டி வந்தது. தமிழ்நாட்டில் மின்கட்டணம் அதிகமாக இருப்பதற்கு எது காரணம் எனத் தெரியவில்லை. 


டெல்லியில் அர்விந் கெஜ்ரிவால் மின்கட்டணத்தைக் குறைத்துவிட்டால் நிச்சயம் அது தமிழக அரசியலில் எதிரொலிக்கும். இங்கு மட்டும் ஏன் அதிகக் கட்டணம் என்ற கேள்வி எழும். எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தை சும்மாவிடமாட்டார்கள். 


டெல்லிக்கும் தமிழ்நாட்டுக்கும் முக்கியமானதொரு வேறுபாடு இருக்கிறது. டெல்லி மின் மிகை மாநிலம். தமிழ்நாட்டிலோ குளிர்காலத்திலும்கூட பல மணிநேர மின்வெட்டு.

மின்சாரம் இருக்காது ஆனால் மின்கட்டணம் மட்டும் ஆயிரக் கணக்கில் செலுத்தவேண்டும் என்று தமிழக அரசு சொன்னால் தமிழ்நாட்டு மக்கள் அதை ஏற்றுக்கொள்வார்களா?

No comments:

Post a Comment