Saturday, September 14, 2013

நிகரி சமத்துவ ஆசிரியர் விருது

நிகரி சமத்துவ ஆசிரியர் விருது
இந்தியாவில் தீண்டாமை சட்டரீதியாக ஒழிக்கப்பட்டுவிட்டதென அறிவிக்கப் பட்டிருக்கிறது. பாடநூல்களிலும் அதை அச்சிட்டிருக்கிறார்கள். ஆனால், இப்போதும் பல்வேறு வடிவங்களில் தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது. பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கிடையே சாதி அடிப்படையில் பேதம் பாராட்டுவது எவ்வளவு பெரிய கொடுமை! சமூக நீதிக்குப் பேர்போன தமிழ்நாட்டில் நினைத்தே பார்க்கமுடியாத வடிவங்களில் கல்வி நிறுவனங்களில் தீண்டாமை நிலவிக் கொண்டிருக்கிறது. 

அம்பேத்கர்,  தான் படிக்கும்போது மற்ற பிள்ளைகளோடு சமமாக உட்கார அனுமதிக்கப்படவில்லையென்பதையும் தான் உட்காருவதற்காக வீட்டிலிருந்து சாக்குத் துண்டு ஒன்றை எடுத்துவரும்படித் தமது ஆசிரியர் சொன்னதையும் எழுதியிருக்கிறார். மறைந்த கங்கிரஸ் தலைவர் எல்.இளையபெருமாள், தான் படிக்கும்போது பள்ளியில் ‘ பறையன் பானை’ என எழுதப்பட்ட பானை ஒன்று வைக்கப்பட்டிருந்தது எனவும் அதில்தான் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பிள்ளைகள் தண்ணீர் குடிக்க வேண்டுமென்று விதி இருந்தது எனவும் குறிப்  பிட்டிருக்கிறார். அம்பேத்கர் மற்றும் இளையபெருமாள் காலத்திலிருந்ததைப்போலவே சமத்துவமற்ற நிலை இன்றும் தொடர்கிறது.

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் சத்துணவு சமைத்தால்  அதை தலித் அல்லாத சாதிகளைச் சேர்ந்த பிள்ளைகள் சாப்பிடுவதில்லை என்ற நிலை பல ஊர்களில் இருக்கிறது. அதன்காரணமாக சத்துணவுப் பணியாளர்கள் பணியிடமாற்றம் செய்யப்படுவதையும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இத்தகைய பாகுபாடுகள் தமிழ்நாட்டில் மட்டும் நிலவவில்லை, இந்தியா முழுவதும் இந்த நிலை இருக்கிறது. இது களையப்படவேண்டும் என்பதற்காக திருமதி சோனியா காந்தி அவர்களின் தலைமையில் செயல்படும் தேசிய ஆலோசனைக் குழு
(National Advisory Council - NAC)  ஒரு துணைக்குழுவை அமைத்து சில பரிந்துரைகளை மத்திய அரசுக்கு அனுப்பியது.ஆனால் அந்தப் பரிந்துரைகள் இதுவரை செயல்வடிவம் பெறவில்லை.
பள்ளிகளில் மட்டுமின்றி உயர்கல்வி நிறுவனங்களிலும் இத்தகைய பாகுபாடுகள் தொடர்கின்றன. குறிப்பாக தலித் சமூகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் சொல்லவொண்ணா இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். அவ்வாறு இடையூறுகளுக்கு உள்ளான தலித் மாணவர்கள் பலர் தற்கொலை செய்துகொண்ட செய்திகளை நாம் அறிவோம்.

இத்தகைய பாகுபாடுகளைப் போக்குவதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகள் ஒருபுறம் இருந்தாலும் ஆங்காங்கே எந்தவித எதிர்பார்ப்புமின்றி தலித் அல்லாத சமூகங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் சிலர் இந்த நிலையை எதிர்த்துத் தம்மால் இயன்ற வழிகளில் போராடிவருகின்றனர். தலித் மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்து ஊக்குவித்து வருகின்றனர். சந்தடியில்லாமல் அவர்கள் ஆற்றிவரும் பணி மகத்தானது.
கல்வி நிறுவனங்களில் சாதிய பாகுபாடுகளைக் களையும் விதமாகப் பணியாற்றிவரும் தலித் அல்லாத பள்ளி ஆசிரியர் ஒருவரையும், கல்லூரி ஆசிரியர் ஒருவரையும் தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் அவர்களுக்கு விருதளித்து கௌரவிக்க முடிவுசெய்துள்ளோம். தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு பத்தாயிரம் ரூபாய் பணமுடிப்பும் , பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படும். இது ‘ நிகரி’ விருது என  அழைக்கப்படும்.
இந்திய சாதி ஒழிப்பு வரலாற்றில் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் பூனா ஒப்பந்தம் ஏற்பட்ட செப்டம்பர் 24 ஆம் தேதி கட்சி அரசியல் சார்பற்ற எளியதொரு நிகழ்வில் இந்த ஆண்டுமுதல் மணற்கேணி ஆய்விதழ் சார்பில் இந்த விருது வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா விழுப்புரம் சாந்தி அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இந்திய சாதி ஒழிப்பு வரலாற்றில் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் பூனா ஒப்பந்தம் ஏற்பட்ட செப்டம்பர் 24 ஆம் தேதி கட்சி அரசியல் சார்பற்ற எளியதொரு நிகழ்வில் இந்த ஆண்டுமுதல் மணற்கேணி ஆய்விதழ் சார்பில் இந்த விருது வழங்கப்படும். 
இந்த ஆண்டுக்கான விருது கடலூர் நகராட்சி மேனிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் திரு தா.பாலு , திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரியும் திரு அ .ராமசாமி ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. அதற்கான விழா விழுப்புரம் சாந்தி அரங்கத்தில் நடைபெறவுள்ளது. நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம் .
இவண்
ரவிக்குமார்


No comments:

Post a Comment