Showing posts with label telegram. Show all posts
Showing posts with label telegram. Show all posts

Wednesday, June 12, 2013

தந்தி சேவைக்கு அஞ்சலி!



2013 ஜூலை 15 ஆம் தேதியுடன் தந்தி சேவையை நிறுத்தப்போவதாக அஞ்சல் துறை அறிவித்திருக்கிறது. மின்னஞ்சல், குறுந்தகவல் முதலான வசதிகளும் மொபைல் ஃபோனின் பயன்பாடும் தந்தியைத் தேவையற்றதாக்கிவிட்டன. தந்தி என்றாலே பதறிய காலம் மலையேறிவிட்டது. தந்தி வாசகத்தைத் தவறாகப் படித்து அதனால் உண்டாகும் சிக்கல்களை வைத்து நகைச்சுவைக் காட்சிகளை அமைப்பதும் இன்று சாத்தியமில்லாமல் போய்விட்டது. இப்போதெல்லாம் தந்தி கொடுத்தால் அதை ஒரு உறையில் போட்டு கடிதத்தைப்போல மறுநாள் கொண்டுபோய் கொடுக்கிறார்கள். சட்டரீதியான ஆதாரத்துக்காக மட்டுமே இப்போது தந்தி கொடுக்கப்படுகிறது. அல்லது ஏதாவது ஒரு கட்சி தந்தி அனுப்பும் போராட்டம் அறிவித்தால் அக்கட்சியின் தொண்டர்கள் வரிசையில் நின்று அனுப்புவார்கள்.

1983 ஆம் ஆண்டு நான் வங்கியில் வேலைக்குச் சேர்ந்தேன். உடுமலைக்கும் நெகமத்துக்கும் இடையில் ஆனைக்கடவு என்ற கிராமத்தில் துவக்கப்பட்ட கிளைக்கு (எழுத்தாளர்சுஜாதாவின் வார்த்தைகளில் சொன்னால் அது கிளை அல்ல ‘இலை’) என்னை நியமித்தார்கள். அங்கு வேலையில் இருந்த இரண்டு ஆண்டுகளில் ஆறு மாதங்களாவது விடுப்பு எடுத்திருப்பேன். விடுப்பு எடுக்க நான் பயன்படுத்தியது தந்தி சேவையைத்தான். எனது பெர்சனல் ஃபைலில் ஏகப்பட்ட தந்திகள் இருக்கும். ( அங்கிருந்த சப் போஸ்ட் ஆபீஸில் வேலைபார்த்தவரின் பெயர் கடவுள் இல்லை எனக் கேள்விப்பட்டபோது இப்படியும்கூடப் பெயர் வைப்பார்களா என எனக்கு ஆச்சர்யமாக இருந்தது). 
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது நண்பர்கள் சிலரின் திருமணத்துக்கு வாழ்த்து தந்தி அடித்தது நினைவுக்கு வருகிறது. உங்கள் பயணம் இனிதாக அமையட்டும் என்ற வாசகம் கொண்ட தந்தியைத்தான் அப்போது அனுப்புவேன்.
எனது மாமா ஒருவர் ராமசாமி என்று பெயர். அவர் சீர்காழியில் போஸ்ட்மாஸ்டராக இருந்தார். போஸ்ட் ஆபீசும் வீடும் ஒன்றாக இருந்தன. அங்கு போகும்போது தந்தியின் கட்கட ஓசையைக் கேட்டு அதை எப்படியாவது கற்றுக்கொள்ளவேண்டும் என ஆசைப்பட்ட காலம் ஒன்றுண்டு.
தந்தி சேவையை நிறுத்துவதுபோல தபால் சேவையையும் நிறுத்திவிடுவார்களா? தனி நபர்கள் கடிதம் எழுதிக்கொள்வது வெகுவாகக் குறைந்துவிட்ட நிலையில் அலுவலகக் கடிதங்கள் மட்டுமே இப்போது அஞ்சலில் அனுப்பப்படுகின்றன.(இன்றைய இளைஞர்கள் காதல் கடிதங்கள் எழுதுகிறார்களா?) மின்னஞ்சல் பயன்பாடு அதை ஒருநாள் தேவையற்றதாக்கிவிடும். அப்போது தபால் சேவையும் நிறுத்தப்பட்டுவிடும் என்றுதான் தோன்றுகிறது. அதற்கு இன்னும் ஒரு பத்து வருடங்கள் தேவைப்படலாம்.

இந்தப் பதிவைப் படிக்கிற நண்பர்கள் தந்தி சேவையோடு தங்களுக்கு ஏற்பட்ட சுவாரஸ்யமான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். அது அந்த சேவைக்கு நாம் செலுத்துகிற அஞ்சலியாக இருக்கும்.