Tuesday, August 11, 2015

ரவிக்குமார் கவிதை

தோளில் அமர்ந்த மரணம் 
- ரவிக்குமார்


மின் கம்பத்திலிருந்து
காக்கை உருவில் கரைந்து கரைந்து
அழைத்தது மரணம்

'என்னை நினைவுகூர
எந்தத் தடயமும் இருக்கக்கூடாது
அவற்றையெல்லாம் அழித்துவிட்டு
அழைத்துப்போ' என்றேன்

எங்கெங்கே இருக்கும்?
என்றென்னைக் கேட்டது

படித்த புத்தகங்களில் இருக்கும்
பார்த்த மலர்களில் இருக்கும்
குளித்த நதிகளில் இருக்கும்
கொஞ்சிய குழந்தைகளில் இருக்கும்
நடந்த வழிகளில் இருக்கும்
நனைந்த மழையினில் இருக்கும்

கடற்கரையில்
புல்வெளியில்
பாதையோர மரநிழலில்

கண்ணீரில்
புன்னகையில்
காற்றில்லா நடுப்பகலில்

எல்லாவற்றிலுமே
இருக்கும் என் தடயம் என்றேன்

உன்னை நினைவுகூர்வார்
யாருளர்? என்றது
ஒருத்தர் பெயரும் தோன்றாது திகைத்தேன்

பறந்து வந்தென்
தோளில் அமர்ந்தது


Monday, August 10, 2015

பெண்கள் அர்ச்சகராவதற்குத் தடையாக இருப்பவர்கள் யார்? - ரவிக்குமார்



இன்று (11.08.2015) தி இந்து ஆங்கில நாளேட்டில் Wife,Mother,Lawyer,Priest என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. அந்தக் கட்டுரை அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கும், பெண்கள் அர்ச்சகராக்கப்படுவதற்கும் தடையாக இருக்கும் பழமைவாத சக்திகளை விமர்சிப்பதற்குப் பதிலாக சமூக சீர்திருத்தத்தை முன்னெடுப்பவர்களைக் குறை கூறுகிறது. பெண்களுக்கு உரிமை அளிக்கும் விஷயத்தில் அவர்கள் மௌனம் சாதிப்பதாகக் குற்றம் சாட்டுகிறது. அவர்கள் மௌனம் காப்பது பெண்களுக்கு உரிமை தரப்படக்கூடாது என்பதற்காக அல்ல, பழமைவாதிகளின் பிடி நீதித்துறையின்மேல் இன்னும் வலுவாக இருப்பதைப் பார்த்த அச்சத்தால் தான். 

அம்பேத்கரின் ' இந்து சட்ட மசோதாவை' சட்டமாக்க விடாமல் தடுத்த சக்திகள்தான் இப்போதும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தையும் தடுத்து நிறுத்தியுள்ளன. இந்த ஆபத்தை சுட்டிக்காட்டாமல் சமூக சீர்திருத்தத்தை முன்மொழிபவர்களை விமர்சிப்பது பழமைவாதிகளுக்குத் துணைபோவதாகவே முடியும். 

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டபோது அந்த சட்டத்தை வரவேற்று தமிழக சட்டமன்றத்தில் பேசிய நான் ‘‘இந்து அறநிலையத்துறைக்கு உட்படாத கிராமக் கோயில்களுக்கும்கூட இந்தச் சட்டம் பொருந்தக்கூடியதாக அமைக்கப்பட வேண்டும். அதுமட்டுமல்லாமல் பெண்களும் அர்ச்சகராவதற்கு இந்தச் சட்டத்தில் வகை செய்யப்பட வேண்டும்’’ எனக் கோரிக்கை விடுத்தேன். அன்றைய முதல்வர் கலைஞரை சந்தித்தும் வேண்டினேன். ' இந்த சட்டத்தையே செயல்படுத்த விடாமல் தடை செய்யப்பார்க்கிறார்கள். பெண்களையும் உள்ளடக்கினால் அதையே காரணமாகக் காட்டி இந்த சட்டத்தைத் தடுத்துவிடுவார்கள் . முதலில் இந்த சட்டம் நடைமுறைக்கு வரட்டும். அதன் பின்னர் அந்தத் திருத்தத்தைச் செய்வோம்" என அவர் பதிலளித்தார். 

இந்து நாளேட்டில் கட்டுரை எழுதியவர்களும் அதில் கருத்து கூறியிருப்பவர்களும் இந்தப் பிரச்சனையில் மிகவும் புரட்சிகரமான ஒரு நீதிமன்றத் தீர்ப்பை சுட்டிக்காட்டத் தவறிவிட்டனர். பெண்களை அர்ச்சகர்களாக நியமிப்பதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி கே. சந்துரு வழங்கிய தீர்ப்பு அது. " இந்தியாவின் தென் பிராந்தியங்களில் அமைந்துள்ள உப பண்பாடுகளைச் சேர்ந்த தெய்வங்கள் மனு ஸ்மிருதியின் தளைகளிலிருந்து விடுபட்டவையாகும். எனவே பெண்ணை வீட்டு வேலைகளோடு மட்டுமே அடக்கி வைத்திருக்கும் நிலைமை இங்கு எழவில்லை. புகழ் பெற்ற தத்துவ அறிஞர் ஒருவர் குறிப்பிட்டதுபோல பெண்கள்தான் இந்த பிரபஞ்சத்தின் பாதியை ஆண்டுகொண்டிருக்கிறார்கள். மனிதகுலம் முன்னேறிச் செல்லவேண்டுமென்றால் அது ஆண், பெண் என்ற இரண்டு கால்களாலும் நடந்தால்தான் சாத்தியம். கடவுளின் சன்னதிகள் ஆண், பெண் பாகுபாடுகளிலிருந்து விடுபட்டு சுதந்திரமானவையாக விளங்க வேண்டும்" என்று அந்தத் தீர்ப்பில் நீதிபதி கே. சந்துரு குறிப்பிட்டிருக்கிறார். அந்தத் தீர்ப்பை கட்டுரையாளர்களோ கருத்து சொன்னவர்களோ அறிந்திருப்பதாகத் தெரியவில்லை. அந்தத் தீர்ப்பைப்பற்றி 
26.09.2008 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் ' தீர்ப்பு அல்ல நீதி' என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றையும் நான் எழுதியிருக்கிறேன். 

தற்போது உச்சநீதிமன்றத்தில் அனைத்துசாதியினரும் அர்ச்சகராகலாம் சட்டம் குறித்த விசாரணை முடிந்து தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. அதை வெளியிடவேண்டும் என சமூகநீதியில் அக்கறையுள்ளோர் வலியுறுத்தவேண்டும். 

http://m.thehindu.com/opinion/op-ed/wife-mother-lawyer-priest/article7522954.ece

Sunday, August 9, 2015

தமிழ் எதிர்காலம்: கவலைகளும் கடமைகளும்- ரவிக்குமார்

தமிழ் எதிர்காலம்: கவலைகளும் கடமைகளும்- ரவிக்குமார்
=========
( 09.08.2015 அன்று புதுச்சேரி ஜெயராம் ஓட்டலில் நடைபெற்ற திரு க.ப.அறவாணன் அவர்களின் வைர விழா நிகழ்வில் ஆற்றிய உரை) 
==========

தமிழ் எதிர்காலம் என்றால் அதில் மொழி, இலக்கியம், அரசியல் என்று பல்வேறு தளங்கள் உள்ளன. திரு அறவாணன் அவர்கள் மானுடவியல், வரலாறு, இலக்கியம், பண்பாடு எனப் பல தளங்களில் செயல்படுகிறவர். அவரது வைர விழாவில் தமிழ் என்றால் அதை மொழி என்பதாக மட்டும் நான் சுருக்கிக்கொள்ள விரும்பவில்லை. 

தமிழ் இனம் எதிர்கொண்டிருக்கும் சிக்கல்கள் ஏராளம். நமது அண்டை நாடான இலங்கையில் ஈழத் தமிழர்கள் இனப்படுகொலைக்கு ஆளானார்கள். அந்தப் பேரவலம் நடந்து ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று அவர்கள் தமது உரிமைகளுக்காக வாய் திறந்து பேசக்கூடிய நிலையில் இல்லை. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களும் தமிழ்நாட்டிலிருக்கும் தமிழர்களும் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக ஐநா மனித உரிமைக் கவுன்சில் அந்த இனப்படுகொலை குறித்து விசாரிக்க ஒரு குழுவை அமைத்தது. அந்த விசாரணை அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை. 

இலங்கையில் ஆட்சி மாற்றம் நிகழ வசதியாக அந்த அறிக்கையை வெளியிடாமல் ஒத்திப்போட்டார்கள். செப்டம்பர் மாதம் அந்த அறிக்கை வெளியிடப்படவேண்டும். ஆனால் அப்போதும் வெளியிடுவார்களா எனத் தெரியவில்லை. தற்போது இலங்கையில் தேர்தல் நடக்கப் போகிறது. புலம்பெயர் தமிழர்களின் குரல்களும் மங்கித் தேய்ந்து கொண்டிருக்கின்றன. அதற்கான அழுத்தத்தைத் தமிழ்நாடுதான் கொடுக்கவேண்டும். கடந்த சில ஆண்டுகளாக ஐநா மனித உரிமைக் கவுன்சில் கூட்டம் நடைபெற்றபோதெல்லாம் ஒவ்வொரு முறையும் தமிழ்நாட்டில் அதுகுறித்த குரல்கள் வலுவாக எழுந்தன. ஆனால் இப்போது அந்தக் குரல்கள் பலவீனமடைந்துவிட்டன. 

இந்த நிலை மாற்றப்படவேண்டும். செப்டம்பர் மாதம் நடக்கவிருக்கும் ஐநா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கை போர்க்குற்றம் தொடர்பான அறிக்கையை வெளியிடவேண்டும் என்று நாம் வலுவாக இப்போதிலிருந்தே குரல் எழுப்பவேண்டும்.

இலங்கையில் இப்போது நடக்கவிருக்கும் தேர்தலோடு ஆட்சி மாற்றம் என்ற செயல்திட்சம் முற்றுப்பெற்றுவிடலாம். அத்துடன் ஐநா சபை ஈழத் தமிழர்களை கைகழுவி விடக்கூடும். ஐநா மனித உரிம்சிக் கவுன்சிலின் நோக்கம் ஈழத் தமிழர்கள் உரிமை பெற வேண்டும் என்பது அல்ல. சீனாவின் ஆதிக்கம் தடுக்கப்படவேண்டும், அமெரிக்க மேலாதிக்கம் தொடரவேண்டும் என்பதுதான். 

இலங்கையில் சீன ஆதிக்கம் வலுப்பெறுவது இந்துமாக்கடலிலும் அதன் ஆதிக்கம் வலுவடைய உதவும் என்பதால் அதைத் தடுத்த நிறுத்துவதற்குத்தான் ஈழத் தமிழர் பிரச்சனையை ஐநா சபை கையிலெடுத்தது. உலகின் பல்வேறு நாடுகளின் பிரச்சனைகளையும் இதேவிதமாகத்தான் அது கையாண்டுவருகிறது. 

இந்துமாக்கடல் இன்று உலக அளவில் ஆதிக்கப்போட்டி நிகழும் களமாக மாறியிருக்கிறது. உலகின் எதிர்கால அரசியல் இந்துமாக்கடலில்தான் தீர்மானிக்கப்படப்போகிறது என போரிதல் வல்லுனர்கள் குய்றுகின்றனர். ஒரு காலத்தில் அந்த ஆதிக்கப்போட்டியில் இந்தியாவும் ஈடுபட்டிருந்தது. ஆனால் கடந்த இருபது ஆண்டுகளாக இந்தியா பின்பற்றிவரும் வெளியுறவுக்கொள்கை இந்திய நிலையை பலவீனப்படுத்தி அதன் தற்சார்பு நிலையை, பக்கச்சார்பற்ற நிலையை அழித்துவிட்சது. இப்போது அமெரிக்காவின் ஆதரவு நாடு என்ற நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டிருக்கிறது. அதற்கென்று சுயேச்சையான நிலைப்பாடு இல்லை. அதுதான் ஈழத் தமிழர்கள் பிரச்சனையிலும் வெளிப்படுகிறது. 

இந்துமாக்கடலை மையமாக வைத்து நடக்கும் அதிகார விளையாட்டில் ஈழத் தமிழர் பிரச்சனை பகடையாக உருட்டப்படுக்கிறது. எனவே ஐநா மனித உரிமைக் கவுன்சில் செப்டம்பர் மாதத்தில் இலங்கை குறித்த அறிக்ஜையைத் தாமாகவே வெளியிட்டுவிடும் என நாம் எதிர்பார்க்க முடியாது. அதற்கான அழுத்தற்றைத் தமிழகம் தான் ஏற்படுத்தவேண்டும். இப்போதிருந்தே அதை நாம் வலியுறுத்தவேண்டும். 

அரசியல் களத்தில் தமிழ் இனம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் அவற்றை எதிர்கொள்வதற்கு நமக்கிருக்கும் கடமையைகளைப்போலவே பிற களங்களிலும் ஏராளமான சிக்கல்கள் இருக்கின்றன. அவற்றுக்கு எதிர்வினையாற்றக்கூடிய விழிப்புணர்வுகொண்ட அறிவாளிகள் நம்மிடையே இருக்கிறார்களா? 

அறிவுத்துறையினரை இரு வகைப்படுத்தலாம்: வெகுமக்களிடம் கலந்துரையாடித் தாக்கத்தை ஏற்படுத்துவோர் ஒரு வகை; சிறு குழுக்களோடு உரையாடி ஆழமான விவாதங்களைத் தூண்டும் சிந்தனையாளர்கள் இன்னொருவகை. தமிழ்ச் சமூகத்தைப் பாதிக்கும் பிரச்சனைகளில் எதிர்வினையாற்றி வெகுமக்களின் கருத்தை மாற்றியமைக்கும் திறன்கொண்ட பொதுநிலை அறிவாளிகள் எத்தனைபேர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்? 'பப்ளிக் இண்டெல்லக்சுவல்ஸ்' என அடையாளப்படுத்தப்படும் தகுதிவாய்ந்தவர்கள், அத்தகைய மதிப்பை உருவாக்கிக்கொண்டவர்கள் எத்தனைபேர் இங்கு இருக்கிறார்கள்? 

உலக அளவில் தத்துவ அறிஞர்கள், சிந்தனையாளர்களின் பட்டியலைப் பார்த்தால் ஃப்ரான்ஸ் நாட்டிலிருந்துதான் மிக அதிகமான எண்ணிக்கையில் அதில் இடம்பெற்றிருப்பார்கள். தமிழில் தத்துவ அறிஞர் என எவரேனும் உண்டா? சிந்தனையாளர் என எத்தனைபேரைச் சொல்லமுடியும்? திரைப்படப் பாடலாசிரியர்களைத்தான் இங்கே சிந்தனையாளர்கள் என விருதளித்துப் பாராட்டிக்கொண்டிருக்கிறார்கள். இதைவிடவும் வெட்கக்கேடு வேறென்ன வேண்டும்! 

தமிழ்நாட்டில் தமிழை வளர்ப்பதற்கு எத்தனையோ நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தமிழ்ப் பல்கலைக் கழகம், தமிழ் வளர்ச்சித் துறை- இப்படி எத்தனையோ நிறுவனங்கள். ஆனால் அந்த நிறுவனங்களைத் தலைமை தாங்கி வழிநடத்தும் தகுதி வாய்ந்தோர் தமிழ்நாட்டில் இருக்கிறார்களா? இதற்காக நாம் யாரைக் குற்றம் சாட்டுவது? எவரைப் பழிப்பது? ஆட்சியாளர்களை, அரசியலாளர்களை இதற்காகக் குறை சொல்வதால் சிக்கல் தீராது. நாம் எல்லோருமே இதற்குப் பொறுப்பு. 

மத்திய அரசால் செம்மொழித் தகுதி தமிழுக்கு வழங்கப்பட்டு பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன. அதை நினைவுகூரக்கூட தமிழ்நாட்டில் எவரும் இல்லை. மணற்கேணி சார்பில் ஒரு கருத்தரங்கை நடத்த ஒரு சிறப்பிதழை வெளியிட முயற்சித்துப் பார்த்தேன். ஒருவரும் ஒத்துழைக்கவில்லை. 

வரலாற்றில் ஒன்றின் தாக்கத்தை மதிப்பிட பத்து ஆண்டுகள் என்பது கணிசமானது. இந்தப் பத்து ஆண்டுகளில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சாதித்தவை எவை என்பதை ஆய்வு செய்வதற்கு இந்தத் தருணத்தை நாம் பயன்படுத்தியிருக்கலாம். 2004 ஆம் ஆண்டில் செம்மொழித் தகுதி அறிவிக்கப்பட்டது. அன்றுமுதல் இதுவரைக்கும் அந்த நிறுவனத்துக்கு ஒரு முழுநேர இயக்குனரைக்கூட கண்டறிய முடியவில்லை. அதற்கான தேர்வுக்குழு எத்தனையோ முறை கூடிவிட்டது. இதுவரை ஒருத்தரைக்கூட அது கண்டுபிடிக்கவில்லை. தமிழின் அவலநிலைக்கு இதைவிடச் சான்று வேறென்ன வேண்டும்? செம்மொழிக்காக என்ன செய்யப்பட்டது? செவ்வியல் இலக்கியங்களை மக்களிடம் பிரபலப்படுத்துகிறோம் என்று பேரணிகள் நடத்தப்பட்டன. இப்படியான கேலிக்கூத்து வேறு எந்த மொழியிலாவது நடந்திருக்குமா? 

நமது அண்டை மாநிலமான கர்னாடகத்தில் நாராயண மூர்த்தி என்ற தனிநபர் செய்யும் காரியங்களைப் பார்த்தால் நமது நிறுவனங்களின் அவலம் புரியும். இன்ஃபோசிஸ் என்ற நிறுவனத்தை உருவாக்கிய நாராயணமூர்த்தியின் பெயரால் 'மூர்த்தி கிளாசிக்கல் லைப்ரரி ஆஃப் இந்தியா ' என ஒரு திட்டத்தை உருவாக்கியிருக்கிறார்கள். சமஸ்கிருத அறிஞர் ஷெல்டன் பொல்லாக்கின் வழிகாட்டுதலில் ஹார்வர்டு பல்கலைக் கழகத்துடன் இணைந்து அது செயல்படுகிறது. இந்தியாவின் பல்வேறு மொழிகளிலிருந்து செவ்வியல் இலக்கியப் பிரதிகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடுகிறார்கள். மூல மொழியிலும் ஆங்கிலத்திலும் அந்தப் பிரதிகள் வெளியிடப்படுகின்றன. உலகமெங்கும் இருக்கும் இந்தியவியல் அறிஞர்கள் எல்லோரும் அதில் ஆலோசகர்களாக உள்ளனர். ஐந்து நூல்கள் வெளியாகிவிட்டன, தெரிகதாவும், ஸூஃபி பாடல்களும், அக்பரின் வரலாறும் அதில் இடம்பெற்றுள்ளன. துளசிதாசரின் ராமாயணம் உட்பட ஜனவரி மாதத்தில் நான்கு நூல்கள் வெளியாகவுள்ளன. இப்படி ஒரு வேலையையாவது தமிழ்நாட்டிலிருக்கும் தமிழ் நிறுவனங்கள் செய்துள்ளனவா? 

நாராயணமூர்த்தி அண்மையில் ஒரு கருத்தைத் தெரிவித்தார். " கடந்த அறுபது ஆண்டுகளாக உலக அளவில் தாக்கத்தை நிகழ்த்தும் விதமாக ஒரு கண்டுபிடிப்பைக்கூட இந்தியா முன்வைக்கவில்லை. உலகின் கவனத்தை ஈர்க்கக்கூடிய ஒரு சிந்தனையையும் இந்தியா வெளியிடவில்லை" என்று கூறினார். அந்தக் கருத்து ஆங்கில ஊடகங்களிலே வட இந்தியாவைச் சேர்ந்தவர்களால் விவாதிக்கப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டில் அதை விவாதிப்பதற்குக்கூட ஆள் இல்லை. இந்தக் கருத்தை மட்டுமல்ல முக்கியத்துவம் வாய்ந்தஎந்தவொரு கருத்தையும் விவாதிக்கக்கூடிய நுண்ணுணர்வுமிக்க அறிவாளிகள் நம்மிடம் இல்லை.

தமிழ்ச் செம்மொழியாகிவிட்டது என்பதில் பெருமைகொள்கிற நாம் தமிழின் செவ்வியல் வளத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பதில் எந்த அளவுக்குத் திறன்வாய்ந்தவர்களாக இருக்கிறோம்? தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்கள் எல்லாவற்றிலும்  தமிழ்த் துறைகள் இருக்கின்றன. கல்லூரிகள் பலவற்றிலும் தமிழ்த் துறையை வைத்திருக்கிறார்கள். ஆனால் அங்கே தொல்காப்பியத்தைக் கற்பிக்கும் திறன்கொண்ட ஆசிரியர்கள் எத்தனைபேர் உள்ளனர்? செவ்வியல் இலக்கியப் பிரதிகளை சொல்லிக்கொடுக்கும் திறன் வாய்ந்த ஆசிரியர்கள் எத்தனைபேர்? பாடத் திட்டங்களை வகுக்கும்போதே தொல்காப்பியம் வேண்டாம், சங்க இலக்கியம் வேண்டாம் என்று சொல்கிற நிலைதானே இருக்கிறது!

இதைப்பற்றி ஷெல்டன் பொல்லாக் ஒரு ஆய்வுக் கட்டுரையை எழுதியிருக்கிறார். செவ்வியல் இலக்கியக் கல்வி எதிர்கொண்டிருக்கும் பிரச்சனைகளை அவர் அந்தக் கட்டுரையிலே விவாதித்திருக்கிறார். முதன்மையான சிக்கல் உயர்கல்வி பற்றிய அரசாங்கத்தின் கொள்கை. தற்போது தொழில் கல்விக்குத்தான் முக்கியத்துவம் தரப்படுகிறது. humanitiess எனப்படும் சமூகவியல் படிப்புகள் புறக்கணிக்கப்படுகின்றன. தத்துவம், உளவியல், அரசியல் விஞ்ஞானம், பொருளாதாரம், வரலாறு, மொழியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு போதுமான நிதி ஒதுக்குவது இல்லை. ஐஐடிக்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் பத்தில் ஒரு பங்குகூட பல்கலைக்கழகங்களுக்கு ஒதுக்கப்படுவதில்லை. அமெரிக்காவிலும்கூட இதே நிலைதான் என்று ஷெல்டன் பொல்லாக் சுட்டிக்காட்டுகிறார். இது செவ்வியல் கல்விக்கு மிகப்பெரும் தடையாக இருக்கிறது.

"இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வலுவடைந்துவரும் மதம் சார்ந்த மனோபாவம் பெர்ஷியன், அரபி ஆகிய மொழிகளைப் புறக்கணிப்பதில் முடிந்திருக்கிறது. சுதந்திரத்துக்கு முன்னர் வட இந்தியாவில் பெர்ஷியனும் அரபியும் படிக்கவேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது. நாடு சுதந்திரம் அடைந்த பின்னால் அது நிறுத்தப்பட்டுவிட்டது. அதனால் அந்த மொழிகளில் இருக்கும் செவ்வியல் இலக்கிய வளம் இன்றைய தலைமுறையினருக்குக் கிடைக்கவில்லை" என்று பொல்லாக் குறிப்பிடுகிறார். அது மறுக்க முடியாத உண்மை. இந்துத்துவத்தை எதிர்ப்பவர்கள்கூட இந்த அம்சம் குறித்து அக்கறை காட்டியதில்லை.

"தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் நிகழ்ந்த பிராமணரல்லாதார் எழுச்சி சமஸ்கிருதத்துக்கு எதிரான மனநிலையை இறுக்கமடையச் செய்துவிட்டது" என்றும் ஷெல்டன் பொல்லாக் குறிப்பிடுகிறார். பெர்ஷியன், அரபி மொழிகள் குறித்து நடுநிலையான கருத்தைச் சொன்னவர் சமஸ்கிருதம் என வரும்போது பக்கச்சாய்வுடன் பேசுகிறார். இது அவரது தமிழகத் தொடர்பாளர்களின் தாக்கத்தால் ஏற்பட்ட மனச்சாய்வு எனக் கூறவேண்டும். இந்தியாவில் நிலவிய சமூக ஏற்றத் தாழ்வுகளுக்கு ஆதரவாக காலனிய ஆட்சியாளர்களின் மனோபாவத்தை வடிவமைத்த சக்திகள்தான் இப்போது ஷெல்டன் பொல்லாக் போன்ற அயல்நாட்டு ஆய்வாளர்களின் பார்வையையும் திரிபுபடச் செய்கிறார்கள்.

நாராயணமூர்த்தி அண்மையில் ஒரு கருத்தைத் தெரிவித்தார். " கடந்த அறுபது ஆண்டுகளாக உலக அளவில் தாக்கத்தை நிகழ்த்தும் விதமாக ஒரு கண்டுபிடிப்பைக்கூட இந்தியா முன்வைக்கவில்லை. உலகின் கவனத்தை ஈர்க்கக்கூடிய ஒரு சிந்தனையையும் இந்தியா வெளியிடவில்லை" என்று கூறினார். அந்தக் கருத்து ஆங்கில ஊடகங்களிலே வட இந்தியாவைச் சேர்ந்தவர்களால் விவாதிக்கப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டில் அதை விவாதிப்பதற்குக்கூட ஆள் இல்லை. இந்தக் கருத்தை மட்டுமல்ல முக்கியத்துவம் வாய்ந்தஎந்தவொரு கருத்தையும் விவாதிக்கக்கூடிய நுண்ணுணர்வுமிக்க அறிவாளிகள் நம்மிடம் இல்லை.

தமிழ்ச் செம்மொழியாகிவிட்டது என்பதில் பெருமைகொள்கிற நாம் தமிழின் செவ்வியல் வளத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பதில் எந்த அளவுக்குத் திறன்வாய்ந்தவர்களாக இருக்கிறோம்? தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்கள் எல்லாவற்றிலும்  தமிழ்த் துறைகள் இருக்கின்றன. கல்லூரிகள் பலவற்றிலும் தமிழ்த் துறையை வைத்திருக்கிறார்கள். ஆனால் அங்கே தொல்காப்பியத்தைக் கற்பிக்கும் திறன்கொண்ட ஆசிரியர்கள் எத்தனைபேர் உள்ளனர்? செவ்வியல் இலக்கியப் பிரதிகளை சொல்லிக்கொடுக்கும் திறன் வாய்ந்த ஆசிரியர்கள் எத்தனைபேர்? பாடத் திட்டங்களை வகுக்கும்போதே தொல்காப்பியம் வேண்டாம், சங்க இலக்கியம் வேண்டாம் என்று சொல்கிற நிலைதானே இருக்கிறது!

இதைப்பற்றி ஷெல்டன் பொல்லாக் ஒரு ஆய்வுக் கட்டுரையை எழுதியிருக்கிறார். செவ்வியல் இலக்கியக் கல்வி எதிர்கொண்டிருக்கும் பிரச்சனைகளை அவர் அந்தக் கட்டுரையிலே விவாதித்திருக்கிறார். முதன்மையான சிக்கல் உயர்கல்வி பற்றிய அரசாங்கத்தின் கொள்கை. தற்போது தொழில் கல்விக்குத்தான் முக்கியத்துவம் தரப்படுகிறது. humanitiess எனப்படும் சமூகவியல் படிப்புகள் புறக்கணிக்கப்படுகின்றன. தத்துவம், உளவியல், அரசியல் விஞ்ஞானம், பொருளாதாரம், வரலாறு, மொழியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு போதுமான நிதி ஒதுக்குவது இல்லை. ஐஐடிக்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் பத்தில் ஒரு பங்குகூட பல்கலைக்கழகங்களுக்கு ஒதுக்கப்படுவதில்லை. அமெரிக்காவிலும்கூட இதே நிலைதான் என்று ஷெல்டன் பொல்லாக் சுட்டிக்காட்டுகிறார். இது செவ்வியல் கல்விக்கு மிகப்பெரும் தடையாக இருக்கிறது.

"இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வலுவடைந்துவரும் மதம் சார்ந்த மனோபாவம் பெர்ஷியன், அரபி ஆகிய மொழிகளைப் புறக்கணிப்பதில் முடிந்திருக்கிறது. சுதந்திரத்துக்கு முன்னர் வட இந்தியாவில் பெர்ஷியனும் அரபியும் படிக்கவேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது. நாடு சுதந்திரம் அடைந்த பின்னால் அது நிறுத்தப்பட்டுவிட்டது. அதனால் அந்த மொழிகளில் இருக்கும் செவ்வியல் இலக்கிய வளம் இன்றைய தலைமுறையினருக்குக் கிடைக்கவில்லை" என்று பொல்லாக் குறிப்பிடுகிறார். அது மறுக்க முடியாத உண்மை. இந்துத்துவத்தை எதிர்ப்பவர்கள்கூட இந்த அம்சம் குறித்து அக்கறை காட்டியதில்லை.

"தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் நிகழ்ந்த பிராமணரல்லாதார் எழுச்சி சமஸ்கிருதத்துக்கு எதிரான மனநிலையை இறுக்கமடையச் செய்துவிட்டது" என்றும் ஷெல்டன் பொல்லாக் குறிப்பிடுகிறார். பெர்ஷியன், அரபி மொழிகள் குறித்து நடுநிலையான கருத்தைச் சொன்னவர் சமஸ்கிருதம் என வரும்போது பக்கச்சாய்வுடன் பேசுகிறார். இது அவரது தமிழகத் தொடர்பாளர்களின் தாக்கத்தால் ஏற்பட்ட மனச்சாய்வு எனக் கூறவேண்டும். இந்தியாவில் நிலவிய சமூக ஏற்றத் தாழ்வுகளுக்கு ஆதரவாக காலனிய ஆட்சியாளர்களின் மனோபாவத்தை வடிவமைத்த சக்திகள்தான் இப்போது ஷெல்டன் பொல்லாக் போன்ற அயல்நாட்டு ஆய்வாளர்களின் பார்வையையும் திரிபுபடச் செய்கிறார்கள்.

காலனிய ஆட்சி காலத்து கேடுகளைப்போலவே இப்போது உருவாக்கப்படும் கருத்துத் திரிபுகளால் விளையும் கேடுகளும் ஆபத்தானவை. தமிழ்ச் சமூகம் குறித்தும் தமிழ்ச் செவ்வியல் இலக்கியம் குறித்தும் பிழையான கருத்தாக்கங்கள் அயல்நாட்டு அறிஞர்களால் முன்வைக்கப்படுகின்றன. அவற்றை மறுத்து ஆங்கிலத்தில் நூல்களை ஆய்வுக் கட்டுரைகளை எழுதக்கூடியவர்கள் நம்மிடையே இல்லை. இதுவொரு முக்கியமான சிக்கல்.

தமிழ் அறிஞர்கள் உடனடியாகக் கவனத்தில் எடுக்கவேண்டிய இரண்டு ஆய்வுகளை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். மானுடவியல் ஆய்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் லூய் துய்மோன் என்ற அறிஞர். அவர் இந்திய சாதி அமைப்பைப் பற்றி எழுதிய Homo Hierarchicus என்ற நூல் அதற்குப் பின்னர் வந்த அத்தனை சமூகவியல் ஆய்வுகளின்மீதும் மிகப்பெரும் தாக்கத்தை நிகழ்த்தியுள்ளது. சாதியின் தோற்றம் குறித்து அதில் முன்வைக்கப்பட்டிருக்கும் கருத்துகளை நமது மானுடவியல் ஆய்வாளர்கள் விவாதிக்கவேண்டும்.

துய்மோன் எழுதிய நூலின் தாக்கத்தால் தமிழ்ச் செவ்வியல் பிரதிகளை ஆய்வுசெய்த ஜார்ஜ் ஹார்ட் எழுதிய ஆய்வுக் கட்டுரை Early evidence of caste in south india என்பதாகும். சங்க காலத்திலேயே தமிழர்கள் சாதியப் படிநிலைகளோடுதான் வாழ்ந்தார்கள், இப்போது செய்வதைப்போலவே தீண்டாமையைக் கடைப்பிடித்தார்கள் என அதில் அவர் வாதிடுகிறார். அதற்கு ஆதாரமாக சங்க இலக்கியப் பிரதிகளைக் காட்டுகிறார். இந்த ஆய்வுக் கட்டுரையும் விவாதிக்கப்படவேண்டும். இவற்றை விவாதித்து ஆங்கிலத்தில் நூல்களை , கட்டுரைகளை எழுதவேண்டும்.

தமிழில் ஆய்வு செய்யும் ஆய்வு மாணவர்களுக்கு இத்தகைய நூல்களை நமது பேராசிரியர்கள் அறிமுகம் செய்கிறார்களா? அவர்களே இவற்றைத் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டாத நிலையில் மாணவர்களுக்கு எப்படி அறிமுகம் செய்வார்கள்? தற்போது பல்கலைக்கழக மானியக் குழு புதிதாக ஒரு விதியை அறிமுகம் செய்திருக்கிறது. முனைவர் பட்ட ஆய்வு செய்பவர்கள் இரண்டு ஆய்வுக் கட்டுரைகளையாவது ஆய்விதழ்களில் வெளியிட்டிருக்கவேண்டும், அவற்றை ஆய்வேட்டுடன் சமர்ப்பிக்கவேண்டும் என அறிவித்திருக்கிறது. இது வரவேற்கத்தக்க அறிவிப்பு. மாணவர்கள் தரமான ஆய்வுக் கட்டுரைகளை எழுதுவதற்கு இந்த விதி உதவும். ஆனால் இந்த விதியைக்கூட பொருளீட்டும் வழியாக சிலர் மாற்றிவிட்டனர். ஆய்வு மாணவர்களின் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுவதற்கென்றே சில பத்திரிகைகள் ஐஎஸ்பிஎன் எண்ணோடு முளைத்திருக்கின்றன. அவற்றில் கட்டுரை வெளியிட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது எனக் கேள்விப்படுகிறேன்.

இன்றைக்கு தமிழில் ஆய்வுசெய்யும் ஒரு மாணவர் தனது ஆய்வுக் கட்டுரையை வெளியிடவேண்டுமென்றால் அதற்கு ஆய்விதழ்கள் இல்லை. தமிழ்ப் பல்கலைக் கழகமோ, செம்மொழித் தமிழாய்வு நிறுவனமோ ஆய்விதழ் எதையும் நடத்தவில்லை. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிடும் பத்திரிகையும் காலத்தில் வருவதில்லை. தமிழில் peer reviewed journal எனக் கூறத்தக்க ஆய்விதழ் ஒன்றுகூட நமது நிறுவனங்களால் நடத்தப்படவில்லை. இந்த நிலை மாற்றப்படவேண்டும்.

தமிழறிஞர்கள் பலதுறை சார்ந்த அறிவோடுத் திகழ்ந்தார்கள்; பன்மொழி அறிவு கொண்டவர்களாக இருந்தார்கள். சோழர் கால வரலாற்றுக்கு இன்றைக்கும்கூட நம்பகமானதொரு வரலாற்று நூலாக இருப்பது சதாசிவப் பண்டாரத்தார் எழுதிய நூல்தான். அவர் ஒரு தமிழ்ப் பேராசிரியர்தான். சதாசிவப் பண்டாரத்தாரின் மரபுத் தொடர்ச்சி எங்கே எப்படி அறுபட்டது என்பதை நாம் சிதிக்கவேண்டும். அதை சரிசெய்யவேண்டும். அதற்கு பலதுறை சார்ந்த அறிவும் பன்மொழிப் புலமையும் நமது தமிழ்ப் பேராசிரியர்களுக்கு இருக்கவேண்டும்.

philology என்னும் மொழிநூல் அறிவின் தேவையை பொல்லாக் வலியுறுத்துகிறார். சங்க இலக்கியங்களை மட்டுமின்றி சமகால இலக்கியப் பிரதிகளைப் புரிந்துகொள்வதற்கும் அது அவசியம். ஒரு பிரதியில் படைப்பாளி தெரிவிக்க விரும்பும் பொருள், மரபு வழங்குகிற பொருள், வாசகன் உருவாக்கிக்கொள்ளும் பொருள் ஆகிய மூன்றுக்குமான சமன்பாட்டை மொழிநூல் அறிவு வலியுறுத்துகிறது. மொழியியல் என்பதும் மொழிநூல் அறிவு என்பதும் ஒன்று அல்ல. இதை நமது தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் கற்றுத்தரவேண்டும்.

அகராதியியலில் தேர்ச்சிகொண்டோர் இப்போது அருகிவிட்டனர். நிதி நல்கைகளைப்பெற்று தமிழில் வட்டார வழக்குச் சொல் அகராதிகளை நமது எழுத்தாளர்கள் உருவாக்கியுள்ளனர். கி. ரா, பெருமாள் முருகண் உள்ளிட்ட பலபேர் அதைச் செய்திருக்கின்றனர். அகராதியியலின் இலக்கணப்படிப் பார்த்தால் அவை ஒன்றுகூட அகராதி என்று சொல்வதற்குத் தகுதியானதில்லை என்று அந்தத் துறை சார்ந்த வல்லுனர்கள் கூறுகின்றனர். முறையான அகராதியியலை தமிழ்த்துறை மாணவர்களுக்குக் கற்பிக்கவேண்டும்.

க்ரியா என்ற தனியார் நிறுவனம் தற்காலத் தமிழ் அகராதியை உருவாக்கியிருக்கிறது. ஆனால் தமிழ்ப் பேரகராதியின் புதிய பதிப்பைக் கொண்டுவருவதற்கு சென்னைப் பல்கலைக்கழகம் தடுமாறிக்கொண்டிருக்கிறது. நூறு ஆண்டுகளுக்கு முன்னர் செய்த பணியைக்கூட இன்று செய்ய முடியவில்லை.

தமிழ் மொழியின் வளர்ச்சியைப் பற்றி அக்கறை காட்டுகிற நாம் எந்தவொரு மொழியையும் பகையாகப் பார்க்கக்கூடாது. வெறுப்போடு அணுகக்கூடாது. தமிழ் மட்டுமே தெரிந்தால் தமிழின் சிறப்பு புரியாது. இங்கே வந்திருக்கும் பேராசிரியர் மா.லெ.தங்கப்பா சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார். ஜார்ஜ் ஹார்ட்டின் மொழிபெயர்ப்பைவிட தங்கப்பாவின் மொழிபெயர்ப்பு சிறப்பாக இருக்கிறது. இதுவரை வெளிவந்திருக்கும் சங்க இலக்கிய மொழிபெயர்ப்புகளை ஒப்பிட்டுப் பார்த்துப் புரிந்துகொள்ளும் திறன் நமது ஆய்வு மாணவர்களுக்கு இருக்கவேண்டும். தங்கப்பாவின் சிறப்பு அப்போதுதான் தெரியும். அவரது மொழிபெயர்ப்புகளைப்பற்றி பேராசிரியர் மருதநாயகம் எழுதிய ஒரு ஆய்வுக் கட்டுரை தவிர வேறு ஒன்றுகூட எழுதப்படவில்லை. நம்மிடம் இருக்கும் அறிஞர்களை அடையாளம் காணக்கூட நம்மால் முடியவில்லை. இந்த நிலை மாற்றப்படவேண்டும்.

எல்லாவற்றையும் அரசாங்கம் செய்யும் என எதிர்பார்க்க வேண்டாம், அரசியலாளர்கள் செய்வார்கள் என நம்பவேண்டாம். அறிவுத் தளத்தில் முன்னெடுக்கவேண்டிய பணிகளை நாமே நம்மால் இயன்ற அளவில் செய்வோம். அரசியல் தளத்தில் குரல் கொடுத்தால் அதற்கு ஆதரவு இருக்கும், பாராட்டு கிடைக்கும். ஆனால் அறிவுத் தளத்தில் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவு இருக்காது. அரசியல் தளத்தில் பணியாற்ற கூட்டம் தேவை, ஆனால் அறிவுத் தளத்தில் செய்யும் பணிகளைத் தனியேதான் செய்யவேண்டும். அதிகபட்சம் ஒருசில நண்பர்கள் இருந்தால் போதும். நல்வாய்ப்பாக பேராசிரியர் அறவாணன் அவர்களின் அறிவுத்துறை வாரிசுகளாக முனைவர் சிலம்பு செல்வராஜ், முனைவர் அறவேந்தன் முதலான நல்ல நண்பர்கள் அவருக்குக் கிடைத்திருக்கிறார்கள். உங்களால் நல்ல தாக்கத்தை தமிழ் ஆய்வுலகில் ஏற்படுத்த முடியும்.

நான் ஒரு தமிழ் அறிஞனல்ல, ஒரு தமிழ் மாணவன். மணற்கேணி என்ற ஆய்விதழை நடத்துவதன் வழியாக என்னாலியன்ற தமிழ்ப்பணியைச் செய்துவருகிறேன். இங்கே குழுமியிருக்கும் தமிழறிஞர்கள் நினைத்தால் நிச்சயம் வியத்தகு சாதனைகளைப் புரியமுடியும். இந்த வைர விழா நிகழ்வு அத்தகைய முன்னெடுப்புக்கான துவக்கமாக அமைந்தால் அதுவே திரு அறவாணன் அவர்களுக்குத் தெரிவிக்கப்படும் மிகச்சிறந்த பிறந்தநாள் வாழ்த்தாக அமையும் எனக் கருதுகிறேன். நன்றி வணக்கம் 

Friday, August 7, 2015

மது விலக்கு : தமிழக பா.ஜ.க வுக்கு ஒரு வேண்டுகோள்!

திரு சசிபெருமாள் அவர்களது இறுதி நிகழ்ச்சியில் அவருக்கு அஞ்சலி செலுத்தி நான் ஆற்றிய இரங்கலுரையின் சுருக்கம் : 
==============
மது ஒழிப்புப் போராட்டத்தில் தன் இன்னுயிரை இழந்த அய்யா சசிபெருமாள் அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அஞ்சலி செலுத்துகிறேன். அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

இன்று பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வந்திருக்கிறார். பிரதமராகப் பதவியேற்று முதல் முறையாகத் தமிழகம் வந்திருக்கும் பிரதமர் தமிழ்நாட்டு முதலமைச்சரை வீட்டில் போய் சந்தித்திருக்கிறார். இந்தியாவின் மாநிலங்கள் அனைத்திலும் மதுவிலக்கு ரத்துசெய்யப்பட்ட காலத்திலும் மதுக் கடைகளை அனுமதிக்காத மாநிலம் குஜராத். காந்திக்கு மரியாதை செய்வதற்காக அவர் பிறந்த குஜராத்தில் மதுக்கடைகளைத் திறப்பதில்லை. மது விற்பனையால் வரும் வருவாய் இல்லாமலேயே குஜராத் வளர்ச்சியடைந்திருக்கிறது என்று சொல்லித்தான் மோடி தேர்தலில் வாக்கு கேட்டார் இன்று பிரதமராகவும் வந்துவிட்டார். 

தமிழ்நாட்டின் முதன்மையான சமூக அரசியல் பிரச்சனையாக மதுவிலக்கு மாறியிருக்கிறது என்பதை பிரதமரிடம் இன்று யாராவது கூறியிருக்கலாம். அதைக் கேட்டிருந்தால் மது விற்பனையால் வரும் வருமானம் இல்லாமலேயே குஜராத் மாநிலத்தில் தான் எப்படி ஆட்சி செய்தேன் என்பதை தமிழக முதல்வரிடத்தில் அவர் கூறியிருக்கலாம். மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு நிதி உதவி செய்யும் என்றும் வாக்களித்திருக்கலாம். ஏனென்றால் மதுவிலக்கு என்பது மாநிலப் பிரச்சனை மட்டுமல்ல, அது ஒரு தேசியப் பிரச்சனை. 

அரசியலமைப்புச் சட்டத்திலேயே மதுவிலக்கை தேசியக் கொள்கையாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில்தான் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்திலும் மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்திலும் அதற்காக நிதி ஒதுக்கினார்கள். 

மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்காக மத்திய அரசால் நியமிக்கப்பட்ட இரண்டு ஆணையங்களும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை மத்திய அரசு ஈடுகட்டவேண்டும் என்றுதான் பரிந்துரை செய்துள்ளன. 

இப்போது தமிழ்நாட்டிலிருக்கும் பாஜக மதுக்கடைகளை மூடவேண்டும் எனப் போராடி வருகிறது. அதை வரவேற்கிறோம். அக்கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை அவர்கள் உணர்வுபூர்வமாக அதை வலியுறுத்துகிறார். இங்கே அமர்ந்திருக்கும் அய்யா இலக்கியச்செல்வரின் மகளாக இருப்பதால் மற்றவர்களைவிடக் கூடுதலான அக்கறை அவருக்கு இருக்கும். அய்யா சசிபெருமாளுக்கு அஞ்சலி செலுத்தும் இந்த மேடையிலிருந்து ஒரு வேண்டுகோளை அவரிடம் வைக்கிறேன். நீங்கள் உங்கள் தலைமையிடம் எடுத்துச் சொல்லுங்கள், உங்கள் கட்சியைச் சார்ந்த பிரதமரிடம் வலியுறுத்துங்கள். 'மது ஒழிப்பை தேசியக் கொள்கையாக அறிவியுங்கள்! மதுவிலக்கால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு நிதி வழங்கவேண்டும் என அறிவியுங்கள்!' என பிரதமரிடம் வலியுறுத்துங்கள். 

தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை அறிவிக்கவேண்டும். அது ஒன்றுதான் அய்யா சசிபெருமாள் அவர்களுக்குத் தமிழக அரசு செலுத்தும் அஞ்சலியாக இருக்கும். 



Wednesday, August 5, 2015

தமிழ்நாட்டில் பெண்களுக்கு தனி கட்சி உருவாகுமா? - ரவிக்குமார்



பெண்கள் சமத்துவக் கட்சி ( Women's Equality Party ) என்ற பெயரில் பெண்கள் பிரச்சனையை மையப்படுத்தி ஒரு புதிய கட்சி இங்கிலாந்தில் துவக்கப்பட்டுள்ளது. 

* அரசியல், வர்த்தகம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் சமமான பிரதிநிதித்துவம் 

* கல்வியில் சம வாய்ப்பு 

* சம ஊதியம்

* ஊடகங்களில் சமத்துவத்தோடு நடத்தப்படுதல் 

* குழந்தை வளர்ப்பில் சம பங்கேற்பு

* பெண்கள் மீதான அனைத்துவித வன்முறைகளுக்கும் முடிவுகட்டுதல் 

என்ற ஆறு நோக்கங்களை முன்வைத்து இந்தக் கட்சியைத் துவக்கியுள்ளனர். க்ரீன் பார்ட்டி எப்படி சுற்றுச்சூழல் என்னும் ஒற்றை இலக்கை முன்வைத்து நடத்தப்படுகிறதோ அதுபோல இந்தக் கட்சியும் பெண்களுக்கு சமத்துவம் என்ற ஒற்றை செயல்திட்டத்தோடு ( single point agenda) செயல்படும் என இக்கட்சியைத் துவக்கியுள்ள சேண்டி டோக்ஸ்விக் ( Sandi Toksvig) கூறியிருக்கிறார். 

கட்சி ஆரம்பிக்கப்பட்டு ஒருசில நாட்களிலேயே ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் கிளைகள் உருவாகியுள்ளன. 2016 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் லண்டன் மேயர் தேர்தலில் தாம் போட்டியிடப்போவதாக சேண்டி டோக்ஸ்விக் அறிவித்திருக்கிறார். 

தமிழ்நாட்டில் இப்படியொரு கட்சியை ஆரம்பியுங்கள் என ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் நான் சிவகாமி ஐஏஎஸ் அவர்களிடம் கூறினேன். அப்போது அவர் திருச்சியில் பெண்கள் மாநாடு ஒன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார். ஆனால் நான் கூறியபோது அதை வேடிக்கையாகச் சொல்கிறேன் என அவர் அலட்சியப்படுத்திவிட்டார். திருச்சி மாநாட்டில் சுமார் ஒரு லட்சம் பெண்கள் திரண்டனர். அந்த எழுச்சியை அவரால் பயன்படுத்த முடியாமல் போய்விட்டது. அதன்பின்னர் அவர் பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்து அதிலிருந்து விலகி இப்போது ஒரு சிறிய அமைப்பை நடத்திக்கொண்டிருக்கிறார். 

இடதுசாரி கட்சிகள் உட்பட அரசியல் கட்சிகளின் மகளிர் பிரிவுகள் மட்டுமே பெண்களுக்கான சமத்துவத்தை வென்றெடுக்கப் போதுமானவை அல்ல. அவர்களுக்கென சுயேச்சையான அமைப்புகள் இருந்தால் இன்னும் அழுத்தமாக அவர்களது பிரச்சனைகளை முன்வைக்க முடியும். அப்படியொரு கட்சி உருவானால் பாலின சமத்துவத்தில் நம்பிக்கைகொண்ட கட்சிகள் அதை ஆதரிக்கவேண்டும். 

இன்றைய சூழலில் வசந்திதேவி. சிவகாமி, சுதா ராமலிங்கம், ஓவியா, அஜிதா உள்ளிட்ட சமூக அக்கறையுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கும் பெண்கள் ஒருங்கிணைந்து பெண்களுக்கான கட்சியைத் துவக்கலாம். இடதுசாரிக் கட்சிகளின் மகளிர் அமைப்புகளைச் சேர்ந்த முன்னணி தலைவர்களும் அதில் இணைந்தால் நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

Monday, August 3, 2015

Prohibition demand in Tamil Nadu: what about Puducherry?

By D. Ravikumar

Tamil Nadu’s long-standing demand for prohibition has finally achieved pre-dominance in the state’s political landscape. The death of prohibition activist Sasi Perumal has made it even more so – protests have erupted in various parts of the state. 

Kalingappatti, a small hamlet in the southern part of the state has witnessed a bloody confrontation with the police; liquor shops have been ransacked by protesters across the state; several parties such as the MDMK, VCK, MMK have called for a statewide bandh on August 4 which is being supported by traders’ associations and political parties such as the Congress and the DMDK.

None of this however, has touched the neighbouring union territory of Puducherry, even though the major political parties functioning in Puducherry, except for the ruling NR Congress, are offshoots of those in Tamil Nadu.

Prohibition crusaders like the PMK have never demanded prohibition in Puducherry. It is only the Left parties and the VCK who have made this demand in the union territory. 

Impact of alcoholism

There has been no serious research on the impact of alcoholism on public health in Puducherry, even though there may be a direct link between the high suicide rate and alcoholism. Puducherry has the highest suicide rate in the country - 40.4, which is three times higher than the national average of 10 (National Crime Record Bureau data, 2014). In 2014, 644 persons had committed suicide in the union territory. 

Alcohol economy

Puducherry has an alcohol economy: it is dependent on liquor sales. According to the Puducherry government, a large portion of the union territory’s revenue comes from the excise department. This has been true since the time of French colonization. One of the first distilleries in the union territory – Ariyankuppam – was established by the government itself over 100 years ago to produce arrack.

Today, the state-owned PAPSCO, PASIC and Amudhasurabi run 40 retail outlets, but almost all of the Indian Made Foreign Liquor, arrack and toddy shops are owned by private parties. Even though the economy of Puducherry depends to a large extent on the income accruing from duties on alcoholic beverages, the UT government has never tried to nationalize the liquor trade.

The reluctance of Puducherry’s political parties is demanding prohibition in the union territory is hardly surprising given that most liquor shops are run directly or indirectly by local politicians.

The UT government annually earns around Rs 100 crore through licences granted to 130 arrack shops, 109 toddy shops and 417 IMFL outlets.

Excise revenue from liquor sales in 2014 was Rs 375.03 crore and the government’s target for 2015 is Rs 560 crore, but when per capita consumption is taken into consideration, this figure is rather low. This low revenue accruing to the government is the direct result of the trade being in the hands of private players, who have benefited from the liquor policy of the UT government.

It is high time prohibition for Puducherry is discussed. People are anxious to know what the Congress, DMK and BJP is on this demand.

(The writer is the General Secretary of Viduthalai Chiruthaigal Katchi, a political party in Tamil Nadu)

- See more at: http://www.thenewsminute.com/article/prohibition-demand-tamil-nadu-what-about-puducherry-32862#sthash.MItj4XPb.dpuf

Sunday, August 2, 2015

புதுச்சேரியில் மதுவிலக்கு சாத்தியமில்லையா ?


தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கை இப்போது வலுப்பெற்று வருகிறது. ஆளும் கட்சியைத் தவிர பிற கட்சிகள் யாவும் இதை வலியுறுத்தி வருகின்றன. ஆனால் தமிழ்நாட்டின் அண்டையிலிருக்கும் புதுச்சேரியில் இந்தக் கோரிக்கை இன்னும் வலுவாக எழவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஐ எம், ஐக்கிய ஜனதா தளம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முதலான ஒரு சில கட்சிகள் மட்டும் தான் இதைப்பற்றிப் பேசிவருகின்றன. 

கடந்த நாற்பது ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பலமுறை மதுவிலக்கு நடைமுறையில் இருந்திருக்கிறது. ஆனால் புதுச்சேரியில் மதுவிலக்கு குறித்த பேச்சுகூட எழுவதில்லை.   புதுச்சேரியை ஆண்ட பிரெஞ்சு காலனிய அரசாங்கத்தினர் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பே புதுச்சேரியில் சாராய ஆலையைத் திறந்து சாராயம் உற்பத்தி செய்துள்ளனர். 

" புதுச்சேரியில் தற்போது 654 மதுக்கடைகள் இருக்கின்றன. 130 சாராயக் கடைகளும் 129 கள்ளுக்கடைகளும்  395 IMFL மதுக்கடைகளும் உள்ளன. 1700 பேருக்கு ஒரு மதுக்கடை என்ற விகிதத்தில் மதுக்கடைகள் செயல்படுகின்றன" என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு ஒன்றில் தெரிவித்துள்ளது. இந்திய அளவில் அதிக அளவில் மது அருந்தப்படும் யூனியன் பிரதேசங்களில் ஒன்றாகப் புதுச்சேரி உள்ளது. 

மதுப் பழக்கத்துக்கும் தற்கொலைக்கும் உள்ள தொடர்பைப் பல்வேறு ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. இந்தியாவிலேயே மிக அதிகமாகத் தற்கொலைகள் நிகழும் பகுதியாக புதுச்சேரி இருக்கிறது. தேசிய சராசரியைவிட மூன்று மடங்கு அதிகமாக புதுச்சேரியில் தற்கொலைகள் நடக்கின்றன என NCRB புள்ளிவிவரம் கூறுகிறது. 2014 ஆம் ஆண்டில் மட்டும் 644 தற்கொலைகள் நடந்துள்ளன. இதற்கும் புதுச்சேரியில் உள்ள அதிக எண்ணிக்கையிலான மதுக்கடைகளுக்கும் நேரடியான தொடர்பிருப்பதை எவரும் மறுக்க முடியாது. 

புதுச்சேரி மக்களின் நல்வாழ்வு பாதுகாக்கப்படுவதற்காக மட்டுமின்றி தமிழ்நாட்டில் மதுவிலக்கை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கும்கூட புதுச்சேரியில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது அவசியம்.