Tuesday, August 11, 2015

ரவிக்குமார் கவிதை

தோளில் அமர்ந்த மரணம் 
- ரவிக்குமார்


மின் கம்பத்திலிருந்து
காக்கை உருவில் கரைந்து கரைந்து
அழைத்தது மரணம்

'என்னை நினைவுகூர
எந்தத் தடயமும் இருக்கக்கூடாது
அவற்றையெல்லாம் அழித்துவிட்டு
அழைத்துப்போ' என்றேன்

எங்கெங்கே இருக்கும்?
என்றென்னைக் கேட்டது

படித்த புத்தகங்களில் இருக்கும்
பார்த்த மலர்களில் இருக்கும்
குளித்த நதிகளில் இருக்கும்
கொஞ்சிய குழந்தைகளில் இருக்கும்
நடந்த வழிகளில் இருக்கும்
நனைந்த மழையினில் இருக்கும்

கடற்கரையில்
புல்வெளியில்
பாதையோர மரநிழலில்

கண்ணீரில்
புன்னகையில்
காற்றில்லா நடுப்பகலில்

எல்லாவற்றிலுமே
இருக்கும் என் தடயம் என்றேன்

உன்னை நினைவுகூர்வார்
யாருளர்? என்றது
ஒருத்தர் பெயரும் தோன்றாது திகைத்தேன்

பறந்து வந்தென்
தோளில் அமர்ந்தது


No comments:

Post a Comment