Thursday, March 17, 2011

மண்டேலாவின் தீவு - மரியோ வர்கஸ் ஜ்யோஸா




1964ஆம் ஆண்டு குளிர் காலத்தில் ஆயுள் தண்டனை மற்றும் கட்டாய உழைப்பு ஆகியவற்றுக்காக ரௌபன் தீவில் மண்டேலா வந்து இரங்குவதற்கு முன்பே முன்னூறு ஆண்டுகளுக்கு மேலாக கொடுஞ் செயல்களுக்காக அந்த தீவு புகழ்பெற்று விளங்கியது.  காலனிய ஆட்சியை எதிர்த்து நடத்தப்பட்ட கறுப்பின மக்களின் போராட்டங்கள் முதலில் டச்சுக்காரர்களும் பிறகு பிரிட்டிஷ் காரர்களும் கடுமையாக ஒடுக்கினர்.  அத்துடன் கூடவே அந்த தீவை தொழு நோயாளிகளின் குடியிருப்பாகவும், பைத்தியக்காரர்களின் விடுதியாகவும், குற்றவாளிகளின் திறந்தவெளி சிறையாகவும் அவர்கள் மாற்றினார்கள்.  அந்த தீவை ஒட்டிய கடல் பகுதியில் காணப்பட்ட பயங்கரமான நீர் சுழல்களும் அங்கு இருந்த சுறாமீன்களும் அந்த தீவிலிருந்து தப்பிப்போக முயன்றவர்களை பார்த்துக்கொண்டன.  தென்ஆப்பிரிக்க குடியரசு உருவாக்கப்பட்டபோது அது தொழுநோயாளியும் மற்றும் பயித்தியக்காரர்களையும் அந்த தீவுக்கு அனுப்புவதை நிறுத்திக்கொண்டது.  அதன் பிறகு அது சமூக விரோதிகள் மற்றும் அரசியல் புரட்சியாளர்கள் ஆகியோருக்கான சிறையாக மாற்றப்பட்டது.
மண்டேலா இந்த தீவுக்கு அனுப்பப்படுவதற்கு சில ஆண்டுகள் முன்புவரை 1948ம் ஆண்டு ஆரம்பமான நிறவெறி அரசாங்கம் அரசியல் கைதிகளை பிறகைதிகளோடு சேர்த்துத்தான் வைத்திருந்தது.  அதன்மூலம் மற்ற கைதிக்கு அரசியல் கைதிகளை சின்னாபின்னாமாக்கிவிடுவார்கள் என்று அது நம்பியது.  ஆனால் இப்படி சேர்த்த வைப்பதால் சாதாரணமான குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருடர்கள் நாடோடிகள், கொலை காரர்களில் பலர் விரைவிலேயே அரசியல் கைதிகளால் மூளைச்சலவை செய்யப்பட்டு ஆப்பிரிக்காவில் இருந்த ஏ.என்.சி. மற்றும் பி.ஏ.சி. ஆகிய இரண்டு புரட்சிகர குழுக்களில் சேர்வது அதிகரித்துவிட்டது என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொண்டனர்.  எனவே, அந்த முறையை கைவிட்டுவிட்டனர்.  சாதாரண குற்றவாளிகளும் அரசியல் கைதிகளும் தனித்தனியே பிரிக்கப்பட்ட பிறகும்கூட மண்டேலா வந்தபிறகு அரசியல் கைதிகள் பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர்.  மண்டேலாவைப்போல ஆபத்தான அரசியல் தலைவர்கள் என்று கருதப்பட்டவர்கள் செக்ஷன் பி என்ற பிரிவுக்கு  அனுப்பப்பட்டனர்.  அவர்களுக்கு இழைக்கப்பட்ட ஏனைய கொடுமைகளோடு தனிமை என்ற கொடுமையும் கூடுதலாக சேர்க்கப்பட்டது.
தனது இருபத்தெழு ஆண்டுகால சிறை வாழ்க்கையில் அந்த தீவில் இருந்த பதினெட்டு ஆண்டுகாலமும் ஆறரை அடி அகலமும் ஏழரை அடி நீளமும் பத்து அடி உயரமும் கொண்ட ஒரு சிறை கொட்டடியில்தான் மண்டேலா அடைக்கப்பட்டிருந்தார்.  அது விலங்கு ஒன்று அடைந்துகொள்ளும் பொந்தைப்போலவும் ஒரு பெட்டியைப்போலவும் இருந்தது.  மனிதர்கள் இருப்பதற்கு அது தகுதியற்றது.  அந்த அறையை சுற்றி கட்டப்பட்டிருந்த சிமெண்ட் சுவர் கோடைக்காலத்தில் அதை ஒரு சூளைப்போலவும் குளிர்காலத்தில் அதை ஒரு ஐஸ்பெட்டிபோலவும் ஆக்கிக்கொண்டிருந்தது.  அந்த அறையில் இருந்த கம்பிகள் பொறுத்தப்பட்ட சின்னஞ்சிறு ஜன்னல் வழியாக சுவரால் சூழப்பட்ட முற்றத்தை மட்டுமே ஒருவர் பார்க்கமுடியும்.  அங்கு ஆயுதம் ஏந்திய காவலர்கள் காவல் காத்துக்கொண்டிருப்பார்கள்.   இந்த காவலர்கள் பெரும்பாலோர் வெள்ளையர்கள்.  ஆனால் அந்த தீவில் இருந்த சிறைவாசிகளில் பெரும்பாலோர் கறுப்பர்கள்.  வெள்ளை இனத்தைச் சேர்ந்த கைதிகளுக்கென்று தனியே சிறைகள் இருந்தன.  அதுபோலவே வெள்ளையும் இல்லாமல் கறுப்பும் இல்லாமல் ஆசிய வம்சாவலியைச் சேர்ந்த பழுப்பு நிற மனிதர்களுக்கென்று தனியே சிறை இருந்தது.
நிற வெறி என்பது இன ரீதியாக பிரித்து வைப்பதை விடவும் ஆழமாக ஊடுருவிச் சென்றிருந்தது.  அது மனிதர்களை பல அடுக்குகளாக பிரித்து வைத்தது.  வெள்ளையர்கள் அந்த அடிக்கின் உச்சியில் இருந்தனர்.  கறுப்பர்கள் அடியில் இருந்தனர்.  மற்றவர்கள் அவர்களது நிறத்தில் எத்தனை சதவீதம் வெள்ளை நிறம் இருக்கிறதோ அதற்கேற்ப வகைப்படுத்தப்பட்டார்கள்.  1964ல் தென்னாப்பிரிக்க சிறை அமைப்பு இந்த தத்துவத்தை தீவிரமாக கடைப்பிடித்து வந்தது.  அப்போது ஸ்டெல்லன் பாஷ் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறை தலைவராக இருந்த வெர்வோர்டு என்ற அறிவு ஜீவி இந்த தத்துவத்தை ஆதரித்து வந்தார்.  சிறைவாசிகளின் தோல் நிறத்தை வைத்து அவர்களுக்கான உணவு, உடை, வேலை மற்றும் தண்டனை ஆகியவற்றை முடிவுசெய்தார்கள்.  அதன்படி பழுப்புநிறம் கொண்டவர்களுக்கு டி பிரிவு உணவு வழங்கப்பட்டது.  அதில் ரொட்டி, காய்கறிகள், காப்பி முதலானவை இருக்கும்.  ஆனால் கறுப்பர்களுக்கோ எஃப் பிரிவு உணவு வழங்கப்பட்டது.  அது சோளக் கஞ்சியை மட்டும் கொண்டதாகும்.  பழுப்பு நிறம் கொண்டவர்களுக்கு நாளொன்றுக்கு இரண்டரை அவுன்ஸ் சர்க்கரை கொடுக்கப்பட்டது.  கறுப்பர்களுக்கோ இரண்டு அவுன்ஸ் மட்டும்தான் தரப்பட்டது.  பழுப்பு நிறத்தவருக்கு மெத்தைகள் கொடுக்கப்பட்டன.  கறுப்பினவர்க்கோ பாய்கள் மட்டும்தான் வழங்கப்பட்டன.  பழுப்பினத்தவர்க்கு மூன்று போர்வைகள் ஆனால் கறுப்பர்களுக்கோ இரண்டு போர்வைகள் மட்டும்தான்.
இந்த பேதங்களை எல்லாம் மண்டேலா சகித்துக்கொண்டார்.  உணவை பற்றியோ, படுக்கையை பற்றியோ புகார் எதுவும் சொல்லவில்லை.  சிறை நிர்வாகத்தினர் கறுப்பின கைதிகளை அவமானப்படுத்துவதற்கென்று வழங்கிய சீருடையை அவர் அணிய மறுத்தார்.  சிறை நிர்வாகத்தின் கடுமையான தண்டனைகள் மிரட்டல்கள் இன்னும்மோசமான தனிமைச் சிறைகள் எதுவும் அவரை ஒன்றும் செய்யமுடியவில்லை.  கடைசியில் ராபன் தீவில் இருந்த கறுப்பின கைதிகள் அனைவருக்கும் வெள்ளை இன கைதிகளுக்கு வழங்கப்படுவதுபோலவே முழு நீள பேட்டுகள் வழங்கப்பட்டன.
காலையில் ஐந்தரை மணிக்கு சிறையின் வேலை நாள் ஆரம்பமாகிவிடும்.   கைதிகளுக்கு ஒருசில நிமிடங்கள் மட்டுமே தரப்படும்.  அதற்குள் அவர்கள் தமது அறையில் இருக்கம் மல வாளிகளை எடுத்துச் சென்று கொட்டிவிட்டு சுத்தம் செய்துகொண்டு வந்துவிடவேண்டும்.  இடையில் சக கைதிகளோடு பேசுவது தடைசெய்யப்பட்டிருந்தது.  காலையில் வழங்கப்படும் இந்த ஒருசில நிமிட அவகாசத்தில்தான் கைதிகள் தமக்குள் பேசிக்கொள்ள முடியும்.  அல்லது சைகை செய்துகொள்ள முடியும்.  பிறகு சோளக்கஞ்சி கொடுக்கப்படும்.  கைதிகள் யாவரும் முற்றத்துக்குள் ஓட்டிவரப்படுவார்கள்.  தனித்தனியாக தரையில் அமைதியாக அமர்த்தப்படுவார்கள்.  அங்கு கொட்டப்பட்டிருக்கும் சுண்ணாம்புக்கற்களை அவர்கள் உடைக்கவேண்டும்.  முற்பகலிலும் மாலையிலும் அரை மணிநேர அவர்களுக்கு அவகாசம் அளிக்கப்படும்.  அப்போது அவர்கள் எழுந்து நடந்து தம் கால்களை நீட்டி மடக்கிக் கொள்ளலாம்.  பகலில் ஒருமுறை மாலையில் ஒருமுறை அவர்களுக்கு கஞ்சி ஊற்றப்படும்.  பிறகு அவர்கள் மீண்டும் கொட்டடிகளில் வைத்து பூட்டப்படுவார்கள்.  அந்த அறைகளுக்குள் 24 மணிநேரமும் பல்பு எறிந்துகொண்டிருக்கும்.
அரசியல் கைதிகள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பார்வையாளர்களை சந்திக்கலாம்.  அதற்கு அரை மணி நேரம் அனுமதி வழங்கப்படும்.  கண்ணாடி சுவரால் பிரிக்கப்பட்டு சிறிய ஓட்டைகள் மட்டுமே கொண்ட அறையில் இந்தபுறம் கைதிகளும், அந்தப்புறம் அவர்களைப் பார்க்க வந்த பார்வையாளர்களும் நிறுத்தப்படுவார்கள்.  ஆயுதம் ஏந்திய காவலர்களுக்கு முன்புதான் பேசிக்கொள்ளவேண்டும்.  அவர்களது உரையாடல் குடும்ப விஷயங்களைத் தாண்டி வேறு பிரச்சனைகளுக்கு, அரசியல் பிரச்சனைகளுக்கு போகுமேயானால் அந்த காவலர்கள் இடைமறித்து உரையாடலை நிறுத்தி விடுவார்கள்.  ஆண்டுக்கு இரண்டு முறை கைதிகள் கடிதம் அனுப்பவோ, பெறவோ அனுமதிக்கப்படும்.  அந்த கடிதங்கள் சிறை அதிகாரிகளால் படிக்கப்பட்ட பிறகுதான் கைதிகளுக்கு தரப்படும்.  அரசியல் தொடர்பான வாக்கியங்கள் ஏதேனும் அந்த கடிதங்களில் இருந்தால் அவற்றை அந்த அதிகாரிகள் அடித்துவிடுவார்கள்.
சிறைவாசியின் மனிதத்துவத்தை நிர்மூலமாக்கி அவரை உணர்வற்ற ஜடமாக்க செய்து அவரிடம் இருக்கும் நம்பிக்கையை அழித்து அவரை முடக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட இத்தகைய ஒடுக்குமுறை நுட்பங்கள் யாவும் மண்டேலாவிடம் தோற்றுப்போயின.  அவரது நண்பர்களின் கூற்றுப்படி மண்டேலா சிறையிலிருந்தபடியே லண்டன் பல்கலைக்கழகத்தில் படித்து சட்டத்தில் பட்டம் வாங்கினார்.  சிறைக்குள் சிறியதொரு தோட்டத்தை அமைத்தார்.  சக கைதிகளோடு உரையாடினார்.  சிறைக்குள் அவர் பலவற்றைக் கற்றுக்கொண்டார்.  அங்கு அவர் பயின்ற அரசியல் தெளிவு தான் அங்கிருந்த சிறைவாசிகள் மீதும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் உறுப்பினர்கள் மீதும் இறுதியில் ஆப்பிரிக்கா முழுவதன் மீதும்  தனது கட்டுப்பாட்டை நிறுவுவதற்கு உதவியாக இருந்தது.  ராபன் தீவில் அவர் இருந்த முதல் பத்தாண்டுகளின் முக்கியத்துவம் அவர் தன்னை இழந்துவிடவில்லை என்பதில் தங்கியிருக்கவில்லை.  அவர் தனது லட்சியங்களை விட்டுக்கொடுக்காமல் மன உறுதியோடு வாழ்ந்தார் என்பதில்தான் அதன் முக்கியத்துவம் இருக்கிறது.  கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட அந்த காலத்திலும் மண்டேலா தனது இதயத்தை அதிர்ப்தியால், வெறுப்பால் நிறப்பிக்கொள்ளவில்லை.  மாறாக தென்ஆப்பிரிக்காவில் நிற வேற்றுமை பிரச்சினையை தீர்க்கவேண்டும் என்றால் அங்கிருக்கும் நிற வெறி அரசாங்கத்தோடு அமைதியான பேச்சுவார்த்தையை நடத்தித்தான் ஆகவேண்டும்  என்று அவர் நினைத்தார்.  இந்த யுக்தி அங்கிருந்த மக்கள் தொகையில் பன்னிரென்டு சதவீதத்தினராக மட்டுமே இருக்கும்.  ஆனால் பிற பெரும்பான்மை மக்களான கறுப்பினத்தவரை ஒடுக்கி சுரண்டி ஆண்டுகொண்டிருக்கும் வெள்ளை இனத்தவர் மத்தியில் ஒரு மனமாற்றத்தை  ஏற்படுத்த உதவியது.  நிற பேதங்களுக்கு முடிவுகட்டப்படவேண்டும். அரசியல் ஜனநாயகம் அனுமதிக்கப்படவேண்டும்.  அவ்வாறு செய்தால் அது குழப்பத்துக்கோ, பழி வாங்குவதற்கோ வழிவகுத்துவிடாது.  மாறாக இனக்கமான கூட்டுறவான ஒரு சகாப்தத்தை தென்ஆப்பிரிக்காவில் துவக்கி வைக்கும் என்பதை அவர்கள் புரிந்துகொண்டனர்.
இந்த கருணை நிரம்பிய அணுகுமுறைதான் துவக்கத்தில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் தலைவர்களை வழிநடத்தியது.  வெள்ளையர்கள் நம்பிக்கொண்டிருப்பதுபோல கறுப்பின மக்கள் காட்டுமிராண்டிகள் அல்ல என்பதை உலகுக்கு எடுத்துச் சொல்ல அதுவே உதவியாக இருந்தது.  ஆனால் 1960களின் துவக்கத்தில் அரசாங்கத்தின் ஒடுக்குமுறை உச்சத்தில் இருந்தபோது வன்முறை நடவடிக்கைகள்தான் வெற்றியைத்தரும் என்று ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் சாத்வீகமான தலைவர்களாக கருதப்பட்ட நெல்சன்மண்டேலா வால்டர் சிசுலு, ஆலிவர் டாம்போ ஆகியோர்கூட நம்பினார்கள்.  "ஆப்பிரிக்கா ஆப்பிரிக்கர்களுக்கே", "வெள்ளையர்களை கடலில் வீசுவோம்" என்பனபோன் முழங்கங்களை முன்வைத்தார்.  பி.ஏ.சி. கட்சியின் திட்டங்களை இவர்கள் எப்போதுமே நிராகரித்துத்தான் வந்தார்கள்.  என்றாலும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசுக்குள் ஒரு ஆயுதக்குழுவை ஏற்படுத்தி சதிச் செயல்களிலும் ஆயுதபிரயோகங்களிலும் ஈடுபட்டார்கள்.  க்யூபா மக்கள் சீனம், வடகொரியா, கிழக்கு ஜெர்மனி முதலிய நாடுகளுக்கு இளைஞர்களை அனுப்பி கொரில்லா யுத்தத்தில் பயிற்சி பெற வைத்தார்கள்.  நெல்சன் மண்டேலா  வாபன் தீவுக்கு கைதியாக வந்தபோது நிறவெறி அரசாங்கத்தை ஆயுதப்போராட்டத்தின் மூலம்தான் தூக்கியெறிய முடியும் என்ற நம்பிக்கை ஆப்பிரிக்காவெங்கும் ஆழமாக வேறூன்றி இருந்தது.  அன்றிருந்த நிறவெறி அரசாங்கம் ஒடுக்குமுறையின் உச்சத்தில் திளைத்துக்கொண்டிருந்தபோது அந்த கருத்தை எவரால்தான் மறுக்கமுடியும்.
நெல்சன் மண்டேலாதான் இந்த கருத்தாக்கத்தை துணிவோடு எதிர்த்தார்.  அதுவும் குகைபோன்ற ஒரு சிறைக் கொட்டடியில் ஆயுல் சிறைவாசியாக அடைக்கப்பட்ட நிலையில், தனிமையில் இதைச் செய்தார்.  அவரது சிறை வாசத்தின் இரண்டாவது தசாப்தத்தில் அற்புதமான அரசியல் யுத்திகளை அவர் உறுவாக்கினார்.  அவற்றைக் கொண்டு முதலில் தனது கட்சிக்காரர்களை,  கம்யூனிஸ்டுகளை, தாராளவாதிகளை அவர் சமாதானப்படுத்தினார்.  தனது சிறைவாசத்தில் மூன்றாவது தசாப்தத்தில் நாட்டின் நிலைமை சற்றே மேம்பட்டபோது சிறைக்குள் இருந்தபடியே அவரால் வெளி உலகத்தோடும் ஆட்சியாளர்களோடும் தொடர்பு கொள்ள முடிந்தது.  சுதந்திரமான, பல இனங்களும் இனக்கமான வாழக்கூடிய தென்ஆப்பிரிக்கா ஒன்றை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடமுடிந்தது.  ஒப்பந்தந்தத்துக்கு வரமுடிந்தது.  இதற்கு அவருக்கு 20 ஆண்டுகால போராட்டம் தேவைப்பட்டது.  இறுதியில் அவர்தான் வென்றார்.  சிறைவாசியாக இருந்தபோதே தென்ஆப்பிரிக்காவின் அதிபர்களான போத்தா, டி கிளர்க் ஆகியோரைச் சந்தித்து அவர்களோடு கௌரவமாக அமர்ந்து தேனீர் அருந்த முடிந்தது.  தென்ஆப்பிரிக்காவில் இருக்கும் வெள்ளையர்கள், கறுப்பர்கள் இந்தியர்கள், பழுப்பு நிறத்தவர்கள் என எல்லோராலும் மதிக்கப்படுகிற ஒரு ஜனாதிபதியாக அவர் பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  மிக நீண்ட, துயரம் தொய்ந்த ஆப்பிரிக்க கண்டத்தின் வரலாற்றில் இப்படி ஒரு முன்னுதாரணம் இருந்ததில்லை.
  நீங்கள் தென்ஆப்பிரிக்காவிற்கு செல்வீர்களேயானால் அதன் நகரங்களை அவற்றில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் புதிய பலபலப்புகளை அந்நாட்டின் எழிலார்ந்த கடற்கரைகளை, தரம் வாய்ந்த திராட்சை தோட்டங்களை, சிங்கங்களும், யானைகளும், சிறுத்தைகளும், ஒட்டகச்சிவிங்கிகளும் சுதந்திரமாக நடமாடும் மிகப்பெரும் காடுகளை பார்ப்பதோடு நின்றுவிடாதீர்கள்.  அல்லது ஒடுக்குமுறையின் சின்னங்கள் என்று கூறப்படும் கறுப்பினத்தவர் நிறைந்து வாழும் நகர பகுதிகளான சொவேட்டோ போன்ற இடங்களை மட்டும் பார்த்து வறுமையிலும் அங்கு பீரிட்டெழும் ஆற்றலை படைப்பூக்கத்தை ரசிப்பதோடு நின்றுவிடாதீர்கள்.  முதலில் ராபன் தீவுக்கு செல்லுங்கள்.  கடலின் நடுவே கைவிடப்பட்ட ஒரு பாழ்நிலமாக கிடக்கும் அங்கே செல்லுங்கள்.  அங்குதான் மனிதர்கள் வாழமுடியாத சிறைக் கொட்டடியில் இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றையே உத்வேகம் கொள்ளவைத்த சிந்தனைகள் உருவெடுத்தன.  இன்று உயிரோடிருக்கும் அரசியல் தலைவர்களிலேயே மதி நுட்பமும், பெருந்தன்மையும் கொண்ட ஒரு ஆளுமை அங்குதான் பல ஆண்டுகளை செலவிட்டது.

(நன்றி : The Languge of Passion, Selected Commentry, Picator, 2004)

No comments:

Post a Comment