Tuesday, October 23, 2012

” டெங்கு நோயாளிகளுக்கு விடுதலைச் சிறுத்தைகள் குருதிக்கொடை ”



டெங்குவால் பாதிக்கப்பட்டு அவசரமாக ரத்தம் தேவைப்படும் நோயாளிகளுக்கு ஆங்காங்கே இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் குருதிக்கொடை அளிப்பார்கள். இந்த நோய் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்திலும் அவர்கள் ஈடுபடுவார்கள்.
தமிழ்நாட்டில் இப்போது டெங்கு காய்ச்சல் என்பது மிகப்பெரிய சுகாதாரப் பிரச்சனையாக மாறியிருக்கிறது. இந்தியாவின் பிற மாநிலங்களிலும் இந்த நோய் தாக்கியிருக்கிறது என்றாலும் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மிக அதிகமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

தமிழக அரசு அளித்திருக்கும் தகவல்படி செப்டம்பர் கடைசி வாரம் வரை 5376 பேர் தமிழ்நாட்டில் டெங்குக் காய்ச்சலின் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். உயிரிழப்புகளும் தமிழ்நாட்டில்தான் அதிகம். அக்டோபர் மாதத்தில் புதிதாக நிறையபேருக்கு இந்த நோய் தாக்கியிருக்கிறது என்பதால் இந்த எண்ணிக்கை இப்போது இரண்டு மடங்காகியிருக்கும்.
தமிழக அரசு தற்போது சில தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது என்றாலும் இந்த நோயின் தாக்குதல் குறைந்ததாகத் தெரியவில்லை. டெங்கு வைரஸ் ரத்தத்திலிருக்கும் தட்டணுக்களை ( Platelets ) அழிக்கிறது என்பதால் இந்த நோயால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு உள்ளுக்குள் ரத்தக் கசிவு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. அப்படி ரத்தத்தில் தட்டணுக்கள் மிகவும் குறையும்போது அதை ஈடுகட்ட நோயாளிகளுக்கு அந்த அணுக்களை செலுத்தவேண்டும். இப்படி ரத்தத்தில் இருக்கும் தட்டணுக்களைப் பிரித்தெடுத்து செலுத்தக்கூடிய வசதி சிறு நகரங்களில் இருக்கும் மருத்துவமனைகளில் கிடையாது. பெரிய நகரங்களில் மட்டும்தான் அத்தகைய வசதி இருக்கிறது. எனவே தமிழக அரசு டெங்கு வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் இருக்கும் தாலுக்கா அளவிலான அரசு மருத்துவமனைகள் அனைத்திலும் போர்க்கால அடிப்படையில் ரத்த வங்கி மற்றும் ரத்தத்திலிருந்து தட்டணுக்களைப் பிரித்தெடுக்கும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது.

டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவசரமாக ரத்தம் தேவைப்படுகிறவர்களுக்கு ஆங்காங்கே இருக்கும் விடுதலைச் சிறுத்தைக் கட்சித் தொண்டர்கள் குருதிக்கொடை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். தொடர்புடைய சுகாதாரத்துறை அலுவலரையோ அல்லது அரசு மருத்துவமனைகளில் இருக்கும் தலைமை மருத்துவரையோ அணுகி தேவைப்பட்டால் குருதிக்கொடை அளிக்கத் தயாராக இருக்கிறோம் என்ற தகவலை அளிக்குமாறு  விடுதலைச் சிறுத்தைகளின் பொறுப்பாளர்கள் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். அதுபோலவே மக்களிடையே டெங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளிலும் விடுதலைச் சிறுத்தைகள் ஈடுபடுவார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

- தொல். திருமாவளவன்

No comments:

Post a Comment