Wednesday, July 3, 2013

தலித்துகள் ஒன்றுபடமாட்டார்களா?



தமிழக தலித் தலைவர்கள் ஒன்று சேரமாட்டார்களா? என்ற ஆதங்கம் ஒவ்வொரு தலித்தின் நெஞ்சிலும் துடித்துக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் பெருகிவரும் சாதிய வன்கொடுமைகளைத் தீர்த்துவைக்க எந்தவொரு மீட்பரும் விண்ணிலிருந்து குதித்து வரப்போவதில்லை. தலித்துகளின் ஒற்றுமை மட்டுமே அதை சாதிக்கும். தலித்துகள் ஒன்றுபடவேண்டுமெனச் சொல்வது தலித் கட்சிகளின் பேர சக்தியை அதிகரிப்பதற்காக அல்ல. தலித்துகள் சுயச்சார்பு பெறுவதற்காக! 

1997 ஆம் ஆண்டு மும்பையில் தற்கொலை செய்துகொண்ட தலித் கவிஞர் விலாஸ் கோக்ரே வின் வார்த்தைகளை எண்ணிப்பார்க்கிறேன். ராமாபாய் காலனியில் தலித் மக்கள்மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்தும் தலித் இயக்கங்கள் ஒன்றுபடவேண்டும் என வலியுறுத்தியும் அவர் தூக்கிட்டு இறந்தார். ஆனாலும்கூட அங்கே அந்த ஒற்றுமை உருவாகவில்லை. இந்திய அளவில் தலித் அரசியல் எழுச்சி ஏற்படுவதற்கான சாத்தியம் இப்போது தமிழகத்தில் மட்டும்தான் இருக்கிறது.  இதை தலித் அரசியல் தலைவர்கள் உணரவேண்டும். 

மனித வளம் பெருமளவில் இருந்தாலும் இன்னும் தலித் மக்கள் கையேந்திகளாகவே வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை திறன் கொண்டவர்களாக மாற்றினால் போதும். அதன்பிறகு அவர்களது முன்னேற்றத்தை அவர்கள் தீர்மானித்துக்கொள்வார்கள்! தலித்துகளின் பொருளாதாரத் தற்சார்பை உருவாக்குவதே தலித் தலைவர்களின் முன்னிருக்கும் முதன்மையான பணி! 

ராமாபாய் காலனி துப்பாக்கி சூடு நடந்த ஜூலை 11 ஆம் தேதியன்று தமிழ்நாட்டில் உள்ள தலித் இயக்கங்களின் ஒற்றுமையை வலியுறுத்தி உறுதிமொழி ஏற்க முன்வருபவர்கள் மறுமொழியிடுங்கள்! 

No comments:

Post a Comment