Tuesday, April 1, 2014

திருவள்ளூரை வாட்டும் மின்வெட்டுப் பிரச்சனை



தொழிற்சாலைகள் நிறைந்த திருவள்ளூர் தொகுதியில் மின்வெட்டுதான் முதன்மையான பிரச்சனை. இதனால் சிறு, குறு தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. அவற்றை நம்பி வாழும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் அல்லல்படுகின்றனர். 


இன்று மூன்று மணி நேரம் மின்வெட்டு இருந்ததாகச் சொன்னார்கள். வறுத்தெடுக்கும் வெயில் மின்வெட்டின் பாதிப்பை அதிகமாக்கிக் காட்டுகிறது. 


புதிய மின்னுற்பத்தித் திட்டங்கள் துவக்குவதில் முனைப்புகாட்டாத தமிழக அரசு மின்வெட்டுப் பிரச்சனைக்கும்கூட மத்திய அரசின்மீதே பழிபோடுகிறது. மின் தொகுப்பிலிருந்து மின்பகிர்மானம் செய்வதற்கானக் கட்டமைப்பு வசதிகளைச் செய்துதரும் பொறுப்பு மத்திய அரசைச் சார்ந்தது என்றாலும் அதற்காகும் செலவில் ஒரு பகுதியை மாநில அரசும் பகிர்ந்துகொள்ளவேண்டும். 


மின் உற்பத்தியை அதிகரிப்பது ஒருபுறமிருக்க மின்சாரம் வீணாவதைத் தடுத்தாலே நமது மாநிலத்தின் மின் வெட்டுப் பிரச்சனையை ஓரளவு போக்க முடியும். நாம் நுகர்கிற மின்சாரத்தின் அளவில் மூன்றில் ஒரு பகுதி பகிர்மானத்தின்போது  (transmission & distribution) வீணாகிவிடுகிறது. தமிழ்நாட்டில் சுமார் 20% மின்சாரம் இப்படி வீணாகிறது. கொரியா போன்ற நாடுகளில் இது 4% கூட இல்லை. இப்படி மின்சாரம் வீணாவதற்கு முக்கிய காரணம் மின் வினியோகத்தில் பயன்படுத்தப்படும் தரமற்ற மின் வடங்களும் ட்ரான்ஸ்பார்மர்களும் தான். தரம் குறைந்த மின் கம்பிகளை மாற்றுவது, நல்ல ட்ரான்ஸ்பார்மர்களை அமைப்பது போன்ற விஷயங்களில் தமிழக அரசு அக்கறைகாட்டினால் அதனால் மிச்சமாகும் மின்சாரத்தைத் தொழில் வளர்ச்சிக்குப் பயன்படுத்தமுடியும். 


மின் பகிர்மானத்தில் நேரிடும் மின் விரயத்தின் அளவை 2015 இல் 15% ஆகக் குறைப்பதற்கு தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதை 2020 க்குள் 7% ஆகக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். 


No comments:

Post a Comment