Tuesday, June 30, 2015

ரவிக்குமார் மொழிபெயர்த்த எடுவர்டோ கலியானோவின் நூல் ப்ரெய்லி வடிவத்தில் வெளியாகிறது



ரவிக்குமார் மொழிபெயர்த்து மணற்கேணி பதிப்பகம் மூலம் 2010 இல் வெளிவந்த எடுவர்டோ கலியானோவின் ' வரலாறு என்னும் கதை' என்ற நூல் பார்வையிழந்த மாற்றுத் திறனாளிகள் படிப்பதற்கு ஏற்ப ப்ரெய்லி வடிவத்தில் வெளிவரவுள்ளது. 

மதுரையில் செயல்பட்டுவரும் Indian Association for the Blind என்ற அமைப்பு அந்த நூலை வெளியிடுகிறது. அதன் பொதுச்செயலாளர் ரோஷன் ஃபாத்திமா அவர்கள் கேட்டுக்கொண்டதன்பேரில் நான் அந்த நூலை வெளியிட ஒப்புதல் வழங்கியிருக்கிறேன். அந்த அமைப்பின் சார்பில் மதுரையில் பள்ளி ஒன்றும் நடத்தப்படுகிறது. அதில் ஆறாம் வகுப்புமுதல் 12 ஆம் வகுப்புவரை 125 மாணவர்கள் படித்துவருகின்றனர். 

ஏற்கனவே க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியை அந்த அமைப்பு ப்ரெய்லியில் வெளியிட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி குட்டி இளவரசன், தொல்காப்பியம், நன்னூல், திருக்குறள், பெரியாழ்வார் திருமொழி, ஆத்திச்சூடி உள்ளிட்ட பலநூல்களும் ப்ரெய்லியில் வெளியிடப்பட்டுள்ளன. இப்போது 'வரலாறு என்னும் கதை' வெளியாகவிருக்கிறது. 

எனது கல்லூரி ஆசிரியர் : எஸ்.கோவிந்தராஜன்



" நீங்க என்ன டிகிரி பண்ணுனீங்க?" என்று யாராவது கேட்டால் நான் சற்றுத் தயக்கத்தோடுதான் பதில் சொல்வேன். ஏனென்றால் 'டூரிசம்' என்று ஒரு பட்டப் படிப்பு இருந்ததைப் பலபேர் அறிந்திருக்க மாட்டார்கள். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பு இருந்தகாலத்தில் அப்படியொரு டிகிரி இருந்தது. 

உயர்நிலைப் பள்ளி இறுதித் தேர்வில் நான் பாஸ் செய்தபோது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புகுமுக வகுப்பு படிக்கவேண்டும் என்பதுதான் எனது விருப்பமாக இருந்தது. என் தாய் மாமா மகன் எங்கள் வீட்டிலிருந்துதான் படித்தார். அவர் கடலூர் கலைக் கல்லூரியில் பியுசி சேர்ந்து படித்து ஃபெயிலாகி வீட்டில் இருந்தார். அவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை என்னை ஹாஸ்டலில் சேர்த்துப் படிக்கவைக்கவேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தார். 

என் அம்மாவுக்கோ என்னைவிடவும் தம்பிப் பிள்ளையான அவர்மீதுதான் பிரியம் அதிகம். தனக்குக் குழந்தை பிறக்காதபோது அவரை ஒரு தத்துப் பிள்ளைபோல எடுத்து அம்மா வளர்த்து வந்தார். என் விருப்பத்தைவிடவும் என் மாமா மகனான அவர் சொல்வதற்கே அம்மாவிடம் செல்வாக்கு அதிகம். அதனால் எனக்கு அண்ணாமலையில் பியுசி சேர இடம் கிடைத்தபோதிலும் நான் சற்றும் விரும்பாத பூம்புகாருக்கு அருகே மேலையூர் என்ற கிராமத்தில் இருந்த ஒரு தனியார் கலைக் கல்லூரியில் சேர்க்கப்பட்டேன். அந்த ஒரு வருடம் என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தைத் தனியே எழுதவேண்டும். 

பியுசியில் சயன்ஸ் குரூப் எடுத்துப் படித்திருந்தாலும் அங்கு கிடைத்த மோசமான அனுபவங்கள் இனிமேல் சயன்ஸ் குரூப்பே வேண்டாம் என்ற முடிவுக்கு என்னைத் தள்ளிவிட்டன. பட்டப் படிப்புக்கு அண்ணாமலையில் விண்ணப்பிக்கும்போது அந்த ஊசலாட்டம் என்னைப் பாடாய்ப் படுத்தியது. பிஎஸ்சி அக்ரிக்கும் ஜியாலஜிக்கும் விண்ணப்பங்களை வாங்கிப் போட்டேன். ஆனாலும் அதைப் படிக்கும் விருப்பம் எனக்கு இல்லை. ஏதாவது ஆர்ட்ஸ் குரூப்புக்கு விண்ணப்பிக்கலாம் என எண்ணம் வந்தது. என்ன படிக்கலாம் என அட்மினிஸ்ட்ரேடிவ் பில்டிங்கில் ஒட்டியிருந்த டைம் டேபிள்களை பார்த்துக்கொண்டே வரும்போதுதான் டூரிசம் என்ற பட்டப் படிப்புக்கான டைம்டேபிள் கண்ணில்பட்டது. அதில் என்னைக் கவர்ந்த விஷயம் அந்தப் படிப்புக்கு பிற்பகலில் வகுப்புகள் இல்லை என்பதுதான். உடனே அதற்கும் ஒரு விண்ணப்பம் போட்டேன். முதலில் டூரிசத்துக்கு அட்மிஷன் வந்தது. சேர்ந்துவிட்டேன். அதன் பிறகு ஜியாலஜி படிக்க அட்மிஷன் வந்தது. நான் போகவில்லை. 

டூரிசம் படித்த மூன்று வருடங்கள் என்னுள் ஏற்படுத்திய தாக்கம் அதிகம். இப்போது நான் தொல்லியல், கலை வரலாறு, கல்வெட்டியல் என அலைந்து திரிய அப்போது விரிவுரையாளராக இருந்த எஸ்.ஜி என மாணவர்களிடையே அறியப்பட்ட எஸ்.கோவிந்தராஜன் அவர்களே முதன்மையான காரணம். பணி ஓய்வு பெற்று அவர் புதுச்சேரியில் வசிப்பதால் இப்போதும் அவரோடு தொடர்பில் இருக்கிறேன். பேராசிரியர் சம்பகலட்சுமியின் மாணவர் அவர். சோழர்கால கட்டடக் கலையில் தேர்ச்சி பெற்றவர். அவரது வகுப்புகளைக் கேட்டால் வகுப்பறைகளுக்கு அப்பால் நாம் படிக்கவேண்டியதன் அவசியம் புரியும். மாலை வகுப்பு இல்லை என்பதால் டூரிசம் சேர்ந்த நான் மாலை நேரம் முழுவதையும் நூலகத்தில் கழிக்க அவரது வகுப்புகள் காரணமாயின. கோயில் கட்டடக்கலை குறித்த என் நூலை அவருக்கு சமர்ப்பணம் செய்யவிருக்கிறேன். மாணவன் ஆசிரியருக்கு ஆற்றும் நன்றி! 


Monday, June 29, 2015

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்

ததேகூ இம்முறையாவது பஞ்சமர்களுக்கு வாய்ப்பளிக்குமா? 

ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி நடைபெறவுள்ள இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் பகுதிகளிலிருந்தும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழர் தேசியக் கூட்டணி 2.90% வாக்குகளைப் பெற்று 14 இடங்களை வென்றது. அந்த 14 பேரில் ஒருவர்கூட பஞ்சமர் இல்லை எனத் தெரிகிறது. தற்போது கிழக்கு மாகாணசபையிலும்கூட பஞ்சமர் எவரும் அங்கத்தவராக இல்லை என்றே அறிகிறேன். 

இலங்கையில் சாதி இருக்கிறது தீண்டாமை இருக்கிறது ஆனால் சாதி ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகிறவர்களுக்கு இட ஒதுக்கீடு மட்டும் கிடையாது. அதனால் பஞ்சமர்களை வயல்களிலும், தேயிலைத் தோட்டங்களிலும் கூலிகளாகப் பயன்படுத்திவிட்டு எளிதாக ஒதுக்கிவைத்துவிட முடியும் என்ற நிலைதான் இப்போதும் இருக்கிறது. 

இந்தநிலை இப்போதும் நீடித்திருப்பது சரியல்ல. இந்தமுறையாவது பஞ்சம சாதிகளைச் சேர்ந்தவர்கள் நாடாளுமன்றத்தில் உரிய பிரதிநிதித்துவத்தைப் பெறவேண்டும். 

இலங்கையில் இஸ்லாமியர்களின் உரிமைகளை எடுத்துப்பேச கட்சிகள் உள்ளன; மலையகத் தமிழர்களுக்கு வாதாட கட்சிகள் உள்ளன ஆனால் பஞ்சம மக்களுக்காகப் பரிந்துபேச பெரிய கட்சியென்று எதுவுமில்லை. 

தமிழர் ஒற்றுமை சமத்துவத்தின் அடிப்படையில்தான் மலருமே தவிர அடிமைத்தனத்தில் முளைக்காது. இதை தமிழர் தலைவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். 

மணற்கேணி ஆய்விதழ் தொடர்ந்து வெளிவர உதவுங்கள்



வணக்கம்


மணற்கேணி இருமாத இதழ் துவக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள்நிறைவடையப் போகின்றன.இதுவரை 29 இதழ்கள் வெளிவந்துள்ளன. 

தமிழில் வெளிவந்து கொண்டிருக்கும் சிற்றிதழ்களிலிருந்துமுற்றிலும் மாறுபட்டு தனக்கெனத் தனித்துவமானதொருஅடையாளத்தை மணற்கேணி உருவாக்கியிருக்கிறது .


சங்க இலக்கியச் சிறப்பிதழ்பேராசிரியர் கா.சிவத்தம்பிசிறப்பிதழ்வங்க இலக்கியச் சிறப்பிதழ்பாகிஸ்தான் இலக்கியச்சிறப்பிதழ்; தமிழும் சமஸ்கிருதமும்; செவ்வியல் ஆய்வுகள் குறித்த சிறப்பிதழ் எனப் பல்வேறு சிறப்பிதழ்களை சிறப்புப் பகுதிகளை வெளியிட்டு தமிழ் ஆய்வுகளின் தரத்தை உயர்த்துவதற்கு உதவிவரும் மணற்கேணி கடந்த இரு இதழ்களாக பெண் எழுத்துகள் சிறப்பிதழாக பெண் இலக்கியவாதிகளையும் பெண் வரலாற்று அறிஞர்களையும் விரிவாக அறிமுகம் செய்துவருகிறது.  

கிரந்த யூனிகோடு பிரச்சனைபொருந்தல் அகழ்வாய்வின்முக்கியத்துவம் முதலானவற்றை தமிழ்ச் சிந்தனை உலகின்கவனத்துக்கு மணற்கேணி எடுத்துச் சென்றது

கவிஞர் சேரன்எம்..நுஃமான்.யேசுராசா,பா.அகிலன்,அனார்,லதா, லறீனா அப்துல் ஹக் முதலானோரின் படைப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டும்சிவா சின்னப்பொடியின் தன்வரலாற்றுத் தொடரை வெளியிட்டும்ஈழம் குறித்து கவனத்தை ஈர்த்து வருகிறதுஎம்.ஏ.நுஃமான் குறித்த சிறப்பிதழையும் கி.பி.அரவிந்தனின் நினைவைப் போற்றும் விதமாக சிறப்பிதழையும் வெளியிட்டிருக்கிறது.

பெண்களின் படைப்புகளுக்கான வெளியை விரிவுபடுத்தும்நோக்கோடு எழுத்தாளர் தேன்மொழியின் ஒருங்கிணைப்பில் ‘ஆயம்’ என்ற பகுதியில்அயல்நாடுகளைச் சேர்ந்த பெண் எழுத்தாளர்களின் படைப்புகள்மற்றும் நேர்காணலை வெளியிட்டுவருகிறதுஆங்கிலத்தில்வெளியான நேர்காணல்களைத் தமிழாக்கம் செய்துவெளியிடுவதே தமிழ்ச் சிற்றிதழ்களின் வழக்கம்ஆனால்மணற்கேணியில் வெளியான பாகிஸ்தான் எழுத்தாளர் செஹ்பாசர்வாரின் நேர்காணலின் ஆங்கில வடிவத்தை இந்தியாவின்முன்னணி நாளேடுகளில் ஒன்றான ’தி இந்து’ தனது ’லிட்டரரிரெவ்யூ’ பகுதியில் அதுவும் ஆங்கிலப் புத்தாண்டு அன்றுவெளியிட்டது.

இது தமிழ்ச் சிற்றிதழ் வரலாற்றில் பெருமைப்படத்தக்கதொருநிகழ்வாகும்.


திரு..அண்ணாமலைதிருமதி.வீ.எஸ்.ராஜம்பேராசிரியர்செ.வை.சண்முகம்பேராசிரியர் கி.நாச்சிமுத்துமுனைவர்விஜயவேணுகோபால்எம்..நுஃமான்பேராசிரியர்ராஜ்கௌதமன்,பேராசிரியர் வீ.அரசு,பேராசிரியர்.பஞ்சாங்கம்பேராசிரியர் பெ.மாதையன்,பேராசிரியர்கார்த்திகேயன்பேராசிரியர் இரா.கோதண்டராமன், பேராசிரியர் அ.ராமசாமி உள்ளிட்ட தமிழ் அறிஞர்களும்,அம்பை, கவிஞர்ஞானக்கூத்தன்இந்திரா பார்த்தசாரதி,தேன்மொழிஆசை,இமையம் உள்ளிட்ட படைப்பாளிகளும் மணற்கேணியில் பங்களிப்புச் செய்திருக்கிறார்கள்.


மொழிபெயர்ப்புகளின் வாயிலாக இதுவரை தமிழில்அறியப்படாதிருந்த எடுவர்டோ கலியானோஎலியா கனெட்டிபியர் பூர்தியூபர்ட்டன் ஸ்டெய்ன்ரணஜித் குஹாமுதலானோரின் சிந்தனைகளையும்எதுமோன் ழாபேஸ்நிக்கனோர் பர்ராஎதெல்பர்ட் மில்லர்அஃபூவா கூப்பர்உள்ளிட்டோரின் படைப்புகளையும் அறிமுகப்படுத்தியதுமணற்கேணி

தமிழ்நாட்டிலுள்ள கல்லூரிகளோ பல்கலைக்கழகங்களோ செய்யவேண்டிய இந்தப் பணியை மணற்கேணி செய்துவருகிறது. ஆனால், மணற்கேணி இதழுக்கு சந்தாசெலுத்தி வாங்குவதற்குக்கூட இந்த நிறுவனங்கள் முன்வருவதில்லை. இலக்கியத்துக்கு அப்பாற்பட்டநிறுவனங்களின் விளம்பர உதவி இல்லாமல்இலக்கியத்தின்மீதும் தமிழ் ஆய்வுகளின்மீதும் மதிப்புகொண்ட நண்பர்களின்ஆதரவை மட்டுமே நம்பி மணற்கேணி நடத்தப்படுகிறது


மணற்கேணி இதழின் முக்கியத்துவத்தை நீங்கள் உணர்ந்தால்இது தொடர்ந்து சிறப்பாக வெளிவரவேண்டுமென நீங்கள்விரும்பினால்

மணற்கேணி புரவலர் :


மணற்கேணியின் புரவலராவதற்கு நீங்கள் ரூஐந்தாயிரம்செலுத்தவேண்டும்உங்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்குமணற்கேணி இதழ் அனுப்பிவைக்கப்படுவதோடு மணற்கேணிபதிப்பகத்தால் வெளியிடப்படும் நூல்கள் யாவும் விலையின்றிஅனுப்பிவைக்கப்படும்.


மணற்கேணி குழாம் :


மணற்கேணி குழாமில் சேர நீங்கள் ரூ.மூவாயிரம்செலுத்தவேண்டும்மூன்று ஆண்டுகளுக்கு மணற்கேணி இதழ்அனுப்பப்படுவதோடு மணற்கேணி பதிப்பக வெளியீடுகள்விலையின்றி அனுப்பிவைக்கப்படும்.


ஊருணி :


இந்தத் திட்டத்தின்மூலம் நீங்கள் நூலகங்களுக்கோபள்ளிகளுக்கோபடிப்பகங்களுக்கோ அல்லது நீங்கள் விரும்பும்ஒரு நபருக்கோ மணற்கேணியைப் பரிசளிக்கலாம்ரூ.ஆயிரம்செலுத்தினால் இரண்டு ஆண்டுகளுக்கு இதழ் அனுப்பப்படும்.


ஆண்டு சந்தா:


ரூ.420/- செலுத்தி சந்தாதாரர் ஆகிறவர்களுக்கு ஒரு ஆண்டுக்குஇதழ் எமது சொந்த செலவில் அனுப்பப்படும்.


தொகையைக் கீழ்க்காணும் வங்கிக் கணக்கில் நீங்கள்நேரடியாகவே செலுத்திவிடலாம் :

Manarkeni Publication 

Overdraft account : 960114000000398

Syndicate Bank, Pondicherry Branch , IFSC Code : SYNB0009601

Tuesday, June 23, 2015

அவசரநிலை பிறப்பிக்கப்பட்டதன் நாற்பதாவது ஆண்டு



சர்வாதிகாரம் தலைதூக்காமல் தடுக்க ஒருகட்சி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்!

தொல்.திருமாவளவன் அறிக்கை
===========
 

இந்திய வரலாற்றில் இருண்ட காலம் எனக் குறிக்கப்படும் அவசரநிலை 1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் நாள் அறிவிக்கப்பட்டது.அதன் நாற்பதாவது ஆண்டு இது. மீண்டும் அப்படி அவசரநிலை அறிவிக்கபடுவதற்கான ஆபத்து இருக்கிறது என பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கூறியிருகிறார். அவரது கருத்தை ஆளும் கூட்டணியில் இருக்கும் சிவசேனாவும் ஆதரித்துள்ளது.

அவசரநிலைக் காலத்தின் அத்துமீறல்களை எவரும் எளிதில் மறந்துவிடமுடியாது. மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன; பத்திரிகைகள் தணிக்கைசெய்யப்பட்டன; முன்னணி அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கானோர் ’மிசா’ சட்டத்தில் கைதுசெய்யப்பட்டனர்; சிறைகளிலேயே பலர் கொல்லப்பட்டனர்; பலவந்தமாக லட்சக்கணக்கான ஏழை மக்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. டெல்லியில் குடிசைப் பகுதிகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன; அன்றைய பிரதமர் இந்திரா காந்தியைச் சுற்றியிருந்த ஒரு சிறு கூட்டத்தின் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் குவிக்கப்பட்டது; இந்தியப் பாராளுமன்றமுறையை ஒழித்துவிட்டு அதிபர் ஆட்சிமுறையைக் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ‘இந்திராவே இந்தியா’ என்று ஒரு நபரை மையமாக வைத்துத் துதிபாடும் கூட்டம் வெறியாட்டம் போட்டது.

அவசரநிலை மீண்டும் பிறப்பிக்கப்படாமல் தடுக்கவேண்டுமானால் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்படவேண்டும் என சிலர் கூறுகின்றனர். அது சரியான தீர்வல்ல. “ பெரும்பான்மை ஆட்சி நடக்கும் எந்தவொரு நாடுமே அவசரநிலை பிறப்பிக்கப்படுகிற ஆபத்துள்ள நாடுதான்” என சட்ட அறிஞர் ஃபாலி எஸ்.நாரிமன் கூறியிருப்பது மறுக்கமுடியாத உண்மையாகும். 1975 இல் அவசரநிலை பிறப்பிக்கப்படும்போது இந்திராகாந்தி அம்மையாரின் தலைமையில் ஒரு பெரும்பானமை ஆட்சிதான் நடந்துவந்தது. 1971 பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 352 இடங்களில் வெற்றிபெற்று தனிப் பெரும்பான்மையோடு ஆட்சிநடத்தியது. அந்தப் பெரும்பான்மை பலம் தந்த இறுமாப்புதான் அந்த சர்வாதிகார ஆட்சிக்கு அடிப்படை.

அவசரநிலைக் காலத்துக்கு முன்பிருந்ததுபோலவே இப்போதும் மத்தியில் பெரும்பான்மை பலத்தோடு ஒருகட்சி ஆட்சி நடக்கிறது; எல்லா அதிகாரங்களும் பிரதமரின் கையில் குவிக்கப்படுகின்றன, நரேந்திர மோடி என்ற ஒருவரை மையப்படுத்தி துதிபாடும் கூட்டம் உருவாகியிருக்கிறது. பாஜக அல்லாத மாநில அரசுகள் ஓரவஞ்சனைக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாகியிருக்கின்றன. எனவே இந்தியாவில் அவசரநிலை மீண்டும் பிறப்பிக்கப்படாமல் தடுக்கவேண்டுமென்றால் மத்தியிலும் மாநிலங்களிலும் ஒரு கட்சி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். இதனால்தான் “ மத்தியில் கூட்டாட்சி, மாநிலங்களில் கூட்டணி ஆட்சி” என்ற முழக்கத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முன்வைத்திருக்கிறோம். இந்தியாவில் சர்வாதிகார ஆட்சிமுறை தலைதூக்காமல் தடுக்கவேண்டும் என விரும்புகிற அனைவரும் இந்த முழக்கத்தை ஆதரிக்கவேண்டுமென்று கோருகிறோம்.

மத்தியிலும் மாநிலத்திலும் ஒரு நபரை மையப்படுத்தினால், ஒரு கட்சியின் கையில் அதிகாரத்தைக் குவித்தால் அது சர்வாதிகார ஆட்சிக்குத்தான் வழிவகுக்கும். இந்த ஆபத்தை எடுத்துக்கூறும் விதமாக  ”அவசரநிலை ஆபத்தும் ஒருகட்சி ஆட்சிமுறையும்” என்ற தலைப்பில்  27.06.2015 சனிக்கிழமை மாலை கூட்டம் ஒன்றை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி  ஒருங்கிணைக்கிறது. விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ள அக்கூட்டத்தில் சிபிஐ எம் சார்பாக சட்டமன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், சிபிஐ சார்பில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் முத்தரசன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர்.

இவண்

தொல்.திருமாவளவன்

Saturday, June 13, 2015

முனைவர் வீ.எஸ்.ராஜம் அவர்களின் நூல் வெளியீடு


" சங்க இலக்கியங்களின்மீது சுமத்தப்பட்ட களங்கத்தை அகற்ற முன்வாருங்கள்



நூல் வெளியீட்டு விழா அழைப்பு 

வணக்கம்.

சங்க இலக்கியங்களின் வழியாக நாம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த தமிழ்ச் சமூகத்தையும் பண்பாட்டையும் அறிகிறோம். இப்போது இருக்கும் சாதி அடிப்படையிலான சமூக வேற்றுமைகள் அன்றைய தமிழ்ச் சமூகத்தில் இல்லை என்பதே பொதுவான கருத்து. ஆனால் சங்க இலக்கியப் பிரதிகள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள ஜார்ஜ் எல் ஹார்ட் என்ற அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர் , பண்டைய தமிழ்ச் சமூகத்தில் இன்றிருப்பது போன்றே சாதியும் தீண்டாமையும் இருந்தன என வாதிடுகிறார். ஆரியர்கள் தீண்டாமை என்ற கருத்தை தமிழர்களிடமிருந்துதான் கற்றனர் என்கிறார். அதற்கு சங்க இலக்கியப் பிரதிகளை ஆதாரங்களாகக் காட்டுகிறார். மேலைநாட்டு தமிழ்ச் செவ்வியல் இலக்கிய ஆய்வுகளின் மீது அவரது கருத்து மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

சங்க இலக்கியப் பிரதிகளை ஜார்ஜ் எல் ஹார்ட் போன்றவர்கள் எப்படி தவறாகப் புரிந்துகொண்டிருக்கின்றனர் என்பதை விளக்கி மூத்த தமிழறிஞர் வீ.எஸ்.ராஜம் எளிய நடையில் எழுதியுள்ள நூலை மணற்கேணி பதிப்பகம் வெளியிடுகிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் 
தொல். திருமாவளவன் இன்று 12. 6-2015 மாலை இந்த நூலை வெளியிட தமிழறிஞர்கள் அவ்வை நடராசன், இந்திரா பார்த்தசாரதி, மா. இராசேந்திரன், பேராசிரியர் அருணன், மணி மு மணிவண்ணன் ஆகியோர் நூலைப் பற்றி பேசவுள்ளனர். 

இவ்விழா சென்னை, சி.ஐ.டி.காலனியிலுள்ள கவிக்கோ அரங்கத்தில் நடைபெறவுள்ளது. சங்க காலத்தின்மீது சுமத்தப்பட்டிருக்கும் களங்கத்தைத் துடைக்கும் முயற்சி இது. 
இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு  உரிமையோடு அழைக்கிறோம்.

அன்புடன்
ரவிக்குமார்
மணற்கேணி பதிப்பகம்