Friday, February 22, 2013

உயிருக்குப் போராடும் தலித் பெண் வித்யா:டாக்டர் ராமதாஸ் என்ன சொல்கிறார்?




அமில வீச்சுக்கு ஆளாகி அண்மையில் உயிரிழந்த காரைக்காலைச் சேர்ந்த வினோதினிக்குப் பிறகு இப்போது சென்னை, ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த வித்யா உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார். தந்தையை இழந்த வித்யா தனது குடும்பத்தைக் காப்பாற்ற இண்டர்நெட் மையம் ஒன்றில் பணிபுரிந்து வந்திருக்கிறார். நர்சிங் படிக்கவேண்டுமென அவர் விரும்பினாலும் குடும்பத்தின் ஏழ்மை அவரது விருப்பத்துக்குத் தடை போட்டுவிட்டது.அந்த மையத்துக்கு அடிக்கடி வந்துபோன விஜய் பாஸ்கர் என்ற இளைஞர் வித்யாவைக் காதலித்திருக்கிறார். வித்யாவும் அவரை விரும்பியிருக்கிறார். தனது தாய் சரஸ்வதியிடம் அதைக் கூறியிருக்கிறார்.

தந்தை இல்லாத நிலையில் தனது மகளைப்பற்றி எவரும் தவறாகப் பேசிவிடக்கூடாது என அஞ்சிய வித்யாவின் அம்மா சரஸ்வதி  விஜயபாஸ்கரிடம் பேசியிருக்கிறார். தனது குடும்பத்தினரோடு வந்து முறைப்படி பெண் கேட்டு திருமணம் செய்துகொள்ளுமாறு கூறியிருக்கிறார். அங்குதான் சிக்கல் வந்திருக்கிறது. வித்யா தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். அவரைக் காதலித்த விஜயபாஸ்கரோ வன்னியர் சாதியைச் சேர்ந்தவர். விஜயபாஸ்கரின் வீட்டில் அவரது காதலுக்கு சம்மதம் கிடைக்கவில்லை. ஆனால் விஜயபாஸ்கர் விடவில்லை. எங்காவது ஓடிப்போய் திருமணம் செய்துகொள்ளலாம் என வித்யாவிடம் வலியுறுத்தியிருக்கிறார். அத்ற்கு வித்யா சம்மதிக்கவில்லை. பெற்றோரின் சம்மதத்தோடு முறைப்படி திருமணம் செய்துகொள்வதே நல்லது எனக் கூறியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த விஜயபாஸ்கர் வித்யாமீது அமிலத்தை வீசியிருக்கிறார்.

வித்யா இப்போது உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார். விஜயபாஸ்கர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். வினோதினி இறந்தபோது தமிழ்த் தேசிய அமைப்புகள் அவரது உடலை ஊர்வலமாக எடுத்துச்சென்றன. அந்த அமைப்புகளின் தலைவர்கள் ஆவேசமாகப் பேட்டிகளைக் கொடுத்தார்கள். வித்யாவை இதுவரை எந்தத் தலைவரும் சென்று பார்க்கவில்லை. அவரது அம்மாவுக்கு ஆறுதலும் சொல்லவில்லை. அந்தப் பெண்ணுக்கு மருத்துவ சிகிச்சைக்கு நிதி உதவி தேவை என பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. அதற்கும் எந்தப் பலனும் இல்லை. தமிழக அரசியல் இயக்கங்கள் வித்யா செத்தபிறகு களத்தில் குதிக்கக்கூடும்.உயிரோடு இருப்பவர்களுக்காகப் பரிந்து பேசுவதில் அவர்களுக்கு அவ்வளவாக ஆர்வம் இருப்பதில்லை.  போராட்டங்கள் நடந்தால் மட்டுமே சுரக்கும்விதமான கருணை சுரப்பிகளைக்கொண்டிருக்கும் தமிழக அரசும் வித்யாவைப்பற்றிக் கவலைப்படவில்லை.

தலித் இளைஞர்கள் வன்னியர் சாதிப் பெண்களை மயக்கி நாடகத் திருமணங்களை நடத்துவதாக ஊர் ஊராகச் சென்று  கூட்டம் நடத்தி வெறுப்புப் பிரச்சாரம் செய்துவரும் சாதியவாதிகள், வித்யாமீது அமிலம்வீசித் தாக்கிய இளைஞரைப் பற்றி என்ன சொல்கிறார்கள்? டாக்டர் ராமதாஸ் என்ன சொல்கிறார்?

3 comments:

  1. தமிழ்த் தேசிய அமைப்பினர் மேல் இது போன்ற குற்றச்சாட்டுகள் வரும் என்று நான் எதிர்பார்த்தே இருந்தேன். இவ்வளவு சீக்கிரம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. முகநூலிலும் இந்தக் கேள்வியையும் கட்டுரையையும் இட்டிருக்கிறேன். பதில் ஏதும் கிட்டுகிறதா என்று பார்ப்போம்.

    ReplyDelete
  2. >டாக்டர் ராமதாஸ் என்ன சொல்கிறார்?

    ”எங்க சாதி இளைஞர்கள் முரடர்கள். அதனால் உடனே கல்யாணத்துக்கு ஒத்துகிடணும். மோகம் முப்பது நாள்தான். அதுக்கு பின் அவள் சுயமா பிழைச்சிகிடட்டும்” என நானே எப்படி சொல்லுவேன்”

    ReplyDelete
  3. மிகவும் வருத்தமாக உள்ளது! சாதி வெறி இன்னும் எத்தனை உயிர்களைக் குடிக்குமா?

    amas32

    ReplyDelete