Friday, October 30, 2015

மாட்டிறைச்சி அரசியல் - ரவிக்குமார்







அவர்கள்
திரிசூலங்களோடு பாய்ந்தார்கள்
அந்த முதியவனை 
வீட்டுக்குள்ளிருந்து இழுத்துவந்தார்கள்
நெஞ்சைப் பிளந்து
இதயத்தைப் பிடுங்கியெடுத்துக் காட்டினார்கள்
' இதோ இவன் மறைத்து வைத்திருந்த மாட்டிறைச்சி'

**

அவர்கள்
சேரிக்குள் நுழைந்தார்கள்
அந்தச் சகோதரியைப் 
பிடித்திழுத்து நிர்வாணமாக்கி
ஊர்வலம் விட்டார்கள்
கத்தியால் அவள் மார்பை அரிந்தெடுத்துக்
கூவினார்கள்
' இதோ இவள் ஒளித்து வைத்திருந்த
மாட்டிறைச்சி'

**

அவர்கள்
நள்ளிரவில் வந்தார்கள்
பெட்ரோல் ஊற்றி
தீப்பந்தத்தை வீசினார்கள்
கருகிக் கிடந்த குழந்தைகளின் சடலங்களைக் காட்டிக் 
கும்மாளமிட்டார்கள்
' இதோ இவர்கள் சமைத்து வைத்திருந்த
மாட்டிறைச்சி'

**

அவர்கள்
அவனைப் பின்தொடர்ந்தார்கள்
கடத்திச் சென்று
கழுத்தை அறுத்தார்கள்
முண்டத்தை வீசியெறிந்து  சொன்னார்கள்
' இதோ இவர்கள் சாப்பிட்டு மீந்த
மாட்டிறைச்சி'


**
வனவாசிகளுக்கு சேவை செய்தவரைக் 
குழந்தைகளோடு எரித்தவர்கள் 
குற்றம்சாட்டினார்கள்
' பரங்கியரின் உணவு 
மாட்டிறைச்சி '

**

ஒரு கையில் 
நியாயத் தராசைப் பிடித்திருந்தவன்
இன்னொரு கையால் எழுதினான் :
' கர்ப்பிணிப் பெண்களின்
வயிற்றைக் கிழித்தவர்கள்
நிரபராதிகள்.
அவர்கள் கொலைசெய்யவில்லை 
மாட்டிறைச்சியைத் தேடினார்கள் '







No comments:

Post a Comment