Thursday, October 8, 2015

ஸ்வாத்லேனாவுக்கு நோபல்: பனிப்போர் காலம் திரும்புகிறதா? - ரவிக்குமார்




ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஷோலகோவ், போரிஸ் பாஸ்டர்நாக், சோல்செனித்ஸின், ப்ராட்ஸ்கி ஆகியோர் இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்றிருக்கிறார்கள். இந்தப் பட்டியலில் ஷோலகோவ் தவிர மற்ற அனைவருமே சோவியத் யூனியனின் ஆட்சிமுறையைக் கடுமையாக விமர்சித்தவர்கள். அவர்களைப்போல படைப்பிலக்கியவாதி இல்லையென்றாலும் சோவியத் ஆட்சி முறையை விமர்சிப்பவர்தான் 2015 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெற்றிருக்கும் ஸ்வாத்லேனா அலெக்ஸீவிச். 

1987 ஆம் ஆண்டு ப்ராட்ஸ்கிக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அது பனிப்போர் காலம் ( Cold War period ) முடிவை நெருங்கிய நேரம். அதன்பின்னர் கோர்ப்பசேவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு 1990 ல் வழங்கப்பட்டது. அது பனிப்போர் காலத்தின் முடிவை அறிவித்தது. அதன்பின்னர் ஒருதுருவ உலகம் என்ற நிலை, அதில் அமெரிக்காவின் மேலாதிக்கம். இப்போது அது மாறத் தொடங்கியிருக்கிறது. ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் முறுகல் நிலை தீவிரமடைய ஆரம்பித்துள்ளது. உக்ரைன் அதற்கொரு அடையாளம். 

இப்போது ஸ்வாத்லேனாவுக்கு வழங்கப்பட்டிருக்கும் நோபல் பரிசு பனிப்போர் காலம் மீண்டும் தலையெடுத்துள்ளதன் அறிகுறியாகவே தோன்றுகிறது. சோஷலிச அரசுகள் குறித்த அவரது விமர்சனங்கள் ப்ராட்ஸ்கியை நினைவூட்டுகின்றன. அதிகாரத்துவம் எதிர்க்கப்படவேண்டும். ஆனால் அது ஏகாதிபத்தியத்துக்கு சேவை புரிவதாக திரிந்துவிடக்கூடாது. ஸ்வாத்லேனா ஆற்றப்போகும் ஏற்புரையைப் படிக்க ஆவலாக இருக்கிறேன். யுத்தத்தின் மனிதத்தன்மையற்ற முகத்தை அவர் திறந்து காட்டும்போது அமெரிக்காவின் முகமும் அதில் தென்படுகிறதா எனப் பார்க்கவேண்டும். 

இலக்கிய அரசியலைப் புரிந்துகொள்ள அரசியல் இலக்கியங்களைத்தானே தேடிப்போகவேண்டும். 

No comments:

Post a Comment