Showing posts with label northern province. Show all posts
Showing posts with label northern province. Show all posts

Saturday, September 21, 2013

ததேகூவின் வெற்றி: இலங்கை அரசின்மீதான சர்வதேச அழுத்தத்தை அதிகரிக்கப் பயன்படவேண்டும்!



இலங்கையின் வடக்கு மாகாணத் தேர்தல் வெற்றியைத் தமிழர்கள் கொண்டாடுகிறார்கள். அது இயல்பானது.ஆனால் இந்த வெற்றி ராஜபக்‌ஷே அரசுக்கும் பயன் தரக்கூடியது.நியாயமான முறையில் தேர்தலை நடத்தியிருக்கிறோம் என சர்வதேசத்தின் முன் அவர்கள் சொல்லிக்கொள்ள இந்தத் தேர்தல் வாய்ப்பு ஏற்படுத்தித் தந்திருக்கிறது. பல்வேறு அச்சுறுத்தல்கள், ராணுவத்தின் மூலமான நெருக்குதல்கள் எல்லாவற்றையும் மீறித்தான் தமிழர்கள் இந்த வெற்றியைப் பெற்றிருக்கின்றனர் என்றாலும் இந்தத் தேர்தலை நடத்தியதற்காக இலங்கை அரசை சர்வதேசம் பாராட்டவே செய்யும். 

இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சர்வதேசத் தேர்தல் பார்வையாளர்கள் , ஐநா மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளையின் பயணம், காமன்வெல்த் மாநாடு என புறக் காரணிகள் பல இந்தத் தேர்தலின் பின்னால் இருந்தாலும் இந்தத் தேர்தலில் ததேகூ பெற்றிருக்கும் வெற்றி இலங்கை அரசுக்கு எதிரான சர்வதேச அழுத்தத்தை மட்டுப்படுத்த அதற்குக் கை கொடுக்கும். 

வெற்றி பெற்றிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை அரசு குறித்து எம்மாதிரியான சித்திரத்தை சர்வதேசத்தின் முன்னால் வைக்கப் போகிறது? என்பதில்தான் இலங்கை அரசின்மீதான சர்வதேச அழுத்தம் எப்படி உருமாறும் என்பது தங்கியிருக்கிறது. அது உடனடியாக அரசாங்கத்துடன் சண்டைபிடிக்க முடியாது. ஆனால் தாங்கள் முன்வைத்த தேர்தல் வாக்குறுதிகளை அது மறந்துவிடக்கூடாது. எதற்காக இப்படியொரு மாபெரும் வெற்றியைத் தமக்கு மக்கள் தந்திருக்கிறார்கள் என்பதை அவர்கள் சிந்திக்கவேண்டும். 

தற்போது இலங்கை அரசின்மீது சர்வதேசத்தில் அதிகரித்துவரும் அழுத்தத்தைத் தமிழ் மக்களின் அரசியல் அதிகாரப் பகிர்வுத் திட்டத்துக்கு சாதகமாக ப் பயன்படுத்துவதில் ததேகூ உடனடிக் கவனம் செலுத்தவேண்டும். 

புலம்பெயர் நாடுகளில் இருக்கும் தமிழர்களின் விருப்பங்கள் இந்த வெற்றியோடு முழுதுமாக ஒத்துப் போகவில்லை. அவர்கள் இன்னும் ஆயுதப் போராட்டக் கனவிலேயே இருக்கிறார்கள். இப்போதாவது அவர்கள் தமது மக்களின் அபிலாஷைகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்பச் செயல்பட முன்வரவேண்டும். 
 
ததேகூ வின் செயல்பாடுகளைக் கண்காணித்து அவர்கள் சரணாகதிப் பாதைக்குச் சென்றுவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது எனினும் இப்போதே அவர்களைத் தாக்கி அவர்களுக்கு மதிப்பில்லாமல் ஆக்கிவிட்டால் அது அவர்களை வாக்களித்துத் தேர்ந்தெடுத்திருக்கும் மக்களை அவமதிப்பதாகவே அர்த்தமாகும். இதைப் புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழர்கள் குறிப்பாக Tamilnet இணையதளத்தை நடத்தும் நண்பர்கள் புரிந்துகொள்ளவேண்டும். இது ஆலோசனை அல்ல. வேண்டுகோள்!