Showing posts with label world health organization. Show all posts
Showing posts with label world health organization. Show all posts

Friday, October 19, 2012

மழைக்காலம் என்றாலே டெங்கு காய்ச்சல் காலம்





இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் இந்த ஆண்டு ( 2012 ) டெங்கு காய்ச்சலில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும்,  உயிரிழந்திருப்பதாகவும் நடுவணரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நிலவிய டெங்கு தாக்குதல்களுடன் ஒப்பிடும்போது இந்த  ஆண்டு இரண்டு மடங்கு அதிகரித்திருப்பதாகவும், உயிரிழப்புக்கள் நான்குமடங்கு அதிகரித்திருப்பதாகவும் , தென்னிந்தியாவின் பிற மாநிலங்களான கேரளா, ஆந்திரா மற்றும் கர்னாடகாடன் ஒப்பிடும்போது கூட தமிழ்நாட்டில் தாக்குதல் இரண்டு மடங்காகவும், உயிரிழப்புக்கள் நான்கு முதல் ஐந்து மடங்காக இருப்பதாகவும் இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.



டெங்கு காய்ச்சலில் இரண்டு வகை உள்ளது. சாதாரண காய்ச்சல் (Dengue Fever-DF) ஒன்று, ரத்தக்கசிவை ஏற்படுத்தும் காய்ச்சல் (Dengue Hemorrhagic Fever -DHF) மற்றொன்று. இரண்டாவதாகச் சொல்லப்பட்ட ரத்தக் கசிவை ஏற்படுத்தும் டெங்கு காய்ச்சல் 1963ஆம் ஆண்டுதான் முதன்முதலாக இந்தியாவில் அதுவும் கொல்கத்தா பகுதியில் கண்டறியப்பட்டது. 1996ஆம் ஆண்டு இந்த காய்ச்சலுக்கு 423 பேர் இந்தியாவில் பலியானார்கள். அதன்பிறகு ஆறு, ஏழு ஆண்டுகள் அது அடங்கியிருந்தது. பிறகு மீண்டும் அது இந்தியா முழுவதும் தனது கைவரிசையைக் காட்ட ஆரம்பித்து விட்டது. இந்தக் காய்ச்சலுக்கு ஆளானவர்களில் ஒன்று முதல் பத்து சதவீதம் பேர் வரை இறந்துபோகிறார்கள். இந்தக் காய்ச்சலை அவ்வளவு சுலபமாக அடையாளம் காணமுடியாது. இதன் அறிகுறிகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியாக இருப்பதால் மருத்துவர்கள்கூட இதை அடையாளம் காண்பதற்கு சிரமப்படுகிறார்கள். குழந்தைகளுக்கு ஒரு விதமாகவும், பெரியவர்களிடம் வேறு விதமாகவும் இந்தக் காய்ச்சலின் அறிகுறிகள் வெளிப்படுகின்றன.

குழந்தைகளுக்கு வருவது பெரும்பாலும் சாதாரண காய்ச்சல்தான். ஆனால் பெரியவர்களுக்கு வருவதோ ரத்தக்கசிவை ஏற்படுத்தும் ஆபத்தான இரண்டாவது வகை காய்ச்சலாகும். இந்தக் காய்ச்சல் வந்தால் தலைவலி, மூட்டு வலி, மயக்கம், வாந்தி, குமட்டல் முதலிய அறிகுறிகள் இருக்கும் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனாலும் இத்தகைய அறிகுறிகள் இருப்பவையெல்லாம் டெங்கு காய்ச்சல் என்று சொல்லிவிடவும் முடியாது.
இந்தியாவில் பதினெட்டு மாநிலங்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் மாநிலங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் மிகவும் பாதிக்கப்படக்கூடியவை என டெல்லி, மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட ஒன்பது மாநிலங்களை உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. 1996க்கும், 2006க்கும் இடையிலான பத்தாண்டுகளில் இந்தியாவில் அதிகப்பட்சமாக 1997ல் பதினாறாயிரம் பேர் இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். 2006ஆம் ஆண்டு இந்திய அளவில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் நான்கு சதவீதம் பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். தமிழ்நாட்டில் 2001ஆம் ஆண்டு இந்திய அளவில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் 3306 பேர். அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டும் 816 பேர். அதுபோலவே அந்த ஆண்டு அந்தக் காய்ச்சலால் இறந்தவர்கள் 53 பேர். அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 8 பேர். தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் தலா எட்டு பேர் இந்தக் காய்ச்சலுக்குப் பலியாகி இருப்பதாக 2006ஆம் ஆண்டு வரையிலான புள்ளி விவரங்கள் குறிப்பிடுகின்றன.

டெங்கு காய்ச்சலுக்கான வைரஸைப் பரப்புவது ஏடிஸ் ஏஜிப்டி என்ற கொசு வகைதான். ஏடிஸ் அல்போபிக்டஸ் என்ற கொசு வகையும்கூட இந்த நோயைப் பரப்புகிறது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பகல் நேரத்தில்தான் இந்தக் கொசுக்கள் மனிதர்களைக் கடிக்கின்றன. சுத்தமான தண்ணீரில் உற்பத்தியாகும் இந்தக் கொசுக்கள் பெரும்பாலும் நகரப்பகுதிகளில்தான் அதிகம் காணப்படுகின்றன என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். பழைய டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள், தகர டின்கள் முதலானவற்றில் தேங்கும் மழை நீர் இந்தக் கொசுக்களின் பிறப்பிடமாக உள்ளது. எனவே அத்தகைய பொருட்களை திறந்த வெளிகளில் போட்டு வைக்க வேண்டாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்துகின்றனர். இதில் கூடுதலாக நாம் இதுவரை எண்ணிப்பார்க்காத இன்னொரு சிக்கலும் இப்போது உலக சுகாதார நிறுவனத்தால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மழை நீர் சேகரிப்புக்கான அமைப்புகளை அலுவலகங்கள், வீடுகள் எல்லாவற்றிலும் கட்டாயம் ஏற்படுத்த வேண்டும் என்று நமது அரசாங்கங்கள் வலியுறுத்தி வந்ததை நாம் அறிவோம். அந்த மழைநீர் சேகரிப்பு அமைப்புகளே இப்போது ஆபத்தாக மாறியிருக்கிறது. அந்த அமைப்புகளை சரியான முறையில் பராமரிக்காமல் விட்டதால் அவை இந்த ஆபத்தான கொசுக்களின் பிறப்பிடமாக மாறி உள்ளன என்று உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியிருக்கிறது-.

டெங்கு காய்ச்சலுக்கு அடுத்தபடியாக நமது நாட்டைப் பயமுறுத்திக் கொண்டிருப்பது சிக்குன் குனியா காய்ச்சலாகும். சமீப காலமாக அதிக அளவில் இதன் பாதிப்பை தமிழ்நாடு அனுபவித்து வருகிறது.  டெங்குக் காய்ச்சலைப் போலவே அறிகுறிகள் இருந்தாலும் சிக்குன் குனியாவின் பாதிப்பு வேறுபட்டதாகும். இது மூட்டுகளைத் தாக்கி மனிதர்களை முடக்கிப்போட்டு விடும். இந்தக் காய்ச்சல் விரைவாக குணமடைந்து விட்டாலும், இதன் தாக்குதலால் ஏற்படும் பாதிப்பு நீண்ட காலத்துக்கு இருக்கும். அதுமட்டுமல்லாமல் இதற்கான தடுப்பூசி என்று எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை. கொசு கடிக்காமல் பார்த்துக்கொள்வதுதான் இதற்கான ஒரே பாதுகாப்பு நடவடிக்கையாகும்.

டெங்கு, சிக்குன் குனியா தவிர மலேரியாவின் அச்சுறுத்தலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மட்டும் ஆண்டொன்றுக்கு ஒரு லட்சம் பேர் மலேரியாவால் உயிரிழக்கிறார்கள். இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் மலேரியாவை ஒழித்து விட்டதாக சொல்லிக்கொண்டாலும், அந்த நோயின் புதிய அவதாரங்கள் இந்த நாடுகளை அச்சுறுத்திக்கொண்டுதான் இருக்கின்றன. மலேரியாவைப் பரப்பும் கிருமிகள் அதற்கான மருந்துகளைத் தாண்டி பரவக்கூடிய வகையில் தம்மை இப்போது தகவமைத்துக் கொண்டுள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுவது உலக அளவில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போதுள்ள மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாத புதிய வகை மலேரியா அண்மையில் தாய்லாந்து - கம்போடிய எல்லை பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது. இது மேலும் பல நாடுகளுக்கு பரவலாம் என்ற ஆபத்தை உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

கொசுக்களால் பரவும் இந்த ஆபத்தான நோய்களைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றால் அரசாங்கங்கள் அதற்கு முனைப்போடு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நோய்களுக்கான மருந்துகள் எல்லா இடங்களிலும் கிடைக்கும்படி செய்வது மட்டுமல்லாமல் இத்தகைய நோய்களை பரப்பும் கொசுக்களை ஒழிப்பதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கையில் இறங்க வேண்டும். ஆனால் ஆசிய நாடுகள் பலவற்றிலும் இந்த நோய்களைக் கட்டுப்படுத்தும் திட்டங்களுக்குப் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை என்றும், அதுபோலவே போதுமான சுகாதாரப் பணியாளர்களும் நியமிக்கப்படுவதில்லை என்றும் உலக சுகாதார நிறுவனம் குறை கூறியிருக்கிறது. தற்போதுள்ள மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாத புதிய வகை வைரஸ்கள் தோன்றியிருப்பதைப் பற்றியும் அது கவலை தெரிவித்திருக்கிறது.

டெங்கு காய்ச்சலுக்காக தடுப்பூசி ஒன்றை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த மஹிடோல் பல்கலைக்கழகம் நீண்ட காலமாக ஈடுபட்டுள்ளது. இதற்கான முதற்கட்ட சோதனைகள் முடிந்து விட்டன. இந்த மருந்து மனிதர்களிடம் சோதித்துப் பார்க்கப்படும். அது வெற்றிகரமாக இருந்தால் அதன் பிறகு அது மார்க்கெட்டுக்கு வரும். இந்த ஆராய்ச்சித் திட்டத்துக்கு உலக சுகாதார நிறுவனமும் பெருமளவில் ஆதரவு அளித்து வருகிறது. இப்படியான ஆராய்ச்சிகளை இந்தியா உள்ளிட்ட நாடுகளும் மேற்கொள்ள வேண்டும். இதற்குப் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படவேண்டும்.

கொசுக்களால் பரவும் இந்த வியாதிகளைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கங்களின் பங்கு மட்டுமே போதுமானதல்ல. இதில் பொதுமக்களின் ஈடுபாடு மிக மிக அவசியம். இத்தகைய கொசுக்கள் பரவாத வண்ணம் தமது சுற்றுப்புறங்களை தூய்மையாக தண்ணீர் தேங்காமல் வைத்துக்கொள்ள வேண்டியது பொதுமக்களாகிய நம்முடைய பொறுப்பு. அதுபோலவே கொசுக்கள் கடிக்காமல் நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டியதும் அவசியமாகும். எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தையே நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்க கூடாது. குறிப்பாக அந்தந்தப் பகுதிகளில் உள்ள பொதுநல அமைப்புகள் இதில் முனைப்போடு பங்காற்ற வேண்டும்.
இத்தகைய நோய்களைக் கட்டுப்படுத்துவதில் மக்கள் நல்வாழ்வுத்துறையோடு சேர்ந்து மற்றத் துறைகளும் தம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக கல்வித்துறை, பொதுப்பணித்துறை, தொழில்துறை, சுற்றுலாத்துறை போன்றவையும் இதில் பங்களிபபு செய்வது அவசியம். மாணவர்களிடம் இந்த நோய்கள் பற்றியும், அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் நிச்சயம் அதற்குப் பலன் இருக்கும். விடுதிகளில் தங்கிப்படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு கொசுவலைகளை அளிப்பது மிக மிக அவசியமாகும். அதுபோலவே தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வதற்கு பொதுப்பணித்துறையின் பங்களிப்பு அவசியம் தேவை. அவர்கள் ஒத்துழைக்காவிட்டால் இதை நிறைவேற்ற முடியாது.

கொசுக்களால் பரவுகின்ற இந்த நோய்கள் மனிதர்களால் உருவாக்கப்பட்ட சூழ்நிலைகளின் விளைவு ஆகும். எனவே இவற்றை கட்டுப்படுத்துவது சாத்தியம்தான். அதற்கு ஒருங்கிணைந்த முயற்சி தேவை.

( ஜூனியர் விகடன் இதழில் 29.05.2008 அன்று வெளியான  கட்டுரையின் ஒரு பகுதி இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது  )

Thursday, June 2, 2011

‘செல்’ லும் கொல்லும்?




செல் போன்களில் எடுக்கப்படும் ஆபாச காட்சிகள் மாணவர்களிடையே எம்.எம்.எஸ் மூலம் பரப்பப்படுவது குறித்து அடிக்கடி நாளேடுகளில் வெளியாகும் செய்திகளால் பதற்றமடைந்திருந்த பெற்றோர்கள் இப்போது கொஞ்சம் ஆறுதல் அடைந்திருக்கிறார்கள்.பள்ளிகளுக்கு செல்போனை எடுத்துவரக் கூடாது எனத் தமிழக அரசு விதித்துள்ள தடை பலரிடமிருந்தும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.சமீபமாகத் தமிழக அரசு பிறப்பித்த ஆணைகளில் எதிர்க் கட்சிகளின் விமர்சனத்துக்கு ஆளாகாதது இதுமட்டும்தான் என்று சொல்லலாம். எஸ்.எம்.எஸ், கேம்ஸ், பாட்டு,காமிரா போன்ற செல்போனின் கூடுதல் வசதிகளால் மாணவர்களின் கவனம் திசை திருப்பப்பட்டு அவர்கள் சீரழிவதாகக் கவலைப்பட்டவர்கள் இப்போது நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள்.இந்த சிறப்பான ஆணையை வெளியிட்டதற்காகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்களை மனமாரப் பாராட்டுவோம்.
 சமீபத்தில் கர்நாடகாவிலும்கூட இதேபோன்ற தடை நடைமுறைக்கு வந்துள்ளது. அங்கு மாணவர்கள் மட்டுமல்லாது ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களும்கூடப் பள்ளிகளுக்கு செல்போன்களைக் கொண்டுவரக் கூடாது என்று உத்தரவு போட்டிருக்கிறார்கள்.மீறினால் அவை பறிமுதல் செய்யப்படும் என்றும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்காவில்கூடப் பள்ளிகளில் இவ்விதமான தடை உள்ளது. அங்கே பள்ளி நுழைவாயிலில் ‘மெட்டல் டிடெக்டரை’ வைத்து செல்போன்களைக் கைப்பற்றுகிறார்கள். செல்போன்கள் மட்டுமின்றி ஐ போடுகள் உள்ளிட்ட அனைத்துவிதமான எலெக்ட்ரானிக் சாதனங்களும் பள்ளிகளில் தடை செய்யப்பட்டுள்ளன.இந்தக் கட்டுப்பாட்டை இரண்டுமுறை மீறினால் செல்போன் பறிமுதல் செய்யப்படும் என்கிறது நியூயார்க் மாகாணச் சட்டம்.முதலில் இதற்கு அங்கே கடும் எதிர்ப்பு வந்தது,பின்னர் அடங்கிவிட்டது.
இந்தியாவில் செல்போன் உபயோகம் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருவதை நாம் அறிவோம். 2006 மே மாதத்தில் 10 கோடியாக இருந்த செல்போன் இணைப்பு செப்டம்பர் 2007இல் 20 கோடியைத் தாண்டிவிட்டது. 2010ஆம் ஆண்டில் இது ஐம்பது கோடியை எட்டிவிடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. புதிதாக செல்போன் இணைப்புப் பெறுபவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள், மாணவர்கள் ஆவார்கள். ஆகஸ்ட் 2007 புள்ளிவிவரப்படித் தமிழ்நாட்டில் உள்ள செல்போன் இணைப்பு ஒரு கோடியே முப்பத்து இரண்டு லட்சமாகும். இது தவிர சென்னை மாநகர எல்லைக்குள் மட்டும் சுமார் 54 லட்சம் இணைப்புகள் உள்ளன.
செல்போன்களில் காமிரா வசதி ஏற்படுத்தப்படட பிறகு அதனால் புதிது புதிதாக பிரச்சினைகள் முளைக்கத் தொடங்கிவிட்டன. மெமரி கார்டில் ‘ஆபாசப் படங்களை’ப் பதிவுசெய்து மாணவர்களுக்கு விற்பது ஒரு தொழிலாகவே உருவெடுத்துவருவதைச் செய்திகள் புலப்படுத்துகின்றன. சமீபத்தில் பண்ருட்டி என்ற சிறு நகரத்தில் இந்த வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த ஒரு கும்பல் பிடிபட்டது.மாநகரங்களில் மட்டுமின்றி இந்த சமூகத் தீங்கு சிற்றூர்களுக்கும் பரவிவருவதையே இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.
செல்போனைப் பயன்படுத்துவதால் ஒழுக்கரீதியான பிரச்சினை மட்டும்தான் உருவாகிறது என்று எண்ணுவது தவறு. அது உடல் நலத்தைப் பாதிக்கும் என்றும் பல்வேறு ஆய்வுகள் புலப்படுத்தியுள்ளன. உலக சுகாதார நிறுவனம் இது குறித்து ஏழு ஆண்டுகளுக்கு முன்பே சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. செல்போன்களின் அடிப்படையாக இருக்கும் ரேடியோ அலைகள் எக்ஸ்ரே கதிர்களைப் போலவோ அல்லது காமா கதிர்களைப் போலவோ தீங்கு விளைவிப்பவை அல்ல என்று கூறியுள்ள அந்த நிறுவனம் 1997 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட ஆய்வு ஒன்றில் ரேடியோ அலைகளால் புற்று நோய் வரும் வாய்ப்பு அதிகரிப்பதாகத் தெரியவந்ததாகவும் அதன்மீது கூடுதல் ஆராய்ச்சிகள் நடந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.தொடர்ந்து செல்போன்களை உபயோகிப்பதால் மூளை செயல்பாட்டிலும் தூங்கும் முறைகளிலும் மாற்றம் ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரித்திருப்பதையும் உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியிருக்கிறது.செல்போனின் அபாயம் முழுதாகத் தெரியாத போதிலும்கூட “எலக்ட்ரோ மேக்னடிக்” கதிர்வீச்சால் உடல்நலத்துக்கு ஏற்படும் தீங்குகள் குறித்து முன்னெச்சரிக்கையாகச் சில நெறிகளை உருவாக்கிக் கொள்ளுமாறு உலக நாடுகளை அது கேட்டுக்கொண்டிருக்கிறது. அதனடிப்படையில் கனடா, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள், ஜப்பான், சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் நெறிமுறைகளை உருவாக்கியுள்ளன. ஆனால் இதுவரை இந்தியாவில் அப்படி எந்தவொரு நெறிமுறையும் உருவாக்கப்படவில்லை. இப்போதுதான் டெலிகாம் துறைக்கு உட்பட்ட “டெலிகம்யூனிகேஷன் என்ஜினியரிங் சென்டர்” (ஜிணிசி) வழிகாட்டு நெறிமுறைகளுக்கான ஒரு வரைவைத் தயாரித்திருக்கிறது.
செல்போன்களை விடவும் செல்போன் டவர்கள்தான் மிகவும் ஆபத்தானவை.செல்போன்களிலிருந்து வெளிப்படும் ரேடியோ அலைகளைவிட இந்த டவர்களிலிருந்து வெளிப்படும் அலைகள் அதிக சக்திவாய்ந்தவை.அதனால்தான் ‘மேக்ரோ ஆன்டெனா’ என அழைக்கப்படும் அந்த டவர்களைப் பள்ளிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றுக்கு அருகில் அமைக்கக் கூடாது; குடியிருப்புப் பகுதிகளில் அமைக்கக் கூடாது; அந்த டவர்களுக்கு அருகில் அதற்கான பணியாளர்கள்கூட அதிகநேரம் வேலை செய்ய அனுமதிக்கக் கூடாது எனப் பல்வேறு நிபந்தனைகள் இந்த வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
செல்போன்களை உபயோகிப்பது குறித்தும் அதில் சில யோசனைகள் கூறப்பட்டுள்ளன. பதினாறு வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் திசுக்கள் மிகவும் மென்மையாக இருக்கும் என்பதால் மொபைல் போன்களைப் பயன்படுத்துவதால் அது எளிதில் பாதிக்கப்படும். எனவே பதினாறு வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் மொபைல் போனைப் பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும் என்று அந்த வரைவு அறிக்கை தெரிவிக்கிறது.இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ’இண்டிபென்டன்ட் எக்ஸ்பர்ட் குரூப் ஆன் மொபைல் போன்ஸ்’(இஎக்ம்ப்) என்ற குழு தயாரித்தளித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள வழிகாட்டுதல்களிலிருந்து மேற்கண்ட தகவல்களை நமது டெலிகாம் துறையினர் எடுத்தாண்டுள்ளனர்.
.செல்போனைப் பயன்படுத்தும்போது எவ்வளவு எலெக்ட்ரோ மேக்னட்டிக் கதிர்வீச்சு நமது உடலில் உள்வாங்கப்படுகிறது என்பதை எஸ்.ஏ.ஆர் (sஜீமீநீவீயீவீநீ ணீதீsஷீக்ஷீஜீtவீஷீஸீ க்ஷீணீtமீ)என்ற அளவீட்டால் குறிக்கிறார்கள்.ஒரு குறிப்பிட்ட செல்போனின் எஸ்.ஏ.ஆர் அளவு எவ்வளவு என்பதை ஒவ்வொரு மொபைல் போனின் திரையிலும் பதிவுசெய்ய வேண்டும் என்றும் வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அனுமதிக்கப்பட்ட அளவு 2 ஷ்/ளீரீ என்பதாகும்.நாம் பயன்படுத்தும் பெரும்பாலான செல்போன்கள் இந்த அளவுக்கு உட்பட்டே இருக்கின்றன.அதனாலேயெ இந்த செல்போன்கள் பாதுகாப்பானவை எனக் கூறிவிடமுடியாது.ஏனென்றால் செல்போனிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு அதனால் மட்டுமே தீர்மானிக்கப் படுவதில்லை.குறைவான எஸ்.ஏ.ஆர் உள்ள போன்கூட அதிக அளவு கதிர்வீச்சை வெளிப்படுத்த வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
செல்போனை உபயோகிப்பவர்கள் அதிக நேரம் தொடர்ந்து பயன்படுத்தக்கூடாது,நேரடியாக போனைக் காதில் வைத்துப் பேசுவதைவிட ஹெட் போனைப் பயன்படுத்துவது நல்லது என உலக சுகாதார நிறுவனம் கூறியிருக்கிறது.செல்போனில் தொடர்ந்து பேசும்போது உருவாகும் வெப்பம் செவியின் கேட்கும் சக்தியை பாதிக்கும்.சிக்னல் பலவீனமாக இருக்கும்போதும், அறைக்குள்ளிருந்து பேசும்போதும் செல்போனிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு அதிகமாகிறது.எனவே அப்படியான நிலைகளில் செல்போனைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும் எனவும் அது தெரிவித்துள்ளது.செல்போனைப் பயன்படுத்தாத நேரங்களில் ஸ்விட்ச் ஆஃப் செய்துவைப்பது நல்லது எனவும் அந்த அறிக்கை கூறுகிறது.
பேஸ்மேக்கர்,ஹியரிங் எய்டு முதலிய கருவிகளைப் பயன்படுதுபவர்கள் செல்போன்களை அதிகம் பயன்படுத்தக்கூடாது.மருத்துவமனிகலில் செல்போனைப் பயன்படுத்தினால் அங்குள்ள உபகரணங்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் எனவும் அந்த வரைவு அறிக்கையில் கூறியுள்ளனர்.இந்த நெறிமுறைகள் இன்னும் நமது நாட்டில் நடைமுறைக்கு வரவில்லை. அதற்குள்ளாகவே இதற்கு மொபைல் கம்பெனிகள் எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கிவிட்டன.இவற்றை ஏற்க முடியாது என அந்த கம்பெனிகள் கூறிவருகின்றன.
செல்போன்களால் வரும் ஆபத்துகளைப் பார்க்கும்போது பள்ளிகளில் மட்டுமல்லாது பொதுவாகவே சிறுவர்கள் செல்போன், ஐ போட் முதலான எலக்ட்ரானிக் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும் விதமான கட்டுப்பாடுகளை நமது நாட்டிலும் கொண்டுவருவது நல்லது எனத் தோன்றுகிறது. இது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். டெலிகாம் என்ஜினியரிங் சென்டரின் வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு செல்போன் கம்பெனிகளின் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளனவா என்பதைப் பொதுமக்கள் கண்காணிக்க வேண்டும்.குடியிருப்புகளின் மாடிகளிலெல்லாம் இப்போது செல்போன் டவர்கள் நிறைந்துள்ளன.இது மிகவும் ஆபத்தானதாகும்.அவற்றின் கிழே அதிக அளவில்கதிர்வீச்சு காணப்படுகிறது.எனவே அப்படி அமைக்கப்பட்டுள்ள டவர்களை அகற்றிப் பாதுகாப்பான இடங்களில் அவற்றை அமைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செல்போன் டவர்களை மருத்துவமனைகளுக்கு அருகிலும்,பள்ளிகளின் அருகாமையிலும் கண்டிப்பாக அமைக்கக்கூடாது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.நூறு வாட் வரை சக்திகொண்ட இத்தகைய டவர்கள்வெளிப்படுத்தும் ரேடியோ அலைகள் பக்கவாட்டுத் திசையில் அகன்று பரவக்கூடியவை.எனவே அத்தகைய டவர்கள் அமைக்கப்பட்டுள்ள இடங்களைச் சுற்றிலும் பாதுகாப்பாக முள்கம்பி வேலி அமைத்து எச்சரிக்கை செய்யும் விதமாக அறிவிப்புப் பலகையும் வைக்கப்படவேண்டும் என அந்த நிறுவனம் கூறியுள்ளது.
செல்போன்களைத் தடை செய்யும்போது மாணவர்களின் படிப்பு பாழாகிறது,அவர்கள் கெட்டுப் போகிறார்கள் என்பதுபோன்ற காரணங்களை விடுத்து உடல் நலத்தை மையப்படுத்தி அரசு நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.அப்படிஇந்தப் பிரச்சனையை அணுகினால் செல்போன்களைத் தடை செய்வதைவிடவும் செல்போன் டவர்களை முறைப்படுத்துவதே முதன்மையானது என்பது புரியவரும்.தற்போது நமது நாட்டில் செல்போன் தொழிலில் முதலீடு செய்துள்ள பன்னாட்டு நிறுவனங்கள் தத்தமது நாடுகளில் இத்தகைய நெறிமுறைகளைக் கடைபிடிக்கின்றன.ஆனால் இங்கே மட்டும் எந்தவொரு விதிமுறைக்கும் கட்டுப்பட மறுக்கின்றன.இங்குள்ள மக்களின் உடல் நலம் குறித்து அவர்களுக்கு எப்படி அக்கறை ஏற்படும்?அதை நமது அரசாங்கம்தான் வலியுறுத்தவேண்டும்.
தொழில்நுட்ப வளர்ச்சியின் அனுகூலங்களை மக்களிடம் கொண்டுவந்து சேர்ப்பது நல்லதுதான். ஆனால் அதில் உள்ள அபாயங்கள் குறித்த எச்சரிக்கை அரசுக்குத் தேவை. இப்போதும்கூட கணிசமான அளவுக்கு படிப்பறிவு இல்லாத மக்களைக் கொண்டிருக்கும் நமது நாட்டில் தொழில்நுட்ப வசதிகளின் அனுகூலத்தை மட்டுமின்றி அபாயத்தையும் எடுத்துச் சொல்லவேண்டியது அரசின் கடமை.இன்றுள்ள மொபைல் கம்பெனிகளுக்கு லாபம் மட்டுந்தான் குறிக்கோள். இதில் கவனமாக இருக்க வேண்டியது அரசாங்கம்தான்.
 பள்ளிகளில் செல்போன் தடை என்பது அரசு மேற்கொள்ளும் நடவடிக்கையில்  முதல்படியாக இருக்கட்டும். மக்களின் உடல்நலத்தில் அக்கறை வைத்து செல்போன் நிறுவனங்களை முறைப்படுத்தும் அடுத்தடுத்த நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். பாதுகாபில்லாத இடங்களில் டவர்களை அமைத்துள்ள செல்போன் நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசு முன்வரவேண்டும்.அதற்கான நிர்ப்பந்தத்தை விழிப்புணர்வு கொண்ட மக்கள்தான் ஏற்படுத்த வேண்டும்.

(20.10.2007 அன்று ஜூனியர் விகடனில் எழுதிய கட்டுரை.)