Thursday, January 13, 2011

''தையே முதற்றிங்கள் தை முதலே ஆண்டு முதல்'' - ரவிக்குமார்

      ''தரணி ஆண்ட தமிழர்க்கு

      தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு!'' என்று பாடினார் பாரதிதாசன். அந்தப் பாடல் இப்போது செயல்வடிவம் பெறப்போகிறது. தை முதல் நாளைத் தமிழ்ப்புத்தாண்டின் முதல் நாளாக அறிவித்து தமிழக அரசு இயற்றிய சட்டம் இந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது. 1921ஆம் ஆண்டில் மறைமலை அடிகளார் தலைமையில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கூடிய ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள் தமிழருக்கென தனியே ஒரு காலக்கணக்குத் தேவை என்பதை வலியுறுத்தி திருவள்ளுவர் பிறந்த ஆண்டாகக் கருதப்படும் கி.மு. 31ஆம் ஆண்டைத் துவக்க ஆண்டாகக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு என ஒன்றை அறிவித்தார்கள். சித்திரை முதல் நாளைத் தமிழ்ப்புத்தாண்டாகக் கொண்டாடுவது தமிழர் மரபுக்கு பொருத்தமானதல்ல, தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு எனவும் அவர்கள் முடிவு செய்தார்கள்.

      திருவள்ளுவர் ஆண்டு என்கிற காலக்கணக்கை தமிழக அரசு 1971ஆம் ஆண்டிலேயே ஏற்றுக்கொண்டு விட்டது. அது குறித்து அரசாணையும் வெளியிடப்பட்டது. இப்போது தமிழ்ப் புத்தாண்டு பற்றிய தமிழறிஞர்களின் விருப்பமும் நிறைவேறியுள்ளது. தமிழக முதல்வர் கலைஞர்தான் இந்த இரண்டு ஆணைகளையும் பிறப்பித்தவர். இந்த நடவடிக்கைகள் பண்பாட்டுத் தளத்தில் செய்யப்பட்டுள்ள முக்கியமான குறுக்கீடுகள் என்பதை எவரும் மறுக்க முடியாது.

      திருவிழாக்கள், பண்டிகைகள் என்பவை மக்களால் காலம்காலமாக கடைபிடிக்கப்பட்டு வருபவை. பல பண்டிகைகள் வழக்கொழிந்து போவதும், புதிது புதிதாக பண்டிகைகள் அறிமுகமாவதும் நாம் அறிந்தவைதான். ஆடிப் பெருக்கு என்ற பண்டிகை இன்று தமிழர்களால் அவ்வளவாகக் கொண்டாடப்படுவதில்லை. ஆனால் ஆங்கிலப் புத்தாண்டு இப்போது வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. பொங்கலைவிட தீபாவளிதான் தமிழ்நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்படுகிற பண்டிகையாக இருக்கிறது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. காட்சி ஊடகங்கள் செல்வாக்கு செலுத்தும் இன்றைய நாளில் கிரிக்கெட் போட்டிகூட திருவிழாவாக மாற்றப்படலாம்.

      தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக தமிழக அரசு அறிவித்தபோது அதை உலகெங்குமுள்ள தமிழ் உணர்வாளர்கள் பாராட்டி வரவேற்றார்கள். ஆனால் அதை விமர்சித்தவர்களும் உண்டு. மக்களின் பண்பாட்டு நடவடிக்கைகளில் அரசாங்கம் தலையிடுவது சரியல்ல என்பது ஒருசிலரின் வாதம். காலம்காலமாக இருந்துவரும் வழக்கத்தை திடீரென்று மாற்றச்சொல்வது சரியா? என்பது அவர்களின் கேள்வி. நீண்ட காலமாக இருந்து வருகிறது என்பதாலேயே ஒன்றை நாம் ஏற்றுக்கொண்டு விடமுடியாது. சாதி ஏற்றத்தாழ்வுகள்கூட வெகுகாலமாக இருந்துவருவதுதான். அதை ஜனநாயகம், சமத்துவம் என்ற கருத்தாக்கங்கள் கோலோச்சுகிற இன்றைய நாளில் நாம் கடைபிடிக்க முடியாது அல்லவா? மக்களின் பண்பாட்டு நடவடிக்கைகளில் அரசாங்கம் தலையிடக்கூடாது என்ற வாதமும்கூட பிற்போக்கான ஒன்றுதான். உடன்கட்டை ஏறும் வழக்கம் இந்திய மக்களின் பண்பாடாக ஒருகாலத்தில் இருந்தது. அதுபோலவே பால்ய விவாகமும் நடைமுறையில் இருந்தது. மனித நாகரீகத்துக்கு விரோதமான இவற்றையெல்லாம் அரசின் குறுக்கீடுகள்தான் இப்போது ஒழித்துக்கட்டியிருக்கிறது. எனவே பண்பாட்டுத் தளத்தில் அரசு குறுக்கிடுவது என்பதை நாம் தவறாகக் கருதிவிட முடியாது.

      ஆண்டைக்கணக்கிடுவது பற்றிய சிக்கல் நீண்டநெடுங்காலமாகவே இந்தியாவில் இருந்து வந்துள்ளது. பஞ்சபாண்டவர்கள் வனவாசம் முடிந்து திரும்பி வந்தபோது நீங்கள் சந்திரனை அடிப்படையாகக் கொண்ட 13 ஆண்டுகளைத்தான் கழித்திருக்கிறீர்கள். சூரியனை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் உங்கள் வனவாசம் முடியவில்லை. எனவே திரும்பிப் போங்கள் என்று துரியோதனன் சொல்ல, அங்கிருந்த பீஷ்மரோ அவனை சமாதானப்படுத்தி சூரியனை அடிப்படையாகக் கொண்டு பார்த்தாலும் 13 ஆண்டுகள் முடிந்துவிட்டது. துரியோதனன் சொல்கிற காலக்கணக்கு தவறானது என்று வாதிட்டதாகவும் மகாபாரதம் கூறுகிறது.

      தற்போது பின்பற்றப்படடு வருகிற காலமுறையும்கூட பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டுத்தான் வந்துள்ளது. ஆண்டைக் கணக்கிடுவதற்கு தென்னாசிய நாடுகளில் இருவிதமான முறைகளைக் கடைப்பிடிக்கிறார்கள். சூரியனை அடிப்படையாகக் கொண்டது ஒன்று. மற்றது சந்திரனை அடிப்படையாகக் கொண்டது. சித்திரை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக கணக்கிட்டு வந்த இதுவரையிலான காலக்கணக்கு சூரியன் மற்றும் சந்திரன் இரண்டையும் அடிப்படையாகக் கொண்டு அமைந்ததாகும். புத்தாண்டு துவக்கமும், மாதங்களின் ஆரம்பமும் சூரியனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்டாலும், இப்போது பயன்படுத்தப்படும் தமிழ் மாதங்களின் பெயர்கள் சந்திரனை ஆதாரமாகக் கொண்டு உருவாக்கப்பட்டவையாகும். ஒரு மாதத்தில் எந்த நட்சத்திரத்தில் பௌர்ணமி வருகிறதோ அதுவே அந்த மாதத்தின் பெயராக சூட்டப்பட்டிருக்கிறது. சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு இந்தியாவின் காலக்கணக்கை நிர்ணயிப்பதற்கு 'காலண்டர் சீர்திருத்த கமிட்டி' என ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு அது அளித்த பரிந்துரைகள் 1957ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதி நடைமுறைக்கு வந்தன. சூரியன், சந்திரன் இரண்டையும் அடிப்படையாகக் கொண்ட காலக்கணக்கை அந்தக் கமிட்டி ஏற்றுக்கொண்டது மட்டுமின்றி உலகின் பெரும்பாலான பகுதிகளில் நடைமுறையில் உள்ள கிரிகோரியன் காலண்டரின் அடிப்படையில் லீப் வருடம் என்ற கணக்கையும் உள்வாங்கிக் கொண்டது.

      ''தையே முதற்றிங்கள் தை முதலே ஆண்டு முதல்'' என்று பாடிய பாரதிதாசன் அதற்கு சமஸ்கிருத எதிர்ப்பைத்தான் அடிப்படையாக முன்வைத்திருந்தார். இங்கு நடைமுறையில் உள்ள அறுபது ஆண்டுகளைக் கொண்ட தமிழ் ஆண்டுமுறை ஆரியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதே அவருடைய குற்றச்சாட்டு. தற்போது நடைமுறையில் இருக்--கும் அறுபது ஆண்டுகளைக் கொண்ட தமிழ் ஆண்டுமுறை என்பது தொடர்ச்சியற்றதாக சுழற்சி அடிப்படையில் அமைந்திருப்பது பலவித குழப்பங்களை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமின்றி புத்தாண்டு தொடர்பான புராணக்கதைகளும் ஏற்கும்படியாக இல்லை என்பது தமிழறிஞர்களின் வாதம். 'சமஸ்கிருத காலக்கணக்கை நிராகரித்து தனித்துவம் கொண்ட தமிழ் முறையை உருவாக்க எண்ணியவர்கள் சங்ககாலத்தில் எந்தமுறை பின்பற்றப்பட்டது என்பதை ஆராய்ந்து அதன் அடிப்படையில் ஆண்டுமுறையை மாற்றி அமைக்க வேண்டும் என்று கேட்கவில்லை. தொல்காப்பியத்துக்கு உரையெழுதிய நச்சினார்க்கினியரின் கூற்றுப்படிப் பார்த்தால் தமிழ் ஆண்டு ஆவணியில் தொடங்கி ஆடியில் முடிவதாகவே தெரியவருகிறது. ஆனால், தமிழறிஞர்களோ திருவள்ளுவர் பிறந்ததாகக் கூறப்படும் நாளையும், ஆண்டையும் வைத்து காலக்கணக்கை முடிவு செய்யவேண்டும் என்றுதான் கூறியிருக்கிறார்கள். இதுவும்கூட ஐயம் திரிபற மெய்ப்பிக்கப்பட்ட ஒரு கணக்கு அல்ல' என்பது தை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக ஏற்க முடியாது என்பவர்கள் முன்வைக்கும் வாதமாக இருக்கிறது.

      தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்திருப்பது ஒரு கருத்தியல் நடவடிக்கையாகும். திராவிட இயக்கத்தின் மிக முக்கியமான பங்களிப்பே இத்தகைய கருத்தியல் நடவடிக்கைகள்தான். ஆட்சி, அதிகாரம் என்பவற்றைக் கைப்பற்றி விட்டாலே எல்லாம் மாறிவிடும் என்பதே பொதுவான புரிதலாக இருந்த சூழலில் கருத்தியல் மேலாதிக்கத்தை ஏற்படுத்துவது மிகவும் அவசியம் என்ற உண்மையை திராவிட இயக்கம்தான் சரியாகப் புரிந்துகொண்டிருந்தது. அதனால்தான் பண்பாட்டுத் தளத்தில் அது கூடுதலாக கவனத்தை குவித்தது. தமிழ் மொழியில் ஏற்படுத்தப்பட்ட சீர்திருத்தங்கள் முதற்கொண்டு இப்போது தமிழ்ப் புத்தாண்டு அறிவிப்பு வரை அந்த நோக்கில் செய்யப்பட்டவைதான். அரசு என்ற கருவியைப் பயன்படுத்தி தமிழ் சமூகத்தில் மதச்சார்பற்ற தமிழ்க் கருத்தியல் மேலாதிக்கத்தை ஏற்படுத்துவதற்கு தொடர்ந்து கலைஞர் நடவடிக்கை எடுத்து வருகிறார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நடவடிக்கைகளை வரவேற்க வேண்டியது தமிழரின் கடமை.

      தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாளில் துவங்குகிறது. இன்று அதன் முக்கியத்துவம் நமக்கு விளங்காமல் இருக்கலாம். ஆனால் எதிர்காலம் அதை நாளைய தலைமுறையினருக்கு உணர்த்தும்.

நன்றி : ூனியர் விகடன், ௧௨.௦௧.2009

No comments:

Post a Comment