Wednesday, September 14, 2011

பரமக்குடி: ஊடக ஜனநாயகம் குறித்து ஒரு விவாதம்




பரமக்குடியில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட தலித்துகளைப்
பற்றிய செய்திகளைத் தமிழ் ஊடகங்கள் எவ்வாறு வெளியிட்டுவருகின்றன என்று
ஆராய்ந்தால் தமிழ் ஊடகவெளி எவ்வளவு சனநாயகமற்றதாக இருக்கிறது என்பது
தெரியவரும். இதில் ஊடக உரிமையாளர்களின் பக்கச்சார்பான அணுகுமுறையைவிடவும்
ஊடகங்களில் பணியாற்றுவோரின் சமூகப் பின்புலமே கூடுதல் செல்வாக்கு
செலுத்துகிறது. தமிழ் அச்சு ஊடகங்களிலோ , காட்சி ஊடகங்களிலோ தலித்
சமூகத்தவர் மிகச் சிறு எண்ணிக்கையில்கூட இல்லை. சமூக நீதி என்று
வாய்கிழியப் பேசுகிறவர்கள்தாம் இத்தகைய சமூகப் புறக்கணிப்பில்
முன்னணியில் நிற்கின்றனர்.

இன்று தமிழ்நாட்டில் கோலோச்சும் தொலைக்காட்சி ’சேனல்’ எதுவும்
பிராமணர்களின் வசம் இல்லை. அவர்கள் அவற்றின் ஆசிரியப் பொறுப்பிலும்கூட
இல்லை. எனவே இந்த ஊடகத் தீண்டாமைக்கு அவர்களை யாரும் குற்றம் சொல்ல
முடியாது. அச்சு ஊடகத்தை எடுத்துக்கொண்டால் நிலைமை இன்னும் மோசம்.

இவ்வளவுபேர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கும் ஒரு சம்பவம் குறித்து அந்த
சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தரப்பு என்ன சொல்கிறது என்று கேட்டு அதைப்
பிரசுரிக்கவேண்டும் என்கிற அடிப்படை நேர்மைகூட எந்தவொரு பத்திரிகையிலும்
கடைப்பிடிக்கப்படவில்லை. எந்தக் காவல்துறை துப்பாக்கிச் சூட்டை நடத்தியதோ
அதே காவல்துறை தருகிற செய்திகளை வெளியிடுவதே தமிழ்நாட்டின் ‘பத்திரிகா
தர்மம் ‘ என்றாகிவிட்டது. ஆங்கில ஊடகங்களுக்கு இதில் ‘ நியூஸ் வேல்யூ ‘
கூட இல்லை. ஒரே ஒரு விதிவிலக்கு இந்து நாளேடு மட்டும்தான். இதுகுறித்து
அதுவொரு தலையங்கத்தை வெளியிட்டிருக்கிறது.(http://www.thehindu.com/
opinion/editorial/article2450479.ece
) அதற்காக
இந்து நாளேட்டின் ஆசிரியருக்கு நாம் நன்றி சொல்வோம்.

இந்து நாளேட்டின் தலையங்கத்திலும் காவல்துறை அளித்தத் தகவல்களே
நிரம்பியிருக்கின்றன. ‘ பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களைப்
பற்றி சுவரில் எழுதப்பட்ட ஒரு வாசகம்தான் தலித் சமூகத்தைச் சேர்ந்த பள்ளி
மாணவனின் படுகொலைக்குக் காரணமாகிவிட்டது’ என்று அந்தத் தலையங்கத்தில்
எழுதப்பட்டிருக்கிறது. இந்தச் செய்தி திரு ஜான் பாண்டியன் , டாக்டர்
கிருஷ்ணசாமி ஆகியோரால் மறுக்கப்பட்டிருப்பது தெரிந்தும் , அது உண்மைதானா
என்று விசாரிக்காமல் தலையங்கம் எழுதப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல்
தலித்துகள் கற்களையும் ‘ பெட்ரோல் குண்டுகளையும் ‘ வீசித் தாக்கியதாகவும்
அந்தத் தலையங்கத்தில் எழுதப்பட்டிருக்கிறது. பெட்ரோல் குண்டுகளை
வீசினார்கள் என்பது போலீஸ் தரப்பும்கூட சொல்லாத ஒரு பழியாகும்.ஒரு சில
சமூகத் தலைவர்களின்  பிறந்த நாளை அரசு விழாவாக நடத்துவதும் அத்தகைய
அங்கீகாரத்தை தியாகி இமானுவேல் சேகரன் போன்றவர்களுக்குத் தர மறுப்பதும்
அரசே பாரபட்சம் காட்டுகிறது என்பதற்கு வெளிப்படையான சான்றாக இருக்கிறது.
ஆனால் இதைச் சுட்டிக்காட்ட இந்து உள்ளிட்ட எந்தவொரு ஊடகத்துக்கும் மனம்
வரவில்லை.

பரமக்குடி துப்பாக்கிச் சூட்டை முன்வைத்து ஊடக ஜனநாயகம் குறித்து ஒரு
விவாதத்தைத் துவக்குவோம் வாருங்கள்.

6 comments:

  1. மிகச் சரியான கருத்து!
    //
    இவ்வளவுபேர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கும் ஒரு சம்பவம் குறித்து அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தரப்பு என்ன சொல்கிறது என்று கேட்டு அதைப்
    பிரசுரிக்கவேண்டும் என்கிற அடிப்படை நேர்மைகூட எந்தவொரு பத்திரிகையிலும் கடைப்பிடிக்கப்படவில்லை.
    //
    உண்மை..உண்மை..கசப்பான சகித்துக் கொள்ள முடியாத உண்மை!

    ReplyDelete
  2. When ever there is a resort to violently supress a demonstration or a riot, it leads to a massacre. Our police were ill equipped and ill adviced for what happened at Paramakudi. If we are worried about the safety of the Police, we need to provide them better gear and also train them appropriately. When Anna Hazare was taken to the police Station, the entire media is up in arms for high handed action by the Delhi Police. But when 200 angry protestors are dispersed by violent means leading to deaths, not a whimper!!! The loss of Dalit lives is never news worthy. It is not even worthy of our outrage. Dr. Aiswarya Rao.

    ReplyDelete
  3. ஊடகங்களை குறை சொல்பவர்கள் அவைகள் புகைப்படங்களையும் வெளியிட்டன,உள்ளூர் நிருபர்கள் தந்த தகவல்களையும் எழுதின என்பதுடன் அவை பெயர் குறிப்பிட்டு என்ன பிரிவினைரையும் கலவரத்தை தூண்டினர் அடையளப்படுத்தி எழுதவில்லை என்பதை சொல்வதில்லை. அதே ஹிந்து தலையங்கத்தில் காவல்துறை இதற்கு பதில் சொல்லவேண்டியிருக்கும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளதே.பீப்ள்ஸ் வாட்ச் கூறியதும் ஊடகங்களில் வெளியானதே.இன்னும் பல தரப்பு கருத்தும் வெளியானது.கிருஷ்ண்சாமி கூறியதும்
    வெளியானது.குறை சொல்லும் முன் அனைத்து பதிப்புகளையும், இணையத்தில் வெளியானதையும்
    படித்துவிட்டு எழுத வேண்டும்.மதுரை பதிப்பில் வெளியான அனைத்தும் சென்னைப் பதிப்பில்
    இடம் பெற்றிருக்க வேண்டும் என்று இல்லை.
    அன்னாவின் போராட்டத்தில் ஏன் வன்முறை இல்லை, அந்த மைதானத்தில் அத்தனை பேர் கூடினாலும் ஒரு பிரச்சினையும் எழவில்லை.
    ஊர்வலத்தில் ஆயிரகணக்கானோர் இருந்தாலும்
    சட்டம் ஒழுங்கிற்கு ஒரு பாதிப்பும் இல்லையே.

    ReplyDelete
  4. The words of a US Marine Downey in the Movie "A Few Good Men", after he was dishonorably discharged for murdering a fellow marine for disobeying orders comes to my mind. He realises that " we failed to stand up for those who are too weak to stand up for themselves." The Police are supposed to prevent crime, not commit it in the name of control. That the media does not want to participate in leading public opinion on these brutal incidents is a telling tale!

    ReplyDelete
  5. eangalai thalith eantru solluvathai muthali niruthdungal..adu apparam itha pathi pesuvom.. nanba..nangal marutha nilathil pirantha mannargal.. mallargal..vera devendra kulvelalar.. ippadi alagana name irukkail..eangalai nthalith eantru..solluvathu.. eanna unmai irukku

    ReplyDelete
  6. தலித் என்றால் என்ன அர்த்தம் என்பது கூட எங்களுக்கு தெரியாது... ஆனால் பிறர் ஜாதினர் தங்கள் ஜாதி பெயரை வெளிப்படையாக தயங்காமல் சொல்கிறார்கள்.. ஆனால் எங்கள் ஜாதியை நாங்கள் சொன்னால் ஏளனமாக பார்க்கிறார்கள்.. தங்கள் இனத்தை அடையாள படுத்த தான் ஜாதி உருவாகியது பிரித்து பார்ப்பதற்கு அல்ல....... நான் உறுதியான சொல்வேன் எங்கள் இனத்தவர்கள் சுடபட்டதற்கு அரசியல் தான் காரணம்... ஜாதி வெறிபிடித்த முதலமைச்சர் தான் எங்கள் முன்னேற்றத்தை பொறுக்காமல் இப்படி நாடகத்தை நடத்தினார்.. இது மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் செப்11 அரசு விழாவாக மாறியிருக்கும்..... ஆனால் அது கூட தெரியாமல் அவரின் பதவிக்கு பயந்து எங்கள் மக்கள் அவர் பின்னால் நிற்கிறார்கள்.... இனி நடப்பதை பொருத்து இருந்நு பாருங்கள் இந்த பாராளமன்ற தேர்தலில் முதல்வரை செல்லாக் காசாக ஆக்குவது தான் எங்கள் லட்சியம்....... பிறப்படு தேவேந்திரா நாம் யார் என்பதை உலகம் அறிய வேண்டும்....

    ReplyDelete