Sunday, January 12, 2014

சிறுமி போட்ட கோலம்




மார்கழி மாதத்திலும் வெறிச்சோடிக்கிடக்கும் வாசல்களைப் பார்க்கும்போது இன்றைய தலைமுறைப் பெண்களுக்குக் கோலம் போடத்தெரியுமா  என்று எனக்கு சந்தேகம் வரும் . இத்துடன் இருக்கும் படம் எனது நண்பரின் மகள் அனுப்பியது. ஆறாம் வகுப்பு படிக்கும் அவர் தான் போட்ட கோலத்தைப் படமெடுத்து அனுப்பியிருந்தார். இதைப் பார்த்ததும் பழைய நினைவுகளில் மூழ்கிப்போனேன். 


கோலம் போடுவதைப் பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். மார்கழியின் அதிகாலைக் குளிரில் இருள் பிரியா நேரத்தில் கறுத்துத் தெரியும் நீர்தெளித்த வாசலில் விரல்களின் இடுக்கிலிருந்து நூலாய் இழையும் அரிசி மாவில் நெய்யப்படும் கோலம்- அதன் அழகே அழகு. சிறு வயதில் அக்கா கோலம் போட்டு முடிப்பதற்காகக் கையில் பரங்கிப் பூக்களுடன் காத்திருப்பேன். அதிகாலை கருக்கலில் போய் பரங்கிப்பூ பறிக்கும்போது பாம்பு இருக்குமென அம்மா அச்சத்தோடு எச்சரிப்பார். 


இன்று, எங்கள் வீடிருந்த இடம் மண்மேடாய்க் கிடக்கிறது. நூறு ஆண்டுகளைத் தொட்டு சிதிலமடைந்து கிடந்த வீடு பாம்புகளின் வசிப்பிடம் ஆகிவிட்டது. அதனால் பிரித்தேன் கட்டுவதற்குப் பண வசதியில்லை. அண்மையில் ஊருக்குப் போயிருந்தபோது கோலம் போட்ட வாசலும் அலங்கோலமாகக் கிடந்தது. ஒரு சாவுக்காகப் போயிருந்தேன். வீட்டை நினைத்துத்தான் அழுகை வந்தது. வீடும் இல்லை, அக்காவும் இல்லை, கோலமும் இல்லை. 






No comments:

Post a Comment