Saturday, January 11, 2014

சிறைவாசிகளின் உரிமைகளைப் பாதுகாப்போம்! - ரவிக்குமார்


• உடல் நலிவுற்றிருக்கும் ஆயுள் சிறைவாசி திரு தென்தமிழன் அவர்களை உடனே விடுதலை செய்யவேண்டும்
• தமிழக சிறைகளில் உள்ள ஆயுள் சிறைவாசிகளுக்குத் தணடனை குறைப்பு செய்து பொங்கல் நாளில் விடுதலைசெய்யவேண்டும்!

2013 டிசம்பர் மாதத்தில் ஆந்திர மாநில அரசு 388 ஆயுள் கைதிகளை விடுதலை செய்திருக்கிறது. ஐந்து ஆண்டுகள் சிறையில் இருந்த பெண் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஏழு ஆண்டுகள் சிறையில் இருந்த ஆண் கைதிகளும் விடுதலை ஆகி உள்ளனர். 65 வயதைத் தாண்டிய அனைத்து கைதிகளும் விடுதலை ஆகி உள்ளனர். இஅரண்டு நாட்களுக்கு முன்னர் கர்னாடக மாநில் அரசு அங்கிருக்கும் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்வது தொடர்பான வழிகாட்டு நெறிகளை உருவாக்கியிருக்கிறது. ஆனால் ஆயுள் சிறைவாசிகளை அதிகமாகக் கொண்ட தமிழ்நாட்டிலோ அவர்களை விடுவிப்பதற்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

இந்திய அளவில் இருக்கும் தண்டனை சிறைவாசிகளில் 54.1சதவீதத்தினர் ஆயுள் சிறைவாசிகள் என தேசிய குற்ற ஆவண மைய (என்.சி.ஆர்.பி) புள்ளிவிவரம் கூறுகிறது. இந்த தேசிய சராசரியைவிடக் கூடுதலாக 64.1 சதவீத ஆயுள் சிறைவாசிகளைக் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. 

தமிழ்நாட்டில் நீண்டநாட்களாக சிறையில் இருப்பவர்களை புத்தாண்டிலும், தலைவர்களின் பிறந்த நாட்களின்போதும் நன்னடத்தையின் அடிப்படையில் தணடனைக் குறைப்பு செய்து விடுவித்து வந்தனர். கடந்த 2006,2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் தி.மு.க ஆட்சியின்போது அவ்வாறு   ஆயுள்தண்டனை சிறைவாசிகள் விடுவிக்கப்பட்டனர்.2006 ஆம் ஆண்டு அரசாணை எண் G.O.Ms.No.873, Home Department, dated 14.09.2006 அடிப்படையில் 10 ஆண்டுகள் சிறையிலிருந்த 472 ஆயுள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டனர். 2007 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் G.O .Ms.No.1326, Home Department, dated 12.9.2007  அடிப்படையில் 5 பெண் கைதிகள் உட்பட 190 ஆயுள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டனர். 2008 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் G.O.Ms.No.1155, Home Department, dated 11.09.2008  அடிப்படையில் 1406 ஆயுள் சிறைவாசிகள் விடுதலைசெய்யப்பட்டனர். அப்போது எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக,  சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவதை எதிர்த்தது. அந்த ஆணையை எதிர்த்து திரு சுப்பிரமணிய சாமி வழக்கு தொடுத்தார். 

2011 இல் ஆட்சி மாற்றம் நடைபெற்று அதிமுக அரசு பதவியேற்றபின் தண்டனைக் குறைப்பு செய்து ஆயுள் சிறைவாசிகள் எவரும் விடுதலை செய்யப்படவில்லை. 

தி.மு.க ஆட்சி தற்போது இல்லையென்றாலும் அந்த ஆட்சியின்போது 2008 ஆம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட அரசாணை இப்போதும் செல்லுபடியாகக்கூடியதுதான் என்பதை அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் உறுதிசெய்திருக்கிறது. அந்த அரசாணையைக் குறிப்பிட்டு தனது மகனை விடுவிக்கவேண்டும் என சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த மல்லிகா என்பவர் தொடுத்த வழக்கில் அவரது வாதத்தை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்ற அமர்வு, அவரது மகன் இளங்கோ என்ற ஆயுள் சிறைவாசியை 2013 நவம்பர் 14 ஆம் தேதி விடுதலை செய்திருக்கிறது. 

திரு. தென்தமிழன் அவர்களுக்கு 2006, 2007 ஆம் ஆண்டு தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளின் அடிப்படையிலேயே விடுதலை கிடைத்திருக்கவேண்டும். ஆனால் சிறை நிர்வாகமும், காவல்துறையும் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் அவர் விடுவிக்கப்படவில்லை. அதை எதிர்த்து அவர் தொடுத்த வழக்கை (Madras High Court , W.P.NO.20511 of 2008 ) விசாரித்த நீதியரசர் சந்துரு அவர்கள் திரு தென்தமிழனை விடுவிக்காததற்கு அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை நிராகரித்ததுடன் அவரை விடுவிப்பதுகுறித்து பரிசீலிக்கவேண்டும் என 2009 நவம்பர் மாதம் தீர்ப்பு வழங்கினார்(Madras High Court ,Thenthamizhan Alias Kathiravan vs State Of Tamil Nadu on 24 November, 2009,DATED : 24.11.2009) அதன் பின்னரும் கூட திரு.தென்தமிழன் விடுவிக்கப்படாதது வேதனை அளிக்கிறது. 

தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான மனித உரிமை அமைப்புகள் இருந்தாலும்கூட சிறைவாசிகளின் உரிமை குறித்த விழிப்புணர்வு மிகவும் குறைவு. அரசியல் கட்சிகளும் சிறைவாசிகளுக்காகக் குரல் கொடுப்பதில்லை. அதனால்தான் இந்த மோசமான சூழல் தமிழ்நாட்டில் நிலவுகிறது.

திரு. தென்தமிழன் அவர்களை விடுவிப்பதற்கு முயற்சி எடுக்கும் அதே நேரத்தில் தமிழக சிறைகளில் வாடும் ஆயுள் சிறைவாசிகள் மற்றும் பிற சிறைவாசிகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும் அவர்களுக்கான சட்ட உதவிகளைச் செய்வதற்கும் மாநில அளவில் ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்பது எனது வேண்டுகோள். அத்தகைய அமைப்பில் நானும் ஒரு அங்கமாக இருந்து பணியாற்றத் தயாராக இருக்கிறேன்.  
 
( சிறைவாசிகளின் உரிமைகள் குறித்து இன்று திருச்சியில் பத்திரிகையாளர் கூட்டம் ஒன்றில் பங்கேற்பதாக இருந்தேன். சில தவிர்க்க முடியாத காரணங்களால் போக முடியவில்லை. அங்கு வினியோகிப்பதற்கென நான் அனுப்பியிருக்கும் குறிப்பு இது ):

No comments:

Post a Comment